தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வரி செலுத்துவோருக்கு என்ன இருக்கிறது? மூலத்தில் வசூலிக்கப்படும் வரி உயர்வு, மூலத்தில் வசூலிக்கப்படும் வரி நிவாரணம் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகள் பற்றி… -சுகல்ப் ஷர்மா, சந்தீப் சிங்

 2026-27ஆம் வரி செலுத்துவோருக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை: கடந்த ஆண்டின் வருமான வரிச் சலுகைகளுக்குப் பிறகு, 2026-27-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் தனிநபர் வரி செலுத்துவோருக்காக எந்த ஒரு பெரிய அறிவிப்பும் இல்லை. இருப்பினும், சில பிரிவுகளில் உள்ள தனிநபர்களைப் பாதிக்கும் பல சிறிய மாற்றங்களும் அறிவிப்புகளும்  இடம்பெற்றுள்ளன.


பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் (future and options (F&O)) வர்த்தகங்களுக்கான பத்திரப் பரிவர்த்தனை வரியை (Securities Transaction Tax (STT)) உயர்த்துவது முதல், வெளிநாட்டில் வசிக்கும் தனிநபர்களிடமிருந்து (Persons Resident Outside India (PROIs)) முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதன வரவுகளை அதிகரிக்க முயற்சிப்பது வரை, வெளிநாட்டுக் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களுக்கான மூலத்தில் வரி வசூலிக்கும் (tax collection at source) விகிதங்களைக் குறைப்பது முதல், வரி விதிப்பதை எளிதாக்குவதற்கும், வரி அபராதம் மற்றும் வழக்குத் தொடர்வதை முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் அறிவிப்பது வரை, தனிநபர்களுக்கான முக்கிய அம்சங்கள் இங்கே:


எதிர்காலம் மற்றும் விருப்பத்தேர்வு வர்த்தகங்களில் அதிக பத்திரப் பரிவர்த்தனை வரி விகிதங்கள்


பங்கு வர்த்தகத்தில் "பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவில் நியாயமான திருத்தத்தை" வழங்கும் நோக்கத்துடனும், அதே நேரத்தில் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டும் நோக்கத்துடனும், பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகங்களில் பத்திரப் பரிவர்த்தனை வரியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் மீதான பத்திரப் பரிவர்த்தனை வரி 0.02%-லிருந்து இரண்டரை மடங்கு அதிகரித்து 0.05%-ஆக உயர உள்ளது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்துதல் மீதான பத்திரப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1% மற்றும் 0.125% என்ற விகிதத்திலிருந்து 0.15% ஆக உயர்த்தப்படும்.


இந்த நடவடிக்கை, சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு பெருமளவில் அதிகரித்திருந்த எதிர்காலம் மற்றும் விருப்பத்தேர்வு பிரிவில் ஊக வணிகத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (Securities and Exchange Board of India (SEBI)) கூற்றுப்படி, இந்தத் துறையில் உள்ள 90%-க்கும் மேற்பட்ட தனிநபர் வர்த்தகர்கள் இழப்பைச் சந்திக்கின்றனர். இந்த நடவடிக்கை இந்தத் துறையில் வர்த்தக அளவுகளில் ஒரு மிதமான நிலைக்கு வழிவகுக்கும் என்று  சந்தை ஆய்வாளர்கள் கூறினார்


இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் நபர்களிடமிருந்து (Persons Resident Outside India (PROIs)) பங்கு முதலீடுகளை ஊக்குவித்தல்


இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் நபர்கள், போர்ட்ஃபோலியோ முதலீட்டுத் திட்டம் மூலம் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களின் பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு தனிநபர் வெளிநாட்டு முதலீட்டாளருக்கான முதலீட்டு வரம்பை 10%-ஆக இரட்டிப்பாக்கவும், அனைத்து தனிநபர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒட்டுமொத்த முதலீட்டு வரம்பை தற்போதைய 10%-லிருந்து 24%-ஆக அதிகரிக்கவும் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கைகள் குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதையும், மூலதன வரவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (Foreign Exchange Management Act (FEMA)) கீழ் இந்தியாவின் குடியுரிமைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனமும் வெளிநாட்டு முதலீட்டாளர் ஆவார். இந்த மாற்றங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (non-resident Indians (NRIs)) மற்றும் இந்தியக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் (Overseas Citizens of India (OCIs) ஆகியோரைத் தவிர, பிற இந்தியர் அல்லாத வெளிநாட்டினரிடமிருந்தும் முதலீடுகளை ஈர்க்க உதவும்.


தற்போது, ​​இந்தியாவில் வசிக்காத ஒரு நபர், எந்தவொரு குறிப்பிட்ட இந்திய நிறுவனத்திலும் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) அல்லது அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடு (Foreign Portfolio Investment (FPI)) வடிவில் வெளிநாட்டு முதலீடுகளை வைத்திருக்கலாம். இந்த முதலீடுகள் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நுழைவு வழிகள், துறைசார் வரம்புகள் அல்லது முதலீட்டு வரம்புகளுக்கு உட்பட்டவை. இந்த நடவடிக்கைகளின் மூலம், மூலதன வரவுகள் ஊக்கம் பெறும் (capital inflows) என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெளிநாட்டு கல்வி, சிகிச்சை, சுற்றுலாக்களுக்கான மூலத்தில் வரி வசூலில்  நிவாரணம்


தாராளமயமாக்கப்பட்ட அந்நியச் செலாவணி திட்டத்தின்கீழ், வெளிநாட்டில் கல்வி கற்பதற்கோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதற்கோ ஆண்டுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் வரையிலான தொகைக்கு விதிக்கப்படும் மூலத்தில் வரி வசூல் (TCS) தற்போதைய 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


இந்த நடவடிக்கை, முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரியைக் குறைப்பதன் மூலம், சர்வதேச கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான தடையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூலத்தில் வரி வசூல் என்பது இறுதி வரிப் பொறுப்பிற்கு எதிராகச் சரிசெய்யப்படக்கூடியதாக இருந்தாலும், மூலத்தில் வரி வசூல் விகிதக் குறைப்பு என்பது வரி செலுத்துவோரின் பணம் குறைந்த அளவே வரியாக முடக்கப்படும் என்பதைக் குறிக்கிறது. இது வரி செலுத்துவோரின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும்.


கூடுதலாக, வெளிநாட்டு சுற்றுலாத் திட்டங்களின் விற்பனை மீதான மூலத்தில் வரி வசூல் (TCS) வரி விகிதமும், 5% (ரூ. 10 லட்சம் வரை) மற்றும் 20% (மொத்தத் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருந்தால்) என்பதிலிருந்து 2%-ஆகக் குறைக்கப்படும்.


தனிநபர்களுக்கான வருமான வரி விதிகளில் இணக்கத்தை எளிதாக்க மாற்றங்கள்


வருமான வரிச் சட்டம், 1961-ஐ விரிவாக மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வருமான வரிச் சட்டம், 2025-ன் படி, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் அறிவிக்கப்படும். சாதாரண குடிமக்கள் சிரமமின்றி விதிகளைப் பின்பற்றக்கூடிய வகையில் படிவங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


வரி செலுத்துவோர் ஒரு பெயரளவிலான கட்டணத்தைச் செலுத்தி, திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், வரி ஆண்டைத் தொடர்ந்து டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. இந்தத் திருத்தப்பட்ட கணக்கு அசல் கணக்காகவோ அல்லது தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட கணக்காகவோ இருக்கலாம். இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் வரி செலுத்துவோர், வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளதா அல்லது அதற்கு மேல் உள்ளதா என்பதைப் பொறுத்து ரூ. 1,000 அல்லது ரூ. 5,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


பெரும்பாலான தனிநபர்களுக்கான (ITR 1 மற்றும் ITR 2) காலக்கெடு ஜூலை 31 அன்று மாறாமல் அப்படியே உள்ளது. ஆனால், கணக்குகள் தணிக்கை செய்யப்படாத தனிநபர் வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இப்போது ஒரு கூடுதல் மாதம் அவகாசம் பெற்று, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.


விதி அடிப்படையிலான தானியங்கி அமைப்பு, குறைந்த அளவு வரி செலுத்துவோர் ஆவண வேலைகள் ஏதுமின்றி மூல வரியில் வரிப் பிடித்தம் செய்வதைத் தவிர்க்கவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ ​​உதவுகிறது. விதிமுறைகளின் அடிப்படையிலான ஒரு கருவி, உங்கள் ஆண்டு வரி குறைவாக இருக்குமா என்பதைச் சரிபார்த்து, உடனடியாக ஒரு சான்றிதழை வழங்குகிறது. அதிகாரியிடம் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மதிப்பிடப்பட்ட வருடாந்திர வருமான வரிப் பொறுப்பு, நிலையான மூலத்தில் வரிப் பிடித்தம் (TDS) விகிதத்தை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும்போது, ​​இந்தச் சான்றிதழ் மூலத்தில் வரிப் பிடித்தத்தைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நீக்கவோ அனுமதிக்கிறது.


மேலும், குடியுரிமை பெறாத ஒருவரால் அசையாச் சொத்து விற்பனை செய்யப்படும்போது, ​​அதற்கான மூலத்தில் வரிப் பிடித்த (tax deducted at source (TDS)) தொகையானது, வரி பிடித்தம் மற்றும் வசூல் கணக்கு எண்ணுக்குப் (Tax Deduction and Collection Account Number (TAN)) பதிலாக, சொத்தை வாங்கும் குடியுரிமை பெற்றவரின் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) அடிப்படையிலான சலான் மூலம் பிடித்தம் செய்யப்பட்டு செலுத்தப்படும். தற்போது, ​​குடியுரிமை பெறாத ஒருவரிடமிருந்து அசையாச் சொத்தை வாங்குவதற்கு, குடியுரிமை பெற்ற தனிநபர்கள் ஒரு வரி பிடித்தம் மற்றும் வசூல் கணக்கு எண்ணை கட்டாயம் பெற வேண்டும்.


குறைந்த அளவு வரி செலுத்துவோருக்கான ஒருமுறை வெளிநாட்டுச் சொத்து வெளிப்படுத்தல் திட்டம்


மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பிய இந்தியர்கள் போன்ற குறைந்த அளவு வரி செலுத்துவோரின் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், அரசாங்கம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஆறுமாத கால வெளிநாட்டுச் சொத்து வெளிப்படுத்தல் (six-month foreign asset disclosure scheme) திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்கீழ், அத்தகைய வரி செலுத்துவோர் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ் வருமானம் அல்லது சொத்துக்களை ஆவணமாக இணைக்கலாம்.


இந்தத் திட்டம் இரண்டு வகையான வரி செலுத்துவோருக்கானது: தங்களின் வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்களைப் பற்றித் தெரிவிக்காதவர்கள் மற்றும் தங்களின் வெளிநாட்டு வருமானத்தைப் பற்றித் தெரிவித்து வரி செலுத்தியிருந்தாலும், தாங்கள் வாங்கிய சொத்துக்களை தெரியப்படுத்தாதவர்களுக்கானது.


முதல் வகையினருக்கு, வெளிப்படுத்தப்படாத வருமானம் அல்லது சொத்தின் வரம்பு ரூ. 1 கோடி வரை இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. அவர்கள் சொத்தின் நியாயமான சந்தை மதிப்பில் 30% அல்லது வெளிப்படுத்தப்படாத வருமானத்தை வரியாகவும், அபராதத்திற்குப் பதிலாக கூடுதல் வருமான வரியாக 30% செலுத்த வேண்டும். இது அவர்களுக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். இரண்டாவது வகையினருக்கு, சொத்தின் மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சூழலில், ரூ. 1 லட்சம் கட்டணம் செலுத்துவதன் மூலம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.


வரி அபராதம், சட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்


பலதரப்பட்ட வரி நடைமுறைகள் வணிகம் செய்வதை எளிதாக்குவதைத் தடுப்பதால், அரசாங்கம் மதிப்பீடு மற்றும் அபராத நடவடிக்கைகளை இரண்டிற்கும் பொதுவான ஒரு உத்தரவின் மூலம் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. முதல் மேல்முறையீட்டு அதிகாரிக்கு முன்பான மேல்முறையீட்டுக் காலத்திற்கு, மேல்முறையீட்டு செயல்முறையின் முடிவு எப்படி இருந்தாலும், வரி செலுத்துவோர் மீது அபராதத் தொகைக்கு வட்டித் தொகை எதுவும் விதிக்கப்பட்டது. மேலும், முன்கூட்டியே செலுத்த வேண்டிய தொகையின் அளவு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, அது அடிப்படை வரித் தேவையின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கணக்கிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் தனது வரவு செலவு அறிக்கை உரையில் தெரிவித்தார்.


வழக்குகளைக் குறைப்பதற்கான ஒரு கூடுதல் நடவடிக்கையாக, மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகும், வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்குகளைப் புதுப்பிக்க அனுமதிக்க முன்மொழிகிறேன். இதற்கு ஆண்டிற்குப் பொருந்தக்கூடிய விகிதத்திற்கு மேல் கூடுதலாக 10% வரி விகிதம் விதிக்கப்படும். பின்னர், மதிப்பீட்டு அதிகாரி தனது நடவடிக்கைகளில் இந்த புதுப்பிக்கப்பட்ட கணக்கை மட்டுமே பயன்படுத்துவார் என்று நிதியமைச்சர் கூறினார்.


கூடுதலாக, வருமானத்தைக் குறைத்துக் காட்டும் வழக்குகளில் அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிப்பதற்கான தற்போதைய கட்டமைப்பு, தவறாகத் தகவல் அளிக்கும் வழக்குகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அத்தகைய வழக்குகளில், வரி செலுத்துபவர் வழக்கமான வரி மற்றும் வட்டியுடன், கூடுதலாக 100% அபராதத்தையும் சேர்த்து இருமடங்கு தொகையைச் செலுத்த வேண்டும்.


கணக்குகளைத் தணிக்கை செய்யத் தவறுதல், பரிமாற்ற விலை நிர்ணயத் தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிக்காதது மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் போன்ற சில தொழில்நுட்பத் தவறுகளுக்கான அபராதங்கள் கட்டணமாக மாற்றப்பட உள்ளன. சில கடுமையான குற்றங்களில் தடுப்பு நடவடிக்கையை உறுதி செய்யும் அதேவேளையில், வருமான வரிச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குத் தொடர்வதற்கான கட்டமைப்பை முறைப்படுத்த இருப்பதாக  நிதியமைச்சர் கூறினார்.


மேலும், கணக்குப் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காதது, மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளின்போது மூலவரிப்பிடித்தம் செலுத்துவதற்கான தேவை ஆகிய குற்றங்கள் குற்றமற்றவையாக ஆக்கப்படும். சிறிய குற்றங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும், வழக்குத் தொடரப்படாது. மீதமுள்ள வழக்குகள் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும். அவற்றுக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சாதாரண சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்படும். மேலும், அந்தத் தண்டனைகளைக்கூட அபராதமாக மாற்ற நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.




Share: