காற்று மாசுபாடு தெற்காசிய நாடுகளுக்கு நெருக்கடியா? -தேவ் நாத் பதக் மற்றும் விபா எஸ்.பரத்வாஜ்

2024-ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் காற்று மாசுபாடு எப்படி இருந்தது? தெற்காசிய பகுதியில் காற்று மாசுபாடு எவ்வாறு அதிகரித்துள்ளது? (Greenpeace-2023) கிரீன்பீஸ்-2023-ஆம் ஆண்டின் உலக காற்று தர அறிக்கை என்ன கூறுகிறது? சீரழிந்து வரும் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) அளவுகள் இந்தியாவை பொருளாதார ரீதியாக எவ்வாறு பாதிக்கின்றன? முன்னோக்கிச் செல்லும் வழி என்னவாக இருக்க வேண்டும்?


டெல்லியின் காற்றின் தரம் மீண்டும் ஒருமுறை அபாயகரமாக மோசமாக உள்ளது. வழக்கம் போல், இதன் எதிர்வினை நீண்டகால மற்றும் பயனுள்ள தீர்வாக இல்லாமல், குறுகிய கால மற்றும் உடனடி நடவடிக்கையாகவே இருந்துள்ளது. ஆய்வுத் துறையின் அறிக்கைகளின் அடிப்படையில், காற்று தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management) படிப்படியான செயல் திட்டத்தின் (Graded Response Action Plan) படி, நிலை 1 மற்றும் 2-லிருந்து நிலை 3-க்கு படிப்படியாக மாறியுள்ளது. மேலும், தீவிர சுகாதார அபாயங்களை எதிர்கொள்ளும் குடிமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், டெல்லியின் காற்று மாசு நெருக்கடி இந்தியாவின் இறையாண்மை எல்லைகளையும் தாண்டிச் செல்வதால், காற்று மாசுபாட்டிற்கான இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களின் கூட்டு விளைவைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. 


தெற்காசியாவில் என்ன நடக்கிறது?


கடந்த நவம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டில், கிழக்கு மற்றும் வடக்கு பாகிஸ்தான் மற்றும் வட இந்தியா ஆகியவை '2024 இந்தியா-பாகிஸ்தான் புகைப்பனி  (smog)' என்று அறியப்பட்ட மோசமான மாசுபாட்டு நிகழ்வை எதிர்கொண்டன. உலகளவில் அதிக காற்றின் தரக் குறியீடு அளவீடுகளைக் கொண்ட மிகவும் மாசுபட்ட நகரத்தின் அளவில் லாகூர் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு நகரங்களும் ஏறக்குறைய ஒரே அளவில் மாசுபாடு அடைந்திருந்தன. நகரங்களின் மீது 'பழுப்பு மேகங்கள்' படலமாக உருவானது. இது செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகத் தெரிந்தது. லாகூரில் மிக மோசமான காற்றின் தரக் குறியீடு (AQI) இருந்தது. அதேசமயம் மாறும் காற்றினால் இப்பகுதி முழுவதும் மாசுபடுத்திகள் உள்ளே பரவியதால்  டெல்லியின் காற்று மெதுவாக மோசமடைந்தது என்று கூறப்படுகிறது. 


2025-ஆம் ஆண்டிலும் காற்று தரக் குறியீட்டு பட்டியலில் டெல்லியைத் தொடர்ந்து மீண்டும் லாகூர் உள்ளது. உள்ளூர் மாசுபாடு மற்றும் குறைந்த வேகக் காற்றின் காரணமாக இந்தியாவில் இருந்து புகை அடித்து வரப்பட்டதாக கராச்சியில் இருந்து வெளிவரும் 'தி டான்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


காற்று மாசுபாடு நெருக்கடியில் வங்கதேசத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அமெரிக்க சிந்தனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சில் அறிக்கைப்படி, குளிர்காலத்தில் டாக்காவில் மிதமானதிலிருந்து மிகவும் மோசமான வரம்பில் காற்று தரக் குறியீடு மோசமடைந்து வருகிறது. அதேபோல், நேபாளத் தலைநகரில், ஒவ்வொரு ஆண்டும் காற்று தரக் குறியீடு மிதமானது முதல் ஆரோக்கியமற்றது வரை ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது.

என்னென்ன காரணங்கள்?


பசுமை அமைப்பின் (Greenpeace) 2023 உலக காற்றுத் தர அறிக்கை, தெற்காசியாவில் நிலவும் மோசமான காற்றுத் தரம் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் தொழில் மற்றும் வாகனப் புகை வெளியேற்றம், மற்றும் திடக்கழிவு மற்றும் கழிவுகளை எரித்தல் போன்ற மூலங்களாலேயே ஏற்படுகிறது என்று வலியுறுத்தியுள்ளது. இந்தோ-கங்கைச் சமவெளி மற்றும் அதற்கு அப்பால் பரவியுள்ள, அடுக்கு-1 (Tier-1) நகரங்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் இந்த பொதுவான காற்று மாசுபாடு, இப்பகுதியின் நிலையான நிலப்பரப்பு (fixed topography) போன்ற காரணிகளால் ஏற்படுகிறது. வரைபடவியலால் (cartography) பிரிக்கப்பட்டிருந்தாலும், தெற்காசியாவின் பிராந்திய நிலப்பரப்பு, இயற்கை காற்றின் நிலையான காற்றோட்டத்திற்கும் மற்றும் மாசுபாடுகளை சிதறடிப்பதற்கும் காரணமாகிறது. காற்றின் துகள்களின் சிக்கலான கலவை காரணமாக, நாடுகடந்த மற்றும் பிராந்தியப் பகுதிகளில் புகைமூட்டம் உருவாகிறது. இயற்கை புவியியலுடன், பிராந்திய மற்றும் நாடுகடந்த அரசியல் சார்ந்த விருப்பமின்மை அம்சமும் ஒன்றுபடுகிறது. இதுவே மிகவும் மோசமான நெருக்கடி நிலைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.


2023-ஆம் ஆண்டில் உலக வங்கியின் ‘தெற்காசியாவில் காற்று மாசுபாடு மற்றும் பொது சுகாதாரம்’ குறித்த அறிக்கை, உலகின் மோசமான காற்று மாசுபாடு கொண்ட 10 நகரங்களில் ஒன்பது நகரங்கள் தெற்காசியப் பகுதியில் இருப்பதாகத் தெரிவித்தது. இலங்கை, மாலத்தீவு மற்றும் பூடான் ஆகிய நாடுகள் தெற்காசியா பிராந்தியத்தில் எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டினால் ஒப்பீட்டளவில் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன. காரணிகளின் இந்த ஒன்றிணைப்பு, தணிப்பு நடவடிக்கையானது குறுகிய காலத் தீர்வுகளுக்கு மட்டுமல்லாமல், வலுவான கார்பன் நீக்க நடவடிக்கைகள் மற்றும் தேசிய எல்லைகளைத் தாண்டிய வேளாண் நடைமுறைகள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகளில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நீண்டகால உத்திகளுக்கும் கவனம் தேவை என்பதைக் காட்டுகிறது.


இது வளர்ச்சியின் நெருக்கடியா?


காற்று மாசுபாடு என்பது வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதன் பாதகமான விளைவுகளுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதிக காற்றுத் தரக் குறியீடு அளவுகள் காரணமாக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3% சுகாதாரப் பராமரிப்புக்காக செலவிடப்படுவதாகவும், தொழிலாளர் மூலதனத்தை இழப்பதாகவும் உலக வங்கியின் ஆய்வு ஒன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டின் விளைவாக ஏற்படும் முன்கூட்டிய நோய் மற்றும் இறப்பு காரணமாக 2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.36 சதவீதம் குறைந்துள்ளதாக தி லான்செட் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தானியங்கி வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு, பொதுப் போக்குவரத்து இல்லாமை, வாகனம் அல்லாத இயக்கத்திற்கு மிகக் குறைவான ஆதரவு மற்றும் நகர்ப்புற பசுமையை இழந்து கற்காரை (concrete) கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை காற்றின் தரம் மோசமடைவதற்கு வழிவகுக்கும் சில காரணங்களாகும். 2023-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme (UNEP)) அறிக்கை, தற்போதைய நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகள் காலநிலை மாற்றத்தை எவ்வாறு தூண்டுகின்றன என்பதைக் காட்டுகிறது. அது எவ்வாறு காற்றின் மாசு நெருக்கடியை அதிகரிக்கிறது என்பதையும் காட்டுகிறது. இதனால், உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation (WHO)) காற்றின் தரம் ஆயுட்காலம், பொது சுகாதாரம், பொருளாதார உற்பத்தித்திறன் மற்றும் சுற்றுச்சூழல் நீதி ஆகியவற்றை கணிசமாகப் பாதிக்கிறது என்பதைச் சரியாக அங்கீகரிக்கிறது. இந்த துயரமான காற்றின் தரக் குறியீடு புள்ளிவிவரங்கள் மோசமாகத் திட்டமிடப்பட்ட வளர்ச்சியின் விளைவாகும். இதன் விளைவுகள் வட இந்தியாவில் மட்டுமல்ல, மும்பை மற்றும் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பிற நகரங்களிலும் காற்றின் தரம்  மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


அடுத்து என்ன?


நெருக்கடியின் மூலங்களைக் கட்டுப்படுத்த வலுவான அரசியல் உறுதியுடன்கூடிய ஒரு நுணுக்கமான ஆளுகை மாதிரி; தொழிலாளர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அக்கறையுள்ள மனித மேம்பாட்டு மாதிரி; மற்றும் மேலும் பிராந்தியத் தகவலறிந்த மாதிரி ஆகியவை நிலையான தீர்வுகளைக் காணத் தேவையான சில கட்டாயத் தேவைகள் ஆகும். ஐஐடி புவனேஸ்வர் (IIT Bhubaneshwar) நடத்திய சமீபத்திய ஆய்வில், காற்று மாசுபாட்டை வெறுமனே பகுதிகளாகக் கையாள்வதற்குப் பதிலாக, ஒரு பரந்த பிராந்திய வான்வெளி (airshed) அளவிலான மேலாண்மை உத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.


எல்லைகள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்வேறு பங்குதாரர்களை உள்ளடக்கிய வலுவான கொள்கைகள் மூலமாக மட்டுமே, காற்றுமாசு உருவாகும் காரணங்களை முழுமையாக அகற்றுவதற்கான ‘வானிலை சார்ந்த சிந்தனையை’ (meteorological mindset) பரவலாக உருவாக்க முடியும் என்று கருதப்படுகிறது. 


தேவ் நாத் பதக், தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை துணைத்தலைவராக உள்ளார். விபா பரத்வாஜ், பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மாணவர் ஆவார்.


Original Article: Is air pollution a South Asian crisis?


Share: