இந்தியாவிற்கு நாடு தழுவிய, நிகழ்நேர நிலத்தடி நீர் கண்காணிப்பு அமைப்பு தேவை, இதன் மூலம் சமூகங்கள் தாங்கள் என்ன குடிக்கிறார்கள் மற்றும் நீர்ப்பாசனம் செய்கிறார்கள் என்பதை அறியலாம்.
பஞ்சாபில் மிகவும் வெப்பமான மதிய வேளையில், ஒரு விவசாயி ஒரு வாளியை ஒரு கிணற்றில் இறக்குகிறார். இந்த கிணறு பல தலைமுறைகளாக தனது குடும்பத்தை ஆதரித்து வருகிறது. தண்ணீர் சுத்தமாகத் தெரிகிறது. இருப்பினும், சோதனைகள் வேறு ஒன்றைக் காட்டுகின்றன. யுரேனியம் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட மிக அதிகமாக உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில், ஃப்ளோரைடு கலந்த நிலத்தடி நீரால் ஏற்படும் எலும்புக்கூடு குறைபாடுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குடும்பங்கள் தங்கள் சிறிய வருமானத்தில் பெரும்பகுதியை மருத்துவமனை வருகைகளுக்காக செலவிடுகிறார்கள். இந்த நிலைமை ஒரு பொது சுகாதார சோகம் மட்டுமல்ல. இது அமைதியாக நிலத்தடியில் வெளிப்படும் ஒரு பொருளாதார பேரழிவாகும்.
சமீபத்திய, வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை-2024 (Annual Groundwater Quality Report) ஒரு மோசமான யதார்த்தத்தைக் காட்டுகிறது. 440-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு மாதிரிகள் பாதுகாப்பான மாசுபாட்டின் வரம்புகளை மீறுகின்றன. பஞ்சாபில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு யுரேனியம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளது, ஃப்ளோரைடு, நைட்ரேட் மற்றும் ஆர்சனிக் ஆகியவையும் பரவலாக உள்ளன. இந்தியா நிலத்தடி நீரையே சார்ந்திருப்பதும், குடிநீருக்கும், பெரும்பாலான நீர்ப்பாசனத்திற்கும் 600 மில்லியன் மக்கள் அதையே நம்பியிருப்பதும், இதை ஒரு தேசிய நெருக்கடியாக ஆக்குகிறது.
மாசுபட்ட நீர் மற்றும் மண்ணால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6%, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 80 பில்லியன் டாலர்களை வீணாக்குகிறது என்று உலகவங்கி மதிப்பிடுகிறது. பாதுகாப்பற்ற நீரினால் ஏற்படும் சுகாதார செலவுகள் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் செல்கின்றன. அதேநேரத்தில், நீரினால் பரவும் நோய்கள் மில்லியன் கணக்கான வேலை நாட்களை இழக்க காரணமாகின்றன.
ஆபத்தில் உள்ள மக்கள்
மாசுபாட்டிற்கும், மனித மூலதன இழப்புக்கும் உள்ள தொடர்பு மிகவும் கவலையளிக்கிறது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில், ஃப்ளோரோசிஸ் தொழிலாளர்களை முடக்கி, அவர்களின் வருவாய் திறனைக் குறைத்து, குடும்பங்களை ஊதிய இழப்பு மற்றும் அதிக மருத்துவச் செலவுகளுக்குத் தள்ளியுள்ளது. நாடு முழுவதும், வயிற்றுப்போக்கு நோய்கள் இன்னும் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகளைக் கொல்கின்றன. இந்த சுகாதார துயரங்களுக்கு அப்பால், இதன் விளைவுகள் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க வளமான அதன் மக்களின் நிலையான அரிப்பைக் காட்டுகின்றன.
40%-க்கும் அதிகமான இந்தியர்களை விவசாயம் பணியமர்த்துகிறது, மேலும் அது இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மண் சரிவு நாட்டின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நிலத்தை பாதிக்கிறது. மாசுபட்ட பாசன நீர் இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது. நிலத்தடி நீரில் உள்ள கன உலோகங்கள் மற்றும் இராசாயன எச்சங்கள் விளைச்சலைக் குறைத்து பயிர்களில் குவிகின்றன. மாசுபட்ட நீர் ஆதாரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பண்ணைகள் குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை பாதிக்கின்றன என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
அபாயங்கள் கிராமங்களுக்கு அப்பால் நீண்டுள்ளன. மாசுபாடு பயிர்களின் அளவை மட்டுமல்ல, தரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. சர்வதேச நுகர்வோர்கள் கண்டறியும் தன்மை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை அதிகளவில் கோருகின்றனர். மேலும், மாசுபாடு கவலைகள் காரணமாக சில இந்திய ஏற்றுமதிகள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஏன் பிரச்சினையை புறக்கணிக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன. அரிசி, காய்கறிகள் அல்லது பழங்கள் போன்ற முக்கிய பயிர்களுக்கு மாசுபாடு பரவினால், இந்தியாவின் 50 பில்லியன் டாலர் விவசாய ஏற்றுமதித் துறை பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
நிலத்தடி நீர் மாசுபாடும் சமத்துவமின்மையை அதிகரிக்கிறது. பணக்கார குடும்பங்கள் பாட்டில் தண்ணீரை வாங்கலாம் அல்லது வடிகட்டுதல் அமைப்புகளில் (filtration systems) முதலீடு செய்யலாம். ஆனால், ஏழைக் குடும்பங்களால் இதைச் செய்ய முடியாது. ஏற்கனவே பெரும்பாலான சுகாதாரச் செலவுகள் தங்கள் கைகளில் இருந்து செலவழிக்கப்படுகின்றன, இதனால் குடும்பங்களுக்கு மிகக் குறைந்த பாதுகாப்பு கிடைக்கிறது. கிராமப்புறங்களில், மாசுபட்ட நீர்நிலைகளைச் சார்ந்திருப்பது சமூகங்களை உடல்நலக்குறைவு, கடன் மற்றும் குறைந்துவரும் உற்பத்தித்திறன் சுழற்சிகளில் சிக்க வைக்கிறது. ஆர்சனிக் அல்லது ஃப்ளூரைடு வெளிப்பாட்டால் ஏற்படும் அறிவாற்றல் குறைபாடுகளுடன் வளரும் குழந்தைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளை எதிர்கொள்வதால், இதற்கான சேதம் அடுத்த தலைமுறைக்கு நீட்டிக்கப்படுகிறது.
பஞ்சாபில் ஏற்கனவே நிலையான வரம்பைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக துளையிட்டு எடுக்கும் நீரின் பொறுப்பற்ற அதிகப்படியான நிலையால், விவசாயிகளை இன்னும் ஆழமாக துளையிட கட்டாயப்படுத்துகிறது. இதனால், நீரின் தரம் மோசமடைகிறது மற்றும் உர பயன்பாட்டை அதிகரிக்கிறது. இது விவசாயத்தின் நீண்டகால நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது.
முன்னோக்கி செல்லும் பாதை
ஆனால், கொள்கை வகுப்பாளர்கள் விரைவாகச் செயல்பட்டால் தீர்வுகள் சாத்தியமாகும். முதலாவதாக, சமூகங்கள் தாங்கள் என்ன குடிக்கிறார்கள் மற்றும் பாசனம் செய்கிறார்கள் என்பதை அறிய தரவுகளுக்கான திறந்த அணுகலுடன் இந்தியாவிற்கு நாடு தழுவிய, நிகழ்நேர நிலத்தடி நீர் கண்காணிப்பு அமைப்பு தேவை. இரண்டாவதாக, தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீருக்கு எதிரான அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும். தற்போதைய பலவீனமான கட்டமைப்பு, தொழிற்சாலைகள் செலவுகளை சமூகத்தின்மீது சுமத்த அனுமதிக்கிறது. மூன்றாவதாக, வேளாண் கொள்கை, இரசாயன அதிகப்படியான பயன்பாட்டை ஊக்குவிக்கும் உள்ளீட்டு மானியங்களிலிருந்து விலகி, பயிர் பல்வகைப்படுத்தல், கரிம நடைமுறைகள் மற்றும் நுண் பாசனத்திற்கான ஊக்கத்தொகைகளை நோக்கி மாற வேண்டும். நான்காவது, பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு அமைப்புகள், சமூக நீர் வடிகட்டிகள் முதல் குறைந்த விலை சுத்திகரிப்பு அலகுகள் வரை, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்க முடியும்.
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில், சமூக நீர் சுத்திகரிப்பு அலகுகள் (community water purification units) நீண்ட காலமாக ஃப்ளோரோசிஸால் (fluorosis) பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கியுள்ளன. இது குழந்தைகளிடையே புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் அளவிடத்தக்க சரிவுக்கு வழிவகுத்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், அதிக நீர் தேவைப்படும் நெல்லில் இருந்து பருப்பு வகைகள் மற்றும் மக்காச்சோளத்திற்கு பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கும் முன்னோடித் திட்டங்கள் நீர்நிலைகளில் அழுத்தத்தைக் குறைத்து, இரசாயன பயன்பாட்டைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தைப் பராமரித்துள்ளன.பரந்த சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்போது, உள்ளூர் ரீதியாக வடிவமைக்கப்பட்ட தலையீடுகள் பலனளிக்க முடியும் என்பதை இந்த வெற்றிகள் காட்டுகின்றன.
இறுதியாக, உலகளாவிய சந்தைகளில் இந்தியாவின் நற்பெயரைப் பாதுகாக்க கடுமையான ஏற்றுமதி தர சோதனைகள் மற்றும் விவசாயி பயிற்சி தேவை.
நிலத்தடிநீர் மாசுபாடு என்பது ஒரு சிறிய பிரச்சினை அல்ல. ஆனால் ஒரு மறைக்கப்பட்ட பொருளாதார வடிகால் ஆகும். சில நேரங்களில் மாற்றியமைக்கக்கூடிய நீர் பற்றாக்குறையைப் போலல்லாமல், மாசுபாடு பெரும்பாலும் நிரந்தரமானது. இந்தியா ஒரு தேர்வை எதிர்கொள்கிறது. மாசுபாட்டை புறக்கணித்து, பெரிய நீண்டகால இழப்புகளுக்கு வழிவகுக்கும் குறுகியகால ஆதாயங்களை அது ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மாசுபாட்டை அதன் மிக அவசரமான பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதலாம். வளர்ச்சியைத் தக்கவைத்து, அதன் எதிர்காலத்தைப் பாதுகாக்க, இந்தியா உறுதியாகச் செயல்பட வேண்டும்.
நம் காலடியில் உள்ள விஷம் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாம் நடவடிக்கையை தாமதப்படுத்தினால், செலவு அதிகரிக்கும். பாதி நடவடிக்கைகள் இனி வேலை செய்யாது. இப்போது நமக்குத் துணிச்சலான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. அப்போதுதான் இந்த நெருக்கடி ஒரு தேசிய பேரழிவாக மாறுவதைத் தடுக்க முடியும்.
டாக்டர் ஸ்ரேஷி பானர்ஜி, போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் (PIK) முதுகலை ஆராய்ச்சியாளராக உள்ளார். திரு. ரக்திமாவா போஸ், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலில் (NCAER) ஆலோசகராக உள்ளார்.
Original Article: Hidden cost of polluted groundwater