Showing posts with label Criminal Law. Show all posts
Showing posts with label Criminal Law. Show all posts

வளரிளம் பருவ உறவுகள் 'குற்றங்களாக' மாறும்போது : போக்சோ (POCSO) சட்டத்தை சீரமைக்க வேண்டியதன் அவசியம். -ரோகிணி நாராயணன்

தற்போதுள்ள சட்ட வடிவம், சுரண்டல் நோக்கிலான பாலியல் அத்துமீறல்களையும், வளரிளம் பருவத்தினரின் காதல் உறவுகளையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுவதில்லை. இதனால், சட்டம் இன்னும் சரியாக அங்கீகரிக்காத சில இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நீதிமன்றங்கள் தள்ளப்படுகின்றன.


குழந்தைகளைப் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காக, கடுமையான மற்றும் தெளிவான விதிகளுடன் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (Protection of Children from Sexual Offences Act, 2012 (POCSO)) கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தற்போது நீதிமன்றங்களுக்கு வரும் பல சிக்கலான வழக்குகள், இந்தச் சட்டத்தின் கடுமையான விதிகளுக்குள் பொருந்தாத வளரிளம் பருவத்தினரின் காதல் உறவுகள் சார்ந்தவையாக உள்ளன.

சட்டத்தின்படி 'பாதிக்கப்பட்டவர்' என்று கருதப்படும் ஒரு பெண், எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை, நான் எந்தச் சட்டப் பூர்வமான நடவடிக்கையையும் விரும்பவில்லை என்று கூறி, குற்றவியல் நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்க்கும்போது, குற்றவியல் சட்டம் என்ன செய்ய வேண்டும்?


ஹர்மீத் சிங் vs மாநிலம் (டெல்லி தேசிய தலைநகரப் பகுதி) (Harmeet Singh v. State (NCT of Delhi)) என்ற வழக்கின் விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 17-வயது சிறுமி, தற்போது தகுந்த வயதை அடைந்து, இந்த வழக்கின் மனுதாரரையே (Petitioner) திருமணமும் செய்து கொண்டு, இப்போது ஒரு குழந்தைக்குத் தாயாகவும் உள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்தது. இதே போன்ற ஒரு பார்வையை சமீபத்திய மாதங்களில் பம்பாய் மற்றும் மேகாலயா உயர்நீதிமன்றங்களும் ‘Vijay Laxman Rotke’ மற்றும் ‘Shri Phrangbatnam Kharkongor’ ஆகிய வழக்குகளில் எடுத்துள்ளன. அதாவது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டம் எந்த மாதிரியான பாலியல் சுரண்டல்களைத் தடுக்க உருவாக்கப்பட்டதோ, அந்த வகையான சுரண்டல்கள் இந்த வழக்குகளின் பின்னணியில் இல்லாததால், நீதிமன்றங்கள் அவற்றின் மீதான சட்டநடவடிக்கைகளை ரத்து செய்தன.


வளரிளம் பருவத்தினரின் சிக்கலான காதல் மற்றும் நட்புரீதியான உறவுகளின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள்மீது ஒரே மாதிரியான சட்டத்தை ஒரே வரியில் திணிப்பது குறித்து நீதிமன்றங்களுக்கு இடையே அதிகரித்து வரும் கவலையை இந்தத் தீர்ப்புகள் வெளிப்படுத்துகின்றன.


மிகவும் கவனமான நீதித்துறை அணுகுமுறை


வழக்குடன் தொடர்புடைய இருதரப்பினரும் பின்னாளில் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் சட்டபூர்வ அணுகுமுறை கடுமையான சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஏனெனில், இது மறைமுகமாகக் குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பதாகவும், பின்னாளில் கட்டாய உறவுகளை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துவிடலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் பின்னாளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காகவே, அனைத்து இளம்பருவ உறவுகளையும் தானாகவே பாதிப்பில்லாதவை என்று கருதிவிட முடியாது.


ஹர்மீத் சிங் (Harmeet Singh) வழக்கின் தீர்ப்பை முக்கியமானதாக மாற்றுவது எதுவென்றால், அது ஒரு சமநிலையான மற்றும் கொள்கைரீதியான அணுகுமுறையைக் கண்டறிய முயல்கிறது. டெல்லி உயர்நீதிமன்றம், திருமணம் செய்துகொள்வதையோ அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதையோ மட்டுமே வழக்கு நிவாரணத்திற்கான போதுமான காரணங்களாகக் கருதவில்லை. மாறாக, நீதிமன்றங்களுக்கு அது தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது :

முதலாவதாக, சட்டபூர்வமாகப் பாதிக்கப்பட்ட நபர் முற்றிலும் தனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் செயல்படுகிறாரா, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறாரா, மற்றும் அவர் எந்தவொரு கட்டாயத்திற்கும், தவறான வழிகாட்டுதலுக்கும் அல்லது ஏமாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும். இரண்டாவதாக, நீதிமன்றங்கள் வழக்கின் உண்மைகளை கவனமாக ஆராய வேண்டும் — அதாவது அந்த உறவு சுரண்டல்மிக்கதாக இல்லாமல் இருதரப்பு சம்மதத்துடன் இருந்ததா, வன்முறை அல்லது கொடுமை நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் ஏதேனும் உள்ளதா, மற்றும் இருதரப்பினருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் எதைக் காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும். மூன்றாவதாக, ஒன்றாக வாழ்வது அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது போன்ற பிற்கால குடும்ப ஏற்பாடுகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளக்கூடாது; மாறாக அவை உண்மையானவைதான் என்று நீதிமன்றத்திற்கு நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும்.


கட்டமைப்புரீதியான பெரும் இடைவெளி


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act) நோக்கம் மிகவும் தெளிவானது. ஏனெனில், சுரண்டல் என்பது எப்போதும் வெளியில் தெரிவது இல்லை, மேலும் ஒரு குழந்தை தனக்கு நேர்ந்த தீங்கை வெளிப்படுத்தும் திறனை மட்டுமே இந்தச் சட்டம் நம்பியிருக்க முடியாது. இருப்பினும், தற்போதைய சட்டம் சுரண்டல் நோக்கத்துடன் நடக்கும் துஷ்பிரயோகத்தையும், பதின்ம வயதினருக்கு இடையேயான உறவுகளையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இதனால், சட்டம் அங்கீகரிக்க மறுக்கும் இந்த இடைவெளியை நீதிமன்றங்கள் தங்களின் சொந்தப் பொறுப்பில் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.


தற்போதைய சூழ்நிலையை மேலும் கவனிக்கத்தக்கதாக மாற்றுவது என்னவென்றால், 2011-ஆம் ஆண்டின் போக்சோ சட்ட வரைவு (POCSO Bill), 16 முதல் 18-வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரின் சம்மதத்துடன் கூடிய உறவுகளுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பரிந்துரைத்தது. அதில், அந்தச் சம்மதமானது கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல், தேவையற்ற செல்வாக்கு அல்லது சம்மதம் தெரிவிக்க முடியாத நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றம் வேறு ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. சட்டப்படி 18-வயதுக்குட்பட்ட அனைவருமே 'குழந்தை' என்று வரையறுக்கப்பட்டவுடன், சம்மதம் என்பது சட்டரீதியாகத் தனது முக்கியத்துவத்தை முற்றிலும் இழந்துவிட்டது. இது கொடூரமான துஷ்பிரயோக வழக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காதல் உறவு வழக்குகளிலும் இதே நிலையை உருவாக்குகிறது.


சட்டத்தின் அடுத்தகட்ட  நடவடிக்கை என்னவாக இருக்கும்?


நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை அதிக உணர்வுத்திறனுடன் கையாளத் தொடங்கியிருப்பது ஊக்கமளிக்கிறது. இருப்பினும், நீதிமன்றத்தின் தலையீடு என்பது வழக்கமாக ஒரு நபர் குற்றவியல் வழக்கின் நிச்சயமற்ற தன்மையையும் சுமையையும் எதிர்கொண்ட பிறகே கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், அவர்களுக்கு நீதிமன்ற நிவாரணம் கிடைப்பதற்கு முன்பே அந்த இளம் வயதினரின் வாழ்க்கையை மாற்றிவிடக்கூடும். இந்தச் சிக்கல் ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனை என்றால், இதற்கான தீர்வும் நாடாளுமன்றச் சட்டங்கள் மூலமாகவே வழங்கப்பட வேண்டும்.


முதலாவதாக, நாடாளுமன்றம் மிகவும் குறுகிய வரம்பிற்குட்பட்ட 'நெருங்கிய வயது விதிவிலக்கு' (Close-in-age exception) என்ற ஒரு அம்சத்தைப் பரிசீலிக்கலாம். உத்தரப்பிரதேச மாநிலம் vs அனுருத் (State of UP v. Anurudh) என்ற வழக்கில், இருதரப்பு சம்மதத்துடன் கூடிய உண்மையான பதின்பருவ காதல் உறவுகளுக்காகச் சட்டத்தில் ஒரு "ரோமியோ மற்றும் ஜூலியட்" விதியை (Romeo and Juliet clause) கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அரசியலமைப்பு அனுபவங்களும் இதில் வழிகாட்டுகின்றன. தென் ஆப்பிரிக்காவின் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான டெடி பியர் கிளினிக் (Teddy Bear Clinic for Abused Children) வழக்கில், அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதின்பருவத்தினருக்கு (Minors) இடையிலான சம்மதத்துடனான நெருக்கத்தைக் குற்றமாக்கும் சட்டங்களை ரத்து செய்தது. ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பதின்பருவ உறவுகளின் முக்கியத்துவத்தையும், முழுமையான குற்றமயமாக்கல் ஒருவருடைய கண்ணியத்திற்கு ஏற்படுத்தும் தீங்கையும் நீதிமன்றம் அங்கீகரித்தது. இந்தியா இத்தகைய ஒரு கட்டமைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாவிட்டாலும், அதற்குப் பின்னால் உள்ள கவலையை நாம் புறக்கணித்துவிட முடியாது.


இரண்டாவதாக, ஹர்மீத் சிங் (Harmeet Singh) வழக்கில் காணப்பட்டதைப் போன்ற விரிவான ஆழமான நீதித்துறை மறுஆய்வு என்பது பல ஆண்டுகள் வழக்கு நடந்த பிறகுதான் கிடைக்க வேண்டும் என்பதில்லை. முழுமையான குற்றவியல் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே — பரஸ்பர சம்மதம், இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம், சுரண்டல் கூறுகள் ஏதேனும் உள்ளதா மற்றும் அதன் பின்னணிச் சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலேயே மதிப்பீடு செய்வதற்கான ஒரு பரிசீலனைத் தரநிலையை நாடாளுமன்றம் அல்லது காவல்துறையின் வழிகாட்டுதல்கள் உருவாக்கலாம்.


மூன்றாவதாக, எந்தவொரு சுரண்டலும் இல்லாத ஒருசில குறிப்பிட்ட வழக்குகளில், அதற்கான தீர்வு எப்போதும் குற்றவியல் விசாரணையாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாகக் கடுமையான குற்றவியல் தண்டனையைப் பயன்படுத்துவதைவிட, சிறுவர் நல நடவடிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் வயதுக்கு ஏற்ற வழிகாட்டுதல்களை வழங்குவது சில நேரங்களில் அவர்களுக்குச் சிறந்த பாதுகாப்பையும் மறுவாழ்வையும் அளிக்கக்கூடும் என்கின்றனர்.


நீதிமன்றங்களால்கூட இறுதிப் பூர்வமாக விடையளிக்க முடியாத ஒரு கேள்வி


தனிப்பட்ட வழக்குகளில், மிகக் கடுமையான மற்றும் பொதுவான சட்டங்களின் பிடியிலிருந்து எழும் கடுமையான பாதிப்புகளை நீதிமன்றங்கள் தளர்த்தலாம். ஆனால், பதின்ம வயதினரின் உறவுகளையும், சுரண்டல் நோக்கத்துடனான பாலியல் வன்கொடுமைகளையும், சட்டம் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற பெரிய கேள்விக்கு நீதிமன்றங்களால் மட்டுமே தீர்வு கண்டுவிடமுடியாது. பாராளுமன்றம், இந்தச் சிக்கலை நேரடியாகக் கையில் எடுத்துச் சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை, நீதிமன்றங்கள் இதுபோன்ற கடினமான வழக்குகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


ரோகிணி நாராயணன், டெல்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் (Advocate) ஆவார்.





Share:

குற்ற ஒப்புதல் பேரம் : புதிய குற்றவியல் சட்டங்களில் தவறவிட்ட ஒரு சீர்திருத்தம் -ஜி.எஸ். பாஜ்பாய்

இந்தத் தோல்விக்கான ஒரு காரணம், தண்டனைத் தீர்ப்புடன் இணைந்திருக்கும் களங்கமே (stigma attached) ஆகும். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் பிரிவு 294-ன் கீழ் செய்யப்படும் ஒரு வெற்றிகரமான மேற்கொள்ளப்படும் ஒரு குற்ற ஒப்புதல் பேரம், முறையான தண்டனைத் தீர்ப்பையே பெற்றுத் தருகிறது.


இந்தியாவில் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் குற்ற ஒப்புதல் பேரம் (plea bargaining) பேசும் முறைக்குத் தேவையான சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்வதற்காக, பலதரப்பட்ட பங்குதாரர்கள் மாநாட்டைக் கூட்ட மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. குற்ற ஒப்புதல் பேரம் (Plea bargaining) என்பது விசாரணைக்கு முந்தைய, பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் ஒரு ஒப்பந்தமாகும். இதில் குற்றம் சாட்டப்பட்டவர், குறைந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் அல்லது குறைக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். இது ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைகளைக் கொண்ட குற்றங்களுக்குப் பொருந்தும்.


பல நாடுகளில், குற்றவியல் நீதி அமைப்பின் மீதான சுமையைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக இந்த குற்ற ஒப்புதல் பேரம் (Plea bargaining) உள்ளது. இந்தியாவில் குற்ற ஒப்புதல் பேரம் மிகக் குறைந்த அளவில், அதாவது 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில், ஏறக்குறைய 90-95 சதவீத குற்றவியல் வழக்குகள் குற்ற ஒப்புதல் பேரம் மூலம் தீர்க்கப்படுகின்றன. கனடாவில், இந்த எண்ணிக்கை சுமார் 85-90 சதவீதமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில், சுமார் 80-90 சதவீத வழக்குகள் இத்தகைய குற்ற ஒப்புதல்களில் முடிவுக்கு வருகின்றன.




2005-ம் ஆண்டின் குற்றவியல் சட்ட (திருத்த) சட்டத்தின் மூலம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure (CrPC)) குற்ற ஒப்புதல் பேரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், வழக்காடுபவர்கள் அதைப் பயன்படுத்தத் தயாராக இல்லை என்பது விரைவில் தெளிவாகியது.


குற்ற ஒப்புதல் பேரம் (plea bargaining) நடைமுறைப்படுத்தப்படாததையும், அது குறித்த அலட்சியத்தையும் சரிசெய்வது குறித்த இரண்டையும் கவனத்தில் கொள்வது முக்கியம். ஏனெனில், நீதிமன்றங்கள் தங்களின் முழு கொள்ளளவையும் கிட்டத்தட்ட எட்டிவிட்டன. தற்போது, 58.8 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, சீர்திருத்தம் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறியும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக புதிய குற்றவியல் சட்டங்கள் குற்ற ஒப்புதல் பேரத்தைச் சீர்திருத்துவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம், தண்டனையின் மீதான தீர்ப்பின் களங்கத்துடன் தொடர்புடையது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (BNSS) பிரிவு 294-ன் கீழ் செய்யப்படும் ஒரு வெற்றிகரமான குற்ற ஒப்புதல் பேரம், முறையான தண்டனைத் தீர்ப்பையே அளிக்கிறது. 2023-ம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau (NCRB)) தரவுகளின்படி, விசாரிக்கப்பட்ட 1.65 கோடி குற்ற வழக்குகளில், 35,889 வழக்குகள் மட்டுமே குற்ற ஒப்புதல் பேரம் மூலம் தீர்க்கப்பட்டன. இதன் விளைவாக, வழக்குகளின் தீர்வு விகிதம் 0.216 சதவீதமாக உள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனைக் குறைப்பு பெறுவதும் நேரடி விடுதலைக்கு வழிவகுக்காது, ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் குறைக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.


இதற்கு மாறாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (BNSS) பிரிவு 359, குற்றங்களை "சமரசமாக்குவதற்கு" வழிவகை செய்கிறது. இது, பாதிக்கப்பட்டவர்களும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினரும் விசாரணையைத் தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட சிறிய குற்றங்களைச் சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. சமரசமாக்குதல் (settlement) என்பது ஒரு முறையான தீர்வு போலச் செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையாவதற்கு வழிவகுக்கிறது. எனவே, சமரசமாக்குதல் முறையானது, குற்ற ஒப்புதல் பேரத்தின் எதிர்கால வாய்ப்புகளுக்கு ஒரு பெரும் அடியாக அமைந்துள்ளது. குற்ற ஒப்புதல் பேரம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, அவர்களின் அக்கறையின்மையும், பயிற்சி மற்றும் நிபுணத்துவம் இல்லாமையும் குற்ற ஒப்புதல் பேரம் பேசும் முறையை கணிசமாகப் பலவீனப்படுத்தியுள்ளன.


முன்மொழியப்பட்ட இந்த மாநாடு, பொறுப்பான அதிகாரிகளிடையே இணக்க முறைகளையும் பொறுப்புணர்வையும் நிறுவுவதன் மூலம், குற்ற ஒப்புதல் பேரம் பேசும் முறையின் பயன்பாடுகளை இன்னும் சற்று கடுமையாக்க முடியும். சமரசம் மற்றும் குற்ற ஒப்புதல் பேரம் ஆகிய வழக்குகளில் உள்ள முரண்பாடான சூழ்நிலையைச் சமன் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. சமரசம் செய்வதன் மூலம் விடுதலை கிடைப்பதால், குற்ற ஒப்புதல் பேரம் அவ்வளவு ஈடுபாடு உள்ளதாக இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒரு வழிகாட்டப்பட்ட செயல்முறை, கிடைக்கக்கூடிய தேர்வுகள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருப்பதை உறுதி செய்யும்.


அதிக தண்டனையை பெறும் விகிதங்களில் அல்லாமல், குற்ற ஒப்புதல் பேரம் பேசும் வழக்குகளைத் திறம்படவும் தரமாகவும் தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு பேச்சுவார்த்தை நடத்தும் அரசு வழக்கறிஞர் விரும்பத்தக்கவர் ஆவர். கனடியன் மாதிரி (Canadian model) இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. விசாரணைக் கைதிகளில் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட உதவி வழக்கறிஞர்களுக்குக் கட்டாயப் பயிற்சி இந்த சீர்திருத்தத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் முழுமையான நீதித்துறை மதிப்பீடு தேவைப்படுகிறது. இரு தரப்பினரும் ஒரு சமரசத்திற்கு ஒப்புக்கொண்டாலும் இது அவசியமாகும். இது தொடர்புடைய உண்மைகள் நிரூபிக்கப்படுவதையும் நீதிபதி உறுதிசெய்து, தண்டனை வரம்பிற்குள் வரும் ஒரு தண்டனையை நீதிபதி விதிக்க வேண்டும்.


உயர்நீதிமன்றத்தின் ஓர் உத்தரவு, சட்டத் திருத்தம் ஏதுமின்றி இவை அனைத்தையும் செயல்படுத்துவதை உறுதிசெய்யும். குற்ற வகை, அதன் விளைவு மற்றும் தீர்வுக்கான கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட, மாதாந்திர மாவட்ட அளவிலான அறிக்கையிடலைக் கோரும் உயர்நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்ட தரவுப் பலகையானது, தற்போது குற்ற ஒப்புதல் பேரம் பேசுதலில் இல்லாத பொறுப்புணர்வு செயல்முறையை உருவாக்கும். மேலும், மாவட்ட நீதிமன்றங்களுக்குப் பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர், சட்ட உதவி அதிகாரி மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பு அலுவலருடன் கூடிய ஒரு தனிப்பட்ட குற்ற ஒப்புதல் பேரம் பேசும் நடுநிலைப் பிரிவு (mediation cell) தேவைப்படுகிறது.


இரண்டு நடவடிக்கைகள் மூலம் குற்ற ஒப்புதல் பேரத்தை, மேலும் ஈடுபாடுடையதாக மாற்றலாம். ஒன்று, சிறைவாசத்தின் விளைவுகளால் எழும் எந்தவொரு தகுதியிழப்பையும் நீக்குவதன் மூலம், குற்ற ஒப்புதல் பேரத்தில் இணைக்கப்பட்டுள்ள தண்டனையை களங்கமற்றதாக மாற்றலாம். இரண்டாவதாக, பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட குற்ற ஒப்புதலின் விளைவுகளில் ஒன்றாக விடுதலையை அறிமுகப்படுத்தலாம். குற்ற ஒப்புதல் பேரத்தின் மூலம் வரும் கைதிகள், பிணை, தண்டனைக் குறைப்பு மற்றும் பிந்தைய கவனிப்பு போன்ற நடவடிக்கைகளுக்குச் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம்.


கட்டுரையாளர், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.



Original Link: Plea bargaining, a reform new criminal laws missed


Share:

உச்சநீதிமன்றம், அமிலம் உட்கொண்டதிலிருந்து பிழைத்தவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களாக ஏன் அங்கீகரித்தது? - அமால் ஷேக்

 அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஆனால் வெளியில் தெரியும்படியான காயங்கள் இல்லாத காரணத்தால் அரசின் உதவிகள் கிடைக்காமல் விடுபட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


திங்கள்கிழமையன்று (மே 4) உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி, அமிலத்தை கட்டாயமாக உட்கொள்ள நேரிட்டதால் உட்புறக் காயங்கள் அடைந்தவர்கள் (வெளியே தழும்புகள் தெரியாவிட்டாலும்), 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் (Rights of Persons with Disabilities Act (RPwD Act)) 'அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களாகவே' கருதப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தெளிவுரை சட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து முன்தேதியிட்டு செயல்படும் என்று கூறியதுடன், அமிலத் தாக்குதலுக்கான தற்போதுள்ள தண்டனைகள் குற்றங்களைத் தடுக்கும் வகையில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அரசுக்குத் தெரிவித்தனர். குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பை குற்றம்சாட்டப்பட்டவர் மீதே சுமத்தவும், இத்தகைய வழக்குகளில் அமிலம் விற்பனை செய்பவர்களையும் இணை குற்றவாளிகளாகச் சேர்க்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.


ஷாஹீன் மாலிக் என்ற அமிலத் தாக்குதலில் இருந்து மீண்டவர் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டத்தில் உள்ள ஒரு குறைபாட்டினால் ஒரு குறிப்பிட்ட வகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்காமல் போவதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சட்டத்தில் உள்ள இடைவெளி


மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களை குறிப்பிட்ட இயலாமைகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், அது நிர்ணயித்த வரையறை குறுகியதாக இருந்தது.  சட்டத்தின் அட்டவணை 2(zc)-ன் கீழ், "அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்" என்பவர் "அமிலம் அல்லது அது போன்ற அரிக்கும் தன்மையுள்ள பொருளை வீசித் தாக்கும் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அமிலம் வலுக்கட்டாயமாக உட்கொள்ளப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இந்த வரையறைக்குள் வரவில்லை.


நீதிமன்றம் ஒரு முக்கியமான சிக்கலைச் சுட்டிக்காட்டியுள்ளது. "உடல் உருக்குலைவு" என்ற சொல், உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே குறிப்பதாகத் தோன்றுகிறது. இதனால், அமிலத்தை உட்கொள்வதால் ஏற்படும் உள் உறுப்பு காயங்கள் அல்லது தழும்புகள் இந்த வரையறைக்குள் வராமல் போகும் அபாயம் உள்ளது.


அத்தகைய நிகழ்வுகளில் ஏற்படும் காயங்களும் அதே அளவு கடுமையானவை ஆகும். அமிலம் உட்கொள்ளப்படும்போது, அது வாய், தொண்டை, உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியைப் பாதிக்கிறது. இது நிரந்தரமானது. "இந்த அரிக்கும் தன்மை கொண்ட பொருள், கடுமையான தீக்காயங்களையும், உள் உறுப்புகளுக்கு, குறிப்பாக செரிமான மண்டலத்திற்கு, பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும், தொடர்ச்சியான இரைப்பைக் குடல் மருத்துவப் பராமரிப்பின் தேவை உட்பட, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மருத்துவச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. வாய்வழியாக அமிலத்தை உட்கொண்டவர்கள், சாப்பிடுவதிலும், விழுங்குவதிலும், செரிமானத்திலும் சிரமம் போன்ற நீண்டகாலப் பிரச்சனைகளை  எதிர்கொள்ளக்கூடும் என மாலிக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?


மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் வரம்பிற்குள் வராமல் போவதால் ஏற்படும் விளைவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் என்பது நிதி உதவி, மறுவாழ்வுத் திட்டங்கள், மருத்துவ ஆதரவு போன்றவற்றுக்கான ஒரு நுழைவுச்சீட்டு ஆகும்.  அது இல்லையென்றால், பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்தத் திட்டங்கள் எதையுமே அணுக முடியாது. இந்த மனுவானது இதை ஒரு “குறைவான வகைப்பாடு” (under-classification) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஆதரிக்க முயலும்போது, அதே போன்ற பாதிப்புகளைக் கொண்ட ஒரு துணைப் பிரிவினரை தன்னிச்சையாகப் புறக்கணிப்பதாகும்.


தாக்குதலுக்கு உள்ளான இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே உள்ள ஒரே வேறுபாடு, தாக்குதல் நடத்தப்பட்ட விதம் மட்டுமே என்று அந்த மனு வாதிட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மையிலோ அல்லது அளவிலோ எந்த மாற்றமும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.


மனு எதை கேள்விக்குள்ளாக்குகிறது


இந்த வழக்கின் மையப்புள்ளி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-14 (Article 14) ஆகும். இந்தச் சட்டம், தாக்குதலின் விளைவைக் கவனிக்காமல், தாக்குதல் நடத்தப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைப் பிரிப்பது "தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற வகைப்பாடு" என்று மனுவில் வாதிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் எனும் போது, இத்தகைய வேறுபாடு அந்த நோக்கத்தோடு எந்த ஒரு தர்க்கரீதியான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.




சட்டத்தின் கவனம் மாற்றுத்திறனாளின் மீதே உள்ளது. அதன் காரணம் அல்லது அது எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்பதன் மீது அல்ல என்று அந்த மனு கூறுகிறது. மேலும், அமிலம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும், கட்டாயப்படுத்தி அமிலம் உட்கொள்ள வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் அமில வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரே பிரிவினரே என்று வாதிடப்படுகிறது.


இந்த சட்ட விடுபடலானது "குறைவான வகைப்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்று மனு விவரிக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஆதரிக்க வேண்டிய சட்டம், அதே நிலையில் இருக்கும் ஒரு துணைப் பிரிவினரை தன்னிச்சையாகப் புறக்கணிப்பதாக உள்ளது.


மேலும், குற்றவியல் சட்டத்திற்கும் (Criminal Law) நலத்திட்டச் சட்டத்திற்கும் (Welfare Law) இடையே உள்ள முரண்பாட்டையும் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. பாரதிய நியாய சன்ஹிதா, 2024 (Bharatiya Nyaya Sanhita BNS))  பிரிவு 124-ன்படி, அமிலம் வீசுவதும், உட்கொள்ள வைப்பதும் ஒரே மாதிரியான குற்றங்களாகவே கருதப்படுகின்றன, அவற்றுக்கு ஒரே மாதிரியான தண்டனைகளே வழங்கப்படுகின்றன. அமிலத் தாக்குதல் எந்த முறையில் நடத்தப்பட்டாலும் அதன் பாதிப்பு, நோக்கம் மற்றும் சமூக ஆபத்து ஆகியவை ஒன்றுதான் என்று வாதிடும் இந்த மனு, குற்றவியல் சட்டம் வேண்டுமென்றே நிராகரித்த ஒரு பாகுபாட்டை, ஒரு நலத்திட்டச் சட்டம் மட்டும் கடைபிடிப்பது சட்டப்பூர்வமாகப் பொருத்தமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று கூறுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு தொடர்பான வாதம், பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. அமிலம் குடிக்க வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள், சட்டரீதியான வரையறைக்குள் வராததால், அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழைப் பெற முடிவதில்லை. இதன் காரணமாக, அரசின் இழப்பீடு, மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சட்டப்பூர்வ அங்கீகாரம் இவ்வாறு மறுக்கப்படுவது, கண்ணியத்துடன் வாழ்வதற்கான ஒருவரின் உரிமையைப் பறிப்பதாகும் என்று அந்த மனு வாதிடுகிறது.


இதுபோன்ற கடுமையான உள்காயங்களால் அவதிப்படும் ஒருவருக்கு, மருத்துவப் பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பது என்பது தர்மம் செய்யும் விஷயமல்ல. மாறாக அது ஒரு கண்ணியமான வாழ்வின் அடிப்படைக் கூறாகும் என்று மனு  குறிப்பிடுகிறது.


அமிலம் உட்கொள்வதால் ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் உள் உறுப்புகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு வழிகாட்டுதல்கள், பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியும் உருக்குலைவு மற்றும் இயக்கக் குறைபாடு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உள் உறுப்புக் காயங்கள் அங்கீகரிக்கப்படாமல் விடப்படுகின்றன என்றும் மனு  வாதிடுகிறது.


இதைத் தீர்ப்பதற்காக, நீதிமன்றம் சட்டத்தை “நோக்க அடிப்படையிலான விளக்கத்தின்” மூலம் அணுக வேண்டும் என்று மனு வலியுறுத்தியது. அதாவது, ஒரு சட்டத்தை அதன் வார்த்தை மாறாத நேரடிப் பொருளில் மட்டும் பார்க்காமல், அந்தச் சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் விளக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD Act) என்பது ஒரு சமூக நலச் சட்டமாகும். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு கிடைக்கவும், அநீதியைத் தடுக்கவும் நீதிமன்றங்கள் இந்தச் சட்டத்தை தாராளமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விளக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. குறிப்பாக, சட்டத்தில் உள்ள “அமிலம் வீசுதல் மூலம் நிகழ்த்தப்படும் தாக்குதல்” என்ற சொற்றொடரை “அமிலம் பயன்படுத்துவதன் மூலம் நிகழ்த்தப்படும் அனைத்து வகையான தாக்குதல்கள்” என விரிவாகப் பொருள் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் அமிலத் தாக்குதல் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சட்டப் பாதுகாப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள்


சட்டத்தின்கீழ் வரையறைகளின் வரம்பை விரிவுபடுத்துவது ஒருபுறம் இருக்க, அமில வீச்சு வழக்குகளில் நடக்கும் மந்தமான விசாரணைகளை "அமைப்பிற்கே ஒரு கேலிக்கூத்து" என்று கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் குறிப்பிட்டது. அப்போதிருந்து இந்தத் தாமதப் பிரச்சினையைத் தீர்க்க நீதிமன்றம் முயன்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொடூரமான அமிலத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறிய தலைமை நீதிபதி, “தண்டனை இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பினார்.


மேலும், 2013-ஆம் ஆண்டிலிருந்து அமில வீச்சு வழக்குகளின் எண்ணிக்கை "அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்திருப்பதை" நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது. இது ஒரு தீவிரமான கவனத்திற்குரிய விஷயம் என்பதையும் சுட்டிக்காட்டியது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இணக்க உறுதிமொழிப் பத்திரங்கள், மாநிலங்கள் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் அளவை தெளிவாக காட்டின. இதில் சில அதிகார வரம்புகள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 198 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 160 வழக்குகளும், குஜராத்தில் 114 வழக்குகளும் உள்ளன. பீகாரில் 68 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்ற மாநிலங்களில், மகாராஷ்டிராவில் 58 வழக்குகளும், அசாமில் 27 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்டில் 26 வழக்குகளும், ஒடிசாவில் கீழமை நீதிமன்றங்களில் 23 வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் 8 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, டெல்லி கீழமை நீதிமன்றங்களில் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உத்தரகாண்டில் மூன்று வழக்குகளும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா ஐந்து வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


Original article : Why Supreme Court recognised acid ingestion survivors as victims under RPwD Act. -Amaal Sheikh

Share: