உலக சமத்துவமின்மை ஆய்வகம் மற்றும் இந்தியாவின் அணுகல் (சமத்துவமின்மை) குறியீட்டிலிருந்து பெறப்பட்ட புதிய தரவுகள் கட்டமைப்பு நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன. செல்வந்தர்களிடையே செல்வம் அதிகரித்து வருகிறது. மக்களின் திறன்கள் மற்றும் நல்வாழ்வில் செய்யப்படும் முதலீடு மந்தமடைந்துள்ளது.
சமீபத்திய உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (World Inequality Report (WIR)) வெளியீடு, இந்தியாவின் வளர்ச்சி மாதிரியின் அடிப்படைகளையும் அதன் விநியோக நெருக்கடியையும் மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. Thomas Piketty போன்ற பொருளாதார வல்லுநர்களின் முன்னோடிப் பணிகளை அடிப்படையாகக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களின் வலையமைப்பான பாரிஸை தளமாகக் கொண்ட உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, விநியோகக் கணக்குகளைக் கண்காணிப்பதில் உலகளாவிய தங்கத் தரத்தை பிரதிபலிக்கிறது.
உலக சமத்துவமின்மை அறிக்கை தரவுகள் எந்தவித சமரசமும் அற்றவை. பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அதிக ஏற்றத்தாழ்வுள்ள நாடுகளைப் போலவே, இந்தியாவின் முதல் 1% மக்கள் மொத்த வருமானத்தில் 22–23% சம்பாதிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், அடித்தட்டு மக்களில் பெரும்பாலானோர் இதனால் பெரிதாகப் பயனடையவில்லை.
வாங்கும் சக்தி சமநிலை (purchasing power parity) அடிப்படையில் பார்த்தாலும், அடித்தட்டு மக்களில் 50 சதவீதத்தினர் உலகளாவிய சராசரியைவிடக் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். செல்வப் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாக உள்ளது. நாட்டின் மொத்தச் செல்வத்தில் 40 சதவீதத்தை இப்போது முதல் 1 சதவீதத்தினர் வைத்திருக்கின்றனர்; 1990-களிலிருந்து இந்த பங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. அதே சமயம் அடித்தட்டு மக்களிடம் குறைவான செல்வமே உள்ளது.
முக்கியமாக, உலக சமத்துவமின்மை அறிக்கை ஒரு கட்டமைப்பு ரீதியான அபாய எச்சரிக்கையை அடையாளம் காட்டுகிறது: 'நடுத்தர வர்க்கம்' போதிய வருமானத்தை பெறாததால் பல்வேறு சந்தித்து வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர். இது, அதிக சமத்துவமான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் காணப்படும் 40-45 சதவீதத்தைவிட குறைவான அளவாகும். இது, இந்தியா ஒரு பரந்த நுகர்வோர் வர்க்கத்தை உருவாக்கவில்லை என்பதையும், மாறாக, ஒரு சிறிய, அதீத செல்வந்த உயரடுக்கு மற்றும் ஒரு பரந்த, போராடும் பெரும்பான்மையினரைக் கொண்ட ஒரு இரட்டைப் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
இருப்பினும், எந்தவொரு விளைவு அடிப்படையிலான பகுப்பாய்வுத் தரவும் என்ன நடந்தது என்பதை மட்டுமே விவரிக்க முடியும்; வாய்ப்புகள் ஏன் இவ்வளவு கடுமையாகப் பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய பொருளாதார ஆய்வுகளுக்கான மையம் உருவாக்கியுள்ள 2025-ஆம் ஆண்டு பல்பரிமாண அணுகல் சமத்துவமின்மை குறியீடு உதவக்கூடும்.
வருமானத்தைத் தாண்டி அணுகல் (சமத்துவமின்மை) குறியீடு, ஒவ்வொரு ஆண்டும், ஐந்து முக்கியத் தூண்களில், அணுகலின் “4A”க்களை — அதாவது, கிடைக்கும்தன்மை, கட்டுப்படியாகும் தன்மை, அணுகக்கூடிய தன்மை மற்றும் பொருத்தமான தன்மை ஆகியவற்றை — மதிப்பிடுகிறது. அணுகல் (சமத்துவமின்மை) குறியீட்டின் தரவுகள், வளர்ச்சியைத் திறன்களாக மாற்றும் நிறுவன வழிமுறைகள் கட்டுப்படுத்தப்பட்டே இருக்கும் ஒரு கட்டமைப்பு ரீதியான அணுகல் பங்கீட்டு முறையே என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்தப் பிரச்சனை தற்செயலாக ஏற்படவில்லை. மாறாக கடந்த பத்தாண்டுகளில், தனித்துவமான நிதித் தேர்வுகளின் விளைவாகும். கடந்தகாலத்தை நோக்கிய ஒரு பகுப்பாய்வு, இயற்பியல் உள்கட்டமைப்பு மீதான ஒன்றிய அரசின் மூலதனச் செலவினம் சாதனை அளவுகளுக்கு உயர்ந்திருந்தாலும், மனித மூலதனத்தில் மாநிலத்தின் முதலீடு திறம்பட தேக்கமடைந்துவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.
பட்ஜெட் தரவுகளின்படி, கல்விக்கான மொத்த பொதுச் செலவினம் கடந்த பத்தாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாகவே தொடர்ந்து வருகிறது. இது நீண்டகாலமாக நிர்ணயிக்கப்பட்ட 6 சதவீத இலக்கைவிட மிகக் குறைவான அளவாகும். அதே சமயம், சுகாதாரச் செலவினம் 1.2 முதல் 1.5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. பெயரளவிலான பட்ஜெட் ஒதுக்கீடுகள் (nominal budget allocations) அதிகரித்தபோதிலும், பணவீக்கம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் ஒருங்கிணைந்த அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவை போதுமானதாக இல்லை.
நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) இந்தியா குறியீடு 2023–24, இந்த முரண்பாட்டை புவியியல் கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்த மதிப்பெண்கள் 71-ஆக உயர்ந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக அணுகலுக்கும் இடையே ஒரு ஆழமான வேறுபாடு இருப்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த முரண்பாடு குஜராத் போன்ற அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட மாநிலங்களில் அதிகமாக உள்ளது.
நிதி ஆயோக் தரவுகளின்படி, கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் 79 மதிப்பெண்களுடன் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், பீகார் 57 மதிப்பெண்களுடன் பின்தங்கியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய திறன் இடைவெளியை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு ஓரளவிற்கு குறைந்திருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் (intra-state inequality) ஏற்றத்தாழ்வு அதிகளவில் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்குள் ஏற்படும் வளர்ச்சியின் பலன்கள் நகர்ப்புற மையங்களாலும், மூலதன உரிமையாளர்களாலும் அதிகளவில் கைப்பற்றப்படுகின்றன. இதனால் ஊரகப் பகுதிகள் பின்தங்கி விடுகின்றன.
மற்றொரு உதாரணம் ஊரக-நகர்ப்புறப் பிளவு ஆகும். இது நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும். அணுகல் சமத்துவமின்மை குறியீடு தரவுகளின்படி, 92 சதவீத நகர்ப்புறக் குடும்பங்களுக்குத் தூய்மையான சமையல் எரிபொருள் கிடைக்கும் நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் 49.8 சதவீதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. இதேபோல், நகர்ப்புற இந்தியாவில் 58.9 சதவீதத்தினர் தங்கள் வளாகத்திற்குள் குழாய் நீரைப் பெறும் வசதியைப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22.5 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த அடிப்படைத் தேவை கிடைக்கிறது.
இந்த உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஊரகப் பகுதிகளில் ஏழைகள் உள்ள, குறிப்பாகப் பெண்கள் மீது ஒரு நேரச் சுமையை ஏற்படுத்துகிறது. இது பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 15.7 சதவீதமாக மட்டுமே இருப்பதை வெளிக்காட்டுகிறது. இது ஆசியாவிலேயே மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும். அணுகல் சமத்துவமின்மை குறியீடு (AEI) அமைப்பு சமூகவாரியான போக்குகளை ஆய்வு செய்யும்போது வெளிப்படும் கிடைமட்ட சமத்துவமின்மை (horizontal inequality) அதிகக் கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த இரண்டு அறிக்கைகளின் தொகுப்பு தற்போதைய கொள்கைச் சிந்தனைக்குமுன் ஒரு சவாலை முன்வைக்கிறது. சமத்துவமின்மை என்பது கிடைமட்டமானது மட்டுமல்ல, செங்குத்தானது என்றும், பொதுச் செல்வம் சரிந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் உலக சமத்துவமின்மை அறிக்கை எச்சரிக்கிறது. வளங்களை வழங்குவதற்கான அமைப்புகள் பலவீனமாக இருப்பதும், அவற்றை அரசாங்கம் முறையாக நிர்வகிக்கத் தவறவதும் ஏற்பட்டால், வளங்களை வழங்குவது பெரிய அளவில் உதவாது.
உலக சமத்துவமின்மை அறிக்கை அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டபடி, பெரும் செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் ஒரு மிதமான சொத்து வரி (modest wealth tax), உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.45 சதவீதம் முதல் 1.11 சதவீதம் வரை வருவாயை ஈட்டி, அணுகல் சமத்துவமின்மை குறியீட்டை (AEI) தாண்டி அடையாளம் காணப்பட்ட இடைவெளிகளை நிரப்புவதற்குத் தேவையான பொது முதலீடுகளுக்கு நிதியளிக்கக்கூடும்.
இருப்பினும், பணம் “4As” நோக்கி திசைதிருப்பப்பட வேண்டும் — பள்ளிகள் கட்டப்படுவது மட்டுமல்லாமல், பட்டியல் பழங்குடியினர் (ST) சமூகங்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கவேண்டும்; மருத்துவமனைகள் இருப்பது மட்டுமல்லாமல், ஊரக பகுதிகளில் உள்ள ஏழை குடும்பங்கள் வாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்தியாவின் சமத்துவமின்மைப் பிரச்சினை வெறும் மறுவிநியோகம் (redistribution) மட்டுமல்ல, அரசின் திறன் சார்ந்தது. பொதுச் சொத்துக்களும் நிறுவனங்களும் வலுப்படுத்தப்படாவிட்டால், மக்களுக்கு உதவுவதற்காக விதிக்கப்படும் வரிகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தாது.
மோகன், ஓ. பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தற்போது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வருகை தரும் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வருகை தரும் கல்வி ஆய்வாளராகவும் உள்ளார். சிங், ஜிண்டால் அரசாங்கம் மற்றும் பொதுக் கொள்கைப் பள்ளியில் பயின்று வருகிறார். மேலும்,, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மையத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார்.
Original link:
World Inequality Report 2026: India’s growth model is leaving the ‘middle’ behind.