குழந்தைகள் மீதான ஆரம்பகால முதலீடே இந்தியாவின் எதிர்காலத்திற்கான திறவுகோல். -சந்திரகாந்த் லஹாரியா

 குழந்தையின் வாழ்க்கையின் முதல் 3,000 நாட்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு தேசியத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.


2047ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவாகவும், $30 டிரில்லியன் பொருளாதாரமாகவும் மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு துணிச்சலானது மற்றும் மதிப்புமிக்கது. இருப்பினும், இதுபோன்ற ஒரு தொலைநோக்குப் பார்வையை வெறும் முழக்கங்கள் அல்லது பெரிய பொருளாதார இலக்குகளால் மட்டும் அடைய முடியாது. இதற்கு, அடுத்த 20 ஆண்டுகளில், குறிப்பாக மனித மூலதன உருவாக்குவதில், சீரான, ஆதார அடிப்படையிலான முதலீடுகள் தேவைப்படுகின்றன. உட்கட்டமைப்பு, உற்பத்தித் துறை, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் வணிகம் மேற்கொள்வதற்கான செயல்முறைகள் ஆகியவை பொது விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளன. மேலும், பல்வேறு கொள்கை விவாதங்களில் சுகாதாரம் மற்றும் கல்வி குறித்தும் அடிக்கடி குறிப்பிடப்படுகிறன.


இந்த விவாதங்கள் அனைத்திற்கும் மத்தியிலும், ஒரு முக்கிய அம்சம் இன்னும் விடுபட்டுள்ளது. ஒரு உறுதியான திட்டம் மற்றும் குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாட்டில் (early childhood care and development (ECCD)) கவனம் செலுத்திய மற்றும் முறையான முதலீடு இன்னும் தொடங்கப்படவில்லை. வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அடித்தளங்களை வலுப்படுத்தாமல் போனால், இந்தியாவின் வளர்ச்சி லட்சியங்கள் பலவீனமான நிலையில் இருப்பதற்கான அபாயம் ஏற்படும்.


குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாட்டில் (early childhood care and development (ECCD)) முதலீடு செய்வது ஒரு பொது நலத்திட்டம் அல்ல. மாறாக அது  ஒரு ராஜதந்திர பொருளாதார முதலீடாகும். கருத்தரித்தல் முதல் குழந்தையின் 2-வது பிறந்தநாள் வரை - வாழ்க்கையின் முதல் 1,000 நாட்கள் - குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தக் கட்டத்தை உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund (UNICEF)) ஆகியவை ஒரு குழந்தையின் எதிர்கால நல்வாழ்வு மற்றும் திறனை வடிவமைப்பதற்கான ஒரு முக்கியமான 'வாய்ப்புக்கான சாளரம்' (window of opportunity) என்று அங்கீகரித்துள்ளன. அதைத் தொடர்ந்து வரும் அடுத்த ஆறு ஆண்டுகள் (மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை) தோராயமாக 2,000 நாட்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு, முதல் 3,000 நாட்கள் மூளை கட்டமைப்பு, உடல் ஆரோக்கியம், அறிவாற்றல் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் சமூகத் திறன்களை வடிவமைக்கின்றன. சிறு வயதிலேயே வளர்க்கப்படும் திறன்களும் ஆற்றல்களும், ஒரு குழந்தை வளர்ந்த பிறகு எவ்வளவு சிறப்பாகக் கற்கவும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும், பயனுள்ள வகையில் செயல்படவும் முடியும் என்பதைத் தீர்மானிக்கின்றன.


நன்கு ஊட்டமளிக்கப்பட்ட, உணர்ச்சி ரீதியாகப் பாதுகாப்பான மற்றும் அறிவாற்றல் ரீதியாக வளர்ச்சியடைந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கும், பயனுள்ள திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், சிறப்பாகப் பணியாற்றுவதற்கும், வயது வந்தவர்களாக அதிக வருமானம் ஈட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. தேசிய அளவில், இத்தகைய முதலீடுகள் சுகாதாரப் பராமரிப்பு, மாற்றுக் கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான எதிர்காலச் செலவினங்களைக் குறைக்கின்றன. அதே நேரத்தில் ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பணியாளர்கள் மூலம் வரித் தளத்தை விரிவுபடுத்துகின்றன. இந்த முயற்சிகள் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டு, பொருளாதாரத்தில் மேல்நோக்கிச் செல்ல உதவும். வறுமை, பாலினம் மற்றும் புவியியல் ஆகியவற்றில் வேரூன்றிய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம், ECCD சமூக இயக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை பலப்படுத்துகிறது. அமெரிக்கா, நோர்டிக் நாடுகள், குறிப்பாக பின்லாந்து மற்றும் தென் கொரியா உட்பட பல நாடுகளின் சான்றுகள் மற்றும் அனுபவங்கள் இந்த வாதங்களை ஆதரிக்கின்றன. இருப்பினும், ஆரம்பகால குழந்தை வளர்ச்சிப் பராமரிப்பு, வறுமை, பாலினம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, மக்கள் சமூகத்தில் முன்னேற உதவுவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கிறது. அமெரிக்கா, பின்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இது சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன. ஆரம்பகால குழந்தை வளர்ச்சிப் பராமரிப்புக்கு நேரம் எடுக்கும். இதன் முக்கியப் பலன்கள் 10 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைகள் ஆரோக்கியமான, திறமையான வயது  வந்தவர்களாக வளரும்போது வெளிப்படுகின்றன. இருப்பினும், இந்தப் பலன்கள் ஒருமுறை அடையப்பட்டால், இந்த நன்மைகள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கின்றன. மேலும், அவை நாட்டின் வெற்றிக்கு முக்கியமானவையாக இருக்கும்.


இருக்கும் அடித்தளத்தை விரிவுபடுத்துங்கள்


இந்தியாவின் அனுபவம் முக்கியமான எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, நாடு குழந்தை மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிர்வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தற்செயலாக நிகழவில்லை. குழந்தை உயிர்வாழ்வு மற்றும் பாதுகாப்பான தாய்மைத் திட்டம், 1992 (Child Survival and Safe Motherhood initiative), இனப்பெருக்க மற்றும் குழந்தை நலத் திட்டம், 1997 (Reproductive and Child Health programme) போன்ற திட்டங்களும், தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission) கீழ் அவை ஒருங்கிணைக்கப்பட்டதும், சிசு மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைத்தன, நோய்த்தடுப்பு பாதுகாப்பு வரம்பை மேம்படுத்தின மற்றும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கையாண்டன. 1975ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS)), பின்னர் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டம், குறிப்பாக ஏழை குடும்பங்களிடையே ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பகால பராமரிப்புக்கான அடித்தளத்தை உருவாக்கியது. மாநில அரசாங்கங்களும் புதிய யோசனைகள் மற்றும் விநியோக முறைகள் மூலம் முக்கிய பங்களித்தன.


இருப்பினும், பெரும்பாலான திட்டங்கள் வரையறுக்கப்பட்டவையாகவும் ஒருங்கிணைப்பற்றவையாகவும் இருந்துள்ளன. குழந்தைகளின் முழு வளர்ச்சித் திறனை அடைய உதவுவதற்குப் பதிலாக, அவர்களை உயிருடன் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளன.


மேலும், குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாட்டில் (early childhood care and development (ECCD)) முயற்சிகள் பெரும்பாலும் அரசாங்க பாதுகாப்பு வலைகளுக்குள் உள்ள குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளன. நடுத்தர மற்றும் உயர் வருமானக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளை விட்டுவிடுகின்றன. இந்த விலக்கு சிக்கலானது. ஏனெனில், வளர்ச்சி சவால்கள் வறுமையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. நடுத்தர மற்றும் உயர் வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கூட அதிகளவில் உடல் பருமன், உடல் செயலற்ற தன்மை, தாமதமான சமூகத் திறன்கள், உணர்ச்சி சிக்கல்கள் மற்றும் நடத்தை சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சி இலக்காகக் கொள்ளப்படாமல், அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்.


ஆரம்பகால தலையீடுகளுக்கான ஒரு வழக்கு


குழந்தை வளர்ச்சி குறித்த அறிவியல் புரிதல் வேகமாக முன்னேறியுள்ளது. இது ஆரம்பகால தலையீட்டின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. மரபணுவியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கருத்தரிப்பதற்கு முன்னரே ஆரோக்கியம், ஊட்டச்சத்து, மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் மரபணு வெளிப்பாட்டையும் நீண்டகால சுகாதார விளைவுகளையும் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.


பெற்றோரின் உடல் பருமன், தவறான பொருட்களின் பயன்பாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை ஒரு குழந்தைக்கு தொற்றா நோய்கள், வளர்ச்சி தாமதங்கள் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில், மூளையின் பெரும்பாலான இணைப்புகள் உருவாகின்றன. மேலும், மூளை வளர்ச்சியில் 80%-85% நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் முறையான கவனிப்பு அல்லது தூண்டுதல் கிடைக்காமல் போவது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.


முரண்பாடாக, இந்த காலகட்டத்தில்தான் குழந்தைகள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை குடும்பத்துடன் செலவிடுகிறார்கள். தடுப்பூசி போடுதல் அல்லது நோய் சிகிச்சை போன்றவற்றைத் தவிர, முறையான அமைப்புகளுடன் அவர்களுக்குப் பெரிய தொடர்பு இருப்பதில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில், பல பெற்றோர்கள் வழிகாட்டுதலுக்காக சமூக ஊடகங்களை நம்பியிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை விளம்பரங்களிலிருந்தோ அல்லது நம்பகமற்ற மூலங்களிலிருந்தோ பெறப்பட்டவையாக உள்ளன. பொறுப்புள்ள பராமரிப்பு, விளையாட்டு மற்றும் உணர்ச்சிபூர்வமான வளர்ப்பு குறித்த நம்பகமான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஆதரவு இன்னும் அரிதாகவே உள்ளது. முறையான தலையீடுகள் 30-36 மாதங்கள் ஆன பிறகே, அங்கன்வாடி மையங்கள் அல்லது தனியார் பாலர் பள்ளிகள் மூலம் தொடங்குகின்றன. இவை முக்கியமானவை என்றாலும், இவை தாமதமாகவே வருகின்றன. குழந்தையின் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் வளர்ச்சி சார்ந்த தலையீடுகளை வழங்குவது என்பது இன்னும் ஒரு ‘பெரிய விடுபட்ட இடைவெளியாகவே’ (big missing window) உள்ளது.


எனவே, இந்தியா உணவுத் திட்டங்கள் அல்லது பெயரளவிலான பள்ளி சுகாதார சேவைகளை மையமாகக் கொண்ட துண்டுதுண்டான அணுகுமுறைகளைக் கடந்து செல்ல வேண்டும். கருத்தரித்தது முதல் எட்டு வயது வரை, சுகாதாரம், ஊட்டச்சத்து, ஆரம்பகால கற்றல், உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த ஆரம்பகால குழந்தை வளர்ச்சி (ECCD) கட்டமைப்புதான் தேவைப்படுகிறது. பொருளாதாரத் தலைமைத்துவத்தை அடைய விரும்பும் ஒரு நாட்டிற்கு, ஆரம்பகால குழந்தைப் பருவத்தில் செய்யப்படும் முதலீடு ஒரு விருப்பத் தேர்வு அல்ல. அது ஒரு அடிப்படைத் தேவையாகும்.


முதலாவதாக, ஊட்டச்சத்து, மனநலம், வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான தாக்கங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், இளைஞர்கள் மற்றும் தம்பதிகளுக்கு கட்டமைக்கப்பட்ட திருமணம் மற்றும் கருத்தரிப்பதற்கு முந்தைய ஆலோசனைகள் இந்தியாவிற்குத் தேவை. இது பொது சுகாதாரத்தில் அதிக வருமானம் தரும் முதலீடுகளில் ஒன்றாக இருக்கும். இது ஒரே நேரத்தில் இரண்டு தலைமுறைகளுக்கு பயனளிக்கும்.


இரண்டாவதாக, பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது மற்றும் பராமரிப்பது என்பது குறித்து வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பேசுவது, படிப்பது, பாடுவது, விளையாடுவது மற்றும் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு போன்ற எளிய, குறைந்த விலை நடவடிக்கைகள் வாழ்க்கையின் ஆரம்ப வாரங்களிலிருந்தே மூளை வளர்ச்சியை ஆழமாக வடிவமைக்கும். உதாரணமாக, நான்கு வார வயதுடைய ஒரு குழந்தைக்கு கதைகளைப் படித்துச் சொல்லலாம். அவ்வாறு செய்வது, மூளையில் நரம்பியல் இணைப்புகள் உருவாவதையும் எதிர்கால கற்றல் திறனையும் துரிதப்படுத்துகிறது. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த பெற்றோர் கல்விக்கான ஒரு நாடு தழுவிய அமைப்பு அவசரமாகத் தேவைப்படுகிறது.


மூன்றாவதாக, பெற்றோர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அடிப்படை வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி மைல்கற்கள் குறித்து அவ்வப்போது, ​​எளிய அமர்வுகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளிடம் ஏற்படும் வளர்ச்சி தாமதங்களை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அவர்களுக்கு உதவுவதற்கான மிகவும் செலவு குறைந்த வழிகளில் ஒன்றாகும். இது தடுப்பூசிகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும்.


நான்காவதாக, இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான தரமான பராமரிப்பு மற்றும் கற்றல் அமைப்புகளில் இந்தியா அதிக முதலீடு செய்ய வேண்டும். இது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் பருமனைத் தடுப்பதற்கும், உடல்நலம் மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை தொடர்பான வாழ்நாள் முழுவதும் பழக்கங்களை வடிவமைப்பதற்கும் முக்கியமான கட்டமாக இருக்கும்.


ஐந்தாவதாக, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு மட்டுமல்ல, கற்றல் தேவை; உணவு மட்டுமல்ல, வாழ்க்கைக்கான ஊட்டச்சத்து மற்றும் சடங்கு சோதனைகள் அல்ல, நல்வாழ்வு தேவை. மிகவும் நம்பகமான நிறுவனங்களான பள்ளிகள், கற்றல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒருங்கிணைந்த மையங்களாக மாற வேண்டும்.


ஆறாவதாக, கர்ப்பத்திற்கு முந்தைய ஆரோக்கியம் மற்றும் ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் 3,000 நாட்கள் குறித்து நாடு முழுவதும், மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், பணியிடங்களிலும், சமூகங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஆசிரியருக்கும் கல்வி கற்பிப்பது மட்டுமல்லாமல், குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்தும் புரிந்துகொள்ளப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.


இறுதியாக, பள்ளிகள் பெற்றோருடன் இணைந்து செயல்பட வேண்டும். இலாப நோக்கற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு முயற்சிகள் ஆகியவை, ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான (ECCD) ஒரு வலுவான ஆதரவு அமைப்பை உருவாக்க உதவ வேண்டும்.


குடிமக்கள் தலைமையிலான (citizen-led movement) இயக்கத்தின் தேவை


இந்தியாவின் எதிர்காலம் அதன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளைச் சார்ந்து இல்லாமல், அவர்களின் ஆரம்ப ஆண்டுகளில் செய்யப்படும் முதலீடுகளையே சார்ந்துள்ளது. அரசின் ஆதரவுடன் சமூகத்தால் முன்னெடுக்கப்படும், குழந்தைகளின் வளர்ச்சி, கற்றல் மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு குடிமக்கள் இயக்கம், இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் விடுபட்டிருக்கும் முக்கிய அம்சமாக இருக்கலாம். இந்த நடவடிக்கைகளுக்கு,  ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கிடையில் பயனுள்ள மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு தேவைப்படும். ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கி, அதைச் சரியாகப் பின்பற்றுவதற்கு, இதை அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகவோ அல்லது குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் மேம்பாடு குறித்த ஒரு விரிவான தேசிய இயக்கமாகவோ செயல்படுத்தலாம்.


டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா ஒரு எழுத்தாளர், பயிற்சி மருத்துவர், சுகாதாரக் கொள்கை நிபுணர் மற்றும் பெற்றோர் மற்றும் குழந்தை மேம்பாட்டு நிபுணர்.


Original Article : Early investment in children, the key to India’s future -Chandrakant Lahariya

Share: