16-வது நிதி ஆணையம் — விடுபட்ட அம்சங்களும் கவலைகளும் -சி. ரங்கராஜன், டி.கே. ஸ்ரீவஸ்தவா

 பதினாறாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் கூட்டாட்சியில் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்தல்.


முந்தைய நிதி ஆணையங்கள் மத்திய அரசின் விரிவான வழிகாட்டுதல்களின்கீழ் செயல்பட்டன. ஆனால், பதினாறாவது நிதி ஆணையத்தின் அதிகாரங்கள் நேரடியாக அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டதால், அதன் அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு முறையைத் தீர்மானிப்பதில் அதற்கு மிகுந்த சுதந்திரம் இருந்தது. முந்தைய ஆணையங்களைப் போலவே, இதுவும் நிதிப் பகிர்வின் இரண்டு முக்கிய அம்சங்களான செங்குத்துப் பகிர்வு (Vertical) மற்றும் கிடைமட்டப் பகிர்வு (Horizontal) ஆகியவற்றை கையாண்டதாகக் கூறப்படுகிறது. 


செங்குத்து பரிமாணம்


ஒன்றிய அரசின் வரிகளில் மாநிலங்களுக்கான பங்கினை 14-வது நிதி ஆணையம் 32%-லிருந்து 42%-ஆக உயர்த்தியதை தற்போதைய நிதி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த காலகட்டத்தில் மாநில திட்டங்களுக்கான மானியங்கள் நிறுத்தப்பட்டதாலும், அந்த மானியங்கள் மொத்த வரி வருவாயில் 3% மட்டுமே இருந்ததாலும் இந்த உயர்வு நியாயப்படுத்தப்பட்டது. பின்னர், ஜம்மு காஷ்மீரின் அந்தஸ்து மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பங்கு 41%-ஆகக் குறைக்கப்பட்டது. மாநிலங்களுக்கான பங்கு பெருமளவு உயர்த்தப்பட்டதால், ஒன்றிய அரசு தனது நிதி மேலாண்மைக்கான வாய்ப்புகளை (fiscal space) இழப்பது குறித்து கவலை தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக, ஒன்றிய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லாத 'செஸ்' (cess) மற்றும் கூடுதல் கட்டணங்களை (surcharge) அதிகரித்ததுடன், ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களுக்கான தனது பங்களிப்பைக் குறைத்தது. மேலும், 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்த குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது மாநிலம் சார்ந்த மானியங்களையும் மத்திய அரசு ஏற்கவில்லை. இருப்பினும், 16-வது நிதிக்குழு இறுதியில் மாநிலங்களின் பங்கினை 41% என்ற அளவிலேயே தக்கவைத்து, அதற்கு ஒரு நிலையான தன்மையை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


பதினாறாவது நிதி ஆணையம் (16th Finance Commission), ஒன்றிய அரசு வசூலிக்கும் கூடுதல் வரிகள் (Cesses) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (Surcharges) குறித்து நேரடியான பரிந்துரைகளை வழங்கவில்லை. பொதுவாக, இத்தகைய வசூல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக விதிக்கப்பட வேண்டும்; அவை மத்திய அரசின் பொதுவான நிதித்தொகுப்பில் சேர்க்கப்படக் கூடாது என்பதே விதியாகும். ஆனால், நடைமுறையில் இவை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இதற்குத் தீர்வாக, இந்த ஆணையம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு "பெரிய பரஸ்பர ஒப்பந்தத்தை" (Grand Bargain) முன்மொழிந்துள்ளது. அதாவது, ஒன்றிய அரசு தனது பெரும்பாலான கூடுதல் வரிகளையும் கட்டணங்களையும் வழக்கமான வரிகளோடு இணைக்கச் சம்மதித்தால், மாநிலங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த வரிப்பகிர்வில் ஒரு சிறிய சதவீதக் குறைப்பை ஏற்றுக்கோள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்குக் கிடைக்கும் வருவாய் குறையாது, அதே சமயம் வரி விதிப்பு முறையில் ஒரு தெளிவும் வெளிப்படைத்தன்மையும் உருவாகும் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான பங்கீடு குறித்து முடிவெடுக்கும் போது, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 270 மற்றும் 280-ன்கீழ் தனக்கு வழங்கப்பட்ட கடமையை நிதி ஆணையம் சரியாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.  பெருகி வரும் 'செஸ்' (Cesses) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (Surcharges) அரசியலமைப்பு உணர்வுக்கு எதிரானது என்று ஒன்றிய அரசிடம் இந்த ஆணையம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். மேலும், வருவாய் பற்றாக்குறை மானியங்களை நிறுத்தியதுடன், குறிப்பிட்ட மாநிலங்களுக்கோ அல்லது துறைகளுக்கோ எவ்வித சிறப்பு மானியங்களையும் இது பரிந்துரைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் விளைவாக, ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் மாநிலங்களுக்குக் கிடைக்கும் பங்கானது 15-வது நிதி ஆணையத்தின் காலத்தைவிடக் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். 


ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் வரிப் பங்கீடு மற்றும் நிதி ஆணையத்தின் மானியங்கள் என மாநிலங்களுக்குக் கிடைக்கும் உண்மையான நிதிப் பகிர்வு, 11-வது, 12-வது மற்றும் 13-வது நிதி ஆணையக் காலங்களில் முறையே 27.0%, 27.2% மற்றும் 28.3% என்ற அளவில் இருந்தது. இது 14-வது நிதி ஆணையக் காலத்தில் 35.6%-ஆக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 15-வது நிதி ஆணையக் காலத்தில் (2020-21 முதல் 2024-25 வரை) இது 34.4% எனச் சற்றே குறைந்திருந்தாலும், 11 முதல் 13-வது காலகட்டங்களைவிட மிக அதிகமாகவே உள்ளது. ஒன்றிய அரசின் மொத்த வருவாய் வரவுகளில் இருந்து மாநிலங்களுக்கு மாற்றப்படும் நிதியாதாரங்களின் பங்கில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய உயர்வை அலட்சியப்படுத்த முடியாது என்கின்றனர். 


பதினாறாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைக்காலத்தின் முதல் ஆண்டான 2026–27-ஐப் பார்க்கும்போது, ஒன்றிய அரசின் நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகளின்படி இந்த விகிதம் 32.7%-ஆக உள்ளது. இருப்பினும், நிதி ஆணையம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்காகக் கணித்துள்ள புள்ளிவிவரங்கள் மிகையான மதிப்பீடுகளாக இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். ஏனெனில், 2026–27 நிதியாண்டில் நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) 11% வளர்ச்சி அடையும் என ஆணையம் கருதியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் நிதிநிலை திட்ட மதிப்பீடானது இது 10%-ஆக மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிதி ஆணையத்தின் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்தங்களால் வருவாய் குறையக்கூடும் என்பதை ஆணையம் தனது கணக்கீட்டில் கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


கிடைமட்ட பரிமாணம்


பதினாறாவது நிதி ஆணையம், மாநிலங்களின் செயல்திறனை (efficiency) அளவிடுவதற்காக 'பங்களிப்பு' என்ற ஒரு புதிய அளவுகோலை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக, ஒரு மாநிலம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை அங்கீகரிக்க இந்த முறை கொண்டு வரப்பட்டது. இருப்பினும், ஒரு மாநிலத்தின் பங்களிப்பை அந்த ஆணையம் எவ்வாறு கணக்கிடுகிறது என்றால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)), குறிப்பிட்ட அந்த ஒரு மாநிலத்தின் பங்கு எவ்வளவு சதவீதமாக உள்ளது என்பதை வைத்தே முடிவு செய்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு மாநிலத்தின் பொருளாதார உற்பத்தி அளவு பெரியதாக இருந்தால், அதன் 'பங்களிப்பும்' அதிகமாகக் கருதப்படுகிறது. 


இருப்பினும், உற்பத்தி அமைப்பின் செயல்திறனுக்கும், நிதி மேலாண்மை அமைப்பின் செயல்திறனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியமாகும். உற்பத்தி முறையைப் பொறுத்தவரை, மாநிலங்களுக்கு இடையேயான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) பகிர்வு என்பது நிதி மற்றும் மனிதவள இடப்பெயர்வு உள்ளிட்ட பல காரணிகளைச் சார்ந்துள்ளது. இது பெரும்பாலும் சந்தை சக்திகளால் (Market forces) தீர்மானிக்கப்படுகிறது. இதன் விளைவாக, லாபம் தரக்கூடிய மூலதனம் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், மக்கள் பொதுவாகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களிலிருந்து அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு வேலை வாய்ப்புகளுக்காக இடம்பெயர்வதையும்  சுட்டிக்காட்டுகின்றனர். 


இந்த மாற்றமானது, மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பை இரண்டு நேர்மாறான வழிகளில் பயன்படுத்தியது. முதலாவதாக, 'வருமான இடைவெளி' முறையின்படி, தனிநபர் வருமானம் குறைவாக உள்ள ஏழை மாநிலங்களுக்கு அதிக நிதிப்பகிர்வு வழங்கப்பட்டது. அதேசமயம், 'பங்களிப்பு' (Contribution) என்ற அளவுகோலின்படி, அதிக தனிநபர் வருமானம் ஈட்டும் மாநிலங்களுக்கு அதிக பங்கு வழங்கப்பட்டது. இருப்பினும், சில மாநிலங்களின் பங்களிப்பை அளவிடும்போது மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதைத் தவிர்க்க, நிதி ஆணையம் உண்மையான மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அப்படியே பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, அதன் 'வர்க்க மூலத்தை' (Square root) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது என்றும் இது மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வைச் சமநிலைப்படுத்த உதவியதாகவும் தெரிவிக்கின்றனர். 


நிதிப்பகிர்வு முறையில், மற்ற சில அளவுகோல்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் முழுக்க முழுக்க நிதி ஆணையத்தின் தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு மாநிலத்தின் நிதி மேலாண்மைத் திறனை அளவிடும் 'வரி முயற்சி/நிதி ஒழுக்கம்' (Tax effort/Fiscal discipline) என்ற அளவுகோல் நீக்கப்பட்டுள்ளது. இது நிதி ஆணையம் ஏற்கனவே முன்வைத்த கருத்துகளுக்கு முரணாக அமைந்துள்ளது. ஏனெனில், ஒரு மாநிலத்தின் திறமையான நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்ற ஆணையத்தின் சொந்த வாதத்திற்கே இது எதிராக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. 


இழப்புகளும் ஆதாயங்களும்


இதன் விளைவாக, 15-வது நிதி ஆணையத்தின் நிதிப் பகிர்வு முறையுடன் ஒப்பிடும்போது, 16-வது நிதி ஆணையத்தின் புதிய முறைகளால் அதிக நிதி இழப்பைச் சந்தித்துள்ள முக்கிய மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகும். மற்றொருபுறம் அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் மற்றும் கோவா போன்ற வடகிழக்கு மற்றும் மிகச்சிறிய மாநிலங்களும் நிதிப் பகிர்வு முறையில்  இழப்பைச் சந்தித்துள்ளன. இருப்பினும், பொருளாதாரத்தில் முன்னேறிய மற்ற மாநிலங்கள் பெற்ற ஆதாயங்கள் அனைத்தும் ஒரே சீராக அமையவில்லை என்றும் அவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 


பொதுவாக, சில மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ‘வருவாய் இடைவெளி மானியங்கள்’ மூலம் சரியாகக் கணக்கிட்டு ஈடுகட்டியிருக்க முடியும் என்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே காணப்படும் செலவினங்கள் மற்றும் தேவைகளில் உள்ள நுணுக்கமான வேறுபாடுகளை 'வரிப் பகிர்வு' மூலமாக மட்டுமே முழுமையாகச் சரிசெய்துவிட முடியாது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். மேலும், நிதி ஆணையம் வரிப்பகிர்வு முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும்போது, அதன் விளைவாகச் சில மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை இந்த வருவாய் இடைவெளி மானியங்கள் மூலம் சமன் செய்ய வழிவகை உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


உண்மையில், மாநிலங்களின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் நிதி பரிமாற்றம் செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டம் 275-வது பிரிவு ஒரு முக்கியமான வழியாகும். இதனை மாநிலங்களின் 'வருவாய் பற்றாக்குறை'யுடன்  குழப்பிக்கொள்ளக் கூடாது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான தரத்தை உறுதி செய்வதற்காக, இந்தச் சிறப்புத் தேவைகள் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப நிதி வழங்கப்படலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். 


இந்த அணுகுமுறையானது, மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையை ஏற்படுத்தும் இலக்கைச் சிதைக்காமல், அதே சமயம் அதிக வருவாய் ஈட்டும்  மாநிலங்களின் செயல்திறன் குறித்த கவலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள உதவியிருக்கும் என்கின்றனர். பொதுவாக, ஒரு மாநிலத்தின் தேவை மற்றும் ஆதாரங்களைச் சீர்திருத்தமுறைப்படி மதிப்பீடு செய்ய வேண்டியிருப்பதால், 'வருவாய் பற்றாக்குறை மானியங்களை' (Revenue gap grants) துல்லியமாகக் கணக்கிடுவது கடினமானதுதான் என்கின்றனர். இருப்பினும், கடினம் என்பதற்காகவே 16-வது நிதி ஆணையம் அவற்றை முழுமையாகக் கைவிட்டிருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட மாநிலங்களுக்கான தற்காலிகமான (Ad hoc) மானியங்கள் பொருத்தமற்றவை என்றாலும், மாநிலங்களைச் சமமாக முன்னேற்றுவதற்கான 'சமநிலைப்படுத்தும் மானியங்கள்' (Equalisation grants) இப்போதும் மிக முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன.


சி. ரங்கராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராகவும், பன்னிரண்டாவது நிதி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். டி.கே. ஸ்ரீவஸ்தவா, இந்தியாவின் தலைமை கொள்கை ஆலோசகராகவும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முன்னாள் இயக்குநராகவும் மற்றும் பன்னிரண்டாவது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.


Original article : Sixteenth Finance Commission — misses and concerns -C. Rangarajan, D.K. Srivastava

Share: