இந்த வழக்கு முதலில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வு கடந்த 2025- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் உள்ள பொது இடங்களில் உள்ள தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களுக்கு மாற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வருடமாகப் பொது பாதுகாப்பு, விலங்குகள் நலன் மற்றும் இந்தியாவின் தெருநாய்கள் மக்கள்தொகையை நிர்வகிப்பதில் நீதிமன்றத்தின் தலையீடு ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு தேசிய விவாதமாக மாறியுள்ள, இந்தத் தெருநாய்கள் தொடர்பான Suo motu (நீதிமன்றமாகவே முன்வந்து எடுத்த வழக்கு) விவகாரத்தில், உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது.
இந்த வழக்கு தொடரப்படுவதற்கான உடனடிக் காரணம் என்ன?
டெல்லியில் நாய் கடித்ததாலும் மற்றும் ரேபிஸ் (Rabies) தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினாலும் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தி அறிக்கையைக் கவனித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தத் தெருநாய்கள் பிரச்சினையைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் நாய் தாக்குதல்களாலும், ரேபிஸ் மரணங்களாலும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், தெருநாய்கள் பிரச்சினை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கு முதலில் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்த அமர்வு டெல்லி முழுவதும் உள்ள நகராட்சி அதிகாரிகளுக்குத் தெருநாய்களைப் பொது இடங்களிலிருந்து அகற்றி காப்பகங்களுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. மேலும், பொதுமக்கள் நாய் தாக்குதல்கள் பற்றிய பயமின்றி சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, அந்த நாய்களை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது என்றும் கூறியது.
இந்த உத்தரவு விலங்கு நல அமைப்புகள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை பெற்றது. இந்த வழிகாட்டுதல்கள் 2023-ஆம் ஆண்டின் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு (Animal Birth Control Rules (ABC Rules)) முரணானது என்று அவர்கள் கூறினர். இந்த விதிகளின்படி, தெருநாய்கள் எந்தப் பகுதியிலிருந்து பிடிக்கப்பட்டதோ, அதே பகுதியிலேயே அவை கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு மீண்டும் விடப்பட வேண்டும்.
பின்னர், இந்த உத்தரவைத் திரும்பப்பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த விஷயம் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான பெரிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் வைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் பின்னர் முந்தைய கடுமையான உத்தரவுகளைத் தளர்த்தி, விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) விதிகளின்கீழ் தற்போதுள்ள, கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கும் கொள்கையையே மீண்டும் நடைமுறைப்படுத்தியது. அதே நேரத்தில், வெறிநாய் கடித்த அல்லது மிகவும் ஆக்ரோஷமான நாய்களை மட்டும் காப்பகங்களில் வைக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது. மேலும், இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.
முந்தைய விசாரணைகள்
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மற்றும் குடியிருப்பு சங்க அமைப்புகளும், குறிப்பாகப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அதிகரித்து வரும் நாய் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டதாக வாதிட்டனர். குழந்தைகளும் முதியவர்களும் தொடர்ந்து பாதிக்கப்படும்போது, இந்தச் சிக்கலை வெறும் விலங்கு நலப் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது என்று அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
விலங்கு நல அமைப்புகள் இதற்கு நேர்மாறான வாதத்தை முன்வைத்தன. தெருநாய்களைப் பெரிய அளவில் அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது நிலையான தீர்வும் அல்ல, பயனுள்ளதும் அல்ல என்று அவர்கள் கூறினர். நாய்கள் பொதுவாகத் தங்களின் எல்லைகளை வகுத்து வாழும் விலங்குகள் என்பதால், ஒரு பகுதியிலிருந்து கருத்தடை செய்யப்பட்ட நாய்களை அப்புறப்படுத்தினால், அந்த இடத்திற்குள் கருத்தடை செய்யப்படாத புதிய நாய்கள் நுழைந்துவிடும். இது காலப்போக்கில் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
நாளடைவில், இந்த வழக்கின் விசாரணையானது நகராட்சி அமைப்புகளும் மாநிலங்களும் எவ்வாறு நாய்களுக்கான கருத்தடை, காப்பகங்கள் மற்றும் தடுப்பூசி கொள்கைகளைச் செயல்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், நீதிமன்றம் மற்றொரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களிலிருந்து தெருநாய்களை அப்புறப்படுத்துமாறு மாநிலங்களுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் (National Highways Authority of India (NHAI)) உத்தரவிட்டது. மேலும், இந்த வளாகங்களைச் சுற்றி வேலி அமைக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டது.
விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் என்ன சொல்கின்றன?
விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள், 2023 (Animal Birth Control Rules (2023)), தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழிகளாகக் கருத்தடை மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி போடுவதை முதன்மைப்படுத்துகின்றன. மேலும், இந்த விதிகளின்படி, கருத்தடை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் அவை பிடிக்கப்பட்ட அதே பகுதியிலேயே கொண்டு போய் விடவேண்டும். ஏனெனில், தெருநாய்கள் இயற்கையாகவே தங்கள் எல்லைகளை வகுத்து வாழும் குணம் கொண்டவை ஆகும்.
இந்த விதிகள் தெரு நாய்களை கண்மூடித்தனமாக கொல்வதற்கோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதற்கோ அனுமதிப்பதில்லை. வெறிநாய்க்கடி நோய் (Rabies) பாதித்த, குணப்படுத்த முடியாத நோய்வாய்ப்பட்ட அல்லது காயம் அடைந்த விலங்குகளுக்கு மட்டுமே கருணைக்கொலை (Euthanasia) செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்த வழக்கு சில அரசியலமைப்புச் சட்டச் சிக்கல்களையும் எழுப்பியுள்ளது. விலங்கு நல அமைப்புகள், உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று குடிமக்களைக் கேட்டுக்கொள்ளும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு-51A(g)-ஐ (அடிப்படை கடமை) ஆதாரமாக நம்பியிருந்தன. அதேநேரத்தில், பொதுமக்கள் மற்றும் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய மனுதாரர்கள், கட்டுப்பாடற்ற தெரு நாய்களின் பெருக்கம் குடிமக்களின் பிரிவு-19 (சுதந்திரமாக நடமாடும் உரிமை) மற்றும் பிரிவு-21 (பாதுகாப்பாக வாழும் உரிமை) ஆகியவற்றின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாக வாதிட்டனர்.
Original Link: Supreme Court to announce ruling on feeding stray dogs: Recalling the case.