கேரளாவில் நிலச்சரிவுகள் பிரச்சினை -எஸ்.ஆனந்தன்

 அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் ஏராளமாக உள்ளன. ஆனால், செயல்படுத்தல் தாமதமாக உள்ளது. 


வயநாட்டின் மேப்பாடி பஞ்சாயத்தில் உள்ள வெள்ளரிமலை மலையில் இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன 130-க்கும் மேற்பட்டவர்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


2018-ஆம் ஆண்டின் பெரும் வெள்ளத்திற்குப் பிறகு தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்ட கேரளாவுக்கு இது இன்னொரு இயற்கை பேரிடராக அமைந்துள்ளது. அந்த ஆண்டில் மாநிலத்தில் 341 பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. அன்றிலிருந்து ஒவ்வொரு பருவமழையிலும் நிலச்சரிவு ஒரு பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. வயநாடு, இடுக்கி, மலப்புரம், காசர்கோடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்கள் ஆபத்தான நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. 2019-ஆம் ஆண்டில், மலப்புரத்தின் காவலப்பாரா மற்றும் வயநாட்டில் உள்ள புத்துமலா ஆகிய இடங்களில் ஒரே இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 75 பேர் இறந்தனர். இந்த இடங்கள் மலைகளில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேப்பாடி பஞ்சாயத்தின் சூரல்மலா மற்றும் முண்டகை வார்டுகளில் இருந்து மலையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் புதுமலா உள்ளது. 2019-ஆம் ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் மிக அதிக மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன: 48 மணி நேரத்தில் 527 மிமீ மழை பெய்தது. போதுமான முன்எச்சரிக்கை இல்லை என்பது தெளிவாகிறது. எவ்வாறாயினும், இது போன்ற பேரழிவிற்கு மனித நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணமாகிறது.

 

2018 வெள்ளத்திற்குப் பிறகு, கேரள அரசு மாநிலத்தை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்கியது. பேரிடருக்குப் பிந்தைய தேவை மதிப்பீட்டு அறிக்கை (post-disaster needs assessment report) என்ற விரிவான திட்டத்தை அவர்கள் உருவாக்கினார். இந்த அறிக்கை தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடிய கேரளாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த நீர் வளங்களை நிர்வகிப்பதன் மூலமும், நிலப் பயன்பாடு மற்றும் குடியேற்றத்திற்கான சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் இடர்-தகவலறிந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலமும், சமூக அடிப்படையிலான பேரழிவு மேலாண்மையை ஊக்குவிப்பதன் மூலமும், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் துறைகளில் பேரழிவு ஆபத்து குறைப்பு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த இலக்கை எட்டமுடியும். ஆனால், இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


சமவெளிகளில் வெள்ள மேலாண்மைக்கான 'நதிக்கான இடம்' (‘room for river’) திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல் உணர்திறன் நில பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளும் முடங்கியுள்ளன. பெரும்பாலான மக்கள் மறுகுடியேற்றத்திற்கு (resettlement) எதிராக உள்ளனர். இதன் காரணமாக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்தியுள்ளது ஏனெனில் அவர்கள் அரசின் நடவடிக்கைகளை நம்பவில்லை. வயநாடு மற்றும் இடுக்கியில், கட்டுப்பாடற்ற கட்டுமானம் ஒரு தீவிர பிரச்சனையாக உள்ளது. இது குறிப்பாக மலைகளின் கடினத்தன்மையை பலவீனமாக்குகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையமும், இந்திய புவியியல் ஆய்வு மையமும், துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கைகளை வழங்க தங்கள் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, வயநாடு உட்பட வடக்கு கேரளாவை உள்ளடக்கும் டாப்ளர் வானிலை ரேடார் (Doppler weather radar) கோழிக்கோட்டில் நிறுவப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு டாப்ளர் ரேடாரால் மழையின் தீவிரம், காற்று மாற்றங்கள் மற்றும் மேக வெடிப்புகள் போன்ற தீவிர வானிலைக்கான வாய்ப்பு போன்ற பயனுள்ள தகவல்களை உடனடியாக வழங்க முடியும். இருப்பினும், வயநாட்டில் போதுமான மழை அளவீடுகள் இல்லாததால் மழையின் தீவிரத்தை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் முயற்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளை அரசு ஈடுபடுத்துகிறது. கேரளா உள்ளூர் நிர்வாகம், 260 உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் பேரிடர் மேலாண்மை திட்டங்களை உருவாக்க உதவியது. இந்த செயல்முறை விரிவான களப்பணியை உள்ளடக்கியது. ஒவ்வொரு திட்டமும் அந்த பஞ்சாயத்திற்கு குறிப்பிட்ட விரிவான தகவல்களை உள்ளடக்கியது. உதாரணமாக, ஜூலை மாதம் நிலச்சரிவில் சிக்கிய மேப்பாடி பஞ்சாயத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. பேரிடர்களைக் கையாள்வதில் இந்தத் திட்டங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன என்பதை நாம் ஆராய வேண்டும்.


நிலத்தின் தன்மைகள், மக்கள் மற்றும் நிலத்தின் பயன்பாடு, பயிர்கள் மற்றும் பாதுகாப்பான வழிகள் தொடர்பான தலையீடுகள் உட்பட பல அம்சங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியது. மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றி இருப்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையில் உள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இது அடையாளம் காட்டுகிறது. பேரிடர் ஏற்பட்டால் எச்சரிக்கை அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியல்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளுக்கு விரிவான காலநிலை திட்ட தரவுகள் மற்றும் வரைபடங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்தத் தரவை திறம்பட பயன்படுத்த, பஞ்சாயத்து அதிகாரிகள் தகவல்களை சரிபார்க்க வேண்டும்.


பேரிடர் மேலாண்மைத் திட்டம் (disaster management plan) அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டும் என்றாலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டங்களை தயாரிக்கும்போது இந்த தனிப்பட்ட திட்டங்களை ஒருங்கிணைக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எந்த பிரதேசங்கள் அடிக்கடி இயற்கைப் பேரிடர்களை சந்திக்கின்றன என்பது பற்றிய புரிதல் ஏற்பட்டுள்ளது. துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கைகளை வழங்க தங்கள் அமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். இது சமூகத்தால் இயக்கப்படும் (community-driven) காலநிலை கண்காணிப்பு அமைப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.



Original article:

Share: