இரண்டு ஐயங்கார் பிரிவுகளுக்கு இடையேயான யார் முதலில் வழிபாடு செய்வது என்பது குறித்த 200 ஆண்டுகாலப் பிரச்சினை, இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. -அருண் ஜனார்த்தனன்

தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ வைணவர்களின் இரண்டு பிரிவுகளும் ஒரே தத்துவஞானியைப் பின்பற்றி ஒரே தெய்வத்தை வழிபடுகின்றன. இருந்த போதிலும், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவராஜசுவாமி கோயிலில் செய்யப்படும் வழிபாடுகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வருகிறது.


தமிழ்நாட்டில் நடக்கும் இந்த மதச் சண்டை ஆன்மீகத்தைப் பற்றியது அல்ல. மாறாக, உலகியல் சார்ந்த விவகாரத்தைப் பற்றியது. யார் முன் வரிசைகளில் நிற்பது, யார் முதலில் மந்திரங்களை உச்சரிப்பது, அதிகாலையில் தெய்வத்தின் முன் உள்ள கல் மண்டபத்தில் யாருடைய குரல் முதலில் ஒலிக்க வேண்டும் என்பது போன்ற விவகாரங்களைப் பற்றியதுதான்.


காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவராஜசுவாமி கோயிலின் கருங்கல் மண்டபங்களுக்குள், இந்தச் சிக்கல்கள் நூற்றாண்டுக்கும் மேல் சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன. கோயில் சடங்குகளை வடிவமைத்துள்ளன, இப்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளன. இந்த வாரம், அமைதியான தீர்வைக் கண்பதற்காக, உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌலை நடுவராக நியமித்துள்ளது.


இந்த சர்ச்சை ஸ்ரீ வைஷ்ணவர்களின் இரண்டு பிரிவுகளான தென்கலை மற்றும் வடகலை பிரிவினருக்கு இடையே நிலவுகிறது. இந்த இரண்டு பிரிவினரும் ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இரண்டு பிரிவினரும் 10-ஆம் நூற்றாண்டின் தத்துவஞானியான ராமானுஜரைப் பின்பற்றுகிறார்கள். இருவரும் ஒரே தெய்வத்தை வணங்குகிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு பிரிவினரும் ஒரு வெவ்வேறு ஆன்மீகப் பரம்பரையைச் சார்ந்திருப்பதாகக் கூறி, சடங்கு வழிபாடுகளின் போது தங்களின் சொந்த மந்திரங்களை உச்சரிக்கும் உரிமையைக் கோருகின்றனர்.


நவம்பர் 2025-ல் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது போல, இந்தச் சர்ச்சை வழிபாட்டுச் சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக இரண்டு மதக் குழுக்களுக்கு இடையே எழுந்துள்ளது. இந்த முரண்பாடு 200 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது.


இந்த சர்ச்சை எதைப் பற்றியது?


நுழைவு அல்லது நம்பிக்கை பற்றியது அல்ல. மாறாக, சடங்கு வரிசை பற்றியது. இந்த விவகாரம், நீதிமன்றம் மீண்டும் மீண்டும் குறிப்பிடும் 'அத்யாபக மிராசு' எனப்படும் கோயில் சேவைகளைச் செய்வதோடு தொடர்புடைய ஒரு பதவி பற்றியே சுழல்கிறது.


இந்தப் பதவிக்கு குறிப்பிட்ட கடமைகள் உள்ளன: நாலாயிர திவ்யப் பிரபந்தம் (4,000 தமிழ் பாசுரங்கள்) பாராயணத்தை வழிநடத்துவது, பாராயணத்திற்கு முன் ஒரு மங்கள வாழ்த்து மந்திரத்தை உச்சரிப்பது மற்றும் இறுதிப் புகழ்ச்சிப் பாடலுடன் முடிப்பது ஆகியவை அந்தக் கடமைகளாகும்.


தென்கலை பிரிவினர், இந்தப் பதவியும், அதன் காரணமாக இந்தப் பாராயணங்களை வழிநடத்தும் உரிமையும் தங்களுக்கு மட்டுமே உரியது என்று கூறுகின்றனர். 15-ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி மணவாள மாமுனிகளைப் போற்றும் தங்களின் 'ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்' என்ற மங்கள வாழ்த்து மட்டுமே பிரபந்தத்திற்கு முன் பாடப்பட வேண்டும் என்றும், தங்களின் 'வாழி திருநாமம்' மட்டுமே பூஜையை முடிக்கும் பாடலாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


வடகலை சம்பிரதாயம், 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி வேதாந்த தேசிகரை போற்றும் இச்சம்பிரதாயம், தங்களுக்கும் ராமானுஜ தயாபாத்ரம் என்ற தங்கள் சொந்த தனியனையும், தேசிகருடன் தொடர்புடைய பாசுரங்களையும் பாட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடுகிறது.  இந்த வேறுபாடு — யாருடைய வார்த்தைகள் (தொடக்க மந்திரம்/தனியன்) வழிபாட்டைத் தொடங்கி, யாருடைய வார்த்தைகள் (முடிவு வாழி திருநாமம்) வழிபாட்டை முடிக்கின்றன என்பதே — வழக்கின் மையமான பிரச்சினையாகும்.  


இது ஏன் நீதிமன்ற விவகாரமாக இருக்கிறது?


ஏனெனில் அது தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. நவம்பரில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு முந்தைய வழக்குகளை கவனமாகக் கண்டறிந்தது: 1882-ஆம் ஆண்டில் (கிருஷ்ணசாமி தாதாச்சாரியார் மற்றும் பிறர் vs கிருஷ்ணமாச்சாரியார் மற்றும் பிறர்), கூடுதல் அமர்வு, ஒரு வரையறுக்கப்பட்ட செயல்பாட்டைத் தவிர, காஞ்சிபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவின் பிரத்யேக உரிமை அதியபாக மிராசி (Adhiapaka Mirasi) என்று தீர்ப்பளித்தது. வடகலை பிரிவினர் சாதாரண பக்தர்களாக வழிபாட்டில் கலந்துகொள்ளலாம். ஆனால், தனிப்பட்ட மந்திரங்களை உபசரிக்க கூடாது என்று நீதிமன்றம் கூறியது.


1915-ஆம் ஆண்டில், பூஜை மற்றும் ஊர்வலங்களின் போது, ​​தென்கலை மந்திரத்தை மட்டுமே கூற முடியும் என்று நீதிமன்றம் மீண்டும் கூறியது. வடகலையினர் பங்கேற்கலாம். ஆனால், தனி மந்திரக் குழுவை உருவாக்க முடியாது. 1939 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள், சடங்குத் தலைமை மற்றும் முன் வரிசை சபை பதவிகள் தென்கலை அதியபாக மிராசிதர்களுக்குச் சொந்தமானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தின (மிராசி என்றால் பரம்பரை உரிமைகள், இந்த விவகாரத்தில் மிராசிதர்கள் என்றால் பரம்பரை அலுவலக உரிமையாளர்கள் ஆவார்). சுருக்கமாக, நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தை ஒரு மத நம்பிக்கையாகக் கருதாமல், ஒரு பாரம்பரிய விவகாரமாகவும், கோயில் கடமைகளுடன் தொடர்புடைய உரிமைகளாகவும் கருதியுள்ளன.


தற்போதைய மோதலுக்கு என்ன காரணம்?


நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பல மனுக்கள் இப்போது ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தென்கலை பிரிவினர் தங்களின் பாராயணங்களுக்கு இடையூறு செய்யப்படுவதாகக் கூறி காவல்துறை பாதுகாப்பு கோரினர். வடகலை பிரிவினர், வழிபாட்டின்போது தங்கள் மந்திரங்களை உச்சரிப்பதைத் தடுத்த கோயில் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு மனு, வேதாந்த தேசிகரின் 750-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாடல்களைப் பாட அனுமதி கோரியது பற்றியது. முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.


அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட பழைய நீதிமன்றத் தீர்ப்புகளைச் பின்பற்றி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறு என்று வடகலை மனுதாரர்கள் கூறினர். இது, மக்களுக்குத் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்கும் (freedom of religion) இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவுக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிட்டனர். பரம்பரை கோயில் பணிகளை முடிவுக்குக் கொண்டுவந்த 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் திருத்தச் (Tamil Nadu Hindu Religious & Charitable Endowment Amendment Act) சட்டத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, இந்தச் சட்டத்திற்குப் பிறகு மதச் சடங்குகளைச் செய்வதற்கான (mirasi) பழைய பரம்பரை உரிமைகள் தொடர முடியாது என்று அவர்கள் வாதிட்டனர்.


உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?


நவம்பர் 2025-ல் உயர்நீதிமன்ற தீர்ப்பில், மத சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், பிரிவு 25 முழுமையானது அல்ல என்றும் இது பொது ஒழுங்கு மற்றும் மற்றவர்களின் உரிமைகளுக்கு உட்பட்டது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது


குறிப்பிட்ட, பாத்திரங்களை மையமாகக் கொண்டு சடங்குகள் நீண்டகாலமாக ஒழுங்கமைக்கப்பட்டு வரும் கோவில்களில், ஒரே நேரத்தில் நிகழும் போட்டி மந்திர உச்சரிப்புகள் உறுதியாக இருக்கும் சடங்கு ஒழுங்கை சீர்குலைக்கக்கூடும் என்று நீதிமன்றம் விளக்கியது. இவ்வாறு, பரம்பரையாக மந்திரம் கூறிவருபவர்களின் பங்கை வரையறுக்கும் முந்தைய ஆணைகள் நடைமுறையைத் தொடர்ந்து நெறிப்படுத்தி வந்தன.


இப்போது உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?


உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி S. K. கவுலை முதன்மை மத்தியஸ்தராக நியமித்த நீதிமன்ற அமர்வு, தமிழ், சமஸ்கிருதம் மற்றும் கோயில் சடங்கு வரலாற்றை நன்கு அறிந்த இரண்டு நிபுணர்களை இணைக்க அனுமதித்தது.

200 ஆண்டுகால வாதம்


200 ஆண்டுகளுக்குப் பிறகும், முதல் வரிசையில் யார் நிற்கிறார்கள், யார் பாடலைத் தொடங்குகிறார்கள், தெய்வத்திற்கு முன் யாருடைய பரம்பரை பெயரிடப்பட்டுள்ளது என்ற வாதம் அப்படியே உள்ளது. மன்றம் மட்டுமே மாறிவிட்டது.


நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, இவை பதவி மற்றும் முன்னுதாரணம் தொடர்பான கேள்விகள் பற்றியதாக பார்க்கிறது. பக்தர்களைப் பொறுத்தவரை, இவை சொந்தம் என்ற உணர்வு தொடர்பான கேள்விகள் பற்றியதாக உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தீர்ப்புகள், தடை உத்தரவுகள் மற்றும் மேல்முறையீடுகளுக்குப் பிறகு, இந்த வழக்கு ஒரு புதிய சட்டக் கோட்பாட்டிற்கு அல்லாமல், மீண்டும் ஒரு உரையாடலுக்கே திரும்பியுள்ளது.


காகிதத்தில் ஒரு தொழில்நுட்ப விதியாகத் தோன்றுவது, நடைமுறையில் மிகவும் தனிப்பட்ட விவகாரமாக உள்ளது. முதலில் மந்திரங்களை உச்சரிப்பது என்பது வெறும் பேசுவது மட்டுமல்ல. அது பாரம்பரியத்தைக் காப்பவர் (custodian of tradition) என்பதைக் காட்டுகிறது. தெய்வத்தின் முன் சபையின் முதல் வரிசைகளில் நிற்பது என்பது வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வரும் நடை முறையாகும்.


நீதிபதி கௌலின் மத்தியஸ்த முயற்சி, நீதிமன்றங்களால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யக்கூடும்: யார் முதலில் மந்திரம் உச்சரிப்பது என்பது குறித்து சண்டையிடாமல், இரண்டு சமூகத்தினரும் ஒன்றாக அதன்முன் நின்று வழிபாடு  தெய்வத்தின் முன் பிராத்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும்.


 Original Article : 200-year dispute between two Iyengar sects, now in top court  — who prays first? -Arun Janardhanan

Share: