30-வது கால நிலை மாநாட்டில், இந்தியா பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் காலநிலை நிதிக்கு முழு ஆதரவையும் தெரிவித்தது. உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளை வடிவமைப்பதில் காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)), கியோட்டோ நெறிமுறை மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் பங்கை இந்தியா எவ்வாறு பார்க்கிறது?
30-வது காலநிலை மாநாட்டில் பிரேசிலின் பெலெமில் முடிவடையும் நிலையில், உலகம் மீண்டும் புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாகக் குறைத்தல், காலநிலை நிதி மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா, வேறு சில நாடுகளுடன் சேர்ந்து, இந்தக் கவலைகளை எடுத்துரைத்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 'அரசியல் ஒப்பந்தத்தின்' முதல் வரைவு, நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் நீடித்தாலும், இதுபோன்ற நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான விருப்பங்களை பட்டியலிட்டுள்ளது. அவற்றை தீர்க்க பிரேசில் நம்புகிறது. 30-வது கால நிலை மாநாடு (Conference of the Parties (COP30)) கூட்டத்தில் முக்கிய முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்கு முன், காலநிலை உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வோம்.
30-வது கால நிலை மாநாட்டின் முக்கியத்துவம்
1992ஆம் ஆண்டு, பிரேசிலில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ரியோ பூமி உச்சி மாநாட்டில் (Rio Earth Summit), காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் (UNFCCC) கையெழுத்தானது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு, 30-வது காலநிலை மாநாடு (நவம்பர் 10-21 வரை) உலகின் நவீன காலநிலை நடவடிக்கை தொடங்கிய நாட்டில் நடைபெற்றது. கால நிலை மாநாட்டின் தலைமைப் பொறுப்பு அங்கீகரிக்கப்பட்ட ஐந்து ஐ.நா. பிராந்தியங்களான ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஐரோப்பா பிராந்தியங்களிடையே மாறி மாறி வருகிறது.
இந்த ஆண்டு கால நிலை மாநாடு வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் ஒப்பந்தத்தின் (2015) 10-வது ஆண்டையும் குறிக்கிறது. உலகம் வரலாறு காணாத அளவுக்கு அதிக வெப்பநிலை, அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் (greenhouse gas (GHG)) மற்றும் காலநிலை பேச்சுவார்த்தைகளை கடினமாக்கும் அதிக மோதல்கள் மற்றும் வர்த்தக மோதல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இது நடக்கிறது.
இதை நடத்தும் நாடான பிரேசில், இதை 'தகவமைப்புக்கான கால நிலை மாநாடு' என்று அழைக்கிறது மற்றும் வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு நிலையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது. முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
1. காலநிலை நிர்வாகத்தில் உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் பன்முகத்தன்மையை வலுப்படுத்த வேண்டும்.
2. துபாயில் நடைபெற்ற 28-வது கால நிலை மாநாட்டின்போது பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் முதல் உலகளாவிய பங்குச் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய காலநிலை இலக்குகள் செயல்படுத்துவதை துரிதப்படுத்த வேண்டும்.
எந்தவொரு புதிய இலக்கையும் உருவாக்குவது இதன் நோக்கமல்ல, ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட பல்வேறு தணிப்பு மற்றும் தகவமைப்பு இலக்குகளை செயல்படுத்துவதில் கவனமாகச் செயல்பட்டு, அவற்றுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதே இதன் நோக்கமாகும்.
முக்கிய புதிய முயற்சிகள் யாவை?
30-வது காலநிலை மாநாட்டில், தற்போதுள்ள மற்றும் வளர்ந்துவரும் பிரச்சினைகளைத் தீர்க்க சில புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் சில:
1. வெப்பமண்டல காடுகள் என்றென்றும் வசதி (Tropical Forests Forever Facility (TFFF)) திட்டம் : காலநிலை நிதியளிப்புக்கான ஒரு புதுமையான மாதிரியை வழங்கும் வெப்பமண்டல காடுகள் என்றென்றும் வசதி என்பது ஒரு நிரந்தர மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வழிமுறையாகும். இந்த திட்டம் வெப்பமண்டல காடுகளைப் பாதுகாப்பதற்காக நாடுகளுக்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் 20% நிதியை பழங்குடி சமூகங்களுக்காக ஒதுக்குகிறது. இந்தியா ஒரு பார்வையாளராக பங்கேற்கிறது.
2. திறந்த கிரக நுண்ணறிவு வலையமைப்பு (Open Planetary Intelligence Network (OPIN)): தரவுப் பகிர்வை எளிதாக்குவதற்கும், முக்கிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இணைப்பதன்மூலம் உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இந்த வலையமைப்பு தொடங்கப்பட்டது.
3. உலகளாவிய நெறிமுறை பங்கு சேகரிப்பு (Global Ethical Stocktake (GES)): இது மற்றொரு முக்கிய முயற்சியாகும். இது உலகளாவிய காலநிலை நடவடிக்கை நிகழ்ச்சி கொள்கையில் தார்மீக மற்றும் நெறிமுறை பரிசீலனைகள் மற்றும் குடிமை சமூக பரிமாணங்களை இணைக்க முயல்கிறது. இதன் ஆசிய பதிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நடைபெற்றது.
மேலும், உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தைகள் முக்கியமாக ஐந்து முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. அவை தகவமைப்பு, தணிப்பு, செயல்படுத்தும் வழிமுறைகள், நியாயமான மாற்றம் மற்றும் உலகளாவிய சாதனைகள் கண்காணிப்பு (global stocktake (GST)) ஆகும்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் காலநிலை இலக்குகளில் நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க உலகளாவிய சாதனைகள் கண்காணிப்பு ஒரு தேவையான சோதனையாகும். இது முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், இடைவெளிகளைக் கண்டறியவும், எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடவும், தேசிய மற்றும் உலக அளவில் கொள்கைகளை உருவாக்கவும் உதவுகிறது.
30-வது கால நிலை மாநாட்டில் இந்தியா
30-வது காலநிலை மாநாட்டின் தொடக்க அமர்வில், பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா (Brazil, South Africa, India, China (BASIC)) குழு மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட வளரும் நாடுகள் (Like-Minded Developing Countries (LMDC)) குழுவின் சார்பாக இந்தியா தனது அறிக்கையில், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் காலநிலை நிதிக்கான தனது முழு ஆதரவையும் தெரிவித்தது.
புது டெல்லி உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட தெளிவான “காலநிலை நிதி” (climate finance) வரையறையை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதேபோல், இந்த நிதி வழங்கல்களை அதிகரிப்பதும், மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 9.1-யை அமல்படுத்துவது முக்கியம் என்றும் கூறியுள்ளது. இதன்படி, அதிக வளங்கள் உள்ள நாடுகள் தேவையான நாடுகளுக்கு சூழல் பொருந்தும் நடவடிக்கைகளுக்காக நிதியளிக்க சட்டபூர்வமாக கடமைப்பட்டுள்ளன.
தகவமைப்பு நிதி மிகவும் குறைவாக உள்ளது என்றும், தற்போது கிடைப்பதைவிட 15 மடங்கு அதிகமாக நமக்குத் தேவை என்றும் இந்தியா சுட்டிக்காட்டியது. வளரும் நாடுகளுக்கு உமிழ்வைக் குறைப்பதற்கும், தவிர்க்க முடியாத காலநிலை தாக்கங்களைச் சமாளிப்பதற்கும் இந்த நிதி தேவைப்படுகிறது.
மேலும், 'பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் தொடர்புடைய திறன்கள்' (common but differentiated responsibilities and respective capabilities’ (CBDR-RC)) கொள்கையின் முக்கியத்துவத்தையும், காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)), அதன் கியோட்டோ நெறிமுறை பாரிஸ் ஒப்பந்தத்தின் முழுமையான மற்றும் பயனுள்ள செயல்படுத்தலையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
சந்தை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளுக்கு இடையூறுகள் இல்லாமல், நம்பகமான, மலிவு மற்றும் சமமான காலநிலைத் தொழில்நுட்பங்களை அணுகுவதற்கான தேவையை பூர்த்திசெய்ய வேண்டும். இந்தியா தனது அறிக்கையில், பாதுகாப்புவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச காலநிலை தொடர்பான வர்த்தக நடவடிக்கை எடுப்பதை எச்சரித்தது.
டெல்லி எவ்வாறு 4 பில்லியன் டன் CO₂-ஐக் குறைக்க முயல்கிறது?
காலநிலை நெருக்கடியைத் தீர்க்க உதவுவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தியா 2030ஆம் ஆண்டுக்கான தேசிய மின் உற்பத்தி மேம்பாட்டுக் கழகத்தின் (National Power Generation Development Corporation (NDC)) இலக்கை, புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 50 சதவீத நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனைப் பெறுவதற்கான தனது இலக்கை, ஜூலை 2025ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டதைவிட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்தது.
2005ஆம் ஆண்டு அளவுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு 43–45% உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 2030-க்கு முன்னர் இந்த இலக்கை அடைய வாய்ப்புள்ளது. 2005 மற்றும் 2020-க்கு இடையில், இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) உமிழ்வு தீவிரத்தை 36 சதவீதம் குறைத்தது.
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (International Solar Alliance (ISA)), பேரிடர் மீள் கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)), சர்வதேச பெரிய பூனை கூட்டணி (International Big Cat Alliance) போன்ற பல செயல்பாட்டு சார்ந்த பலதரப்புக் கூட்டணிகளை புது டெல்லி தீவிரமாக ஆதரிக்கிறது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணி 125 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. மேலும், பேரிடர் மீள் கட்டமைப்புக்கான கூட்டணி 50 நாடுகள் மற்றும் 10 நட்பு நாட்டு அமைப்புகளை உள்ளடக்கிய 61 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
தற்போது, இந்தியா உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் திட்டமான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தைக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் மெட்ரிக் டன் (million metric tonnes (MMT)) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை இலக்காகக் கொண்டது. இதற்கு ரூ. 19,744 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பசுமை எஃகு வகைப்பாட்டை (taxonomy of green steel) உருவாக்கிய முதல் நாடு இந்தியவாகும்.
மேலும், இது LiFE திட்டம் மற்றும் பசுமை கடன் திட்டத்தின் மூலம் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய கார்பன் சந்தையை (Indian Carbon Market (ICM)) தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் அனைத்தும் 2020 மற்றும் 2030-க்கு இடையில் இந்தியா 4 பில்லியன் டன் CO₂-ஐக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30-வது காலநிலை மாநாட்டிற்கு முன்னிருப்பது என்ன?
2025ஆம் ஆண்டு உமிழ்வு இடைவெளி அறிக்கை (Emissions Gap Report), நாடுகள் தங்கள் தற்போதைய காலநிலை வாக்குறுதிகள் அனைத்தையும் கடைப்பிடித்தாலும், இந்த நூற்றாண்டில் உலக வெப்பநிலை சுமார் 2.3–2.5°C ஆக உயரக்கூடும் என்று கூறுகிறது. இது பாரிஸ் ஒப்பந்த இலக்கான 1.5°C-ஐ விட அதிகமான அளவாகும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் உலக வெப்பநிலை பாரிஸ் இலக்கைவிட அதிகமாக இருக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. இதனால் இந்த மிகைப்படுத்தலின் அளவையும் கால அளவையும் கட்டுப்படுத்துவது முக்கியமான முன்னுரிமையாக உள்ளது.
இந்த அறிக்கை, முழுமையான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும், வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதத்துடன் - இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக - 4.6 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவின் தனிநபர் உமிழ்வு இன்னும் உலக சராசரியை விடக் குறைவாகவே உள்ளது. ஆனால், அதிக தொழில், எரிசக்தி பயன்பாடு, போக்குவரத்து மற்றும் சிமென்ட் உற்பத்திக் காரணமாக அதன் ஒட்டுமொத்த கார்பன் தடம் அதிகரித்து வருகிறது. தற்போது, மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் அடிப்படையில் முதல் ஆறு உமிழ்வு நாடுகள் சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் இந்தோனேசியா ஆகும்.
Original Article: How India showcases climate leadership at COP30.