ஓர் ஒருங்கிணைந்த தேசியக் கட்டமைப்பு, இந்தியாவின் எதிர்கால எரிசக்திப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்த முயல்கிறது? - புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள தடைகளுக்கு இடையில், மேற்கு ஆசிய நெருக்கடி செங்கடல் பகுதிக்கும் பரவி வருவதால், எரிசக்தி விநியோகம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் ஆகியவற்றில் இந்தியா போன்ற நாடுகள் கூடுதல் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எண்ணெய் இறக்குமதியில் பன்முகத்தன்மை மற்றும் எத்தனால் கலப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், தனித்தனி கொள்கைகள் மூலம் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா? 


செங்கடலில் (Red Sea) கப்பல்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தொடர்ந்து நிலவிவரும் பதற்றமும் எரிசக்தி விநியோகம், கச்சா எண்ணெய் விலை மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றின் மீதான பாதிப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. பல நாடுகளைப் போலவே, இந்தியாவும் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் மோதல் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாப் அல்-மண்டப் நீரிணை (Bab al-Mandab Strait) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தும் குறைந்துள்ளது. பாப் அல்-மண்டப் பகுதி, செங்கடலை ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கும் கடல்வழிப் பாதையாகும். மேலும், இது உலகளாவிய வர்த்தகத்திற்கு, குறிப்பாக எரிபொருள் விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான மற்றொரு கடல்சார் வழித்தடமாக விளங்குகிறது.


இந்தியாவின் கண்ணோட்டத்தில், மேற்காசிய நெருக்கடி ஒரு முக்கியமான உண்மையை உணர்த்தியுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு என்பது வெறும் எரிபொருளைக் கைப்பற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை. வெளிப்புற விநியோக பாதிப்புகளைச் சமாளிக்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்குவதும் அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த பத்து ஆண்டுகளில், இத்தகைய வெளிப்புற இடையூறுகளை எதிர்கொள்ளும் தனது திறனை வலுப்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


அந்த நடவடிக்கைகள் எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருந்துள்ளன? சமீபத்தில் முன்மொழியப்பட்ட ‘நான்கு தூண்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தேசிய எரிசக்தி கட்டமைப்பு’ (four-pillar unified national energy framework), இந்தியாவின் எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எத்தகைய புதிய அணுகுமுறையை வழங்குகிறது?


பாதிப்புகளை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன்


இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதப் பங்கையும், இயற்கை எரிவாயு தேவையில் ஏறக்குறைய பாதி அளவையும் இறக்குமதி செய்கிறது. உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதால், தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் மக்களின் வருமான உயர்வு காரணமாக இந்தியாவின் எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



எனவே, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க முடியுமா என்பதே மிக முக்கியமான கேள்வியாகும். கடந்த பத்தாண்டுகளில், பல்வகைப்படுத்தப்பட்ட கச்சா எண்ணெய் ஆதாரங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அதிகரித்தல், அவசரகால பெட்ரோலிய இருப்புக்களை உருவாக்குதல், பெட்ரோலில் எத்தனால் கலத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வேகமான வளர்ச்சி போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நாடு உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் வெளிப்புறப் பாதிப்புகளைத் தாங்கி நிற்கும் இந்தியாவின் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளன.


சுத்திகரிப்பு திறன்: இந்தியாவின் உத்திசார் பலம்


இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. இந்தியா உலகிலேயே 4-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகும். இதன் சுத்திகரிப்பு திறன் ஆண்டிற்கு சுமார் 260 மில்லியன் டன்கள் ஆகும். நாட்டின் பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய எரிபொருட்களும் பிற பொருட்களும் பெரும்பாலும் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில் ஒரு பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உண்மையில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலகளவில் 7-வது இடத்தில் உள்ளது.


இந்திய சுத்திகரிப்பு ஆலைகள், பல்வேறு வகையான கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து, அதை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களாக மாற்றும் திறன் கொண்ட உலகின் மிகச்சில ஆலைகளில் ஒன்றாகும். இந்த நெகிழ்வுத்தன்மை, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளைவிட இந்தியாவுக்குச் சாதகமான பலன்களை அளிக்கிறது.


எனவே, இந்த சுத்திகரிப்புத் திறன் நாட்டின் உள்நாட்டு எரிசக்தி விநியோகம், தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றுக்கு உறுதுணையாக உள்ளது. இருப்பினும், இந்த ஆலைகள் இயங்க கச்சா எண்ணெயின் சீரான விநியோகம் முக்கியத் தேவையாக உள்ளது. எனவே, கச்சா எண்ணெய் தொடர்ந்து தங்குதடையின்றி கிடைக்கும்போது மட்டுமே, இந்தச் சுத்திகரிப்புத் திறன் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.


பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி


மேற்காசிய நெருக்கடியின்போது, இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த முறை, எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளின் சீரான விநியோகத்தை உறுதிசெய்ய உதவியது. உதாரணமாக, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) நெருக்கடி காரணமாக மேற்காசியாவிலிருந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டபோது, இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் நம்பியிருந்தது.


இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் சாதனை அளவாக நாளொன்றுக்கு 26 லட்சம் பேரல்களாக உயர்ந்தது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்காகும்.


கடந்த சில ஆண்டுகளில், இந்தியா தனது எரிசக்தி இறக்குமதி ஆதாரங்களை விரிவுபடுத்தி, தற்போது 41-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இது மேற்காசிய நாடுகளின் கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைத்துள்ளதோடு, நெருக்கடியான காலகட்டங்களில் கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசலின் போதுமான இருப்பைப் பராமரிக்கவும் உதவியுள்ளது.


ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் அவசரகால பெட்ரோலிய சேமிப்பகங்கள், குறுகியகால எண்ணெய் விநியோகத் தடைகளின்போது ஒரு பாதுகாப்புக் காரணியாகப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டவை. இருப்பினும், தற்போது இந்தச் சேமிப்பகங்களில் 3.37 மில்லியன் டன் எண்ணெய் மட்டுமே உள்ளது. இது அவற்றின் மொத்தச் சேமிப்புத் திறனான 5.33 மில்லியன் டன்னில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே ஆகும்.


மேலும், ஜூலை மாதம் 28-ஆம் தேதி, இந்தியாவின் கடற்பரப்புப் பகுதிகளில்  எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பிற நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதைக் குறைக்கவும், 84,084 கோடி ரூபாய் மதிப்பிலான 'சமுத்திர மந்தன்' (Samudra Manthan) திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


எத்தனால் கலப்பு


இந்தியாவின் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் திட்டம், 2003-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ஒரு சிறந்த எரிசக்தி சார்ந்த திட்டமாகக் கருதப்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவு 2013–14-ஆம் ஆண்டில் 1.5 சதவீதமாக இருந்தது, 2025–26-ஆம் ஆண்டில் 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா தனது 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே அடைந்து சாதனை படைத்துள்ளது.


அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி 31-ஆம் தேதி ஜூலை மாதம் 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்திட்டத்தின் மூலம் 1.97 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணி சேமிக்கப்பட்டு உள்ளது, 950 லட்சம் மெட்ரிக் டன் கார்பன் (CO₂) உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது, 316 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பயன்பாடு மாற்றீடு செய்யப்பட்டுள்ளது, மேலும், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் மதுபான ஆலை உரிமையாளர்களின் கணக்குகளுக்கு 1.66 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும். இருப்பினும், இந்தியாவின் பெரும்பாலான எத்தனால் இன்னும் கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இத்திட்டம் வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தியிருந்தாலும், நிலத்தடி நீர்மட்ட வீழ்ச்சி, நிலப் பயன்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இது செறிவூட்டப்படுவது குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஆற்றலைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு, ஒரு வளப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முயன்று மற்றொரு புதிய பிரச்சனையை உருவாக்கிவிடக்கூடாது.


அடுத்தகட்ட நடவடிக்கையானது, வேளாண் கழிவுகள், நகராட்சிப் பயன்பாட்டுக் கழிவுகள் மற்றும் உணவு அல்லாத பிற உயிரிப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் 'இரண்டாம் தலைமுறை எத்தனால்' (Second-generation ethanol) உற்பத்தியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இது வைக்கோல் மற்றும் பயிர்க் கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்கவும், ஊரகப்பகுதிகளில் உயிரிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அதிக நீர் தேவைப்படும் பயிர்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.


எனவே, எத்தனால் பயன்பாட்டைத் தனிப்பட்ட ஒரு விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது. மின்சார வாகனப் பயன்பாடு, பசுமை ஹைட்ரஜன், அழுத்தப்பட்ட உயிரி வாயு மற்றும் நிலையான விமான எரிபொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த திட்டமிடலின் ஒரு பகுதியாகவே இது இருக்க வேண்டும்.


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 


இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது. இதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறன், 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 76.38 ஜிகாவாட்டாக இருந்தது. இது 3.59 மடங்கு அதிகரித்து, 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 274.68 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, சூரிய மின்சக்தித் திறன் மட்டுமே 162.15 ஜிகாவாட் அளவை எட்டியுள்ளது. இதில் நிலத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் சுமார் 121.25 ஜிகாவாட்டும், வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் சூரியஒளி மின்தகடுகள் அமைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் 30 ஜிகாவாட்டிற்கும் அதிகமான மின்சார உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.


இந்தப் புள்ளிவிவரங்கள், உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் மிக வேகமாக நடைபெற்றுவரும் தூய்மை ஆற்றல் மாற்றங்களில் ஒன்றைக் காட்டுகின்றன. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே இனி இந்தியாவின் முதன்மை சவாலாக இருக்காது. இந்த மின்சாரத்தை மின் விநியோகக் கட்டமைப்பில் இணைப்பதுதான் மிக பெரிய சவாலாகும்.



பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சில குறிப்பிட்ட வளம் நிறைந்த மாநிலங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், மின்சாரத்திற்கான தேவை தொலைதூரத்தில் உள்ள தொழில்துறை மையங்களில்தான் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, இந்தியா ஒரு முரண்பாடான சூழலை எதிர்கொள்கிறது. போதிய மின் விநியோகக் கட்டமைப்பு இல்லாததால், போதியளவு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் இருந்தபோதிலும், நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது.


இந்திய தேசிய அறிவியல் அகாடமி (Indian National Science Academy (INSA)), மின் விநியோகக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களைத் தாமதப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. செயல்பாட்டில் உள்ள 60 ஜிகாவாட்டுக்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் மின் பகிர்மான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. அதேவேளையில், 25 ஜிகாவாட் எரிவாயு சார்ந்த மின் உற்பத்தித் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதேசமயம், இந்தியா தொடர்ந்து நிலக்கரியை இறக்குமதி செய்து வந்தபோதிலும், 2024–25-ஆம் ஆண்டில் நிலக்கரி மூலம் இயங்கும் அனல்மின் நிலையங்கள் அவற்றின் முழுத்திறனில் 68.45 சதவீத அளவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.


எனவே, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் எதிர்காலமானது மின் விநியோகக் கட்டமைப்பு, மின்கலன் சேமிப்பு, நீர் உந்தல் மின் சேமிப்பு கட்டமைப்பு, நெகிழ்வுத்தன்மை கொண்ட மின் உற்பத்தி மற்றும் அறிவார்ந்த மின் சந்தைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதைச் சார்ந்துள்ளது. ஆற்றல் மாற்றம் என்பது இனி வெறும் பெட்ரோலிய எரிபொருட்களுக்குப் பதிலாக மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவது மட்டுமே அல்ல; பல்வேறு ஆற்றல் மூலங்களை ஒன்றுசேர்த்து, மிகத் திறமையாகச் செயல்படக்கூடிய ஒரு புதிய மின்சார அமைப்பை உருவாக்குவதாகும்.


ஒருங்கிணைந்த எரிசக்தி அணுகுமுறையின் தேவை


இந்தியாவின் எரிசக்தி சார்ந்த சவால் என்பது திட்டங்களின் பற்றாக்குறை அல்ல; மாறாக, சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே ஆகும். சமீபத்திய ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எத்தனால் கலப்பு, பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள், நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் எரிசக்தி திறனுக்காக இந்தியா பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானதுதான், ஆனால் தனித்தனி கொள்கைகள் மூலமாக எரிசக்தி பாதுகாப்பை நோக்கிய இலக்கை அடைந்துவிட முடியாது.


போதுமான மின் விநியோகக் கட்டமைப்பு இல்லாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பால் நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்த முடியாது. பாதுகாப்பான கச்சா எண்ணெய் விநியோகம் இல்லாத சுத்திகரிப்பு ஆலை எப்போதுமே ஆபத்துக்குள்ளாகக் கூடியதுதான். அதேபோல, நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் எத்தனால் கலப்பை விரிவுபடுத்துவது புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


இதற்குத் தீர்வு காணும் வகையில், இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA), இந்தியாவிற்கான ஒருங்கிணைந்த தேசிய எரிசக்தி கொள்கை கட்டமைப்பு: போதுமான அளவு, அணுகல், மலிவு விலை மற்றும் தகுந்த நிலைத்தன்மை “(A Unified National Energy Policy Framework for India: Adequacy, Access, Affordability, and Appropriate Sustainability (2026)" என்ற அறிக்கையில், ஒருங்கிணைந்த ஆற்றல் கொள்கைக்கான நான்கு தூண்கள் கொண்ட ஒரு கட்டமைப்பைப் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கை இந்தியாவின் எதிர்கால ஆற்றல் தேவைகளைத் திட்டமிடுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.


இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தின் அடுத்த கட்டம்: எரிபொருள்கள், தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான தேசிய எரிசக்தி கொள்கையை (Unified National Energy Policy) உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். எரிசக்தி பாதுகாப்பு என்பது வாகனங்களை இயக்குவது அல்லது தொழிற்சாலைகளை நடத்துவது மட்டுமல்ல. பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், நீடித்த நிலையான வளர்ச்சியைப் பெறவும் உதவும் ஒரு வலுவான மற்றும் சீரான எரிசக்தி அமைப்பை உருவாக்குவதே அதன் உண்மையான நோக்கமாகும்.


மேற்காசியப் பிரச்சனை, வெளிப்புறப் பாதிப்புகளை எப்போதும் தவிர்க்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், சிறந்த முன்ஏற்பாடுகள் மூலமாக அவற்றின் தாக்கத்தைக் குறைக்க முடியும். இந்தியா ஏற்கனவே தனது எரிசக்தி பாதுகாப்பிற்கான பல முக்கியமான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு வலுவான, சீரான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட அமைப்பாக மாற்றுவதுதான் அடுத்தகட்ட சவாலாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

 

Original articles: How a unified national framework seeks to strengthen India’s future energy security. -Pushpendra Singh and Archana Singh

Share: