தற்போதுள்ள சட்ட வடிவம், சுரண்டல் நோக்கிலான பாலியல் அத்துமீறல்களையும், வளரிளம் பருவத்தினரின் காதல் உறவுகளையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுவதில்லை. இதனால், சட்டம் இன்னும் சரியாக அங்கீகரிக்காத சில இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நீதிமன்றங்கள் தள்ளப்படுகின்றன.
குழந்தைகளைப் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காக, கடுமையான மற்றும் தெளிவான விதிகளுடன் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (Protection of Children from Sexual Offences Act, 2012 (POCSO)) கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தற்போது நீதிமன்றங்களுக்கு வரும் பல சிக்கலான வழக்குகள், இந்தச் சட்டத்தின் கடுமையான விதிகளுக்குள் பொருந்தாத வளரிளம் பருவத்தினரின் காதல் உறவுகள் சார்ந்தவையாக உள்ளன.
சட்டத்தின்படி 'பாதிக்கப்பட்டவர்' என்று கருதப்படும் ஒரு பெண், எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை, நான் எந்தச் சட்டப் பூர்வமான நடவடிக்கையையும் விரும்பவில்லை என்று கூறி, குற்றவியல் நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்க்கும்போது, குற்றவியல் சட்டம் என்ன செய்ய வேண்டும்?
ஹர்மீத் சிங் vs மாநிலம் (டெல்லி தேசிய தலைநகரப் பகுதி) (Harmeet Singh v. State (NCT of Delhi)) என்ற வழக்கின் விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 17-வயது சிறுமி, தற்போது தகுந்த வயதை அடைந்து, இந்த வழக்கின் மனுதாரரையே (Petitioner) திருமணமும் செய்து கொண்டு, இப்போது ஒரு குழந்தைக்குத் தாயாகவும் உள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்தது. இதே போன்ற ஒரு பார்வையை சமீபத்திய மாதங்களில் பம்பாய் மற்றும் மேகாலயா உயர்நீதிமன்றங்களும் ‘Vijay Laxman Rotke’ மற்றும் ‘Shri Phrangbatnam Kharkongor’ ஆகிய வழக்குகளில் எடுத்துள்ளன. அதாவது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டம் எந்த மாதிரியான பாலியல் சுரண்டல்களைத் தடுக்க உருவாக்கப்பட்டதோ, அந்த வகையான சுரண்டல்கள் இந்த வழக்குகளின் பின்னணியில் இல்லாததால், நீதிமன்றங்கள் அவற்றின் மீதான சட்டநடவடிக்கைகளை ரத்து செய்தன.
வளரிளம் பருவத்தினரின் சிக்கலான காதல் மற்றும் நட்புரீதியான உறவுகளின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள்மீது ஒரே மாதிரியான சட்டத்தை ஒரே வரியில் திணிப்பது குறித்து நீதிமன்றங்களுக்கு இடையே அதிகரித்து வரும் கவலையை இந்தத் தீர்ப்புகள் வெளிப்படுத்துகின்றன.
மிகவும் கவனமான நீதித்துறை அணுகுமுறை
வழக்குடன் தொடர்புடைய இருதரப்பினரும் பின்னாளில் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் சட்டபூர்வ அணுகுமுறை கடுமையான சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஏனெனில், இது மறைமுகமாகக் குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பதாகவும், பின்னாளில் கட்டாய உறவுகளை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துவிடலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் பின்னாளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காகவே, அனைத்து இளம்பருவ உறவுகளையும் தானாகவே பாதிப்பில்லாதவை என்று கருதிவிட முடியாது.
ஹர்மீத் சிங் (Harmeet Singh) வழக்கின் தீர்ப்பை முக்கியமானதாக மாற்றுவது எதுவென்றால், அது ஒரு சமநிலையான மற்றும் கொள்கைரீதியான அணுகுமுறையைக் கண்டறிய முயல்கிறது. டெல்லி உயர்நீதிமன்றம், திருமணம் செய்துகொள்வதையோ அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதையோ மட்டுமே வழக்கு நிவாரணத்திற்கான போதுமான காரணங்களாகக் கருதவில்லை. மாறாக, நீதிமன்றங்களுக்கு அது தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது :
முதலாவதாக, சட்டபூர்வமாகப் பாதிக்கப்பட்ட நபர் முற்றிலும் தனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் செயல்படுகிறாரா, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறாரா, மற்றும் அவர் எந்தவொரு கட்டாயத்திற்கும், தவறான வழிகாட்டுதலுக்கும் அல்லது ஏமாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும். இரண்டாவதாக, நீதிமன்றங்கள் வழக்கின் உண்மைகளை கவனமாக ஆராய வேண்டும் — அதாவது அந்த உறவு சுரண்டல்மிக்கதாக இல்லாமல் இருதரப்பு சம்மதத்துடன் இருந்ததா, வன்முறை அல்லது கொடுமை நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் ஏதேனும் உள்ளதா, மற்றும் இருதரப்பினருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் எதைக் காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும். மூன்றாவதாக, ஒன்றாக வாழ்வது அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது போன்ற பிற்கால குடும்ப ஏற்பாடுகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளக்கூடாது; மாறாக அவை உண்மையானவைதான் என்று நீதிமன்றத்திற்கு நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும்.
கட்டமைப்புரீதியான பெரும் இடைவெளி
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act) நோக்கம் மிகவும் தெளிவானது. ஏனெனில், சுரண்டல் என்பது எப்போதும் வெளியில் தெரிவது இல்லை, மேலும் ஒரு குழந்தை தனக்கு நேர்ந்த தீங்கை வெளிப்படுத்தும் திறனை மட்டுமே இந்தச் சட்டம் நம்பியிருக்க முடியாது. இருப்பினும், தற்போதைய சட்டம் சுரண்டல் நோக்கத்துடன் நடக்கும் துஷ்பிரயோகத்தையும், பதின்ம வயதினருக்கு இடையேயான உறவுகளையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இதனால், சட்டம் அங்கீகரிக்க மறுக்கும் இந்த இடைவெளியை நீதிமன்றங்கள் தங்களின் சொந்தப் பொறுப்பில் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையை மேலும் கவனிக்கத்தக்கதாக மாற்றுவது என்னவென்றால், 2011-ஆம் ஆண்டின் போக்சோ சட்ட வரைவு (POCSO Bill), 16 முதல் 18-வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரின் சம்மதத்துடன் கூடிய உறவுகளுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பரிந்துரைத்தது. அதில், அந்தச் சம்மதமானது கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல், தேவையற்ற செல்வாக்கு அல்லது சம்மதம் தெரிவிக்க முடியாத நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றம் வேறு ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. சட்டப்படி 18-வயதுக்குட்பட்ட அனைவருமே 'குழந்தை' என்று வரையறுக்கப்பட்டவுடன், சம்மதம் என்பது சட்டரீதியாகத் தனது முக்கியத்துவத்தை முற்றிலும் இழந்துவிட்டது. இது கொடூரமான துஷ்பிரயோக வழக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காதல் உறவு வழக்குகளிலும் இதே நிலையை உருவாக்குகிறது.
சட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை அதிக உணர்வுத்திறனுடன் கையாளத் தொடங்கியிருப்பது ஊக்கமளிக்கிறது. இருப்பினும், நீதிமன்றத்தின் தலையீடு என்பது வழக்கமாக ஒரு நபர் குற்றவியல் வழக்கின் நிச்சயமற்ற தன்மையையும் சுமையையும் எதிர்கொண்ட பிறகே கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், அவர்களுக்கு நீதிமன்ற நிவாரணம் கிடைப்பதற்கு முன்பே அந்த இளம் வயதினரின் வாழ்க்கையை மாற்றிவிடக்கூடும். இந்தச் சிக்கல் ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனை என்றால், இதற்கான தீர்வும் நாடாளுமன்றச் சட்டங்கள் மூலமாகவே வழங்கப்பட வேண்டும்.
முதலாவதாக, நாடாளுமன்றம் மிகவும் குறுகிய வரம்பிற்குட்பட்ட 'நெருங்கிய வயது விதிவிலக்கு' (Close-in-age exception) என்ற ஒரு அம்சத்தைப் பரிசீலிக்கலாம். உத்தரப்பிரதேச மாநிலம் vs அனுருத் (State of UP v. Anurudh) என்ற வழக்கில், இருதரப்பு சம்மதத்துடன் கூடிய உண்மையான பதின்பருவ காதல் உறவுகளுக்காகச் சட்டத்தில் ஒரு "ரோமியோ மற்றும் ஜூலியட்" விதியை (Romeo and Juliet clause) கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அரசியலமைப்பு அனுபவங்களும் இதில் வழிகாட்டுகின்றன. தென் ஆப்பிரிக்காவின் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான டெடி பியர் கிளினிக் (Teddy Bear Clinic for Abused Children) வழக்கில், அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதின்பருவத்தினருக்கு (Minors) இடையிலான சம்மதத்துடனான நெருக்கத்தைக் குற்றமாக்கும் சட்டங்களை ரத்து செய்தது. ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பதின்பருவ உறவுகளின் முக்கியத்துவத்தையும், முழுமையான குற்றமயமாக்கல் ஒருவருடைய கண்ணியத்திற்கு ஏற்படுத்தும் தீங்கையும் நீதிமன்றம் அங்கீகரித்தது. இந்தியா இத்தகைய ஒரு கட்டமைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாவிட்டாலும், அதற்குப் பின்னால் உள்ள கவலையை நாம் புறக்கணித்துவிட முடியாது.
இரண்டாவதாக, ஹர்மீத் சிங் (Harmeet Singh) வழக்கில் காணப்பட்டதைப் போன்ற விரிவான ஆழமான நீதித்துறை மறுஆய்வு என்பது பல ஆண்டுகள் வழக்கு நடந்த பிறகுதான் கிடைக்க வேண்டும் என்பதில்லை. முழுமையான குற்றவியல் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே — பரஸ்பர சம்மதம், இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம், சுரண்டல் கூறுகள் ஏதேனும் உள்ளதா மற்றும் அதன் பின்னணிச் சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலேயே மதிப்பீடு செய்வதற்கான ஒரு பரிசீலனைத் தரநிலையை நாடாளுமன்றம் அல்லது காவல்துறையின் வழிகாட்டுதல்கள் உருவாக்கலாம்.
மூன்றாவதாக, எந்தவொரு சுரண்டலும் இல்லாத ஒருசில குறிப்பிட்ட வழக்குகளில், அதற்கான தீர்வு எப்போதும் குற்றவியல் விசாரணையாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாகக் கடுமையான குற்றவியல் தண்டனையைப் பயன்படுத்துவதைவிட, சிறுவர் நல நடவடிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் வயதுக்கு ஏற்ற வழிகாட்டுதல்களை வழங்குவது சில நேரங்களில் அவர்களுக்குச் சிறந்த பாதுகாப்பையும் மறுவாழ்வையும் அளிக்கக்கூடும் என்கின்றனர்.
நீதிமன்றங்களால்கூட இறுதிப் பூர்வமாக விடையளிக்க முடியாத ஒரு கேள்வி
தனிப்பட்ட வழக்குகளில், மிகக் கடுமையான மற்றும் பொதுவான சட்டங்களின் பிடியிலிருந்து எழும் கடுமையான பாதிப்புகளை நீதிமன்றங்கள் தளர்த்தலாம். ஆனால், பதின்ம வயதினரின் உறவுகளையும், சுரண்டல் நோக்கத்துடனான பாலியல் வன்கொடுமைகளையும், சட்டம் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற பெரிய கேள்விக்கு நீதிமன்றங்களால் மட்டுமே தீர்வு கண்டுவிடமுடியாது. பாராளுமன்றம், இந்தச் சிக்கலை நேரடியாகக் கையில் எடுத்துச் சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை, நீதிமன்றங்கள் இதுபோன்ற கடினமான வழக்குகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ரோகிணி நாராயணன், டெல்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் (Advocate) ஆவார்.