இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனத்தைச் சீரமைப்பதற்கான மசோதா ஏன் விமர்சனங்களை எழுப்பியுள்ளது?

 இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute(ISI)) 1931-ம் ஆண்டில் புகழ்பெற்ற புள்ளியியல் நிபுணர் பி.சி. மஹலனோபிஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இதன் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.


இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தைச் சீரமைக்க முற்படும் இந்த மசோதாவின் வரைவு, பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டபோது கடும் விமர்சனங்களை (குறிப்பாக, சீரமைக்கப்படவிருக்கும் அந்த நிறுவனத்தின் உறுப்பினர்களிடமிருந்தே) எதிர்கொண்டது. அதன்பிறகு ஏறக்குறைய ஓராண்டு கழித்து, 'இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதா-2026' (Indian Statistical Institute Bill) மக்களவையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) அறிமுகப்படுத்தப்பட்டது.


கடந்த ஆண்டு செப்டம்பரில், வெளியிடப்பட்ட மத்திய அரசின் 'இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதா-2025' (Indian Statistical Institute Bill) வரைவு, இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை பரிந்துரைத்தது.


அப்போது, ​​கொல்கத்தா வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். விரிவான ஆலோசனைகளை நடத்தாமல் இந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என்று அவர்களில் பலர் மீண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.


இந்தியப் புள்ளியியல் நிறுவனம் இதுவரை எவ்வாறு செயல்பட்டு வந்துள்ளது?


கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ISI) 1931-ம் ஆண்டில் பி.சி. மஹலனோபிஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இது முதலில் பிரசிடென்சி கல்லூரியில் (Presidency College) ஒரு புள்ளியியல் ஆய்வகமாகத் தொடங்கப்பட்டது. பின்னர், 1860-ம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (Societies Registration Act) கீழும், அதன்பிறகு 1961-ம் ஆண்டின் மேற்கு வங்க சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (West Bengal Societies Registration Act) கீழும் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது.


1959-ம் ஆண்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் இது 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்' (Institute of National Importance) என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், அந்நிறுவனத்திற்குப் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தையும், மத்திய அரசின் நிதியுதவி மற்றும் தணிக்கைக்குத் தகுதிபெறும் உரிமையையும் அது பெற்றது. இருப்பினும், இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், இது தொடர்ந்து ஒரு பதிவுசெய்யப்பட்ட சங்கமாகவே செயல்பட்டு வந்தது.


கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் தேஜ்பூர் ஆகிய இடங்களில் மையங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், புள்ளியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளை வழங்குகிறது. மேலும், பல ஆராய்ச்சிப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.


இதன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாக 33 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் செயல்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், மத்திய அரசின் ஆறு பிரதிநிதிகள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியாத விஞ்ஞானிகள் ஆகியோர் அடங்குவர். மத்திய அரசின் பிரதிநிதிகளாகப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.


கல்வி மற்றும் நிர்வாகரீதியான தலைவரான இயக்குநர் (Director), இக்குழுவால் நியமிக்கப்படுகிறார்.


இந்த மசோதா என்ன மாற்றங்களை முன்மொழிகிறது?


பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக வரைவு மசோதாவை வெளியிட்டபோது, ​​தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற நிறுவனங்களுக்கு இணையாக இந்நிறுவனத்தின் நிலையை உயர்த்தவும், அதன் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த மசோதா முயல்வதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தெரிவித்தது. இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ISI) கவுன்சிலின் "பெரிய அளவாக", "அதிகப்படியான உள்-பிரதிநிதித்துவம்", மற்றும் "அதிக எண்ணிக்கையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்" ஆகியவை முடிவெடுக்கும் செயல்முறையைத் தடுத்ததாக ஒரு அதிகாரப்பூர்வமான 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.


இந்த மசோதா, இதுவரை இருந்து வந்த சங்கமாக இல்லாமல், நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பான 'சட்டப்பூர்வ பெருநிறுவன அமைப்பாக' இந்த நிறுவனத்தை மாற்றுவதற்கு வழிவகை செய்கிறது. இது அதன் நிர்வாகக் கட்டமைப்பையும் மாற்றி, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIMs) போன்ற மத்திய நிறுவனங்களின் கட்டமைப்பைப் போல மாற்றுகிறது.


இம்மசோதா, இந்தியக் குடியரசுத் தலைவரை இந்நிறுவனத்தின் 'பார்வையாளர் ' (Visitor) அல்லது மேற்பார்வையாளராக நியமிக்கப் பரிந்துரைக்கிறது. இந்நிறுவனத்திற்கு ஒரு 'நிர்வாகக் குழு' (Board of Governance) அமைக்கப்படும். இதில் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் 'பார்வையாளர்' அவர்களால் நியமிக்கப்படும் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதிகள், மத்திய அரசால் நியமிக்கப்படும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பிற பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெறுவர்.


நிர்வாக விவகாரங்கள் குறித்து முடிவெடுத்தல், பட்டங்களை வழங்குதல் மற்றும் கல்விசார் மற்றும் பிற பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொள்ளும். மேலும், இச்சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கும் பொறுப்பும் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது பல்வேறு பிரிவுகள் மற்றும் மையங்களின் தலைவர்களைக் கொண்டதும், இயக்குநரைத் தலைவராகக் கொண்டதுமான ஒரு 'கல்விசார் மன்றம்' (Academic Council) அமைப்பதற்கும் இம்மசோதா வழிவகை செய்கிறது. இம்மன்றம் நிர்வாகக் குழுவிற்குப் பரிந்துரைகளை வழங்கும்.


மத்திய அரசால் அமைக்கப்படும் 'தேடல் மற்றும் தேர்வுக்கான குழு' (Search-cum-selection committee) பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்து, நிர்வாகக் குழுவின் தலைவரால் இயக்குநர் நியமிக்கப்படுவார். இயக்குநரை நீக்குவதற்கும், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணைகள் மற்றும் மறுஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடுவதற்கும் 'பார்வையாளர்'-க்கு இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது.


இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டதும், இந்நிறுவனத்திற்கு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்' (Institution of National Importance) என்ற தரநிலையை வழங்கிய 1959-ம் ஆண்டுச் சட்டத்திற்குப் பதிலாக இப்புதிய சட்டம் அமலுக்கு வரும்.


இந்த மசோதாவிற்கு உள்ள எதிர்ப்பு என்ன?


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எழுப்பும் முக்கிய கவலை என்னவென்றால், மத்திய அரசின் அதிகரித்த கட்டுப்பாடும், அதனால் நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரம் பறிபோகும் வாய்ப்பும் ஆகும். முன்மொழியப்பட்ட நிர்வாகக் குழுவில் (Board of Governance) பெரும்பாலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்களே அல்லது அதன் பிரதிநிதிகளே இடம்பெறுவார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு மாறாக, தற்போதுள்ள குழுவில் பல்வேறு தரப்பினரின் பரந்த பிரதிநிதித்துவம் உள்ளது. இயக்குநரை நியமிப்பதில் மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிக பங்கை அளிக்கிறது என்பதையும் அவர்கள் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.


இந்த மசோதா குறித்துப் பரந்த அளவிலான கலந்தாலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் பல ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, "தலைமை மற்றும் நிர்வாகத்தில் நேர்மையைப் பேணுவது என்ற பெயரில், இயக்குநரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான நீண்ட அளவுகோல்களை இம்முன்வரைவு வகுத்துள்ளது. அதேவேளையில், 'தேடல் மற்றும் தேர்வுக்கான குழு'வில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) பிரதிநிதி ஒருவரையும் இது அறிமுகப்படுத்துகிறது."




இம்முன்வரைவின்படி, இயக்குநர் அவ்வப்போது மறுஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவார். இவை அனைத்தும் இயக்குநரை நடைமுறையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவராக மாற்றிவிடும். மேலும், இது நிறுவனத்தின் தன்னாட்சி என்ற கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகவும் அமையும்.


Original Link : Why a Bill to reform a premier Indian institute has triggered criticism?

Share: