கல்வி உதவித்தொகைகள் சமத்துவம், தரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் முக்கிய நிலையாக அமைகின்றன. உயர்கல்வியில் யார்?, எத்தனை பேர் நுழைகிறார்கள்?, யார் தொடர்ந்து படிக்கிறார்கள்? என்பதில் அவை செல்வாக்கு செலுத்துகின்றன.
இந்தியா தனது உயர்கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio (GER)) 50% ஆக உயர்த்த வேண்டுமானால், நாடு எத்தனை கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும் என்பது மட்டுமல்ல கேள்வி, உண்மையில் இந்த நிறுவனங்களில் யார் நுழைய முடிகிறது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும்.
கல்வித் திறன்களை விரிவுபடுத்துவதில் இந்தியா படிப்படியாக முன்னேறி வருகிறது. 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-2015-ல் 51,534-லிருந்து கடந்த ஆண்டில் 70,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 2022-2023-ல் 29.5 சதவீதமாக உள்ளது. இத்தகைய வரையறுக்கப்பட்ட பங்கேற்பு விகிதம், கல்வி இடங்கள் மட்டுமே மாணவர்களை உருவாக்குவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. கல்விக்கான அணுகல், குறைந்த விலை மற்றும் கல்வித் தரம் ஆகியவை ஒன்றிணையும்போது கல்வி வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இந்தியாவில் உள்ள பல இளைஞர்களுக்கு, குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிப்பவர்களுக்கு, முக்கியப் பிரச்சனை லட்சியமின்மை அல்ல. உண்மையான சவால் என்பது கல்வியின் செலவும், அதைப் பின்தொடர்வதில் உள்ள அபாயங்களுமே ஆகும். இதனால்தான் கல்வி உதவித்தொகைகள் கல்வி அமைப்பின் ஒரு சிறிய அல்லது விருப்பத் தேர்வாகக் கருதப்படக்கூடாது. அவை உயர்கல்விக்கான ஒரு ஒருங்கிணைந்த மற்றும் நம்பகமான பாதையாக வடிவமைக்கப்பட்டு, அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஒரு அவசரத் தேவை
நாடு ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று சவால்களை எதிர்கொள்கிறது. முதலாவதாக, பிராந்தியங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் முழுவதும் கல்விக்கான அணுகல் சவால்; இரண்டாவதாக, உயர்கல்வியை குடும்பங்களுக்கு ஒரு நீண்டகால முதலீடாக மாற்றும் கல்விக்கான செலவுத் திறன் சவால்; மற்றும் மூன்றாவதாக, மாணவர் சேர்க்கையானது உண்மையான கற்றல் மற்றும் வேலைகளுக்கு வழிவகுப்பது எந்த அளவிற்கு மாறுகிறது என்பதைத் தீர்மானிக்கும் கல்வித் தரச் சவால் ஆகும். தகுதியுள்ள மாணவர்கள் கல்விக்கான செலவை ஏற்க வசதி இருக்கும்போதும், பன்முகத்தன்மையும் தகுதியும் கல்வி வாழ்க்கையை நீர்த்துப்போகச் செய்யாமல் வலுப்படுத்தும் என்று கல்வி நிறுவனங்கள் நம்பும்போது அது உயர்கிறது.
இந்தியா இந்த நிலைமையைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறது. திறமையாளர்கள் நாடு முழுவதும் பரவலாக உள்ளனர். இருப்பினும், பலருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது என்பது, ஏற்கனவே வசதி படைத்த குடும்பங்களைச் சம்மதிக்க வைப்பதைவிட, அதிக செலவு, தூரம் மற்றும் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த நிச்சயமற்றத் தன்மை ஆகியவற்றால் தற்போது பின்தங்கியுள்ள திறமையான மாணவர்களை வெளிக்கொணர்வதைப் பொறுத்தே அமையும். கல்வி உதவித்தொகைகள் இங்கு ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை நிதி உதவிக்கான கருவிகள் மட்டுமல்ல; பொருள்சார் உதவிகளுக்கு அப்பாற்பட்ட தலைமைத்துவ மேம்பாடு, பரந்த அளவிலான ஆர்வங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் போன்ற ஏற்பாடுகள் மூலம், ஒரு மாணவரின் கல்வி நிறைவையும் ஒட்டுமொத்த தனிப்பட்ட மேம்பாட்டையும் உறுதிசெய்து, அவரது வாழ்க்கையை வடிவமைக்கவும் அவை உதவுகின்றன.
உயர்கல்வித் துறை மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகைகள், கல்விக் கடன்களுக்கான வட்டி மானியங்கள் மற்றும் கடன் உத்தரவாதங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது. தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம், மாநிலத் திட்டங்களுக்கான ஒரு பொதுவான தளமாகச் செயல்படுகிறது. மேலும், அமைச்சகங்கள், துறைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் முழுவதும் உள்ள கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது. அத்தகைய ஒரு திட்டம்தான் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் ஆகும். இது இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்முறைப் படிப்புகளில் ஆண்டுதோறும் 82,000 வரையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. இதனுடன், பெருநிறுவன அறக்கட்டளைகள், அறக்கட்டளைகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களும், பொறியியல் மற்றும் மேலாண்மை போன்ற துறைகளில் தகுதி மற்றும் வசதி ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்ட நன்கு அறியப்பட்ட திட்டங்களை உருவாக்கியுள்ளன.
இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும், பெரும்பாலான கல்வி உதவித்தொகைகள் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. மேலும், அவை இன்னும் ஒரு நிதிச் சுமையாகவே கருதப்படுகின்றன. கல்வி உதவித்தொகைகள், மாணவர்கள் நிதி காரணங்களுக்காக மட்டுமல்லாமல், கல்விச் சமூகம் மற்றும் வழிகாட்டுதலுக்காகவும் தாங்களாகவே விரும்பித் தேர்ந்தெடுக்கும் ஒரு பாதையாக மாற முடியுமா என்பதே வலுவான கேள்வியாகும்.
வரலாற்றிலிருந்து பாடங்கள்
இந்தியாவின் சொந்த வரலாறே உத்வேகத்தின் முதல் ஆதாரமாக இருக்கவேண்டும். பண்டைய உயர்கல்வி நிறுவனமான தக்ஷசீலாவில், மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த ஐந்து வழிகள் இருந்ததாக அறியப்படுகிறது. அவை முன்கூட்டியே செலுத்துதல்; ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது; பட்டப்படிப்பை முடித்து பின்னர் செலுத்துவதற்காக ஒத்திவைப்பது; சொந்தப் பகுதிகளிலிருந்து கல்வி உதவித்தொகை பெறுவது அல்லது பின்தங்கிய மாணவர்களுக்கான ஒரு தொண்டு சமூகத்தின் ஆதரவை நம்பியிருப்பது. அதன் கொள்கை எளிமையானது. வசதியின்மைக்காகத் மாணவர்களின் திறமை நிராகரிக்கப்படக்கூடாது. மேலும், கல்வி நிறுவனங்கள் திறமையான மாணவர்களை ஆதரிப்பதற்கும் அவர்களை உள்ளடக்குவதற்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.
கல்வி உதவித்தொகைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு கல்வி உதவித்தொகை எதைக் குறிக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்வதே இந்தியாவுக்கு முன்னால் உள்ள வாய்ப்பாகும். ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுவதற்குப் பதிலாக, பல ஆண்டுகால ஒப்பந்தங்களாக வடிவமைக்கப்படும் கல்வி உதவித்தொகைகளை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம். அவை மாணவர்கள் தங்கள் கல்வியைத் திட்டமிடுவதில் அதிக நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் அளிக்கும். பின்தங்கிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கவனம் செலுத்தும் பிராந்திய அடிப்படையிலான கல்வி உதவித்தொகைகளை வடிவமைப்பதற்காக, கல்வி நிறுவனங்களின் இருப்பு மற்றும் மாணவர் சேர்க்கை முறைகளையும் ஆய்வு செய்யலாம். மேலும், தேசிய மற்றும் பிராந்தியத் தேவைகள் உள்ள பகுதிகளுடன் கல்வி உதவித்தொகைகளை இணைக்கும் திட்டத்திற்கென பிரத்யேகமான வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். மாணவர் பங்கேற்பு குறைவாகவும், அதே சமயம் அதற்கான தேவை அதிகமாகவும் உள்ள மாவட்டங்களில், இத்தகைய திட்டங்கள் அமைந்திருக்கலாம். இத்தகைய அணுகுமுறை மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவும். மேலும், இது மாணவர்களின் திறன்களையும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தவும் வழிவகுக்கும்.
பொதுக் கொள்கையும் ஒழுங்குமுறையும் இந்த மாற்றத்தை மெதுவாக ஆதரிக்க முடியும். அறக்கட்டளைகளுக்கான வரிச் சலுகைகள் அல்லது தனியார் அறக்கொடைகள் மூலமான ஈட்டும் நிதிகள் போன்ற ஊக்கத்தொகைகள், வளரவும் நிலைத்திருக்கவும் வடிவமைக்கப்பட்ட கல்வி உதவித்தொகைகளுக்கு நீண்டகால மூலதனத்தை ஈர்க்க முடியும். செயல்திறன் சார்ந்த கட்டமைப்புகள், தகுதி, தேவை மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்த விளைவுகளை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்க முடியும். இத்தகைய சிந்தனை எப்படி நிலைத்திருக்கும் என்பதற்கு இந்தியாவில் ஏற்கனவே ஆரம்பகால எடுத்துக்காட்டுகள் உள்ளன. அசோகா பல்கலைக்கழகம், கல்வி மாணவர் சேர்க்கையிலிருந்து தனித்து நிதியுதவியை மதிப்பிடுகிறது. இதில், மாணவரின் பணம் செலுத்தும் திறன் மாணவர் சேர்க்கை முடிவிலிருந்து தனியாக மதிப்பிடப்படும் ஒரு தேவை சார்ந்த செயல்முறையைப் பின்பற்றுகிறது. சுமார் 20% மாணவர்கள் 100% கல்வி உதவித்தொகை காரணமாக இலவசக் கல்வி பெறுகின்றனர். மேலும், ஏறக்குறைய பாதி மாணவர்கள் வலுவான கல்வித் தரத்தைப் பராமரிக்கும் அதேவேளையில், ஏதேனும் ஒரு வகையான நிதியுதவியைப் பெறுகின்றனர். இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (Indian School of Business (ISB)), ஆயுதப் படைகளில் இருந்து வருபவர்கள் மற்றும் வளர்ச்சித் துறைக்குத் திரும்புபவர்களுக்கான ஆதரவு உட்பட, தகுதி மற்றும் தேவையைப் பிரதிபலிக்கும் பிரிவுகளில் நன்கொடையாளர் ஆதரவுடனான கல்வி உதவித்தொகை அமைப்பை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) தனது திட்டங்கள் முழுவதும் 250 முதல் 280 வரையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. குறிப்பாக, சமீபத்தில் தொடங்கப்பட்ட PGP-இளம் தலைவர்கள் திட்டத்தின் (PGP-Young Leaders programme) தொடக்கக் குழுவில் 40% பேர் கல்வி உதவித்தொகைகள் மூலம் ஆதரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு நிறுவனங்களிலும், உதவித்தொகைகள் ஒரு இரண்டாம் நிலை அம்சமாகக் கருதப்படுவதில்லை. அவை ஒரு வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்விச் சமூகத்தை உருவாக்குவதில் ஒரு மையப் பகுதியாகும்.
சர்வதேச அனுபவம் இந்தக் கருத்தை ஆதரிக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள பல்துறை கல்வி உதவித்தொகைத் திட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளூர் வளர்ச்சி முன்னுரிமைகளுடன் இணைந்த சீனாவின் மாகாண மற்றும் நகர அளவிலான கல்வி உதவித்தொகைகளாக இருந்தாலும் சரி, மிகவும் திறமையான அமைப்புகள் கல்வி உதவித்தொகைகளைத் தங்களின் கல்விப் பண்பாடுகளின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுகின்றன.
விளிம்பு நிலையிலிருந்து மையத்திற்கு
இந்தியா தனது உயர்கல்வி அமைப்பை இன்னும் விரிவுபடுத்திப் பன்முகப்படுத்த வேண்டும். இருப்பினும், விரிவாக்கம் மட்டுமே கற்றலையும் சமூக நகர்வையும் வலுப்படுத்தும் 50% மாணவர் சேர்க்கை விகிதத்தை அடையாது. திறமையான மாணவர்கள் எங்கிருந்து வந்தாலும், அவர்கள் ஆதரிக்கப்பட்டு, அவர்களின் பின்னணி அல்லது பூர்வீகத்தைப் பொருட்படுத்தாமல் வழங்குவதால் உண்மையான முன்னேற்றம் நிகழ்கிறது.
இது வெறும் நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதம் மட்டுமல்ல. இது ஒரு முழுமையான சூழலமைப்பை உருவாக்குவது பற்றியது. கல்வி உதவித்தொகைகள் சமத்துவம், தரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் முக்கிய புள்ளியாக அமைகின்றன. உயர்கல்வியில் யார்?, எத்தனை பேர் நுழைகிறார்கள்?, யார் தொடர்ந்து படிக்கிறார்கள்? என்பதில் அவை செல்வாக்கு செலுத்துகின்றன. கல்வி உதவித்தொகைகள் கல்வி வளாக வாழ்க்கையை (campus life) சமூக ரீதியாகவும் அறிவுசார் ரீதியாகவும் வடிவமைக்கின்றன. மேலும், ஒரு நாட்டின் திறமை எவ்வாறு கண்டறியப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது மற்றும் வளர்க்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம், அந்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கும் அவை பங்களிக்கின்றன.
நமது குறிக்கோள் வெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதும், தேசியத் திறனை வலுப்படுத்துவதும் நோக்கமாக இருந்தால், கல்வி உதவித்தொகைகள் உயர்கல்விக் கொள்கையின் விளிம்பிலிருந்து மையத்திற்கு நகர்த்தப்படத் தகுதியானவையாகும்.
பிரமத் ராஜ் சின்ஹா, டெல்லி-என்சிஆர்-ல் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுவின் தலைவர் ஆவார்.
Original article : Making scholarships integral to India’s academic culture -Pramath Raj Sinha