மேற்குவங்க சிறப்புத் தீவிர திருத்த விவகாரம்: வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமையை எவ்வாறு பாதிக்கிறது? -அமால் ஷேக்

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பெரிய சர்ச்சைக்குள், ஒரு சிறிய பிரச்சனையும் உள்ளது. பொதுவெளியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, வேட்புமனுவும் தாக்கல் செய்த ஒரு வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், அவருடைய நிலை என்னவாகும்?


திங்கள்கிழமை ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மேற்குவங்கத்தில் மேற்கொள்ளபட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த  (Special Intensive Revision (SIR)) நடவடிக்கைக்குப் பிறகு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக, இது தொடர்பான மேல்முறையீடுகள் இன்னும் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளதால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்த மனுதாரர்களால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.


ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமை என்பது "தேசியப்பற்று மற்றும் தேசபக்தியின் மிகப்பெரிய வெளிப்பாடு" என்று நீதிமன்றம் விவரித்துள்ளது.


தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது இந்த மனுதாரர்களை வாக்களிக்க அனுமதித்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் மற்றவர்களும் இதே போன்ற சலுகையை கேட்க வழிவகுக்கும் என்று கூறியது. தலைமை நீதிபதி கேள்வி எழுப்புகையில், சலுகை அடிப்படையில் வாக்களிக்க அனுமதித்தால் வாக்களிப்பதன் நோக்கமே சிதைந்துவிடும் என்றும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டவர்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.


வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பெரிய சர்ச்சைக்குள், ஒரு சிறிய பிரச்சனையும் உள்ளது. பொதுவெளியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, வேட்புமனுவும் தாக்கல் செய்த ஒரு வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், அவருடைய நிலை என்னவாகும்?


கடந்த வாரம், ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி, தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தனது பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிகழ்வு ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தெளிவுபடுத்துகிறது. இந்த மனு மிகத் தாமதமாக முன்வைக்கப்பட்டது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமை


வாக்களிக்கும் உரிமைக்கும், தேர்தலில் போட்டியிடும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ராம் சந்திர சௌத்ரி vs ரூப் நகர் துக்த் உத்பாதக் சககாரி சமிதி லிமிடெட் (Ram Chandra Choudhary vs Roop Nagar Dugdh Utpadak Sahakari Samiti Ltd) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில், இந்த இரண்டு உரிமைகளுமே குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.


வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு உறுப்பினர் சட்டத்தின்படி தனது வாக்கைச் செலுத்த அனுமதிப்பதாகும்; ஆனால், தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது அதிலிருந்து வேறுபட்ட ஒரு கூடுதல் உரிமையாகும். இந்தப் போட்டியிடும் உரிமைக்குத் தகுதிகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் தகுதியிழப்புகள் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தேர்தல் உரிமைகளை இந்தத் தீர்ப்பு தெளிவாக விளக்குகிறது. 


தகுதி என்பது தேர்தல் நடைமுறையில் ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அடிப்படைத் தேவையாகும். ஒருவருக்குத் தேவையான தகுதிகள் இல்லையென்றால், அது தண்டனையோ அல்லது அவமானமோ கிடையாது; அந்த நபர் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்வரை தேர்தலில் போட்டியிடும் உரிமையை வெறும் காலதாமதம் மட்டுமே செய்கிறது என்று  தகுதி மற்றும் தகுதியின்மை ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றம் விளக்கியுள்ளது.


கூட்டுறவு சங்கத் தேர்தல்களின்போதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. இது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட பெயர் நீக்கங்களால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும். ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது என்பது சட்டப்பூர்வமான தகுதியிழப்பு கிடையாது என்றாலும், அதன் பிறகு அவர்கள் வாக்காளர்களாகக் கருதப்படமாட்டார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி (Representation of the People Act), ஒரு வேட்பாளர் தான் போட்டியிட விரும்பும் அதே தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அந்த மாநிலத்தின் ஏதேனும் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


இது ஒன்றும் புதிய கருத்து அல்ல என்றும் ஜோதி பாசு vs தேபி கோஷல் (1982) (Jyoti Basu v. Debi Ghosal (1982)) என்ற வழக்கில், தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது முற்றிலும் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், கே. கிருஷ்ணமூர்த்தி vs இந்திய ஒன்றியம் (2010) (K. Krishna Murthy v. Union of India (2010) என்ற வழக்கிலும், அரசியலில் பங்கேற்கும் உரிமைகள் வரம்பற்றவை அல்ல; அவை சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுபவை என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.


இருப்பினும், இதில் ஒரு புதிய விஷயம் என்னவென்றால், ஒரு மிகப்பெரிய நிர்வாக நடைமுறையின் மூலமாகப் பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இது சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே நடந்துள்ளது.


இரண்டு வழக்குகள்


தமிழ்நாட்டைச் சேர்ந்த மனுதாரரான சி. கீதா, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அதற்கான வைப்புத் தொகையையும் செலுத்தினார். ஒரு சுயேச்சை வேட்பாளராகத் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த வேளையில், வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரித்தபோது, சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றும், அவருடைய வீட்டை மட்டும் கவனிக்காமல் விட்டுச் சென்றதும் தெரியவந்தது.


இது ஒரு சாதாரண எழுத்துப் பிழை அல்ல என்றும் மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என்றும் அவர் தனது மனுவில் குறிபிட்டார். அவர் பெயர் விடுபட்ட சூழல் இந்த வாதத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால், இந்தப் புகார் மிகவும் தாமதமாக எழுப்பப்பட்டுள்ளதாகவும் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டதாலும், வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாலும், வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னதாக அவரது பெயரைச் சேர்க்க வழி ஏதுமில்லை என்றும் தேர்தல் ஆணையம் (ECI) நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.


தேர்தல் சட்டத்தின்படி, இந்த நிலையில் ஒரு பெயரினை துணைப் பட்டியலில் (Supplementary list) மட்டுமே சேர்க்க முடியும். அவ்வாறு சேர்ப்பதற்கு, ஒரு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  அந்த நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அவரது பெயரை பட்டியலில் சேர்க்குமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.


இந்த வழக்கைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கருத்தை ஏற்றுக்கொண்டு, ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்தது.


1960-ஆம் ஆண்டின் தேர்தல் பதிவு விதிகளின் (Registration of Electoral Rules, 1960), விதி 23(5)-ன்படி, ஒரு வாக்காளரின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேர்தல் பதிவு அதிகாரி உடனடியாக வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும். இருப்பினும், இந்த விதி தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டின்மீது இறுதி முடிவை எடுத்திருந்தால் மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.


உதாரணமாக, மேற்குவங்கத்தின் ஃபக்கா (Fakka) தொகுதிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக மோதாப் ஷேக் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.


பல்வேறு ஆவணங்களில் அவருடைய பெயர் வெவ்வேறு விதமாக இருந்ததால், வாக்காளர் பட்டியலிலிருந்து அவருடைய பெயர் நீக்கப்பட்டது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவருடைய ஆதார் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்து, அவை அனைத்தும் ஒரே நபருக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியது. பின்னர், அன்றைய தினம் இரவு 8 மணிக்குள் அவருடைய பெயரைத் துணைப் பட்டியலில் சேர்க்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவருடைய மேல்முறையீடு வெற்றியடைந்தது என்கின்றனர்.


கடந்த திங்கட்கிழமை நடந்த நீதிமன்ற நடவடிக்கைகள், ஏன் ஒரு பொதுவான தீர்வை வழங்குவதில் நீதிமன்றங்கள் சிரமப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules), விதிகள் 19 மற்றும் 20-ன்கீழ் உள்ள வழக்கமான நடைமுறையிலிருந்து மேல்முறையீட்டுச் செயல்முறை வேறுபட்டுள்ளது. பொதுவாக, இந்த விதிகளின்படி ஒருவருடைய பெயரைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு முன்னால், அவர்களுக்கு அதுகுறித்த முன்னறிவிப்பை  வழங்கி, அவர்களின் விளக்கத்தைக் கேட்க வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்றனர்.


மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு பெயரைத் தற்காலிகமாக மீண்டும் சேர்க்க 'விதி 23(3)' அனுமதிக்காது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நீக்கப்பட்ட ஒரு வாக்காளர் அல்லது வேட்பாளர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொண்டாலும், தேர்தல் நடைமுறை நடந்துகொண்டிருக்கும்போது அவரது பெயரை அவ்வளவு எளிதாக மீண்டும் பட்டியலில் சேர்த்துவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.



Original link:

West Bengal SIR row: How the right to vote affects the right to contest.


Share: