மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக நிதி செலவிடும் பொறுப்பு இப்போது மாநில அரசுகளிடம் வந்துவிட்டது. அதே வேளையில், ஒன்றிய அரசு அதற்கான சட்டங்களை இயற்றுவதிலும், வழிமுறைகளை நிர்ணயிப்பதிலும் முன்னிலை வகித்து அந்தத் திட்டங்களை வழிநடத்துகிறது.
2026–27 ஆம் ஆண்டிற்கான சமூகத் துறைக்கான நிதிநிலை அறிக்கை சற்று வழக்கத்திற்கு மாறானது. ஏனெனில், இதில் புதிய முக்கியத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, ஒவ்வொரு நிதிநிலை திட்ட அறிக்கையிலும் இத்தகைய புதிய திட்டங்களை அறிவிப்பது ஒரு பொதுவான நடைமுறையாகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
குறைவான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினம்
இருப்பினும், இந்தத் துறைக்கான உண்மையான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டே வருகிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், தனித்து வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கான திட்டங்களுக்கு நீண்டகாலமாகவே மிகக் குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது. இதில் ஓய்வூதியத்திற்கான தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme (NSAP)), மகப்பேறு நலன்களுக்கான 'சமர்த்யா' (SAMARTHYA), குழந்தைப் பராமரிப்பு மையங்களுக்கான 'பால்னா' (PALNA), பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதற்கான பிரதமரின் ஊட்டச்சத்து சக்தி நிர்மாணத் திட்டம் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN)) மற்றும் சிறு குழந்தைகளுக்கான 'சக்ஷம் அங்கன்வாடி' (Saksham Anganwadi) ஆகிய திட்டங்கள் அடங்கும். உண்மையில், இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பெரும்பாலும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இந்த ஆண்டும், இந்த உயர்வு மிகக் குறைவாகவே உள்ளது; அதாவது ஓய்வூதியத்திற்கான தேசிய சமூக உதவித் திட்டத்திற்கு (NSAP) வெறும் 0.2% முதல், சக்ஷம் அங்கன்வாடி திட்டத்திற்கு 5.2% வரை மட்டுமே பெயரளவில் உயர்ந்துள்ளது. மேலும், இத்திட்டங்கள் அனைத்திற்கும் 2025–26-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (Revised Estimates (RE)), நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகளை (Budget Estimates (BE)) விடக் குறைவாக உள்ளன. இது ஒதுக்கப்பட்ட நிதிகூட முழுமையாகச் செலவிடப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பெரிய துறைகளிலும் இதே போன்ற நிலைதான் நீடிக்கிறது. 2026–27-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகள், முந்தைய ஆண்டின் (2025–26 BE) நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, சுகாதாரத்திற்கு 6.4% மற்றும் கல்விக்கு 8.3% மட்டுமே நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய அதிகரிப்புகளும் கூட நம்மை தவறாக வழிநடத்தக்கூடியவை. ஏனெனில், 2025–26-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (RE), அந்த ஆண்டின் ஆரம்ப ஒதுக்கீட்டை (BE) விட முறையே 3.7% மற்றும் 5.2% குறைவாக உள்ளன.
பெரும்பாலான சமூகநலத் துறைகளில், 2025–26-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (RE), முதலில் ஒதுக்கப்பட்ட தொகையைவிடக் குறைவாக உள்ளன. இதில் நகர்ப்புற வளர்ச்சி (41%), ஊரக வளர்ச்சி (20%), வடகிழக்கு மாநில வளர்ச்சி (24%) மற்றும் சமூக நலன் (17%) ஆகிய துறைகளில் மிக அதிகப்படியான நிதிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதிநிலை திட்ட அறிக்கைகளில் முக்கியமாகக் கருதப்பட்ட சில திட்டங்களுக்கு நிதி செலவிடப்படுவதும் மந்தமாக உள்ளது. உதாரணமாக, 'ஜல் ஜீவன் மிஷன்' (Jal Jeevan Mission) திட்டத்திற்கான ஒதுக்கீடு 2025–26 நிதிநிலை மதிப்பீட்டில் (BE) ₹67,000 கோடியாக இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (RE) ₹17,000 கோடியாகக் குறைந்துள்ளது. அதேபோல், பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (கிராமப்புறம்) ((Pradhan Mantri Awas Yojana (PMAY))₹54,832 கோடியிலிருந்து ₹32,500 கோடியாகவும், பிரதமர் வீட்டுவசதித் திட்டம்-நகர்ப்புறத் திட்டம் ₹19,794 கோடியிலிருந்து ₹7,500 கோடியாகவும் குறைந்துள்ளன. இவ்வளவு குறைவான நிதி பயன்பாடு இருந்தபோதிலும், 2026–27 பட்ஜெட்டில் மீண்டும் கடந்த ஆண்டின் நிதிநிலை மதிப்பீட்டிற்கு நிகரான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மொத்தச் செலவினத்தில் இந்தத் துறைகளுக்கான ஒதுக்கீடு பெரிய மாற்றமின்றி அப்படியே உள்ளது. ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டங்களில் (Centrally Sponsored Schemes (CSS)), ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைவாகவே செலவு செய்யப்பட்டுள்ளது. 2025–26 நிதிநிலை மதிப்பீட்டில் (BE) ₹5,41,850 கோடியாக இருந்த ஒதுக்கீடு, திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (RE) ₹4,20,078 கோடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், 2026–27 நிதிநிலை மதிப்பீட்டில் (BE) மீண்டும் ₹5,48,798 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தவறான இலக்கு
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, மூலதனச் செலவினங்களுக்கு (Capital Expenditure) முக்கியத்துவம் அளிப்பது இந்த முறையும் தொடர்கிறது; இதற்காக ₹12 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு பெரிய செலவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலோ அல்லது தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதிலோ எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பது குறித்த தெளிவான மதிப்பீடு இன்னும் இல்லை. இந்தியப் பொருளாதாரம் இப்போதும் பழைய பிரச்சனைகளையே எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாகப் படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்பு இல்லாமை, பலவீனமான கட்டமைப்பு மாற்றம், குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் அதனால் ஏற்படும் குறைந்த வருமானம் போன்றவை மக்களின் வாங்கும் திறனை (Purchasing Power) குறைத்துள்ளன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தொடர்ச்சியான கொள்கைரீதியான முயற்சிகள் தேவை என்றும் வெறும் நிதிநிலைத் திட்ட அறிக்கையின் மூலமாக மட்டுமே இதைச் சாதித்துவிட முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில், நிதிநிலைத் திட்டத்தின் முன்னுரிமைகள் மாறவில்லை. அவை சந்தையின் எதிர்வினையை எதிர்பார்த்து, 'வழங்கல் முறை' (Supply-side measures) சார்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன. இதுவரை எதிர்பார்த்த பலன் கிடைக்காதபோதிலும், பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டில் கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.
பொறுப்பைத் தட்டிக்கழித்தல்
2026-27-ஆம் ஆண்டின் நிதிநிலைத் திட்ட அறிக்கையானது, சமூகநலத் திட்டங்களுக்கான செலவினங்களை மாநில அரசுகளே முன்னின்று கவனிக்கும் தற்போதைய போக்கைத் தொடர்கிறது. 2015-ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு, மத்திய நிதியுதவி பெறும் திட்டங்களின் (CSS) செலவைப் பகிர்ந்து கொள்ளும் முறை மாற்றப்பட்டது; இதன் விளைவாக, செலவின் பெரும்பகுதி மாநிலங்களின் பொறுப்பிற்கு மாறியுள்ளது. முன்பு சில முக்கியத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசே முழு நிதியையும் வழங்கியது. ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) நீக்கிவிட்டு VB-G RAM G திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இந்த நிலை கணிசமாக மாறியுள்ளது. உதாரணமாக, விக்சித் பாரத் - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) திட்டத்திற்காக நிதிநிலை அறிக்கையில் ₹96,000 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டிருந்தாலும், புதிய 60:40 பகிர்வு முறையின்கீழ் மாநிலங்கள் சுமார் ₹56,000 கோடியை வழங்கினால் மட்டுமே அந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர். எனவே, இந்தியாவின் சமூகநலச் செலவினங்களைச் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டுமானால், மாநில நிதி ஒதுக்கீடுகளை விரிவாக ஆய்வு செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: மாநிலங்களுக்கு கூடுதலாகச் செலவு செய்யத் தேவையான நிதி வசதி இருக்கிறதா? மாநிலங்களின் செலவு மற்றும் பொறுப்புகள் அதிகரித்து வரும் வேளையில், ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் ஆதரவு குறைந்து வருகிறது. மொத்த வரி வருவாயில் மாநிலங்கள் சுமார் 34% மட்டுமே பெறுகின்றன. இது நிதி ஆணையம் பரிந்துரைத்த 41%-ஐ விட மிகக் குறைவு என்றும் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், ஒன்றிய அரசு 'செஸ்' (Cess) மற்றும் கூடுதல் வரிகளை அதிகமாகச் சார்ந்திருப்பதே ஆகும். மேலும், மாநிலங்களுக்கு நிதி ஆணையம் வழங்கும் மானியத் தொகையும் 2025-26 நிதிநிலை மதிப்பீட்டில் ₹1,32,767 கோடியாக இருந்தது, தற்போது 2026-27 நிதிநிலை மதிப்பீட்டில் ₹1,29,397 கோடியாகக் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சமூக நலத்திட்டங்களுக்கானச் செலவினங்கள் மாநில அரசுகளை நோக்கியே நகர்ந்துள்ளன. அதேசமயம் ஒன்றிய அரசு சட்டங்கள் மற்றும் விதிகளை உருவாக்குவதன் மூலம் கொள்கை முடிவுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது முக்கியமான சில கேள்விகளை எழுப்புகிறது: ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதிச்சுமையையும், தங்களின் சொந்த முன்னுரிமைகளையும் மாநில அரசுகள் எவ்வாறு சமன் செய்கின்றன? இது மக்கள் சமூகச் சேவைகளைப் பெறுவதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இந்த விவகாரங்கள் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
தீபா சின்ஹா, இணைப் பேராசிரியர், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.