இந்திய ஆராய்ச்சி நிதி ஒதுக்கீட்டில் பாலினம், பராமரிப்பு மற்றும் சட்டம் குறித்து... - நபீலா சித்திக்கி

இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழலமைப்பில் நிலவும் கட்டமைப்புரீதியான பாலின இடைவெளிகள்  சரி செய்யப்பட வேண்டும்.


இந்தியாவின் அறிவியல் முன்னேற்ற இலக்குகள் இன்று விண்வெளி ஆய்வு திட்டங்கள், மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சம மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுப்பணிகள் மூலம் தெளிவாக வெளிப்படுகின்றன. இருப்பினும், இதைத் தக்கவைக்கும் அதன் நிறுவனக் கலாச்சாரம் பல ஆராய்ச்சியாளர்களைத் புறக்கணித்துக் கொண்டே செல்கிறது. கல்வித்துறையில் உள்ள பெண்கள், குறிப்பாகத் தங்கள் தொழில் வாழ்க்கையின் நடுப்பகுதியில், தங்களுடன் பணியாற்றும் சக ஆண் பணியாளர்கள் எதிர்கொள்ளாத தொழில் தொடர்பான  பொறுப்புகளையும் குடும்பப் பொறுப்புகளையும் ஒரேநேரத்தில் எதிர்கொள்கின்றனர். இந்த இடைவெளியைச் சரிசெய்ய, ஆராய்ச்சி நிதியுதவி திட்டங்களில் வயது வரம்பில் தளர்வு (age relaxation) வழங்கும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், இது போன்ற  கொள்கைகள் காலப்போக்கில் மாறும்போது, ​​அவற்றின் செயல்திறனைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக மேம்படுத்துவதற்காக அவற்றை இன்னும் கவனமாக  ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தியாவில் பாலின உணர்வுள்ள ஆராய்ச்சிக் கொள்கைக்கான சட்ட அடிப்படை அனுமதி அளிப்பதற்கானதாக மட்டும் இல்லை. அது, முக்கிய சூழல்களில், வழிகாட்டுவதாகவும் உள்ளது. இந்திய அரசியலமைப்பின் 15(3)-வது பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக (special provisions for women and children) சிறப்பு விதிகளை உருவாக்க அரசுக்கு அனுமதி அளிக்கிறது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பொது வாய்ப்புகளில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தப்பிரிவு வழிவகுப்பதாக நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. பிரிவு 16 சமமான வேலைவாய்ப்புகளை (equality of opportunity) உறுதி செய்கிறது. இது போதுமான வாழ்வாதாரத்திற்கான சம உரிமையைப் பற்றிப் பேசும் வழிகாட்டி நெறிமுறைகளுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டும். பெண் ஆராய்ச்சியாளர்கள் பராமரிப்புப் பணிகளுக்காகக் கட்டமைப்புரீதியாகத் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு, நிதி உதவி அளிக்கும் அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குவது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான பொறுப்பும் உள்ளது என்ற, ஒரு வலுவான அரசியலமைப்புரீதியான வாதம் நிலவுகிறது.


பெண்களின் கண்ணியத்திற்குக் பாதிப்பை விளைவிக்கும் நடைமுறைகளைத் கைவிடுதல் எனும் அடிப்படை கடமையான பிரிவு 51A(e), மற்றொரு  கருத்தைச் உருவாக்குகிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டுமே மானியங்களை அடிக்கடி வழங்கும் ஒரு கொள்கை அமைப்பு நடுநிலையானதல்ல. இது அரசியலமைப்புச் சட்டம் நிறுவனங்கள் சரிசெய்யுமாறு கோரும்,  குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறது.


முக்கியப் பிரச்சனை, சட்டத்தில் உள்ள ஒரு இடைவெளியால் ஏற்படுகிறது.


2017-ஆம் ஆண்டின் மகப்பேறு நலன் (திருத்த) சட்டம், பெண்களுக்குக் கிடைக்கும் மிகவும் வலுவான சட்டப் பாதுகாப்பாகத்  இருந்து வருகிறது. 2017-ஆண்டு மேற்கொள்ளபட்ட இந்தத் திருத்தம், இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக நீட்டித்ததுடன், பெரிய நிறுவனங்களில் குழந்தைகள் காப்பக வசதிகளுக்கான விதிகளையும் அறிமுகப்படுத்தியது. கல்வி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு இது முக்கியமானது. ஆனால், முழுமையாக நிறைவேற்றபடவில்லை. முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய அல்லது தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள், இந்தச் சட்டத்தின் தெளிவான வரம்பிற்குள் வராத ஆய்வு உதவித்தொகைகள், திட்டப் பதவிகள் அல்லது ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


தற்போதைய கட்டமைப்புகள், குழந்தைப்பேற்றுக்குப் பிறகு பெண்கள்   மீண்டும் ஆராய்ச்சிக்கே திரும்புகிறார்கள் என்பதையும் புறக்கணிக்கின்றன. மகப்பேறு விடுப்பிலிருந்து பணிக்குத் திரும்பும் பெண்கள், பெரும்பாலும் தடைபட்ட ஆய்வகப் பணிகள், மாறிய ஒத்துழைப்புகள் மற்றும் பொருந்தாத மானியக் கால அட்டவணைகள் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். மேலும், மீண்டும் பணியில் இணைவதற்கோ அல்லது பணிச்சுமையைக் குறைப்பதற்கோ முறையான ஆதரவு குறைவாகவே கிடைக்கிறது. குழந்தை பிறந்த பின்னர் முழுமையான ஈடுபாட்டை  எதிர்பார்ப்பது சாதியமாற்றது. இதற்கு மேற்பார்வையாளர்களின் முறைசாரா நல்லெண்ணத்தைவிட, தெளிவான கொள்கைகளே தேவைப்படுகிறது.

 

இந்தியாவில் தந்தைவழி விடுப்பு குறித்து சட்டம் எதுவும் இல்லை. ஒன்றிய அரசு ஊழியர்கள், 1972-ஆம் ஆண்டின் மத்திய குடிமைப் பணிகள் (விடுப்பு) (Central Civil Services (Leave) விதிகளின்கீழ் 15 நாட்கள் விடுப்பு பெறுகிறார்கள். ஆனால், இது சட்டப்பூர்வமானதல்ல. மாறாக நிர்வாகரீதியானது. மேலும், வெளிநிறுவன மானியங்கள் மூலம் நிதியுதவி பெறும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது போன்ற உரிமை எதுவும் வழங்கபடவில்லை. அதிகமான தாய்வழிப் பாதுகாப்பு, குறைந்தபட்ச தந்தைவழி விடுப்பு ஏற்பாடு ஆகிய இந்தச் சட்டரீதியான சமச்சீரற்ற தன்மை தற்செயலானது அல்ல. இது, நிறுவனங்களும் நிதி அளிக்கும் முகமைகளும் பராமரிப்புப் பணியைப் பற்றி சிந்திக்கும் திறனை  வடிவமைக்கிறது. மேலும், வயது தளர்வு (age relaxation) கொள்கைகள், பராமரிப்பு செயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படாமல், பெண்களை மட்டும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதற்கான ஒரு காரணமாகவும் இது விளங்குகிறது.


ஆராய்ச்சி நிதியுதவியில் பெண்களுக்கு என பிரத்யேக ஆதரவு தேவை என்பதற்கான வாதம், அனுமானங்களால் அல்ல, மாறாக தொடர்ச்சியான தரவுகளால் ஆதரிக்கப்படுகிறது. 2021-22-ஆம் ஆண்டு அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின்படி உயர்கல்வி அமைப்பில் 2021-22-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 16 லட்சம் ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களில் 57% ஆண்கள் மற்றும் 43% பெண்கள் ஆவர். மத்திய பல்கலைக்கழகங்கள்  அனைத்திலும், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும், ஆசிரியர் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமும் (Science and Engineering Research Board (SERB)), பெண் ஆராய்ச்சியாளர்களிடையே விண்ணப்ப விகிதமும், வெற்றி விகிதமும்  குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.


போக்கு தெளிவாக உள்ளது. இருபதுகளின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதிக்குள் முனைவர் பட்டங்களை பெறும் பெண்கள், தங்கள் குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில், முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் பணிகளில் (postdoctoral work) ஈடுபடுகின்றனர். கல்வி உதவித்தொகை சுழற்சிகள், வெளி அழுத்தம், பயணம் மற்றும் குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவது கல்வி சார்ந்துள்ள குடும்பங்களில் சமமாகப் பகிரப்படுவதில்லை. Tata Institute of Social Sciences உள்ளிட்ட நிறுவனங்களில் நடத்தப்பட்ட இரட்டை-தொழில் பேராசிரியர் ஆய்வுகள், பெண்கள் தங்களின் தொழில்முறை நிலை எதுவாக இருந்தாலும் வீட்டு வேலைகளில் அதிக பங்கைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. இதன் விளைவுகள் தெளிவாக தெரிகின்றன: ஆய்வுக் கட்டுரைகள் வெளியீட்டில் தாமதம், ஆராய்ச்சி நிதி (grant) பதிவுகளில் ஏற்படும் இடைவெளிகள் மற்றும் சர்வதேச அளவில் காணப்படும் அங்கீகாரம் மற்றும் தெரிவு குறைதல் ஆகியவை அதில் அடங்கும். இந்தச் சூழலில், வயது வரம்பில் தளர்வு வழங்குவது ஆவணப்படுத்தப்பட்ட கட்டமைப்பு சார்ந்த பாதிப்புக்கு ஒரு பகுதியளவிலான தீர்வாகும்.


நீதிமன்றங்கள் பரிந்துரைத்தவை


2003-ஆம் ஆண்டின் விஜயலட்சுமி vs பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பிறர் (Vijay Lakshmi vs Punjab University And Others) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இங்கு பொருந்துகிறது. சேவை, தொடர்பான விவகாரங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைச் சலுகைகள் குறித்து, நீதிமன்றம் முறையான சமத்துவம் (Formal Equality) மற்றும் உண்மையான/பொருளாதார சமத்துவம் (Substantive Equality) ஆகியவற்றுக்கிடையில் தெளிவான வேறுபாட்டைக் குறிப்பிட்டது.


நிரூபிக்கப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்யும் பட்சத்தில், பெண்களுக்குச் சாதகமான நடவடிக்கைகள் அரசியலமைப்புரீதியாகச் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் கருதியது. இந்தத் வாதம் ஆராய்ச்சி மானியங்களுக்கும் பொருந்தும்: பெண்களுக்கான தகுதிக் கால அவகாசத்தை நீட்டிப்பது என்பது பாரபட்சமான அணுகுமுறை அல்ல, மாறாக அது கட்டமைப்புரீதியான குறைபாடுகளைச் சரிசெய்யும் ஒரு நடவடிக்கையாகும்.


இவை அனைத்தும் தற்போதைய கொள்கை போதுமானதாக உள்ளது குறிக்கப்படவில்லை. அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB) போன்ற அமைப்புகள் வழங்கும் வயது வரம்பு தளர்வு கொள்கைகள், விண்ணப்பிக்கும் கட்டத்தில் தகுதி பெற உதவுகின்றன. ஆனால், ஆராய்ச்சியின் போது  தினமும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சரி செய்யவில்லை. உச்ச வயது வரம்பில் வழங்கப்படும் ஐந்தாண்டு நீட்டிப்பானது, பெண்கள் தாங்கள் தவறவிட்டிருக்கக்கூடிய மானியங்களுக்கு விண்ணப்பிக்கவழிவகுக்கலாம். இருப்பினும், முன்மொழிவு தயாரிப்பின்போது குழந்தைப் பராமரிப்புக்கான ஆதரவையோ, மகப்பேறு விடுப்பின்போது நிறுவனரீதியான ஆதரவையோ அல்லது பணி இடைவேளைக்குப் பிந்தைய மறுபிரவேசத்திற்கான நிதியுதவியையோ இது வழங்குவதில்லை.


இந்தக் கொள்கை யாரை விலக்குகிறது என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு தனியாக குழந்தையை வளர்க்கும் தந்தையோ அல்லது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெற்றோரைக் கவனிக்கும் ஆணோ தனது தொழில் வாழ்க்கையில்   இடையூறுகளைச் சந்திக்கலாம். ஆனால், தற்போதைய கொள்கை அவர்களின் சூழ்நிலையை அங்கீகரிப்பதில்லை. பெண்களுக்கான பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வாதம் இதுவல்ல. மாறாக,   அதிகமாக நிலவி வரும் பின்தங்கிய நிலையைச் சரிசெய்யும் பெண்களுக்கென பிரத்யேகமான விதிகளைத் தக்கவைத்துக்கொண்டு, அவற்றை மேலும் வலுப்படுத்துவதோடு; ஆவணப்படுத்தப்பட்ட பராமரிப்புப் பொறுப்புகளுக்குக் கூடுதல்  ஆதரவை வழங்குமாறு இது வலியுறுத்துகிறது.


இன்னும் ஆழமாகச் சிந்திக்கப்பட்ட கொள்கை எத்தகையதாக இருக்கும்


2020-ஆம் ஆண்டு  தேசியக் கல்விக் கொள்கை, நிறுவன நெகிழ்வுத்தன்மை மற்றும் பேராசிரியர்களின் வாழ்வை சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்குகிறது. ஆனால், இந்த உறுதிமொழிகள் இன்னும் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சி நிதி தொடர்பான கொள்கையாக மாற்றப்படவில்லை. இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யவேண்டிய காலம் கடந்துவிட்டது. நிதி வழங்கும் முகமைகள், ஆவணப்படுத்தப்பட்ட பராமரிப்புக் காலங்களுக்கான கட்டணமில்லா மானிய நீட்டிப்புகள், ஆராய்ச்சிக்கு மீண்டும் திரும்பும் பெண்களுக்கான ஆய்வு உதவித்தொகைகள் மற்றும் பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கான நெகிழ்வான சாதனை அறிக்கை ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும். பல ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுக்கள் இதேபோன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன. இதன் மூலம், பாலினத்திற்கேற்ற ஏற்பாடுகளுடன் பாலினப் பாகுபாடற்ற பராமரிப்பு ஆதரவானது, குறிப்பிட்ட-பாலின விதிகளுடன் இணைந்து, தன்னிச்சையானதாகத் தோன்றாமல் சமத்துவத்தை மேம்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஆராய்ச்சி நிதியுதவித் திட்டங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் வயது வரம்பு தளர்வு, அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலும் அனுபவ ஆதாரங்களாலும் முழுமையாக நியாயப்படுத்தப்படுகிறது. இது சரிசெய்ய முயலும் பாதிப்பு உண்மையானது, ஆவணப்படுத்தப்பட்டதும் தொடர்ந்து நிலைத்திருப்பதுமான ஒன்றாகும். “பாலின சமத்துவம்” (gender neutrality) என்ற பெயரில் இந்த தளர்வை நீக்குவது, ஆதாரங்களால் ஆதரிக்கப்படாத ஒரு தவறான கொள்கை முடிவாகும். அதற்குப் பதிலாக, பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான இது போன்ற ஒரு ஆதரவைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு, பிற பராமரிப்பு பொறுப்புகளை ஏற்ற கொள்பவர்களுக்கும் கூடுதல் சலுகைகளை வழங்கும் பல அடுக்குகள் கொண்ட அணுகுமுறை முக்கியமானதாகும். இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்கள், பெண் ஆய்வாளர்களுக்கு வெறும் மானியங்களுக்கான முறையான அணுகலை மட்டும் வழங்காமல், ஒரு நிலையான ஆராய்ச்சிப் பணியை சாத்தியமாகக்கூடிய கட்டமைப்புச் சூழல்களையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளன. வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வு ஒரு தொடக்கமே; இதை ஒரு முடிவாகக் கருதக் கூடாது. வயது வரம்பு தளர்வு என்பது இந்தப் பயணத்தின் தொடக்கமே. அதையே இறுதியான தீர்வாக கருதக்கூடாது.


நபீலா சித்திக், விநாயகா மிஷனின் சட்டப் பள்ளி, விநாயகா மிஷனின் ஆராய்ச்சி அறக்கட்டளை (டீம்ட் யுனிவர்சிட்டி), சென்னை உதவிப் பேராசிரியராக உள்ளார்.


Original Link: Gender, caregiving, the law in Indian research funding.


Share: