இந்தியாவின் நீர்வளங்களின் மீது காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிகவும் தெளிவாகத் தெரிகின்றன.
இந்தியாவின் தண்ணீர் பற்றாக்குறை ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைகிறது — இது விநியோகம், சமத்துவம் மற்றும் அணுகல் போன்ற நூற்றாண்டுகள் பழமையான சவால்களால் மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தின் கணிக்க முடியாத இடையூறுகளாலும் வடிவமைக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றமானது வெள்ளம், வறட்சி, மாறிவரும் காலநிலை மற்றும் உருகும் பனிப்பாறைகள் மூலம் இந்தியாவின் பலவீனமான நீர்வள அமைப்புகளில் கடினமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், ஆராய்ச்சி மற்றும் நடைமுறை காட்டுவது போல், காலநிலை என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல பாதிப்புகளில் ஒன்றாகும்.
சமமற்ற முறையில் பரவியுள்ள வளங்கள்
“இந்தியாவின் நீர் வளங்கள்” என்று ஒன்று அல்லது இரண்டு எண்களைக் கொண்டு விவரிக்க வேண்டும் என்ற யோசனை உள்ளது. ஆனால், அந்த எண்கள் பயனுள்ளவையாக இல்லை. இந்தியாவின் மேற்பரப்பு, நீர் வளங்கள் மாறுபட்ட நிலப்பரப்பு, மழைப்பொழிவு முறைகள் மற்றும் நதி அமைப்புகள் காரணமாக சமமற்ற முறையில் பரவியுள்ளன.
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 4,000 பில்லியன் கன மீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது. இதன் இந்தியா பெறும் மழையிலிருந்து, 1,890 பில்லியன் கன மீட்டர் நிலத்தில் ஊறுவதற்குப் பதிலாக ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் கலக்கிறது. ஆனால், நில வடிவம் மற்றும் சேமிப்பு வரம்புகள் காரணமாக 690 பில்லியன் கன மீட்டர் நிரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
உதாரணமாக, கங்கை-பிரம்மபுத்ரா-மேகானா நதிப் படுகை நாட்டின் நீர் திறனில் ஏறக்குறைய 60%-ஐக் கொண்டுள்ளது. ஆனால், அதில் கால் பகுதி மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
மூலம்: நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துணர்ச்சி அமைச்சகம்.
ஏனெனில் இந்தியாவின் பெரும்பாலான மழை (80%) ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழையின் போது பெய்யும். இதனால் தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் பருவகால ஆறுகளாக மாறுகின்றன. மேலும், வறண்ட காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சில நாட்களில் பலத்த மழை பெய்தாலும், நாம் எத்தனை அணைகள் அல்லது நீர்த்தேக்கங்களைக் கட்டினாலும், முழு நீரையும் சேமித்து பயன்படுத்த முடியாது.
இந்தியாவின் மேற்பரப்பு நீர்நிலைகள், குறிப்பாக ஆறுகள், ஆபத்தில் உள்ளன. ஒருபுறம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர நிகழ்வுகள் மிகக் கடுமையான வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மறுபுறம், பொருளாதார மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் நகரங்கள் மற்றும் விவசாயத்திற்கான நீர்த் தேவையை அதிகரிக்கச் செய்கின்றன மற்றும் அவற்றை மாசுபடுத்தும் கழிவுநீரை உருவாக்குகின்றன.
காலநிலை மாற்றம் தண்ணீரை பாதிக்கிறது.
இந்தியாவின் நீர் வளங்களின்மீது காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியான வெப்பமயமாதல் நடவடிக்கைகள் தண்ணீருக்கானத் தேவையை அதிகரிக்கிறது. இருப்பினும், மழைப்பொழிவு போக்குகள் குறைவாகவே உள்ளன. சில நுண்ணறிவு மாதிரிகள், குறிப்பாக மத்திய இந்தியாவில், வலுவான பருவமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கின்றன. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு கங்கை சமவெளி போன்ற இடங்களில் மழை குறைந்து வருவதாகவும், பருவமழை தீவிரமடைவதையும், தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளின் அதிகரிப்பையும் காட்டுகின்றன..
இமயமலை பனிப்பாறைகள் உருகுவது பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. தற்போது, பனி உருகுவது வறண்ட காலங்களில் கங்கை போன்ற ஆறுகள் பாய்வதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. ஆனால், வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், ஆற்றின் ஓட்டம் முதலில் அதிகரித்து பின்னர் குறையக்கூடும். இந்த சூழல்ஆற்றின் கீழ் படுகையில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.
இருப்பினும், காலநிலை மாற்றம் சிக்கல்தன்மையை அதிகரித்திருந்தாலும், இந்தியாவின் நீர் அமைப்புகளின் மேலாண்மை இன்னும் தேக்க நிலையில் உள்ளது. நமது நாடு இன்னும் எளிய விதிகளை நம்பியுள்ளது. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான மாநிலங்களுக்கு இடையிலான நீர் பகிர்வு ஒப்பந்தங்கள் நிலையான அளவுகளை ஒதுக்கீடு செய்கின்றன, வறண்ட ஆண்டுகளுக்கு சிறிதளவு நெகிழ்வுத்தன்மையுடன், இது குறைபாடுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் கருத்து வேறுபாடுகளால் மோதல்களுக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான வடிகால் உள்கட்டமைப்புகள் “100 ஆண்டு புயல்” என்ற கருத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டன. இது ஒவ்வொரு ஆண்டும் 1% சாத்தியமுள்ள மழை நிகழ்வு உருவாகும் என்ற புள்ளி விவரத்தின் கணிப்பாகும். இப்போது இத்தகைய மழை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் இந்த அமைப்புகள் குறைவான செயல்திறன் கொண்டதாகியுள்ளன.
நிலத்தடி நீர் குறைவு
காலநிலை மாற்றம் இந்தியாவின் நீர் அமைப்புகளுக்கு ஒரே அல்லது முதன்மையான அழுத்த காரணி அல்ல. மனித நடவடிக்கைகள் தண்ணீரின் மீது இன்னும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, விவசாயத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது உணவு மற்றும் வறுமையைக் குறைக்கும் அதே வேளையில் - கடுமையான நீர்பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வழிவகுத்துள்ளது.
மழைக்காலம் முடிவடைந்து பல மாதங்களுக்குப் பிறகும், கோடை காலத்திலும், தீபகற்ப இந்தியாவில் உள்ள பல ஆறுகள் ஏன் தண்ணீரில் நிரம்பி இருந்தன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பதில் அடிப்படை ஓட்டமாகும். மழைக்காலங்களில் மழைநீர் நீர்நிலைகளில் ஊறி, கோடையில் மெதுவாக ஓடைகளில் செல்கிறது. இது பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உயிர்நாடியாக இருந்தது.
இதனால், நிலத்தடி நீரும் மேற்பரப்பு நீரும் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது, நிலத்தடி நீர் வேகமாகப் பயன்படுத்தப்படுவதால், வறண்ட காலங்களில் ஆறுகளில் குறைவான நீர் பாய்கிறது. இதனால், பல இந்திய ஆறுகள் வறண்ட காலத்தில் குறைவான தண்ணீரைப் பெறுகின்றன.
நீர் தர சவால்
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கண்காணிக்கப்பட்ட ஆறுகளில் 46% (603-ல் 279) உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (biochemical oxygen demand (BOD)) அடிப்படையில் மாசடைந்தவையாக அடையாளம் காணப்பட்டன. இது கரிம மாசுபாட்டின் முக்கிய அறிகுறியாகும். கழிவுநீர் சுத்திகரிப்புக்கான (sewage treatment) முதலீடுகளால் இந்த எண்ணிக்கை காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
2022-ஆம் ஆண்டு NITI ஆயோக் ஆய்வின்படி, நகர்ப்புறங்களில் உருவாகும் மொத்த கழிவுநீரில் 28% மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது; 72% கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளது மற்றும் சுற்றுச்சூழலில் நேரடியாக வெளியேற்றப்படுகிறது. உள்நாட்டு கழிவுநீர், பெரும்பாலும் கன உலோகங்கள், கரிம நச்சுகள் மற்றும் இரசாயனங்கள் கொண்ட தொழிற்சாலை வெளியேற்றத்தால் சிக்கலை மேலும் அதிகரிக்கிறது.
ஒரு மறைக்கப்பட்ட பிரச்சனை என்னவென்றால், அது பல சிறிய மூலங்களிலிருந்து வரும் மாசுபாடு ஆகும். அதிகப்படியான உரங்கள் பயன்படுத்தப்பட்டு ஆறுகளில் கலக்கும்போது சிக்கல் ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த ஆறுகளும் நீர்நிலைகளும் தீங்கு விளைவிக்கும் பாசி பூக்கும் (harmful algal blooms) வாய்ப்பை ஏற்படுத்துகின்றன, இது கரைந்த ஆக்ஸிஜனின் அளவைக் குறைத்து நீர்வாழ் உயிரினங்களைக் கொல்கின்றது. மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் மேலும் மாசுபாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தங்கள் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலத்தடி நீரைச் சார்ந்திருக்கவோ அல்லது தொலைதூர நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை இறக்குமதி செய்யவோ கட்டாயப்படுத்துகிறது.
காலாவதியாகி வரும் மேற்பரப்பு நீர் உள்கட்டமைப்பு
இந்தியாவின் அணை உள்கட்டமைப்பு - ஒரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்தது- இப்போது காலாவதியாகி வருகிறது. குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களை முன்வைக்கிறது. நாட்டின் பெரும்பாலான பெரிய அணைகள் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டன. பல அணைகள் இப்போது அவற்றின் வடிவமைக்கப்பட்ட காலத்தின் கடந்துவிட்டன அல்லது இறுதி காலத்தை நெருங்கி வருகின்றன.
அணைகள் காலாவதியாகி வருவதால், தேய்மானம், துருப்பிடிக்கும் எஃகு மற்றும் பலவீனமான அடித்தளங்கள் அவற்றின் பாதுகாப்பைக் குறைக்கின்றன. அதே நேரத்தில், மழையினால் வரும் வண்டல்மண் சேர்க்கை, நீர்த்தேக்கத்தை நிரப்புகிறது. இதனால், அது எவ்வளவு தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதைக் குறைக்கிறது. காலநிலை மாற்றம் இந்த பிரச்சனைகளை மோசமாக்குகிறது. அதிக மழை அதிக வண்டலைக் கொண்டுவருகிறது மற்றும் நிரம்பி வழியும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்தியாவில் 5,745 பெரிய அணைகள் உள்ளன. சீனா மற்றும் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
1,115 அணைகள் கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன; 234 பெரிய அணைகள் 100 ஆண்டுகளை கடந்து விட்டன. இந்தியாவின் பெரிய அணைகளில் 80%-க்கும் மேற்பட்டவை 2050-ஆம் ஆண்டுக்குள் பாதிப்படையும் சூழல் உள்ளது. ஏனெனில், சேமிப்புத் தேவை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கும். லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் சிறிய அணைகள் அவற்றின் குறுகியகாலம் காரணமாக இன்னும் ஆபத்தில் உள்ளன.
நிலத்தடி வளங்கள் நேரடி பயன்பாட்டிற்கு மட்டுமல்ல. இந்தியாவின் ஆறுகள் உலக மக்கள்தொகையில் 18%-ஐ ஆதரிக்கின்றன மற்றும் நீர்வாழ் மற்றும் அரை நீர்வாழ் உயிரினங்களின் தனித்துவமான கூட்டங்களை ஆதரிக்கின்றன என்று இந்திய வனவிலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது. நதிகளின் சுற்றுச்சூழல் அமைப்புகள் அணைகளால் பாதிக்கப்படுகின்றன. அவை இயற்கை ஓட்டத்தை மாற்றி மாசுபாட்டைக் கையாளும் திறனைக் குறைக்கின்றன. மேலும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் நேரடி மாசுபாட்டாலும் பாதிக்கப்படுகின்றன.
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
இந்த அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், சவால்கள் கடக்க முடியாதவை அல்ல.
முதலாவதாக, மேற்பரப்பு நீரை நாம் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும். பெரிய முதலீடுகள் இருந்தபோதிலும், கால்வாய் பாசனப் பகுதியின் அளவு குறைந்துவிட்டது. கால்வாய்கள் அல்ல, நிலத்தடி நீர் இப்போது இந்தியாவின் பாசனத்தில் 60%-க்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, அரை வறண்ட மற்றும் வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதிகளில், விவசாய உற்பத்தித்திறன் மற்றும் காலநிலை மீள்தன்மையை மேம்படுத்த இந்தியாவில் கால்வாய் பாசன முறைகளை மேம்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாகும்.
கால்வாய் சீரமைப்பு, நவீனமயமாக்கல் மற்றும் தானியங்கி மயமாக்கல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பல திட்டங்கள் கடைசி மைல் இணைப்பு இல்லாமல் உண்மையான விவசாயிகளின் வயல்களில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள பிரதான கால்வாய் கிளைகள் அல்லது பக்கவாட்டுகளில் முடிவடைகின்றன. ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நீர் வழங்கல் அதிகார சபைகள் பெரும்பாலும் ஒப்பந்ததாரர்களால் சரிசெய்யப்படுகின்றன. ஆனால் ஊழல் இல்லாவிட்டாலும், நீர்வளத் துறைகளில் கடைசி மைல் பாசனத்தை ஒருங்கிணைப்பதற்கான சமூகப் பிரச்சினையைத் தீர்க்க திறன் கொண்டவர்களால் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஒரு தொடர்புடைய பிரச்சனை பெரும்பாலான கால்வாய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகும். அணைக்கு அருகில் உள்ள விவசாயிகள், தலைப்பகுதி (head end) சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், நெல் மற்றும் கரும்பு போன்ற நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை வளர்க்க தங்கள் பங்கை விட அதிகமான நீரை இழுத்துக்கொள்கின்றனர், இதனால் நீர் அரிதாகவே வால் பகுதிக்கு (கடைநிலைக்கு) சென்றடைகிறது. இதைத் தீர்க்க தலைப்பகுதி விவசாயிகளுக்கு தங்கள் வயல்களுக்குள் நீர் வருவதற்கு அதிக கட்டுப்பாடு கொடுப்பது ஒரு பக்கமும், மறுபக்கம் நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களுக்கு மாறுவதற்கு ஊக்கத்தொகை வழங்குவதும் தேவை.
இரண்டாவதாக, நமது காலாவதியான உள்கட்டமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். உலக வங்கி நிதியளிக்கும் 'அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்' (Dam Rehabilitation and Improvement Project) கீழ் இந்தியாவில் உள்ள பல அணைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், வண்டல் மண் மூலம் திறன் இழப்பு ஒரு நல்ல தீர்வாக இல்லை, ஏனெனில், இது மிகவும் விலை உயர்ந்தது மற்றும் பெரிய அணைகளை தூர்வாருவது மிகவும் சவாலாக உள்ளது.
இதைத் தடுக்க, அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை நிர்வகிக்க வேண்டும், அதனால் வண்டல் மண் மேல்நோக்கிய சிறிய கட்டமைப்புகளில் சிக்கிக் கொள்ளும், அவற்றை அகற்ற முடியும். தற்போது, இருக்கும் முயற்சிகளின் செயல்திறன் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை, எனவே எது வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை.
மூன்றாவதாக, நிலத்தடி நீர் எடுப்பதை நிர்வகிக்க வேண்டும். நமது அமைப்புகள் அதை ஒப்புக்கொண்டாலும் சரியே, நிலத்தடி நீரும் மேற்பரப்பு நீரும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வளங்களாகும். நிலத்தடி நீரால் பாதிக்கப்படுவதை ஒப்புக்கொள்ளாமல் மேற்பரப்பு நீரை நிர்வகிக்க முடியாது. இந்தியாவில் பெரும்பாலான நீர் பயன்படுத்துபவர்கள், நகர்ப்புறமாகட்டும் கிராமப்புறமாகட்டும், இரு ஆதாரங்களையும் பயன்படுத்துகின்றனர் மற்றும் தங்கள் சொந்த நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மாறி மாறி பயன்படுத்துகின்றனர்.
இதுவரை, பெரும்பாலான அரசாங்க முயற்சிகளின் கவனம் மறு சுழற்சி திட்டங்களில் இருந்தது, அவை வறண்ட இடங்களில் கீழ்நிலை நீர்த்தேக்கங்களுக்குள் வருவதைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளன.
நிலத்தடி நீர் குறைவு இறுதியில் அதிகப்படியான குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதால் ஏற்படுகிறது. முக்கிய காரணங்கள் இலவச மின்சாரம் மற்றும் அதிக நீர் தேவைப்படும் பயிர்களுக்கு அதிக விலைகள் ஆகும். எனவே, நீர் தேவையை கட்டுப்படுத்த நமக்குத் திட்டங்கள் தேவை. அதன்படி, அடல் ஜல் யோஜனா மற்றும் பஞ்சாபில் “தண்ணீரைச் சேமியுங்கள், பணம் சம்பாதியுங்கள்” (Paani Bachao, Paise Kamao”) போன்ற திட்டங்களால் மெதுவாக மாற்றம் வருகிறது — இருப்பினும் இந்த திட்டம் இன்னும் அடிப்படை சிக்கல்களை தீர்க்கவில்லை.
நான்காவதாக, தரவுகளுக்கான திறந்த அணுகல் நமக்குத் தேவை. இது சிறந்த ஆராய்ச்சி மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளுக்கு உதவுகிறது. தற்போது, நீர் தொடர்பான பல தரவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், நதி ஓட்டம், வெள்ள அபாயங்கள் மற்றும் நீர்த்தேக்க வண்டல் போன்ற விஷயங்களுக்கு தவறான மதிப்பீடுகள் ஏற்படுகின்றன.
தரவுத்தொகுப்புகள் பொது வெளியில் வெளியிடப்படும்போது, பல மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் வெவ்வேறு கண்ணோட்டங்களிலிருந்து தரவை ஆராய்வதால், நீர் அமைப்புகள் பற்றிய நமது அடிப்படை புரிதல் மேம்படுகிறது என்பதை மற்ற நாடுகளின் அனுபவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இது சில உயரடுக்கு நிறுவனங்களிடமிருந்து ஆய்வுகளை ஆணையிடுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. திறந்த தரவு சிறந்த அறிவியல் மற்றும் சிறந்த முடிவெடுப்பு என்ற வகையில் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும்.
கூடுதலாக, நமக்கு அடிப்படையான முதன்மை ஆராய்ச்சியும் தேவை. இந்தியாவில் பல நீர் ஆராய்ச்சிகள் கள தரவு அடிப்படையிலானவை அல்ல, மாதிரி அடிப்படையிலானவை மட்டுமே- இது போன்ற காரணிகளால் தான் பல பொறியியல் மதிப்பீடுகள் முக்கியமான சுற்றுச்சூழல் அல்லது சமூக நடத்தைகள் மற்றும் வரம்புகளை பார்க்க தவறவிடுகின்றன. நீரூற்றுகள், இணைப்பு பயன்பாடு, விவசாயிகளின் கூட்டுறவு நடத்தை மற்றும் நீர்வாழ் அமைப்புகளைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியில் நமக்கு அதிக முதலீடு தேவை.
குறுகிய பொறியியல் பகுப்பாய்வுகளுக்கு வெளியே கொள்கை வகுப்பாளர்களால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதும் குறைவாகவே உள்ளது. கொள்கை வகுப்பாளர்களுக்கான ஆராய்ச்சியின் உயர்தர தொகுப்பு தேவைப்படுகிறது.
ஐந்தாவது, உள்ளூர் சமூகங்களுடன் இணைக்கப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் நீர்த்தேக்க மேலாண்மை அமைப்புகள் நமக்குத் தேவை. காலநிலை மாற்றம் அதிக மழையைக் கொண்டுவரும். ஆனால், வெள்ளம் காரணமாக ஏற்படும் இறப்புகள் வலுவான புயல்கள், வறுமை மற்றும் பலவீனமான சமாளிக்கும் அமைப்புகள் காரணமாக நிகழ்கின்றன. தொழில்நுட்பம் மட்டும் போதுமானதாக இருக்காது - குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களால் முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் புரிந்துகொண்டு, நம்ப வேண்டும், செயல்படுத்த வேண்டும். இதற்காக, உள்ளூர் வலையமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் நிர்வாகம் மூலம் வெள்ள எச்சரிக்கைகள் செயல்பட வேண்டும். இந்த அணுகுமுறை ஒடிசாவில் சிறப்பாக செயல்பட்டது. அந்த மாநிலத்தில் 'முன்கூட்டிய எச்சரிக்கை பரவல் அமைப்பு' (Early Warning Dissemination System) 1999-ல் ஒரு மில்லியன் மக்களுக்கு 780-ஆக இருந்த பெரும்புயல்களினால் ஏற்படும் இறப்புகளை 2019-ல் 3.82 ஆகக் குறைக்க உதவியது.
ஆனால் இயற்கைப் பேரழிவுகள் மட்டுமே பிரச்சனை அல்ல. இந்தியாவில் ஏற்படும் மிகப்பெரிய வெள்ளப் பேரழிவுகளில் சில, மனிதனால் உருவாக்கப்பட்டவை - எச்சரிக்கை இல்லாமல் நீர்த்தேக்கங்களில் இருந்து திடீரென தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படுகின்றன. பல நேரங்களில், மழை பெய்யாமல், கோடையில் நீர் மட்டம் குறைந்துவிட்டால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில், அணை நிர்வாகிகள் தண்ணீரை வெளியேற்ற கடைசி நிமிடம் வரை காத்திருக்கிறார்கள். கடந்தகால வெள்ளப் பேரிடர்களின் நேர்மையான பகுப்பாய்வின் அடிப்படையில், நவீன வெள்ள விதிகள், நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் ஸ்மார்ட் நீர்த்தேக்க மேலாண்மை போன்ற சிறந்த மற்றும் புதுப்பிக்கப்பட்ட அமைப்புகள் நமக்குத் தேவை.
இறுதியாக, தகவமைப்பு மற்றும் உள்ளடக்கிய நவீன நீர் நிறுவனங்கள் நமக்குத் தேவை. மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாதது ஆகும். துறைகளுக்கு இடையே நீர் தேவையை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு அல்லது செயல்முறை இல்லாதது ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியைக் கொண்டுள்ளது. விவசாயம், தொழில் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகள் ஒட்டுமொத்த படுகை நீர் கிடைப்பைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இதன் விளைவாக, வழங்கல் மற்றும் தேவைக்கு இடையிலான பொருந்தாத தன்மை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கிறது.
மற்றொரு பிரச்சனை என்னவென்றால், நீர்வளப் பொறியாளர்கள், பிற துறைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது ஆகும். பெரும்பாலும் இருதரப்புக்கும் வெற்றி தரும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தனிப்பட்ட துறைகள் தங்கள் சொந்த ஆணைகளின்படி கண்டிப்பாக செயல்படுகின்றன. மேலும், குடிமை சமூகத்தின் மீது ஆழமான அவநம்பிக்கை உள்ளது. இது பயனுள்ள உரையாடலைத் தடுக்கிறது.
காலநிலை, சமூக-பொருளாதார மற்றும் அரசியல் என பல நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா தகவமைப்பு நீர் மேலாண்மையை (adaptive water management) ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் பொருள், நிர்ணயிக்கும் முன்னறிவிப்புகளிலிருந்து சூழ்நிலைத் திட்டமிடலுக்கு மாறுவதாகும். அங்கு பங்குதாரர்களுடன் இணைந்து பல்வேறு சாத்தியமான எதிர்காலங்கள் ஆராயப்படுகின்றன. மேலும், இதற்கு ஒருங்கிணைக்கக்கூடிய மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைப்பு தேவைப்படுகின்றன.
இந்தியாவின் நீர் அமைப்புகள் புதிய மற்றும் அறியப்படாத சவால்களை எதிர்கொள்கின்றன. மக்கள்தொகை வளர்ச்சி, மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் புதிய அரசியல் முன்னுரிமைகள் ஆகியவற்றுடன் காலநிலை மாற்றம் விவகாரங்கள் சிக்கலை மேலும் அதிகரிக்கிறன. முக்கியக் குறிக்கோள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றுவது மட்டுமல்ல, வேகமாக மாறிவரும் உலகைக் கையாள நமது அமைப்புகள், கொள்கைகள் மற்றும் அமைப்புகளை மீண்டும் உருவாக்குவதாகும்.
வீணா ஸ்ரீனிவாசன் ஒரு சமூக-நீரியல் நிபுணர் மற்றும் WELL ஆய்வகங்களின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.