மருத்துவக் கல்விக்கும் (medical education), பொதுச் சேவைக்கும் (public service) இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
மார்ச் 11, 2026 அன்று, சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல், 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், 2025-26 கல்வியாண்டிற்காக 11,682 எம்பிபிஎஸ் இடங்களும், 8,967 முதுகலைப் பட்ட மருத்துவ இடங்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், பொது சுகாதார அமைப்பில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை என்ற இந்தியாவின் பிரச்சனைக்கு இது தீர்வாக அமையுமா? புதிதாக நியமிக்கப்படும் 8,967 முதுகலை மருத்துவர்களில், எத்தனை பேர் உண்மையில் 'வளர்ச்சிக்கு உகந்த மாவட்டங்கள்' (Aspirational Districts) அல்லது போதிய மருத்துவச் சேவை இல்லாத பின்தங்கிய பகுதிகளில் பணியாற்ற முன்வருவார்கள்? புதிதாக அனுமதிக்கப்பட்ட 43 மருத்துவக் கல்லூரிகளில், 8 மட்டுமே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், 8 தொழிலாளர் மாநில காப்பீட்டு (Employees’ State Insurance (ESI)) துறையின் கீழ் இயங்குகின்றன. மீதமுள்ள 27 கல்லூரிகள் தனியார் துறையைச் சார்ந்தவை. தனியார் மருத்துவக் கல்லூரிகள், அதிக அளவிலான நன்கொடைக் கட்டணம் (Capitation fees) வசூலித்த பிறகு, தங்கள் பயிற்சி மாணவர்களை அரசுப் பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயமில்லை. அவ்வாறு செய்யுமாறு அவர்களை வற்புறுத்தவும் முடியாது. அதே வேளையில், பொது சுகாதார நிறுவனங்களில் உள்ள சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் நிலவும் காலியிடங்களை நிரப்புவதன் மூலம், அந்நிறுவனங்கள் முழுமையான பயனைப் பெறுவதை உறுதி செய்வதற்கான, தெளிவாக வரையறுக்கப்பட்ட கொள்கையோ அல்லது முறையான விதிமுறைகளோ தற்போது இல்லை.
மூலதனச் செலவினம் (capital expenditure) மற்றும் உள்கட்டமைப்பில் மட்டும் முதலீடு செய்வதால், மலைப்பாங்கான, பழங்குடியினர் மற்றும் பிற தொலைதூர, போதிய மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் சுகாதார சேவைகளில் விரும்பிய மேம்பாட்டைத் தானாகவே கொண்டுவந்துவிடாது. மொத்தமுள்ள 18 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் (All India Institutes of Medical Sciences(AIIMS)), 11 நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணியிடங்களில் சுமார் 40% காலியிடங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளன. போதுமான ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் இல்லாமல், மருத்துவச் சிறப்பு நிபுணர்களுக்குப் பயனுள்ள வகையில் பயிற்சி அளிப்பது கடினமாகிறது.
கடுமையான காலிப்பணியிட விகிதம்
'இந்தியாவின் சுகாதார இயக்கவியல் 2022-23' (The Health Dynamics of India) அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 757 மாவட்டங்களில் பரவியுள்ள 5,491 கிராமப்புற சமூக சுகாதார மையங்களில் (Community Health Centres (CHC)) காலிப்பணியிட விகிதம் 79.9% ஆக உள்ளது. இங்கு தேவைப்படும் 21,964 சிறப்பு மருத்துவர்களுக்கு எதிராக, 4,413 பேர் மட்டுமே உள்ளனர். 731 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 72,627 முதுகலை மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், 2014-ம் ஆண்டு முதல் சமூக சுகாதார மையங்களில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சுமார் 17,500 ஆகவே நீடித்து வருகிறது.
புதிதாகப் பட்டம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள், பல இடங்களில் முறையான உபகரணங்கள் பற்றாக்குறை, முறையான பணியாளர் குடியிருப்புகள், அவர்களின் பிள்ளைகளுக்கான நல்ல பள்ளிகள் மற்றும் போதுமான சக மருத்துவர்களின் ஆதரவு உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்ற பெரும்பாலும் தயக்கம் காட்டுகின்றனர். சமூக சுகாதார மையங்களில் (Community Health Centres (CHC)) சிறந்த மருத்துவர்கள் கிடைத்தால், கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கோ அல்லது மருத்துவக் கல்லூரிகளுக்கோ நீண்டதூரம் பயணிக்க வேண்டிய தேவை இருக்காது.
ஒரு சமூக சுகாதார மையம் (CHC) சுமார் 1.6 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான மக்கள்தொகைக்கு முதல் பரிந்துரையாகச் செயல்படுகிறது. மேலும், அதில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் ஆகிய ஐந்து சிறப்பு மருத்துவர்களுடன் 30 படுக்கைகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல ஆண்டுகளாகத் தொடரும் சிறப்பு மருத்துவர்களின் தொடர்ச்சியான பற்றாக்குறைப் பிரச்சனையால், பெரும்பாலான சமூக சுகாதார மையங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
இருப்பினும், இந்த மையங்கள் பலவும் வெறும் ஆரம்ப சுகாதார மையங்களைப் போலவே செயல்பட்டாலும், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், மாநில அரசுகள் தொடர்ந்து கூடுதல் சமூக சுகாதார மையங்களை (CHCs) தொடர்ந்து கட்டி வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 785 மாவட்டங்களில் மொத்தம் 5,491 சமூக சுகாதார மையங்கள் உள்ளன. இதன் பொருள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஏழு சுகாதார மையங்களானவை, நடைமுறைக்கு உகந்த ஒரு செயல்முறை அல்ல. தற்போதைய நிலையில், 4,413 சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே உள்ள நிலையில், 882 சமூக சுகாதார மையங்களை மட்டுமே முழுமையாகச் செயல்படுத்த முடியும். இதனால், சிறப்பு சிகிச்சைக்கான மாவட்ட மருத்துவமனையுடன் சேர்த்து, ஒரு மாவட்டத்திற்குச் செயல்படும் ஒரே ஒரு சமூக சுகாதார மையம் மட்டுமே எஞ்சுகிறது.
குறைபாடுள்ள நிதிநிலைத் திட்ட ஒதுக்கீட்டு அணுகுமுறை
மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான நிதிநிலை ஒதுக்கீடு (Budget), பெரும்பாலும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறது. ஆனால் மருந்துகள், நோய் கண்டறிதல், ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர சிகிச்சை அல்லது தற்காலிகப் பணியாளர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு அதற்கேற்ற நிதி ஒதுக்கீடுகள் இல்லை. மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றால், வெறும் கட்டிடக் கட்டுமானத்தில் மூலதனத்தை முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ளவற்றை மாநில நிதிநிலை அறிக்கைகள் நிர்வகிக்க விட்டுவிடுவதை விடுத்து, செயல்பாட்டு விளைவுகளுக்கு அது முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அப்படியென்றால், நம்மிடம் ஏற்கனவே உள்ள வளங்களைக் கொண்டு நாம் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? உண்மையான செயல்பாட்டுத் தேவைக்காகச் செய்யப்படுவதைவிட, பெரும்பாலும் மக்கள் செல்வாக்கு அரசியல் ஆதாயத்திற்கே பயன்படும் புதிய சமூக சுகாதார மையங்கள் (CHCs) குறித்த அதீதமான அறிவிப்புகளுக்கு நாம் கட்டுப்பாடு இடவேண்டும்.
சத்தீஸ்கரில் ஊரக மருத்துவத் திட்டத்தின்கீழ் (Rural Medical Corps Scheme) மேற்கொள்ளப்பட்டது போல, வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார நிலையங்களையும் இயல்பான, கடினமான மற்றும் மிகவும் கடினமான பகுதிகள் என வகைப்படுத்த வேண்டும். நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து அதிக காலிப்பணியிடங்களைக் கொண்ட பகுதிகள் மிகவும் கடினமான பகுதிகளாகும். ஊக்கத்தொகைகளில் கூடுதல் ஈடுசெய்யும் நிதிப்படிகள், முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான இடங்களில் முன்னுரிமை, பணியாளர் குடியிருப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான தரமான பள்ளி வசதிகள் உள்ளிட்ட சிறப்பு ஊக்கத்தொகைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள்
இனிமேல், அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து முதுகலை இட ஒதுக்கீடுகளும், சமூக சுகாதார மையங்கள் (CHCs) அல்லது மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களுடன் இணைக்கப்பட வேண்டும். ஒரு சமூக சுகாதார மையத்தில் உள்ள சிறப்பு மருத்துவ நிபுணர் காலிப்பணியிடத்தை நிரப்ப விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கேற்ற சிறப்புப் பிரிவில் ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், அவர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்தவுடன் அவர்கள் உடனடியாக அங்கு பணியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதியும் அளிக்கப்பட வேண்டும்.
இதற்கு மாறாக, மருத்துவராக விரும்பும் நபர்கள் முதலில் நியமிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் சேவையாற்றுவதற்கான உறுதிமொழியை வழங்க வேண்டும். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் கூடுதல் ஊக்கத்தொகைகளுடன், சிரமமான பகுதிகளில் உள்ள சமூக சுகாதார மையங்களில் (CHCs) 10 ஆண்டு கால சேவைப் பிணைப்பிற்கு உறுதியளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதில் நாம் "அனைவரும் அல்லது யாருமில்லை" (all or none) என்ற கொள்கையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அதாவது, ஐந்து சிறப்பு மருத்துவர்களும் ஒரு சமூக சுகாதார மையத்தில் நியமிக்கப்பட வேண்டும் அல்லது யாருமே நியமிக்கப்படக்கூடாது. இதன் மூலம், அவர்களை பகுதி பகுதியாகப் பணியமர்த்துவதன் மூலமோ அல்லது வெவ்வேறு மையங்களில் மிகவும் பரவலாக நிரப்புவதன் மூலம் சேவைகளை நீர்த்துப்போவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் இருக்கக்கூடிய அத்தகைய சமூக சுகாதார மையங்களில், பணியாளர் குடியிருப்புகளின் அவசரக் கட்டுமானமும், அறுவை சிகிச்சை அரங்குகள், மகப்பேறு அறைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் 24 மணிநேர அவசர சிகிச்சைப் பிரிவுகளைப் புதுப்பிப்பதும் மேற்கொள்ளப்பட வேண்டும். தொலைதூர மற்றும் மருத்துவ வசதி தேவைப்படும் பகுதிகளில் பணியாற்ற முன்வரும் செவிலியர்களுக்கும், இதேபோன்ற பணி வாய்ப்புகளையும் முதுகலை பயிற்சிகளையும் வழங்கலாம்.
துணை மாவட்ட அல்லது நகர அளவில் போதுமான எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவர்கள் ஒரு குழுவாக நியமிக்கப்படும்போது, அரசு மருத்துவமனைகளின் நற்பெயர் பொதுமக்களிடையே மேம்படுகிறது. பணிச்சுமை சிறப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுவதோடு, உகந்த முறையில் பகிர்ந்தளிக்கப்படுவது பணியில் உள்ள மருத்துவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பும் மேம்படுகிறது. இதன் விளைவாக, நோயாளிகளின் திருப்தியை அதிகரிப்பதோடு, பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் மற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கும் இடையிலான மோதல்களையும் குறைக்கிறது.
ஏழை எளிய மக்களுக்கும், சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்குப் பராமரிப்பின் ஒரே ஆதாரமாக விளங்கும் பொது சுகாதார அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களை உரியமுறையில் நிரப்பாமல், 731 மருத்துவக் கல்லூரிகளிலிருந்து கிட்டத்தட்ட 70,000 சிறப்பு மருத்துவர்கள் பட்டம் பெறுவதை நம்மால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
கே. ஆர். ஆண்டனி, பொது சுகாதார அமைப்பு மற்றும் கொள்கை உருவாக்க ஆலோசகர் ஆவார்.
Original article : Fixing structural deficits in India’s health system. -Dr. K.R.Antony