2029-ஆம் ஆண்டிற்குள் பிரதிநிதித்துவத்தை உண்மையான மாற்றமாக உருமாற்றுதல். -பர்கா தேவா

 2029-ஆம் ஆண்டு அமையவிருக்கும் நாடாளுமன்றம் பெண்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பெண்கள் தங்களின் முதுமைக் காலத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் என்ன என்பதை அதன் மக்கள் பிரதிநிதிகள் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.


2029-ஆம் ஆண்டில், இந்தியா தனது வரலாற்றிலேயே மிகச்சிறந்த பாலினப் பிரதிநிதித்துவம் கொண்ட நாடாளுமன்றத்தைப் பெறும். பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் (Women’s Reservation Act) மூலம் மக்களவையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33%) இடங்கள் ஒதுக்கப்படும். இது நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவ வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய விரிவாக்கமாகும். பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு இந்தத் தருணம் வந்திருக்கிறது. எனவே, வரும் மூன்று ஆண்டுகளை வீணடித்தால், இந்தச் சட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்தை முழுமையாக அடைய முடியாமல் போய்விடும் என்கின்றனர். 


ஒரு அவசரத் தேவை உள்ளது


தெளிவான செயல்திட்டம் இல்லாத பிரதிநிதித்துவம் என்பது வெறும் பெயரளவிலான முன்னிலையாக மட்டுமே அமையும் என்கின்றனர். 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பெண்கள், தங்களுக்கு முக்கியமான விவகாரங்களை இப்போதே கண்டறிந்து, அவற்றுக்காகப் போராடி, அவற்றை அரசியலின் முன்னுரிமைப் பணிகளாக மாற்றினால் மட்டுமே விவாதங்களின் போக்கை மாற்ற முடியும். இந்தப் பணியை 2029-ஆம் ஆண்டில் தொடங்க முடியாது; அது இப்போதே தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, மற்ற அனைத்தையும்விட அவசரமான, அதேசமயம் கவனிக்கப்படாத ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால்: இந்தியாவில் பெண்களின் நிலையைத் தெளிவாகக் கருத்தில் கொள்ளும் 'முதியோர் பராமரிப்பு' தொடர்பான கொள்கை கட்டமைப்பு எதுவும் இல்லை என்றும் அத்தகைய கொள்கையை வலியுறுத்திக் கேட்கும் அரசியல் மரபும் நம்மிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


கௌரி என்பவர் இந்தியாவில் கொள்கை முடிவுகளாக மட்டுமே விவாதிக்கப்படும் ஒரு விஷயத்தை நடைமுறை வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்களில் ஒருவர் ஆவார். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் தனியாக வசிக்கும் அவரது 83 வயது தாய், அரசு ஆதரவு ஏதுமின்றி, பல இந்தியப் பெண்களைப் போலவே தனது கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி, அமைதியாக முதுமையை எதிர்கொண்டு வருகிறார். இரண்டு உலகங்களுக்கு இடையே ஊசலாடும் பல மகள்களையும் மருமகள்களையும் போல, கௌரியும் தன்னால் இயன்றபோதெல்லாம் தாயைப் பார்க்கச் சென்று, அவசரத் தேவைகளைக் கவனித்துவிட்டு மற்ற சிக்கல்களை நினைத்து கவலைப்படுகிறார். கௌரியைத் தூங்கவிடாமல் செய்வது உடல் சோர்வு அல்ல, மாறாக தானும் தனது தாயைப் போலவே முதுமையை எதிர்கொள்ள நேரிடும் என்கிற நிதர்சனமான உண்மைதான்; இனிமேலும் இதனை அமைதியாக ஏற்றுக்கொள்வதற்கு அவர் தயாராக இல்லை.


பெண்கள் தங்களின் முதுமைக் காலத்தைத் கண்ணியத்துடன் கழிப்பதை உறுதிசெய்ய, அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கௌரி விரும்புகிறார். முதியோர் பராமரிப்பு என்பது தனிப்பட்ட குடும்பங்களின் சுமையாகக் கருதப்படாமல், அது ஒரு பொதுக் கட்டமைப்பு வசதியாக மாற்றப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம். மேலும், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், நாட்டின் மிகச்சிறந்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர் வாக்களிக்கும் போது, அந்தப் பிரதிநிதிகள் ஏற்கனவே தனது தேவைகளை நன்கு உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.


முதுமையடைந்து வரும் இந்தியா


பொதுவெளியில் விவாதிக்கப்படுவதை விடவும் இந்தியா மிக வேகமாக முதிர்ச்சியடைந்து (வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு) வருகிறது. தற்போதே 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் 60 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர், இந்த எண்ணிக்கை 2040-ஆம் ஆண்டிற்குள் 25 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக ஆண்கள் வாழ்வதைவிட பெண்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். ஆனால், இந்தக் கூடுதல் ஆயுட்காலம் அவர்களுக்குப் பல சவால்களையும் சேர்த்தே கொண்டுவருகிறது: குறைவான வாழ்நாள் சேமிப்பு, தடைபட்ட பணி அனுபவம், தங்கள் பெயரில் சொத்துக்கள் இல்லாமை மற்றும் தங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது கவனித்துக்கொள்ள ஆள் இல்லாத நிலை போன்றவை இதில் அடங்கும். 'முதியோர்களுக்கான தேசியக் கொள்கை (1999)' (National Policy for Older Persons (1999) மற்றும் 'இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்' (Indira Gandhi National Old Age Pension Scheme) ஆகியவை முதியோர்களை வறுமை மற்றும் ஆரோக்கியத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகுகின்றனவே தவிர, பாலினரீதியான வேறுபாடுகளைக் கருத்தில் கொள்வதில்லை. இதன் விளைவாக, இந்திய அமைப்புகள் வயதான பெண்களை ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கத் தவறிவிட்டன.


இந்தியாவில் முதியோர் பராமரிப்புத் திட்டங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத புறக்கணிப்பு, புள்ளிவிவரங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ‘Alzheimer’s & Dementia’ ஆய்விதழின் 2023-ஆம் ஆண்டு ஆய்வின்படி, 60 வயதிற்கு மேற்பட்ட 8.8 மில்லியன் இந்தியர்கள் மறதி நோயால் (Dementia) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2036-க்குள் இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அவர்களின் அறிவுத்திறன் குறையத் தொடங்கும்போது அவர்கள் தனியாக வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதோடு, அவர்களைக் கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாத சூழலும் நிலவுகிறது. முதியோர் பராமரிப்புத் திட்டங்களை அரசு வடிவமைக்கும்போது பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாததே இதற்குக் காரணமாகும். நாடாளுமன்றக் கேள்வித் தரவுத்தளத்தில் (Parliamentary Questions database)  வயதான பெண்களைப் பற்றிய கேள்விகளோ, தனிநபர் மசோதாக்களோ அல்லது குழு விவாதங்களோ ஏறக்குறைய இல்லவே இல்லை என்பது இந்த அலட்சியத்தைத் உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், பெண்களின் உண்மையான தேவைகளை அரசு உணர்ந்தால் எவ்வளவு விரைவாகச் செயல்பட முடியும் என்பதற்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. பல ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் அந்த மாநிலம் 580 அரசு மையங்களில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கான சிகிச்சை மையங்களை (Menopause clinics) தொடங்கியது. இதன் விளைவாக, வெறும் ஐந்து வாரங்களில் 31,000-க்கும் மேற்பட்ட பெண்கள் சிகிச்சைக்காக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


அவர்கள் தங்கள் வாழ்வின் உண்மை நிலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று அவர்கள் மௌனமாகத் காத்திருந்தனர். அதேபோல், முதியோர் பராமரிப்பு மற்றும் கண்ணியமான முறையில் முதுமையைக் கழிப்பது போன்ற விவகாரங்களும் அரசின் அதே முடிவிற்காகவே காத்திருக்கின்றன.


நுண்ணறிவுத் தேவை


அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டன. இருப்பினும், வெறும் பெண் வேட்பாளர்களைக் களமிறக்குவது மட்டுமே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்களை மாற்றிவிடாது. 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை அர்த்தமுள்ளதாக மாற்றப்போகும் பெண் மற்றும் ஆண் பிரதிநிதிகள், களநிலவரத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது அவர்களின் உழைப்பு மற்றும் குழந்தைகளை வளர்க்கும் காலத்தை மட்டும் குறிப்பதல்ல, மாறாக அரசு கவனிக்கத் தவறிய இடைவெளிகள் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறும் அவர்களின் முதுமைக் காலத்தையும் உள்ளடக்கியது என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்த விழிப்புணர்வு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் அறிக்கை (Manifesto) ஆகிய மூன்றிலும் பிரதிபலிக்க வேண்டும். குறிப்பாக, வயது மற்றும் பாலின அடிப்படையிலான தரவுகளைச் சேகரிக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, முதியோர் பராமரிப்பிற்கான நிதி ஒதுக்கீட்டைத் தெளிவாகக் காட்டும் நிதிநிலைத்  திட்டங்கள் மற்றும் முதியோருக்கான கண்ணியமான வாழ்வை தேர்தலுக்குப் பின்பு அல்லாமல் முன்பே வாக்குறுதியாக அளிக்கும் அரசியல் கட்சிகள் மூலமாக இது உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


2029-ஆம் ஆண்டு கௌரி தனது வாக்கைப் பதிவு செய்யும்போது, இவை அனைத்தையும் பற்றிச் சிந்திப்பார். குறிப்பாகத் தனது தாயார், தன் நிலை மற்றும் இந்தியாவின் வரலாற்றிலேயே அதிகப் பிரதிநிதித்துவம் கொண்ட இந்த நாடாளுமன்றம், தன்னைப் போன்ற பெண்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி ஒரு சிறந்த நாட்டை உருவாக்குமா என்பதைப் பற்றி அவர் யோசிப்பார். இந்த மாற்றத்தைச் சரியாகச் செய்வதற்கு மூன்று ஆண்டுகள் என்பது போதுமான கால அவகாசமாகும், எனவே, இதில் நாம் தவறிழைக்கவோ அல்லது அலட்சியமாக இருக்கவோ முடியாது.


பர்கா தேவா, முதியோர்கள் கண்ணியமான முறையில் வாழ்வதற்கும் மற்றும் அவர்களுக்கான பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்குமான முதியோர் பராமரிப்பு கொள்கைகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


Original article : Transforming representation into real change by 2029 -Barkha Deva

Share: