மக்கள்தொகை கணக்கெடுப்பு நாம் யார் என்பதைப் பற்றியது. அது சாதி மற்றும் இடப்பெயர்வைப் புறக்கணிக்க முடியாது. -எஸ் ஒய் குரைஷி

 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், வயது, கல்வி அறிவு அல்லது தொழில் ஆகியவற்றைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே கவனத்துடன், சாதியை முழுமையாகப் பதிவுசெய்ய வேண்டும். ஒரு ஜனநாயகத்திற்கு, அது சங்கடமாக இருந்தாலும், முழுமையான தகவல் தேவை.


ஒரு நாடு அதன் மக்கள்தொகையைக் கணக்கெடுக்கும்போது, அது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. ஒரு குடியரசு தனது மக்கள் யார், யார் சேர்க்கப்பட்டுள்ளார்கள், யார் விடுபட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census) என்பது ஒரு முக்கியமான தருணம். 143 ஆண்டுகளாக, இந்தியா ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தடையில்லாமல் நடத்தி வந்துள்ளது. ஆனால், கடைசியாக 2011-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடந்தது. 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்கவே இல்லை.


இதற்குப் பெருந்தொற்று (Pandemic) காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்திலும்கூட, பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தக் கால தாமதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டில் முடிவடையும்போது, இந்தியா புதிய மக்கள்தொகை தரவுகள் இல்லாமல் 16 முதல் 17 ஆண்டுகள் கழித்திருக்கும். இது சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட தாமதம் ஆகும். இந்த இடைவெளி வெறும் எண்ணிக்கை அளவிலான பாதிப்பு மட்டும் இல்லை. மாறாக, பழைய தரவுகளைப் பயன்படுத்திதான் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்தோர் வாழும் நகரங்கள், இன்னமும் அவை சிறிய ஊர்களாக இருப்பது போலக் கருதியே திட்டமிடப்படுகின்றன. நிதி ஆணையத்தின் நிதிப் பகிர்மானங்கள் (allocations) இன்றும் 2011-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்தியா ஏற்கெனவே மாறிப்போன உலகிற்கு இன்னும் தனது வரவுசெலவுத் திட்டங்களை இன்னும் வகுத்துக்கொண்டிருக்கிறது. 2021 கணக்கெடுப்பை “தாமதமான 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு” என்று சொல்லாமல், அதை “மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027” என்று அழைப்பது மிக முக்கியமானது. ஏனென்றால், 84-வது அரசியல் சாசனத் திருத்தப்படி பெண்களுக்கான இடஒதுக்கீடு “2026-க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு” முடிந்த பின்புதான் அமல்படுத்தப்பட வேண்டும். அதனால் 2027-ஐ “முதல் கணக்கெடுப்பு” என்று அதிகாரப்பூர்வமாக அழைத்தால் மட்டுமே சட்டப்படி சரியாக இருக்கும். ஆனால், இதன் விளைவாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு 2030-களின் நடுப்பகுதிக்கு முன்பு நடைமுறைக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


2027-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும். இது மகளிர் இடஒதுக்கீட்டையும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அரசு நிர்ணயித்துள்ள 2029-ஆம் ஆண்டு என்கிற காலக்கெடு சாத்தியமற்றது என்கின்றனர். ஏனெனில், தொகுதி மறுவரையறை செய்வதற்கு பொதுவாக நான்கு முதல் ஆறு ஆண்டுகள் ஆகும். இந்தக் கணக்கெடுப்பு, 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடியும் வரை இது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தீர்வு காணப்படாத மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கு எடுக்கப்படுமா என்பதுதான். சாதி விவரங்கள் சேர்க்கப்படுமா, தனியாக எடுக்கப்படுமா, அல்லது முழுவதுமாகத் தவிர்க்கப்படுமா என்பதை அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்கின்றனர்.


கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1931-ஆம் ஆண்டுதான் சாதிவாரியான முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இடஒதுக்கீடு வழங்குவதற்காக, இந்தியா பட்டியலிடப்பட்ட சாதிகள் (Scheduled Castes - SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes - ST) ஆகியவற்றை மட்டுமே கணக்கெடுத்தது. அனைத்து சாதிகளையும் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடுவது, புதிய தேசத்தில் சாதிப் பிரிவுகளை வலுப்படுத்தக்கூடாது என்ற நோக்கம் காரணமாகக் கூறப்பட்டது. 2011-ஆம் ஆண்டில், சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (Socio-Economic and Caste Census - SECC) அனைத்துச் சாதிகளையும் பதிவு செய்ய முயற்சித்தது. ஆனால், இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. இதற்கு அதிகாரப்பூர்வ காரணம் தரவுகளில் இருந்த சிக்கல்கள் என்று கூறப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும், அந்தத் தரவுகள் இன்னும் பயன்படுத்தப்படாமல், வெளியிடப்படவும் இல்லை, நிராகரிக்கப்படவும் இல்லை என்ற நிலையிலேயே உள்ளன.


விரிவான சாதிவாரி தரவுகள் கிடைத்தால், அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBC) இட ஒதுக்கீடு, சமூகநீதி மற்றும் வளப்பங்கீடு குறித்த விவாதங்களை முழுவதுமாக மாற்றியமைக்கும். விளிம்புநிலை சமூகங்களுக்கு (Marginalised communities) இது உதவும். தங்களுடைய கோரிக்கைகளை வலுவாக வைக்கத் தேவையான சரியான மக்கள் தொகை எண்ணிக்கையை இது அவர்களுக்கு அளிக்கும். துல்லியமான சாதித் தரவுகள் இல்லாமல் போகும்போது, கொள்கைகள் அனைத்தும் உண்மையான மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் அல்லாமல், வெறும் அரசியல் வாதங்களின் அடிப்படையிலேயே இயங்குவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்று கருதுகின்றனர். 


சாதி வாரிக் கணக்கெடுப்பு பற்றிய தெளிவு இல்லாமல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அறிவிப்பது, நிர்வாகத்தின் குழப்பத்தையோ அல்லது தெளிவில்லாமலோ இருப்பதையே காட்டுகிறது. இந்த இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத சிக்கலான விஷயங்கள் ஆகும். 2027-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், வயது, கல்வி அறிவு, அல்லது தொழில் போன்ற விவரங்களைச் சேகரிப்பதைப் போலவே, சாதி விவரங்களையும் முழுமையாகக் கணக்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஜனநாயகம் நிலைத்து நிற்க வேண்டுமெனில் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்கின்றனர். 


மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 இடப்பெயர்வை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களைவிட்டு வெளியேறி வேலை செய்கிறார்கள். மும்பையில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்கள் பீகாரிலும், ஹரியானாவில் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்திலும் கணக்கெடுக்கப்படுகிறார்கள். தற்போதைய கணக்கெடுப்பு, மக்கள் காணப்படும் இடங்களிலேயே அவர்களைக் கணக்கிடுகிறது. ஆனால், இது அவர்களின் அரசியல் அல்லது குடியுரிமை உரிமைகளைப் பிரதிபலிக்கவில்லை. பட்டியலில் உள்ள பிரச்சனை என்னவென்றால் இடம்பெயர்ந்து வாழும் மக்கள், தாங்கள் வாழும் மற்றும் வேலை செய்யும் இடத்தில் பதிவு செய்யப்படாமல், தங்கள் கிராமங்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் தாங்கள் வசிக்கும் நகரங்களில் உள்ளூர் தேர்தலில் வாக்களிக்க முடிவதில்லை. சிலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க பணம் இல்லாததால், வாக்களிக்க முடிவதில்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலர், தாங்கள் தற்போது வாழாத கிராமங்களின் பிரச்சினைகளுக்காக வாக்களிப்பதன் மூலம், தாங்கள் உண்மையில் வசிக்கும் நகரங்களில் குரலற்றவர்களாக  இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்




இது ஒரு சிக்கலை உருவாக்குகிறது : இடம்பெயர்ந்து வந்தவர்களையும் சேர்த்து, மொத்த மக்கள்தொகையின் அடிப்படையிலேயே நகர நிர்வாகங்கள் திட்டமிடப்படுகின்றன. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் வேறு இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்திருப்பதால், அவர்களால் உள்ளூரில் வாக்களிக்க முடிவதில்லை. இதனால், நகர்ப்புற நிர்வாகம் மக்கள் பொறுப்புக் குறைவானதாகிறது. மேலும், கிராமப்புறங்கள் அங்கு வசிக்காத மக்களுக்கான வளங்களைத் திட்டங்கள் மூலம் பெறுகின்றன.


சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க, மக்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், அங்கு 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்காவிட்டால், வேலை செய்யும் இடத்திலேயே பதிவு செய்து வாக்களிக்க தேர்தல் சட்டம் அனுமதிக்கிறது; சில சமயங்களில் அதைக் கட்டாயமாக்குகிறது. இதனால், பல மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பை பொருளாதாரத்திற்கு அளித்தாலும், வாக்களிக்க முடியாமல் போகாமல் இருக்க, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இணைந்து வாக்காளர் பட்டியலை துரிதமாகப் புதுப்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது முக்கியமாக காகிதத்திற்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்கின்றனர். இது கணக்கெடுப்பை வேகப்படுத்துகிறது, தவறுகளைக் குறைக்கிறது, நிகழ்நேர கண்காணிப்பை அனுமதிக்கிறது, மற்றும் முடிவுகளை விரைவுபடுத்துகிறது. ஆனால், சில ஆபத்துகளையும் கொண்டுள்ளது என்று எச்சரிக்கின்றனர்.  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பெயர், முகவரி, பயோமெட்ரிக்ஸ் (Biometrics) மற்றும் சாதி, வருமானம் மற்றும் குடியேற்ற வரலாறு போன்ற தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும். டிஜிட்டல் மயமாக்கப்பட்டவுடன், இந்தத் தரவை தேடலாம் மற்றும் தகவல்களை இணைய வழியிலயே இணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  இது புள்ளிவிவரங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா அல்லது ஆதார், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு அல்லது வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு முழுமையான குடிமகன் சுயவிவரங்களை உருவாக்கப் பயன்படுமா என்பதுதான் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது மக்களைக் கணக்கிடுவதே தவிர, அவர்களைக் கண்காணிப்பது அல்ல என்பதை குடிமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அது காவல்துறையினருடன் பகிரப்படவோ அல்லது குடியுரிமைச் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படவோ கூடாது. தரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிப்பட்ட தணிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில்நுட்பம் கணக்கெடுப்பை வேகமாகவும் துல்லியமாகவும் மாற்ற முடியும், ஆனால், சட்டவிதிகள்தான் நம்பகத்தன்மையுடன் கூடிய பாதுகாப்பை வழங்குகின்றன.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது நியாயமானதாக இருக்க வேண்டும், ஒன்றிய அரசின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது. தரவு சேகரிப்பின்போது ஒவ்வொரு மாநிலமும் அதன் தரவை அணுக அனுமதிக்கப்பட வேண்டும். மாவட்டவாரியான முன்னேற்றத்தை பொதுத் தளங்களில் வெளியிட வேண்டும். முடிவுகள் இறுதியாவதற்கு முன், தன்னாட்சி ஆய்வுகள் மூலம் தரவின் துல்லியம் சரிபார்க்கப்பட வேண்டும். தரவு தவறாகப் பயன்படுத்தப்படவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டுப் பகிரப்படவோ கூடாது. சாதி ரீதியான தரவு பத்தாண்டிற்கும்  மேலாக மறைக்கப்பட்ட 2011 -ஆம் ஆண்டின் நிகழ்ந்த சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) மீண்டும் நடக்கக்கூடாது. 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு எதைக் கணக்கெடுக்கிறதோ, அது வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கூட்டாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நடைமுறைகளைச் சார்ந்துள்ளது என்கின்றனர்.


2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் (Census 2027) அனைத்து எதிர்கால முடிவுகளுக்கும் வளங்கள், பிரதிநிதித்துவம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றுக்குமான அடிப்படை ஆகும். ஆறுவருட தாமதம் ஏற்கெனவே சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது. மேலும் தாமதங்களையோ அல்லது முழுமையற்ற நடவடிக்கைகளையோ நாம் சகித்துக்கொள்ள முடியாது என்கின்றனர்


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 விரிவானதாக (சாதி உள்ளடக்கப்பட்டதாக), துல்லியமானதாக (மக்கள் வாழும் இடத்திலேயே எண்ணப்படுவதாக), வெளிப்படையானதாக (மாநிலங்களுக்கு தரவு அணுகல் வழங்குவதாக), பாதுகாக்கப்பட்டதாக (எண்ணிக்கை கணக்கெடுப்பு கண்காணிப்பாக மாறாமல் இருப்பதாக) இருக்க வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுப்பதை நிறுத்தும் குடியரசு, இறுதியில் அக்கறை செலுத்துவதையும் நிறுத்திவிடும். நியாயத்துடனும் தொலைநோக்குடனும் நாம் எண்ணும்போது, நீதியுடன் ஆட்சி செய்கிறோம். 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது நாம் எத்தனை பேர் என்பது மட்டுமல்ல. ஜனநாயகமாக நாம் யாராக இருக்கத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதாகும்.


குரேஷி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் "ஒரு ஆவணப்படுத்தப்படாத அதிசயம்: மாபெரும் இந்தியத் தேர்தல் உருவான விதம்" (An Undocumented Wonder: The Making of the Great Indian Election) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.


original link:

Census is about who we are. It cannot ignore caste and migration.


Share: