உச்சநீதிமன்றம், அமிலம் உட்கொண்டதிலிருந்து பிழைத்தவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களாக ஏன் அங்கீகரித்தது? - அமால் ஷேக்

 அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஆனால் வெளியில் தெரியும்படியான காயங்கள் இல்லாத காரணத்தால் அரசின் உதவிகள் கிடைக்காமல் விடுபட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


திங்கள்கிழமையன்று (மே 4) உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி, அமிலத்தை கட்டாயமாக உட்கொள்ள நேரிட்டதால் உட்புறக் காயங்கள் அடைந்தவர்கள் (வெளியே தழும்புகள் தெரியாவிட்டாலும்), 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் (Rights of Persons with Disabilities Act (RPwD Act)) 'அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களாகவே' கருதப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தெளிவுரை சட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து முன்தேதியிட்டு செயல்படும் என்று கூறியதுடன், அமிலத் தாக்குதலுக்கான தற்போதுள்ள தண்டனைகள் குற்றங்களைத் தடுக்கும் வகையில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அரசுக்குத் தெரிவித்தனர். குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பை குற்றம்சாட்டப்பட்டவர் மீதே சுமத்தவும், இத்தகைய வழக்குகளில் அமிலம் விற்பனை செய்பவர்களையும் இணை குற்றவாளிகளாகச் சேர்க்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.


ஷாஹீன் மாலிக் என்ற அமிலத் தாக்குதலில் இருந்து மீண்டவர் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டத்தில் உள்ள ஒரு குறைபாட்டினால் ஒரு குறிப்பிட்ட வகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்காமல் போவதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சட்டத்தில் உள்ள இடைவெளி


மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களை குறிப்பிட்ட இயலாமைகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், அது நிர்ணயித்த வரையறை குறுகியதாக இருந்தது.  சட்டத்தின் அட்டவணை 2(zc)-ன் கீழ், "அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்" என்பவர் "அமிலம் அல்லது அது போன்ற அரிக்கும் தன்மையுள்ள பொருளை வீசித் தாக்கும் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அமிலம் வலுக்கட்டாயமாக உட்கொள்ளப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இந்த வரையறைக்குள் வரவில்லை.


நீதிமன்றம் ஒரு முக்கியமான சிக்கலைச் சுட்டிக்காட்டியுள்ளது. "உடல் உருக்குலைவு" என்ற சொல், உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே குறிப்பதாகத் தோன்றுகிறது. இதனால், அமிலத்தை உட்கொள்வதால் ஏற்படும் உள் உறுப்பு காயங்கள் அல்லது தழும்புகள் இந்த வரையறைக்குள் வராமல் போகும் அபாயம் உள்ளது.


அத்தகைய நிகழ்வுகளில் ஏற்படும் காயங்களும் அதே அளவு கடுமையானவை ஆகும். அமிலம் உட்கொள்ளப்படும்போது, அது வாய், தொண்டை, உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியைப் பாதிக்கிறது. இது நிரந்தரமானது. "இந்த அரிக்கும் தன்மை கொண்ட பொருள், கடுமையான தீக்காயங்களையும், உள் உறுப்புகளுக்கு, குறிப்பாக செரிமான மண்டலத்திற்கு, பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும், தொடர்ச்சியான இரைப்பைக் குடல் மருத்துவப் பராமரிப்பின் தேவை உட்பட, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மருத்துவச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. வாய்வழியாக அமிலத்தை உட்கொண்டவர்கள், சாப்பிடுவதிலும், விழுங்குவதிலும், செரிமானத்திலும் சிரமம் போன்ற நீண்டகாலப் பிரச்சனைகளை  எதிர்கொள்ளக்கூடும் என மாலிக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?


மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் வரம்பிற்குள் வராமல் போவதால் ஏற்படும் விளைவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் என்பது நிதி உதவி, மறுவாழ்வுத் திட்டங்கள், மருத்துவ ஆதரவு போன்றவற்றுக்கான ஒரு நுழைவுச்சீட்டு ஆகும்.  அது இல்லையென்றால், பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்தத் திட்டங்கள் எதையுமே அணுக முடியாது. இந்த மனுவானது இதை ஒரு “குறைவான வகைப்பாடு” (under-classification) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஆதரிக்க முயலும்போது, அதே போன்ற பாதிப்புகளைக் கொண்ட ஒரு துணைப் பிரிவினரை தன்னிச்சையாகப் புறக்கணிப்பதாகும்.


தாக்குதலுக்கு உள்ளான இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே உள்ள ஒரே வேறுபாடு, தாக்குதல் நடத்தப்பட்ட விதம் மட்டுமே என்று அந்த மனு வாதிட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மையிலோ அல்லது அளவிலோ எந்த மாற்றமும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.


மனு எதை கேள்விக்குள்ளாக்குகிறது


இந்த வழக்கின் மையப்புள்ளி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-14 (Article 14) ஆகும். இந்தச் சட்டம், தாக்குதலின் விளைவைக் கவனிக்காமல், தாக்குதல் நடத்தப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைப் பிரிப்பது "தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற வகைப்பாடு" என்று மனுவில் வாதிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் எனும் போது, இத்தகைய வேறுபாடு அந்த நோக்கத்தோடு எந்த ஒரு தர்க்கரீதியான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.




சட்டத்தின் கவனம் மாற்றுத்திறனாளின் மீதே உள்ளது. அதன் காரணம் அல்லது அது எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்பதன் மீது அல்ல என்று அந்த மனு கூறுகிறது. மேலும், அமிலம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும், கட்டாயப்படுத்தி அமிலம் உட்கொள்ள வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் அமில வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரே பிரிவினரே என்று வாதிடப்படுகிறது.


இந்த சட்ட விடுபடலானது "குறைவான வகைப்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்று மனு விவரிக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஆதரிக்க வேண்டிய சட்டம், அதே நிலையில் இருக்கும் ஒரு துணைப் பிரிவினரை தன்னிச்சையாகப் புறக்கணிப்பதாக உள்ளது.


மேலும், குற்றவியல் சட்டத்திற்கும் (Criminal Law) நலத்திட்டச் சட்டத்திற்கும் (Welfare Law) இடையே உள்ள முரண்பாட்டையும் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. பாரதிய நியாய சன்ஹிதா, 2024 (Bharatiya Nyaya Sanhita BNS))  பிரிவு 124-ன்படி, அமிலம் வீசுவதும், உட்கொள்ள வைப்பதும் ஒரே மாதிரியான குற்றங்களாகவே கருதப்படுகின்றன, அவற்றுக்கு ஒரே மாதிரியான தண்டனைகளே வழங்கப்படுகின்றன. அமிலத் தாக்குதல் எந்த முறையில் நடத்தப்பட்டாலும் அதன் பாதிப்பு, நோக்கம் மற்றும் சமூக ஆபத்து ஆகியவை ஒன்றுதான் என்று வாதிடும் இந்த மனு, குற்றவியல் சட்டம் வேண்டுமென்றே நிராகரித்த ஒரு பாகுபாட்டை, ஒரு நலத்திட்டச் சட்டம் மட்டும் கடைபிடிப்பது சட்டப்பூர்வமாகப் பொருத்தமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று கூறுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு தொடர்பான வாதம், பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. அமிலம் குடிக்க வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள், சட்டரீதியான வரையறைக்குள் வராததால், அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழைப் பெற முடிவதில்லை. இதன் காரணமாக, அரசின் இழப்பீடு, மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சட்டப்பூர்வ அங்கீகாரம் இவ்வாறு மறுக்கப்படுவது, கண்ணியத்துடன் வாழ்வதற்கான ஒருவரின் உரிமையைப் பறிப்பதாகும் என்று அந்த மனு வாதிடுகிறது.


இதுபோன்ற கடுமையான உள்காயங்களால் அவதிப்படும் ஒருவருக்கு, மருத்துவப் பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பது என்பது தர்மம் செய்யும் விஷயமல்ல. மாறாக அது ஒரு கண்ணியமான வாழ்வின் அடிப்படைக் கூறாகும் என்று மனு  குறிப்பிடுகிறது.


அமிலம் உட்கொள்வதால் ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் உள் உறுப்புகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு வழிகாட்டுதல்கள், பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியும் உருக்குலைவு மற்றும் இயக்கக் குறைபாடு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உள் உறுப்புக் காயங்கள் அங்கீகரிக்கப்படாமல் விடப்படுகின்றன என்றும் மனு  வாதிடுகிறது.


இதைத் தீர்ப்பதற்காக, நீதிமன்றம் சட்டத்தை “நோக்க அடிப்படையிலான விளக்கத்தின்” மூலம் அணுக வேண்டும் என்று மனு வலியுறுத்தியது. அதாவது, ஒரு சட்டத்தை அதன் வார்த்தை மாறாத நேரடிப் பொருளில் மட்டும் பார்க்காமல், அந்தச் சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் விளக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD Act) என்பது ஒரு சமூக நலச் சட்டமாகும். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு கிடைக்கவும், அநீதியைத் தடுக்கவும் நீதிமன்றங்கள் இந்தச் சட்டத்தை தாராளமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விளக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. குறிப்பாக, சட்டத்தில் உள்ள “அமிலம் வீசுதல் மூலம் நிகழ்த்தப்படும் தாக்குதல்” என்ற சொற்றொடரை “அமிலம் பயன்படுத்துவதன் மூலம் நிகழ்த்தப்படும் அனைத்து வகையான தாக்குதல்கள்” என விரிவாகப் பொருள் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் அமிலத் தாக்குதல் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சட்டப் பாதுகாப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள்


சட்டத்தின்கீழ் வரையறைகளின் வரம்பை விரிவுபடுத்துவது ஒருபுறம் இருக்க, அமில வீச்சு வழக்குகளில் நடக்கும் மந்தமான விசாரணைகளை "அமைப்பிற்கே ஒரு கேலிக்கூத்து" என்று கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் குறிப்பிட்டது. அப்போதிருந்து இந்தத் தாமதப் பிரச்சினையைத் தீர்க்க நீதிமன்றம் முயன்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொடூரமான அமிலத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறிய தலைமை நீதிபதி, “தண்டனை இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பினார்.


மேலும், 2013-ஆம் ஆண்டிலிருந்து அமில வீச்சு வழக்குகளின் எண்ணிக்கை "அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்திருப்பதை" நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது. இது ஒரு தீவிரமான கவனத்திற்குரிய விஷயம் என்பதையும் சுட்டிக்காட்டியது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இணக்க உறுதிமொழிப் பத்திரங்கள், மாநிலங்கள் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் அளவை தெளிவாக காட்டின. இதில் சில அதிகார வரம்புகள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 198 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 160 வழக்குகளும், குஜராத்தில் 114 வழக்குகளும் உள்ளன. பீகாரில் 68 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்ற மாநிலங்களில், மகாராஷ்டிராவில் 58 வழக்குகளும், அசாமில் 27 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்டில் 26 வழக்குகளும், ஒடிசாவில் கீழமை நீதிமன்றங்களில் 23 வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் 8 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, டெல்லி கீழமை நீதிமன்றங்களில் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உத்தரகாண்டில் மூன்று வழக்குகளும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா ஐந்து வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


Original article : Why Supreme Court recognised acid ingestion survivors as victims under RPwD Act. -Amaal Sheikh

Share: