Showing posts with label inequality. Show all posts
Showing posts with label inequality. Show all posts

இந்தியா மற்றும் உலகளவில் சமத்துவமின்மை, சமீப ஆண்டுகளில் ஏன் மிகக் குறைந்த மாற்றத்தையே காட்டுகிறது? - ரித்விகா பட்கிரி

 2026-ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி, உலகளாவிய வருமானம் மற்றும் செல்வங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. இருப்பினும், இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்றத்தாழ்வு அதிகமாகவே நீடிக்கிறது. இதற்குப் பின்னாலுள்ள முக்கியக் காரணிகள் யாவை?


உலகளாவிய வருமானம் மற்றும் செல்வம் இதுவரை இல்லாத உச்ச அளவை எட்டியுள்ளபோதிலும், ஏற்றத்தாழ்வு இன்றும்அதிகமாகவே நீடிக்கிறது. உலக மக்கள் தொகையில் மிகவும் செல்வந்தர்களான 10 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் ஏறக்குறைய முக்கால் பங்கையும், மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பாதிப் பேர் 2 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளனர் என்று '2026 உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை' தெரிவிக்கிறது.


குறிப்பாக, இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மை உலகிலேயே அதிகமான ஒன்றாகத் தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சமத்துவமின்மை அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதிக வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 10 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 58 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதே, வேளையில் கீழ்மட்ட 50 சதவீதத்தினர் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.


தொடர்ந்து நிலவும் சமத்துவமின்மைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகள் யாவை? செல்வத்தைத் தாண்டி, பாலினம், வாய்ப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றில் சமத்துவமின்மை எவ்வாறு வெளிப்படுகிறது?


2026-ஆம் ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை: யாருக்கு என்ன கிடைக்கும்?


பொருளாதாரம் - உலகளாவிய சமத்துவமின்மை


உலக வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 1820-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், செல்வந்தர்களான 10% பேர் அதில் பாதிக்கும் மேற்பட்டதைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். 2026-ஆம் ஆண்டின் உலக சமத்துவமின்மை அறிக்கை இதையே காட்டுகிறது.


இரண்டு நூற்றாண்டுகளின் சீரற்ற விநியோகம்


1820-ஆம் ஆண்டு முதல், உலக மக்கள்தொகையில் மேல்தட்டு மக்கள் 10% பேர் உலகளாவிய வருமானத்தில் 50%-க்கும் குறைவாக ஒருபோதும் பெற்றதில்லை. கீழ்தட்டு மக்கள் 50% பேர் 15%-க்கும் அதிகமாக ஒருபோதும் பெற்றதில்லை. ஒட்டுமொத்த செல்வம் அதிகரித்து வந்தபோதிலும், இந்தக் கட்டமைப்புரீதியான ஏற்றத்தாழ்வில் பெரிய அளவில் மாறம் ஏற்படவில்லை.


சமத்துவமின்மை குறைந்து வருவதாகக் கூறப்படும் கூற்றுகள் குறித்து அறிக்கை வெளிப்படுத்தும் தகவல்கள் என்ன


'2026-ஆம் ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை' இரண்டு முக்கியக் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துகிறது. முதலாவதாக, உலகளாவிய வருமானம் மற்றும் செல்வம் ஆகியவை வரலாற்றியிலே இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, மக்கள் தொகை வளர்ச்சியைவிடத் தனிநபர் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளது.


1800 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் மக்கள்தொகை ஆண்டுக்குச் சராசரியாக 0.9 சதவீதம் அதிகரித்தபோதிலும், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்தது. கோட்பாட்டளவில், இது இன்றைய உலகம் செல்வம் மிக்கதாக மாறியுள்ளது என்றும், ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு ரூ. 1.32 லட்சம் அல்லது €1,200 வழங்க முடியும் என்றும் கூறுகிறது. இருப்பினும், யதார்த்தம் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.


அறிக்கையின் இரண்டாவது முக்கியக் கண்டுபிடிப்பு, பொருளாதார வளங்கள் தொடர்ந்து சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்பதை காட்டுகிறது. இது பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. உதாரணமாக, உலக மக்கள்தொகையில் முதல் 10 சதவீதத்தினர்  56 கோடி மக்கள் மொத்த உலக வருமானத்தில் 53 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதேசமயம், கடைசி 50 சதவீதத்தினர் (280 கோடி மக்கள்) வெறும் 8 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர்.


இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மேல்தட்டு மக்கள் 1 சதவீதத்தினர், கீழ்தட்டு மக்கள் 50 சதவீதத்தினரை விட 2.5 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றனர். அதே சமயம், மேல்தட்டு மக்கள் 0.1 சதவீதத்தினர், உலக மக்கள்தொகையின் கீழ்தட்டுப் பாதி மக்கள் சம்பாதிக்கும் அளவுக்குச் சமமாக சம்பாதிக்கின்றனர்.


1980-ஆம் ஆண்டு முதல் உலகளாவிய வருமானம் ஆண்டுக்கு 1.1 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வந்தபோதிலும், சமத்துவமின்மை குறைந்துவிட்டது என்ற கூற்றுகளுக்குச் சவால் விடும் வகையில், மிகவும் செல்வந்தர்களான 0.1 சதவிகிதத்தினர் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட அதிக வருமான வளர்ச்சி விகிதங்களைக் கண்டுள்ளனர் என்று தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவிகிதத்தினர் வருமான வளர்ச்சியில் தேக்கநிலையைச் சந்தித்தனர்.


நடுத்தர வருமானக் குழுக்களுக்கு ஏன் அதிக கவனம் தேவைப்படுகிறது?


செல்வப் பகிர்விலும் (wealth distribution) இதே போன்ற ஒரு போக்கு காணப்படுகிறது. உலகின் மொத்த செல்வத்தில் 37 சதவீதத்தை மேல்தட்டு மக்கள் 1 சதவீதம் பேர் கொண்டுள்ளனர். அதே, சமயம் கீழ்தட்டு மக்கள் 50 சதவீதம் பேருக்கு  2 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.


வருமான ஏற்றத்தாழ்வுக்கும் செல்வ ஏற்றத்தாழ்வுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம். வருமான ஏற்றத்தாழ்வு (income inequality) என்பது ஒரு நாட்டின் மக்களிடையே குடும்ப அல்லது தனிநபர் வருமானத்தின் (சம்பாத்தியம், ஊதியம், முதலீடுகள்) பகிர்வில் உள்ள வேறுபாட்டை அளவிடுகிறது. அதே, சமயம் செல்வ ஏற்றத்தாழ்வு (wealth inequality) என்பது திரட்டப்பட்ட சொத்துக்களின் (நிகர மதிப்பு, சொத்து, சேமிப்பு) பகிர்வில் உள்ள வேறுபாட்டை அளவிடுகிறது. இவை இரண்டுமே பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கின்றன.


இருப்பினும், அதிக வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல. 1820-ஆம் ஆண்டு முதல், உலக மக்கள்தொகையில் முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைத் தொடர்ந்து பெற்றுள்ளனர் என்றும், அதே சமயம் கீழ்மட்ட மக்கள் 50 சதவீதத்தினர் 15 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றதில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


ஆனால், நடுத்தர வருமானக் குழுக்களின் மாறிவரும் நிலை  கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நடுத்தர வருமானம்  உள்ள 40 சதவீதத்தினரின் வருமானப் பங்கு 1920 மற்றும் 1980-க்கு இடையில் உயர்ந்தது; அதைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு வரை அந்தப் பங்கு சரிந்து. அதன் பிறகு ஒரு பகுதி சிறிதளவு அதிகரித்தது. தரவுகள் குறிப்பிடும் வருமான ஏற்றத்தாழ்வின் வரலாற்றுச் சரிவானது,   நடுத்தர வர்க்கத்தினருக்கே பயனளித்துள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினருக்கு அது பயனளிக்கவில்லை.


ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகள் ஏன் அதிக சமத்துவத்துடன் இருக்கின்றன


பிரெஞ்சுப் பொருளியலாளர் தாமஸ் பிக்கெட்டி, தனது 'சமத்துவத்தின் ஒரு சுருக்கமான வரலாறு' (2022) என்ற நூலில், நடுத்தர வருமானம்  கொண்ட மக்கள்  40 சதவீதத்தினரைக் குறிப்பிடுவதற்கு "பரம்பரை நடுத்தர வர்க்கம்" (patrimonial middle class) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். சமத்துவமின்மைக் குறைப்புகளால் இந்தக் குழுவினர் எவ்வாறு பயனடைந்தனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி, முதலாம் உலகப் போருக்கு முந்தைய செல்வப் பங்கீட்டை ஆராய்வதாகும்.


1900-களின் முற்பகுதியில், முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய செல்வத்தில் 85 சதவீதத்தை வைத்திருந்தனர். தற்போது, அந்தப் பங்கு 50-60 சதவீதமாகக் குறைந்திருந்தாலும் அது இன்னும் கவலைக்குரிய வகையில் அதிகமாகவே உள்ளது. இது ஒரு கணிசமான குறைப்பைக் காட்டுகிறது. இது, காலப்போக்கில் செல்வத்தில் தங்கள் பங்கை அதிகரித்துக் கொண்ட, நடுதர வருமானம் உள்ள 40 சதவீதத்தினருக்கோ அல்லது ‘மேல்-நடுத்தர’ வர்க்கத்தினருக்கோ பயனளித்துள்ளது.


பிக்கெட்டியும் (Piketty) உலக சமத்துவமின்மை அறிக்கையும், ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகள் அதிக சமத்துவத்துடன் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், இது எப்போதும் உண்மையாக இருந்ததில்லை. நலத்திட்டங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம், பொதுச் சேவைகள், மற்றும் தொலை நோக்க பார்வை கொண்ட வரிவிதிப்பு போன்ற அரசால் வழிநடத்தப்பட்ட கொள்கைகளின் மூலம், 20-ஆம் நூற்றாண்டில் முன்னேறிய பொருளாதாரங்களிடையே ஒப்பீட்டு சமத்துவம் குறிப்பிடத்தக்கதாக மாறியது.


மறுபங்கீட்டுக் கொள்கைகள் சமத்துவமின்மையைக் குறைக்க உதவியபோதிலும், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்குக் கிடைத்த முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதே பிக்கெட்டியின்  முக்கிய வாதமாக உள்ளது.


இந்தியாவின்  ஏற்றத்தாழ்வுக்குப் பின்னால் உள்ள காரணிகள்


இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள்தொகையில் முதல் 1 சதவீதம் பேர் 40 சதவீத செல்வத்தையும், முதல் 10 சதவீதம் பேர் 65 சதவீத செல்வத்தையும் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்தியாவை உலகின் மிகவும் சமத்துவமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்க வைக்கிறது. மேலும், சமத்துவமின்மையில் குறைப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. வருமான சமத்துவமின்மையைப் பொறுத்தவரை, முதல் 10 சதவீதம் பேர் மொத்த வருமானத்தில்  58 சதவீதத்தையும், கடைசி 50 சதவீதம் பேர் வெறும் 15 சதவீதத்தையும் ஈட்டுகின்றனர்.


இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுக்கு, தரமான கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் இல்லாமை, பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு உருவான சேவைத் துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.


"செல்வத்தின் நிதியமயமாக்கல்" (financialisation of wealth) அல்லது வர்த்தகம் மற்றும் முதலீடுகள் போன்ற செயல்பாடுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது—மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் செல்வப் பங்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில், மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் வருமானப் பங்கு 1922-ஆம் ஆண்டில்   13 சதவீதமாக இருந்தது என்று வரலாற்றுத் தரவுகள் காட்டுகின்றன. 1950-கள் முதல் 1980-களின் முற்பகுதி வரையிலான காலத்தில் இந்தப்பங்கு குறைந்திருந்தாலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரித்து. 2022-ஆம் ஆண்டில் 22.6 சதவீதம் என்ற இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது.


நிலம், பாலினம் மற்றும் காலநிலை


இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு  முக்கிய அம்சம் நில ஏற்றத்தாழ்வும் (land inequality) நிலப் பிரிவினையுமாகும் (land fragmentation). இந்தியாவில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களில்  46 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக உள்ளனர். அதே, சமயம் மேல்தட்டு மக்கள் 10 சதவீதத்தினர் மொத்த கிராமப்புற நிலத்தில் 44 சதவீதத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளனர்.


பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் கிராமங்களில் நில இல்லாத மக்களின் விகிதம் அதிகமாகக் காணப்படுவதாக 2026-ஆம் ஆண்டின் சமத்துவமின்மை அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், கேரளா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் விதிவிலக்குகளாகக் கருதப்படுகின்றன. அங்கு, சமத்துவமின்மையைக் குறைப்பதில் நிலச் சீர்திருத்தங்கள் முக்கியப் பங்கு வகித்தன என்று வாதிடலாம்.


பரவலான அனுமானங்களுக்கு மாறாக, சந்தைகளை எளிதில் அணுகுவது சமத்துவமின்மையைக் குறைத்துவிடாது. நகரங்கள், சாலைகள் மற்றும் பெருநகரங்களுக்கு அருகில் இருப்பது, வரலாற்றுரீதியாக வேரூன்றிய சமத்துவமின்மைகளை மாற்றுவதற்குப்  போதுமானதாக இருந்ததில்லை.


சமத்துவமின்மைக்கு பாலினம் மற்றும் சமூகப் பரிமாணங்களும் உண்டு. உதாரணமாக, இந்தியாவில் பெண்கள் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள், தொழிலாளர் வருமானம், செல்வம் மற்றும் நில உரிமையில் வரலாற்று ரீதியான சமத்துவமின்மை, மற்றும் வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளின் சமமற்ற சுமை ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். இதேபோல், ஆதிக்கக் குழுக்களுடன் ஒப்பிடும்போது ​​மற்ற விளிம்புநிலை மற்றும் நலிவடைந்த குழுக்கள் வளங்களையும் வருமானத்தையும் சமமற்ற முறையில் அணுகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


மேலும், காலநிலை மாற்றம் இந்த ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துகிறது. மிகவும் ஏழ்மையானவர்கள் பெரும்பாலும் குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் தண்ணீர் நெருக்கடி, வெப்ப அழுத்தம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற காலநிலை தொடர்பான அதிர்ச்சிகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


சமத்துவமின்மையை எவ்வாறு குறைப்பது (How to reduce inequality)


பயனுள்ள தலையீடுகள் மூலம் சமத்துவமின்மையைக் குறைக்க முடியும் என்று அந்த அறிக்கை வாதிடுகிறது. அவற்றுள் சில:


1) கல்வி மற்றும் சுகாதாரத்தில் பொது முதலீட்டை அதிகரித்தல்.


2) பணப் பரிமாற்றம், ஓய்வூதியம் மற்றும் வேலையின்மை உதவித்தொகை போன்ற மறுபங்கீட்டுத் திட்டங்கள்.


3) வேலை மற்றும் வாய்ப்புகளின் சமமற்ற பங்கீட்டை உருவாக்கும் கட்டமைப்புத் தடைகளை அகற்றுதல்.


4) ஒரு நியாயமான வரி முறையை உருவாக்குதல் போன்ற பணிகளாகும்.


மேல்தட்டு வர்க் மக்கள் அதிக விகிதத்தில் வரி செலுத்தும் முற்போக்கு வரிவிதிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் காலநிலை தகவமைப்பு ஆகியவற்றில்  அதிக மாற்றங்களைக் கொண்டுவர உதவும். இருப்பினும், "செல்வந்தர்களுக்கு வரி விதிப்பது" குறித்த விவாதங்கள், அது போன்ற நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை குறைத்து, மூலதன வெளியேற்றத்தைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளாகவே  சுருக்கப்படுகின்றன.


எனவே, வெறும் சமத்துவமின்மையைக் குறைப்பதைவிட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் வறுமையை ஒழிப்பதே மிகவும் முக்கியமானது என்று   வாதிடப்படுகிறது. இருப்பினும், இவை இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையின் அளவை உண்மை என்று நிரூபிக்கின்றன. உதாரணமாக, சஜித் பாய் மற்றும் அமல் வாட்ஸ் ஆகியோரின் 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று, “1% இந்தியர்கள் 45% விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். 2.6% இந்தியர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்கின்றனர், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் (Unified Payment Interface (UPI)) நடைபெறும் 44% டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 6.5% பயனர்களே காரணமாக உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.


எனவே, “பரம்பரைச் சொத்து மறுபகிர்வு” (redistribution of inheritance) போன்ற ஒரு தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடுமையான சமத்துவமின்மை நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று பிக்கெட்டி வாதிட்டுள்ளார்.


Original article : Why inequality in India and the world shows little movement in recent years. -Ritwika Patgiri

Share:

இந்தியாவில் முதல் 10% ஊரகப் பகுதி குடும்பங்கள் 44% நிலத்தை சொந்தமாக வைத்துள்ளனர்: 'உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின்' ஆய்வு முடிவுகள் பற்றி… -ஆஞ்சல் மேகஸின்

 இந்திய நில சமத்துவமின்மை (land inequality) குறித்த ஆய்வு, மேல்தட்டு 10% மக்கள் 44% நிலத்தை சொந்தமாக வைத்துள்ளனர். அதே, சமயம் 46% ஊரக பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்கள் நிலமற்றவர்களாக இருக்கின்றனர். இதில் பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நில சமத்துவமின்மை அதிகமாகக் காணப்படுகிறது.


பாரிஸ் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட உலக சமத்துவமின்மை ஆய்வகம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் ஊரக பகுதிகளில் நில உரிமை மிகவும் சீரற்ற வகையில் உள்ளது. 46% குடும்பங்கள் நிலமற்றவர்களாக இருக்கும் வேளையில், முதல் 10% குடும்பங்கள் மொத்த நிலப்பரப்பில் 44%-ஐ சொந்தமாக வைத்துள்ளனர். இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் பெரிய நில உரிமையாளர்களே நில உரிமையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மிகப்பெரிய நில உரிமையாளர் சராசரியாக அந்த பகுதியின் 12% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதேநேரத்தில், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில், ஒரே நில உரிமையாளர் பாதிக்கும் மேற்பட்ட நிலத்தை வைத்திருக்கும் ஊரக பகுதிகளின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்று 'இந்தியாவில் நில சமத்துவமின்மை: இயல்பு, வரலாறு மற்றும் சந்தைகள்' என்ற தலைப்பிலான  ஆய்வறிக்கை கூறுகிறது.


பொருளாதார நிபுணர்களான நிதின் குமார் பார்தி, டேவிட் பிளேக்ஸ்லீ மற்றும் சம்ரீன் மாலிக் ஆகியோர் இணைந்து எழுதிய ஆய்வறிக்கை, முதல் 10%, 5% அல்லது 1% என்ற அளவில் நில உடைமையாளர்கள் அதிக அளவிலான நிலப் பகுதிகளை வைத்துள்ளனர். பீகார் மற்றும் கேரளா மாநிலங்கள் மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து நிற்கின்றன. ஒட்டுமொத்தமாக, முதல் 10% ஊரகப் பகுதி குடும்பங்கள் மொத்த நிலப்பரப்பில் 44% பகுதியை வைத்திருக்கின்றன. அதேபோல், மேல் மட்டதில் உள்ள 5% குடும்பங்கள் 32% நிலத்தையும், மேல் மட்டதில் 1% குடும்பங்கள் 18% நிலத்தையும் வைத்திருக்கின்றன என்று கூறுகிறது.


இந்த ஆய்வறிக்கை, 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பின் (Socio-Economic Caste Census) முடிவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, இந்தியாவின் 10 பெரிய மாநிலங்களான பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 270,000 ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த 65 கோடி மக்களை உள்ளடக்கியது. இது இந்தியாவின் ஊரக பகுதிகளில் இருக்கும் மக்கள்தொகையில் 75% பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


மாநிலங்களுக்கிடையேயான நில சமத்துவமின்மை (Land inequality among states)


மிகவும் வசதிவாய்ந்த குடும்பத்தினரிடம் உள்ள நிலத்தின் பங்கு, உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 7.3 சதவீதமாகவும், பீகாரில் அதிகபட்சமாக 20.1 சதவீதமாகவும் உள்ளது.  வேளாண்மை அதிகமாக உள்ள நான்கு மாநிலங்களில், மத்தியப் பிரதேசம் (51%) மற்றும் பீகாரை (59%) ஒப்பிடுகையில், ராஜஸ்தான் (34%) மற்றும் உத்தரப் பிரதேசத்தில் (39%) நிலமற்றவர்களின் விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. மிகவும் வளர்ச்சியடைந்த வணிக வேளாண் துறைக்குப் பெயர் பெற்ற பஞ்சாபில், நிலமற்றவர்களின் விகிதம் 73% என்ற அளவில் அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



நில உரிமை முறை (Land ownership pattern)


ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களில் 46% நிலமற்றவர்களாக இருக்கும் நிலையில், நிலம் உள்ள குடும்பங்களில் ஒரு நிலத்தின் சராசரி அளவு 6.2 ஹெக்டேராக உள்ளது. இருப்பினும், 0-1 ஹெக்டேர் நிலம் உள்ள குடும்பங்கள் 28.9% நிலத்தையும், 1-2 ஹெக்டேர் நிலம் உள்ள குடும்பங்கள் 48.6% நிலத்தையும் வைத்துள்ளனர். ஊரகப்பகுதியில் மிகப்பெரிய நில உரிமையாளர் வைத்திருக்கும் நிலத்தின் சராசரிப் பங்கு 12.4% ஆகும். அதே, சமயம் 3.8% ஊரகப்பகுதியில் மிகப்பெரிய நில உரிமையாளர் 50%-க்கும் அதிகமான நிலத்தை வைத்துள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.


வேளாண்மைக்கு ஏற்ற தன்மை மற்றும் சந்தை அணுகல் ஆகியவை இணைந்து நிலச் சமமின்மையில் காணப்படும் மாறுபாட்டில் 18.3% வரை பங்களிக்கின்றன என்றும், அதிக வேளாண்மை பணிகள் நடைபெறும் பகுதிகளில் அதிக நில சமத்துவமின்மை நிலவுகிறது என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. "மிகவும் சாதகமான வேளாண்-சூழலியல் நிலைமைகளைக் கொண்ட ஊரகப் பகுதிகளில் நிலக் குவிப்பு அதிகமாக உள்ளது. இது பெரிய நில உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தின் பங்கை அதிகரிக்கிறது ஆய்வறிக்கை  தெரிவித்துள்ளது. பட்டியல் சாதி (SC) மக்கள் தொகை அதிகமாக உள்ள இடங்களில், சமத்துவமின்மையால் மட்டுமே ஏற்படும் சமத்துவமின்மையின் அளவுகள்   அதிகமாக உள்ளன என்றும் ஆய்வறிக்கை  கூறியது.


நகரங்கள், சாலைகள் மற்றும் சந்தைகளுக்கு அருகில் இருப்பது, ஆழமாக வேரூன்றிய நில சமத்துவமின்மையின் வடிவங்களை மாற்றுவதற்குப் போதுமானதாகத் தெரியவில்லை என்பதால், சந்தை அணுகல் மாறிகளும் நில சமத்துவமின்மையைக் குறிக்கின்றன என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. நகரங்கள், பெரிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் நிலையங்களுக்கு மிக அருகில் உள்ள ஊரகப் பகுதிகளில் சமத்துவமின்மை நிலவி வருவதாக சுட்டிக்காட்டியது. சாலைகள் மற்றும் இரயில் நிலையங்களிலிருந்து (2.5 கி.மீ.) உள்ள தூரத்தைவிட, நகரங்களிலிருந்து (10 கி.மீ.) அதிக தூரம் வரை சமத்துவமின்மை அதிகரித்திருப்பதை நாங்கள் காண்கிறோம். மேலும், வங்கி அல்லது வேளாண் சந்தையைக் (mandi) கொண்ட கிராமங்களில் சமத்துவமின்மை அதிகமாக உள்ளது. ஆனால், அருகிலுள்ள ஊரகப் பகுதிக்கும் இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது.


நிலப் பகிர்வில் வரலாற்று நிறுவனங்களின் தாக்கம் "வலுவாகவும் தொடர்ச்சியாகவும்" உள்ளது. மேலும், முன்பு அரச குடும்பங்களால் ஆளப்பட்ட அரசுகளான "சமஸ்தானங்களில்" (princely states)  உள்ள ஊரகப்பகுதிகள், நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த பகுதிகளைக் காட்டிலும், சராசரியாக அனைத்துக் குடும்பங்களிடையேயும் குறைந்த அளவிலான நில ஏற்றத்தாழ்வைக் காட்டுகின்றன என்றும் ஆய்வறிக்கை குறிப்பிட்டது. சமஸ்தானங்களுக்குள் நில சமத்துவமின்மை 2-3 சதவீதப் புள்ளிகள் குறைவாகவும், ஜமீன்தாரி முறை உள்ள இடங்களில் 3-4 சதவீதப் புள்ளிகள் அதிகமாகவும் உள்ளது. ஏனெனில்,  நில உரிமையாளர்களுக்கான கினி (Gini) அளவைக் மட்டும் பார்க்கும்போது குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் காணப்படவில்லை. இதற்கு மாறாக, நிலக்கிழார் அதிகமாக உள்ள பகுதிகள், சிறு உழவர்களின் பங்கில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைவு மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பிரபுக்களின் குறிப்பிடத்தக்க இருப்பு ஆகியவற்றால், அதிக அளவிலான நில சமத்துவமின்மை நிலவி வருவதாக  ஆய்வறிக்கை சுட்டிக்காட்டிகிறது.


Original article : Top 10% rural households own 44% land in India: World Inequality Lab study findings, explained. -Aanchal Magazine

Share:

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: இந்தியாவின் வளர்ச்சி மாதிரி நடுத்தர வர்க்கத்தினரை பின்தங்க வைக்கிறது. -தீபன்ஷு மோகன் மற்றும் அங்குர் சிங்

உலக சமத்துவமின்மை ஆய்வகம் மற்றும் இந்தியாவின் அணுகல் (சமத்துவமின்மை) குறியீட்டிலிருந்து பெறப்பட்ட புதிய தரவுகள் கட்டமைப்பு நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன. செல்வந்தர்களிடையே செல்வம் அதிகரித்து வருகிறது. மக்களின் திறன்கள் மற்றும் நல்வாழ்வில் செய்யப்படும் முதலீடு மந்தமடைந்துள்ளது.


சமீபத்திய உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (World Inequality Report (WIR)) வெளியீடு, இந்தியாவின் வளர்ச்சி மாதிரியின் அடிப்படைகளையும் அதன் விநியோக நெருக்கடியையும் மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. Thomas Piketty போன்ற பொருளாதார வல்லுநர்களின் முன்னோடிப் பணிகளை அடிப்படையாகக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களின் வலையமைப்பான பாரிஸை தளமாகக் கொண்ட உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, விநியோகக் கணக்குகளைக் கண்காணிப்பதில் உலகளாவிய தங்கத் தரத்தை பிரதிபலிக்கிறது.


உலக சமத்துவமின்மை அறிக்கை தரவுகள் எந்தவித சமரசமும் அற்றவை. பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அதிக ஏற்றத்தாழ்வுள்ள நாடுகளைப் போலவே, இந்தியாவின் முதல் 1% மக்கள் மொத்த வருமானத்தில் 22–23% சம்பாதிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், அடித்தட்டு மக்களில் பெரும்பாலானோர் இதனால் பெரிதாகப் பயனடையவில்லை.


வாங்கும் சக்தி சமநிலை (purchasing power parity) அடிப்படையில் பார்த்தாலும், அடித்தட்டு மக்களில் 50 சதவீதத்தினர் உலகளாவிய சராசரியைவிடக் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். செல்வப் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாக உள்ளது. நாட்டின் மொத்தச் செல்வத்தில் 40 சதவீதத்தை இப்போது முதல் 1 சதவீதத்தினர் வைத்திருக்கின்றனர்; 1990-களிலிருந்து இந்த பங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. அதே சமயம் அடித்தட்டு மக்களிடம் குறைவான செல்வமே உள்ளது.

முக்கியமாக, உலக சமத்துவமின்மை அறிக்கை ஒரு கட்டமைப்பு ரீதியான அபாய எச்சரிக்கையை அடையாளம் காட்டுகிறது: 'நடுத்தர வர்க்கம்' போதிய வருமானத்தை பெறாததால் பல்வேறு சந்தித்து வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர். இது, அதிக சமத்துவமான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் காணப்படும் 40-45 சதவீதத்தைவிட குறைவான அளவாகும். இது, இந்தியா ஒரு பரந்த நுகர்வோர் வர்க்கத்தை உருவாக்கவில்லை என்பதையும், மாறாக, ஒரு சிறிய, அதீத செல்வந்த உயரடுக்கு மற்றும் ஒரு பரந்த, போராடும் பெரும்பான்மையினரைக் கொண்ட ஒரு இரட்டைப் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறது என்பதை வெளிக்காட்டுகிறது.


இருப்பினும், எந்தவொரு விளைவு அடிப்படையிலான பகுப்பாய்வுத் தரவும் என்ன நடந்தது என்பதை மட்டுமே விவரிக்க முடியும்; வாய்ப்புகள் ஏன் இவ்வளவு கடுமையாகப் பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய பொருளாதார ஆய்வுகளுக்கான மையம் உருவாக்கியுள்ள 2025-ஆம் ஆண்டு பல்பரிமாண அணுகல் சமத்துவமின்மை குறியீடு உதவக்கூடும்.


வருமானத்தைத் தாண்டி அணுகல் (சமத்துவமின்மை) குறியீடு, ஒவ்வொரு ஆண்டும், ஐந்து முக்கியத் தூண்களில், அணுகலின் “4A”க்களை — அதாவது, கிடைக்கும்தன்மை, கட்டுப்படியாகும் தன்மை, அணுகக்கூடிய தன்மை மற்றும் பொருத்தமான தன்மை ஆகியவற்றை — மதிப்பிடுகிறது. அணுகல் (சமத்துவமின்மை) குறியீட்டின் தரவுகள், வளர்ச்சியைத் திறன்களாக மாற்றும் நிறுவன வழிமுறைகள் கட்டுப்படுத்தப்பட்டே இருக்கும் ஒரு கட்டமைப்பு ரீதியான அணுகல் பங்கீட்டு முறையே என்பதை வெளிப்படுத்துகிறது.


இந்தப் பிரச்சனை தற்செயலாக ஏற்படவில்லை. மாறாக கடந்த பத்தாண்டுகளில், தனித்துவமான நிதித் தேர்வுகளின் விளைவாகும். கடந்தகாலத்தை நோக்கிய ஒரு பகுப்பாய்வு, இயற்பியல் உள்கட்டமைப்பு மீதான ஒன்றிய அரசின் மூலதனச் செலவினம் சாதனை அளவுகளுக்கு உயர்ந்திருந்தாலும், மனித மூலதனத்தில் மாநிலத்தின் முதலீடு திறம்பட தேக்கமடைந்துவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.


பட்ஜெட் தரவுகளின்படி, கல்விக்கான மொத்த பொதுச் செலவினம் கடந்த பத்தாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாகவே தொடர்ந்து வருகிறது. இது நீண்டகாலமாக நிர்ணயிக்கப்பட்ட 6 சதவீத இலக்கைவிட மிகக் குறைவான அளவாகும். அதே சமயம், சுகாதாரச் செலவினம் 1.2 முதல் 1.5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. பெயரளவிலான பட்ஜெட் ஒதுக்கீடுகள் (nominal budget allocations) அதிகரித்தபோதிலும், பணவீக்கம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் ஒருங்கிணைந்த அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவை போதுமானதாக இல்லை.


நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) இந்தியா குறியீடு 2023–24, இந்த முரண்பாட்டை புவியியல் கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்த மதிப்பெண்கள் 71-ஆக உயர்ந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக அணுகலுக்கும் இடையே ஒரு ஆழமான வேறுபாடு இருப்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த முரண்பாடு குஜராத் போன்ற அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட மாநிலங்களில் அதிகமாக உள்ளது.


நிதி ஆயோக் தரவுகளின்படி, கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் 79 மதிப்பெண்களுடன் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், பீகார் 57 மதிப்பெண்களுடன் பின்தங்கியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய திறன் இடைவெளியை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு ஓரளவிற்கு குறைந்திருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் (intra-state inequality) ஏற்றத்தாழ்வு அதிகளவில் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்குள் ஏற்படும் வளர்ச்சியின் பலன்கள் நகர்ப்புற மையங்களாலும், மூலதன உரிமையாளர்களாலும் அதிகளவில் கைப்பற்றப்படுகின்றன. இதனால் ஊரகப் பகுதிகள் பின்தங்கி விடுகின்றன.


மற்றொரு உதாரணம் ஊரக-நகர்ப்புறப் பிளவு ஆகும். இது நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும். அணுகல் சமத்துவமின்மை குறியீடு தரவுகளின்படி, 92 சதவீத நகர்ப்புறக் குடும்பங்களுக்குத் தூய்மையான சமையல் எரிபொருள் கிடைக்கும் நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் 49.8 சதவீதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. இதேபோல், நகர்ப்புற இந்தியாவில் 58.9 சதவீதத்தினர் தங்கள் வளாகத்திற்குள் குழாய் நீரைப் பெறும் வசதியைப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22.5 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த அடிப்படைத் தேவை கிடைக்கிறது.


இந்த உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஊரகப் பகுதிகளில் ஏழைகள் உள்ள, குறிப்பாகப் பெண்கள் மீது ஒரு நேரச் சுமையை ஏற்படுத்துகிறது. இது பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 15.7 சதவீதமாக மட்டுமே இருப்பதை வெளிக்காட்டுகிறது. இது ஆசியாவிலேயே மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும். அணுகல் சமத்துவமின்மை குறியீடு (AEI) அமைப்பு சமூகவாரியான போக்குகளை ஆய்வு செய்யும்போது வெளிப்படும் கிடைமட்ட சமத்துவமின்மை (horizontal inequality) அதிகக் கவலை அளிப்பதாக உள்ளது.


இந்த இரண்டு அறிக்கைகளின் தொகுப்பு தற்போதைய கொள்கைச் சிந்தனைக்குமுன் ஒரு சவாலை முன்வைக்கிறது. சமத்துவமின்மை என்பது கிடைமட்டமானது மட்டுமல்ல, செங்குத்தானது என்றும், பொதுச் செல்வம் சரிந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் உலக சமத்துவமின்மை அறிக்கை எச்சரிக்கிறது. வளங்களை வழங்குவதற்கான அமைப்புகள் பலவீனமாக இருப்பதும், அவற்றை அரசாங்கம் முறையாக நிர்வகிக்கத் தவறவதும் ஏற்பட்டால், வளங்களை வழங்குவது பெரிய அளவில் உதவாது.


உலக சமத்துவமின்மை அறிக்கை அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டபடி, பெரும் செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் ஒரு மிதமான சொத்து வரி (modest wealth tax), உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.45 சதவீதம் முதல் 1.11 சதவீதம் வரை வருவாயை ஈட்டி, அணுகல் சமத்துவமின்மை குறியீட்டை (AEI) தாண்டி அடையாளம் காணப்பட்ட இடைவெளிகளை நிரப்புவதற்குத் தேவையான பொது முதலீடுகளுக்கு நிதியளிக்கக்கூடும்.


இருப்பினும், பணம் “4As” நோக்கி திசைதிருப்பப்பட வேண்டும் — பள்ளிகள் கட்டப்படுவது மட்டுமல்லாமல், பட்டியல் பழங்குடியினர் (ST) சமூகங்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கவேண்டும்; மருத்துவமனைகள் இருப்பது மட்டுமல்லாமல், ஊரக பகுதிகளில் உள்ள ஏழை குடும்பங்கள் வாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்தியாவின் சமத்துவமின்மைப் பிரச்சினை வெறும் மறுவிநியோகம் (redistribution) மட்டுமல்ல, அரசின் திறன் சார்ந்தது. பொதுச் சொத்துக்களும் நிறுவனங்களும் வலுப்படுத்தப்படாவிட்டால், மக்களுக்கு உதவுவதற்காக விதிக்கப்படும் வரிகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தாது.


மோகன், ஓ. பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தற்போது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வருகை தரும் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வருகை தரும் கல்வி ஆய்வாளராகவும் உள்ளார். சிங், ஜிண்டால் அரசாங்கம் மற்றும் பொதுக் கொள்கைப் பள்ளியில் பயின்று வருகிறார். மேலும்,, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மையத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார்.

Original link:

World Inequality Report 2026: India’s growth model is leaving the ‘middle’ behind.


Share: