பொருளாதார ஆய்வறிக்கை 2025-26 -குஷ்பூ குமாரி

பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, இந்தியாவின் முதல் 'ஞாயிற்றுக்கிழமை நிதிநிலை அறிக்கை' (Sunday Budget) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான 2025-26-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025–26-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) சமர்ப்பித்தார். இந்த ஆய்வறிக்கை, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான நிதி அமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. 



பொருளாதார ஆய்வறிக்கை 2025-26: முக்கிய அம்சங்கள்


#1 பொருளாதார நிலை


2025–26-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திறன் (Potential growth rate) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 6.5%-லிருந்து 7%-ஆக உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8% முதல் 7.2%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டிற்கான 7.4% வளர்ச்சியை விடக் குறைவான மதிப்பீடாகும். 2026-ஆம் நிதியாண்டில் 'தனியார் இறுதி நுகர்வுச் செலவு' (Private Final Consumption Expenditure) 7.0% வளர்ச்சியை எட்டியுள்ளது; இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 61.5% பங்கைக் கொண்டுள்ளது. இது 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகக் கூறப்படுகிறது. 


#2 வெளிநாட்டு வர்த்தகத் துறை


2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 6.1% வளர்ச்சியாகும். குறிப்பாக, சேவைத் துறையின் (Services sector) ஏற்றுமதி 387.6 பில்லியன் டாலர்களை எட்டியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வர்த்தகப் பற்றாக்குறை நிலவினாலும், சேவைத் துறை மூலமான வருமானமும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணமும் அந்தப் பற்றாக்குறையைச் சமன் செய்ய உதவுகின்றன. இதனால் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) கட்டுப்பாட்டிலேயே உள்ளது.


சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல்களுக்கு இடையிலும், உலக சந்தைகளை நிலையான முறையில் அணுகுவதை உறுதி செய்வதன் மூலம், இந்தியாவின் அதிகரித்துவரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreement (FTAs)) நாட்டின் வர்த்தக உத்திக்கு (Trade Strategy) பெரும் துணையாக நிற்கின்றன.



#3  வேளாண் மற்றும் உணவு மேலாண்மை


இந்தியாவின் தேசிய வருமானத்தில் வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த தொழில்கள் வெறும் ஐந்தில் ஒரு பங்கு (1/5) பங்களிப்பையே வழங்குகின்றன. ஆனால், நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 46.1% பேர் இத்துறையிலேயே பணியாற்றுகின்றனர். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வேளாண் தொழில்துறை மிக முக்கியமானது என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


இந்தியாவின் விவசாயத் துறை சமீபகாலமாக வளர்ச்சியைக் கண்டுள்ள போதிலும், அதன் உற்பத்தித் திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் பெரும் சவால்களைச் சந்தித்து வருவதாக 'பொருளாதார ஆய்வு அறிக்கை' தெரிவித்துள்ளது. உரத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரித்தல், நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்துதல் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை (வெவ்வேறு பயிர்களை விளைவிப்பது) ஊக்குவித்தல் போன்ற முக்கியமான மாற்றங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


#4 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்


உலகளாவிய மூலதனச் சந்தைகளில் (Global capital markets) நிதி ஏராளமாக உள்ள போதிலும், காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளுக்கு (Climate action) மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது என்று பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பசுமை மாற்றத்திற்கான (Green transition) முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உள்நாட்டு நிதி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. சீனா தவிர்த்த வளர்ந்து வரும் நாடுகள், சர்வதேச காலநிலை நிதியில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.


#5 சுகாதாரம்


இந்தியாவின் சுகாதாரக் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதாவது, சிகிச்சை அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மக்கள் தொகையே நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்பதை இது அங்கீகரிக்கிறது. அதே வேளையில், சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் மத்தியில் அதிகரித்துவரும் டிஜிட்டல் அடிமைத்தனம் (Digital Addiction) மற்றும் திறன்பேசிகள் பயன்படுத்தும் நேரத்தால் (Screen-time) ஏற்படும் மனநலப் பாதிப்புகள் குறித்தும் இந்த ஆய்வு கவலை தெரிவிக்கிறது.


மனநலச் சேவைகளை மேம்படுத்த, 'டெலி-மானஸ்' (Tele-MANAS) திட்டத்தை வெறும் அவசரகால ஆலோசனைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், டிஜிட்டல் அடிமைத்தனம் (Digital Addiction) தொடர்பான சிக்கல்களைக் கையாளவும் விரிவுபடுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இணையப் பாதுகாப்பு (Cyber Safety) குறித்த கல்வி, சக நண்பர்கள் மூலம் வழிகாட்டுதல் (Peer Mentoring), பள்ளிகளில் கட்டாய உடற்பயிற்சி, திறன்பேசிகள் பயன்படுத்தும் நேரத்தை (Screen Time) மேலாண்மை செய்யப் பெற்றோர்களுக்குப் பயிற்சி அளித்தல், வயதிற்கு ஏற்ற டிஜிட்டல் பயன்பாட்டு விதிகளை உருவாக்குதல், தீங்கான உள்ளடக்கங்களுக்கு டிஜிட்டல் நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 


#6 கல்வி


எட்டாம் வகுப்பிற்குப் பிறகும் அதிகமான மாணவர்கள் பள்ளியில் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது; ஏனெனில், இடைநிலைக் கல்வியில் (Secondary level) மாணவர் சேர்க்கை இன்னும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் தொடக்கக் கல்வி அளவில் அனைவரும் பள்ளியில் சேருவது கிட்டத்தட்ட சாத்தியமாகிவிட்டாலும், அது மாணவர்களின் கற்றல் திறனை (Learning outcomes) சமமாக மேம்படுத்தவில்லை. குறிப்பாக ஆரம்பக் கல்விக்கு பிந்தைய நிலையில், நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 52.2 சதவீதம் மட்டுமே உள்ளது.


பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (District Institute of Education and Training (DIET)) மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (State Council of Educational Research and Training (SCERT)) நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்துதல் மற்றும் பள்ளி நிர்வாகத்தில் பெற்றோர் மற்றும் சமூகத்தினரை ஈடுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் உள்ளடக்கிய (inclusive) மற்றும் மாணவர் நலனை மையமாகக் கொண்ட கற்றல் சூழலை உருவாக்க முடியும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.


#7 இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பின் பரிணாம வளர்ச்சி


செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் போதிய வசதிகள் இல்லாமையைக் கருத்தில்கொண்டு, இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. அவசரப்பட்டு எந்த ஒரு திட்டத்திலும் சிக்கிக்கொள்வதையோ அல்லது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதையோ தவிர்க்க, நமது திட்டங்களை முறைப்படி வரிசைப்படுத்த வேண்டும். முதலில், பல்வேறு துறைகளை ஒன்றிணைக்க வேண்டும், பிறகு திறன்களை மேம்படுத்த வேண்டும், இறுதியாக மட்டுமே கட்டாயமான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அப்போதுதான் நிறுவனங்களும் சந்தை நிலவரங்களின் போக்கிற்கு ஏற்ப இணைந்து வளர முடியும் என்பதையும் சுட்டிக்கட்டியுள்ளது. 


#8 பணவீக்கம்


பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது, இருப்பினும் வரும் காலங்களில் இது சற்று அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை பெருமளவு குறைந்ததன் காரணமாக, சில்லறை பணவீக்க விகிதமானது 2025–26 நிதியாண்டில் 1.7 சதவீதமாகக் குறைந்து, ஒரு தெளிவான சரிவைக் காட்டியுள்ளது.


#9 2026-ஆம் ஆண்டிற்கான மூன்று உலகளாவிய சூழல்கள்


"வரும் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை (Survey), உலகளவில் ஏற்படக்கூடிய மூன்று விதமான நெருக்கடிச் சூழல்களைப் பட்டியலிட்டுள்ளது: முதலாவது, '2025-ஆம் ஆண்டில் இருந்த அதே நிலை தொடர்வது'; இரண்டாவது, உலக நாடுகள் தங்களுக்குள் பிளவுபட்டு ஒழுங்கற்ற முறையில் செயல்படுவது; மூன்றாவது, நிதி, தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் தனித்தனியாக வராமல் ஒன்றோடொன்று கலந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது. இந்த மூன்று சூழல்களிலும் இந்தியாவுக்கு இருக்கும் பொதுவான ஆபத்துகள் - வெளிநாட்டு முதலீடுகள் குறைவதும், அதன் விளைவாக இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் பாதிப்புகளும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த பாதிப்புகள் எந்த அளவிற்குப் பெரியதாக இருக்கும் மற்றும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் மட்டுமே மாற்றம் இருக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


#10 சுதேசி - ஒரு கட்டுக்கோப்பான செயல்முறை


2025-26-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, ‘உள்நாட்டு உற்பத்தி’ (சுதேசி) என்பது தற்போது 'தவிர்க்க முடியாதது மற்றும் அவசியமானது' என்று கூறியுள்ளது. ஏனெனில், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் கார்பன் வரி விதிமுறைகள் (Carbon border rules) காரணமாக உலகளாவிய வர்த்தகம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது; இது 'எளிமையான உலகமயமாக்கல்' (Naïve globalisation) முடிவுக்கு வந்ததைக் காட்டுகிறது. மேலும், இந்திய நிறுவனங்கள் நீண்டகாலத் திட்டங்களில் முதலீடு செய்வதிலும், உலக அளவில் போட்டியாளர்களாக உருவெடுப்பதிலும் போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


நிறுவனங்களின் செயல்பாட்டு கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இந்த ஆய்வறிக்கை ஒரு முக்கியமான கருத்தைக் கூறியுள்ளது. அதில், மூலப்பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளுக்கான வாய்ப்புகள் எப்போதும் எளிதாகக் கிடைத்துவிடும் என்றோ அல்லது அவை நிரந்தரமாக நீடிக்கும் என்றோ இனி நாம் எதிர்பார்க்க முடியாது; அத்தகைய சவாலான உலகில்தான் இன்று இந்தியா இயங்கிக்கொண்டிருக்கிறது.


"#11 வாக்குகளுக்காகச் செய்யப்படும் நிதி விரயங்கள் குறித்த கவலை


இந்த ஆய்வறிக்கை சில முக்கியப் பொருளாதாரக் கவலைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது: முதலாவதாக, வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிக்கப்படும் இலவசங்கள் மற்றும் சலுகைகள் (Fiscal Populism); இரண்டாவதாக, மக்களுக்கு நேரடியாகப் பணமாக வழங்குவதால் (Cash Transfers) உள்கட்டமைப்பு போன்ற நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி (Capital Expenditure) குறைந்துவிடுவது; மூன்றாவதாக, மாநிலங்களின் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரிப்பது. இதனால், வருவாய் உபரி (Revenue Surplus) கொண்ட மாநிலங்களின் எண்ணிக்கை 2019 நிதியாண்டில் 19-ஆக இருந்தது, 2025-ஆம் நிதியாண்டில் 11-ஆகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 


#12 பரிந்துரைகள்


இந்தியா உலகளாவிய மூலதன வரவை (Global Capital Flows) நம்பியிருப்பதால், வரும் ஆண்டில் பணப்புழக்கம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு (Survey) கூறியுள்ளது. உலக நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்களின் பாதிப்புகள் பின்னாளில் தெரியக்கூடும். மேலும், பணப்புழக்கம் குறைதல், மூலதன வரத்து பாதிக்கப்படுதல் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிதல் போன்ற அபாயங்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் நிலை மதிப்பை கொண்ட மெய்நிகர் நாணயங்கள் (Stablecoins) போன்ற காரணங்களால் இந்தியாவின் முதலீடுகள் வெளியேறுவது, நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அபாயமாகக் கூறப்படுகிறது. 


அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, அரசு துரிதமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அதேபோல், இந்தியாவில் மக்களின் வருமானம் உயரும்போது, உள்ளூர் உற்பத்தி அதிகரித்தாலும் இறக்குமதிகளும் இயல்பாகவே அதிகரிக்கும். எனவே, இந்த வளர்ந்துவரும் இறக்குமதிச் செலவுகளை ஈடுகட்ட, ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் மூலம் போதுமான அந்நியச் செலாவணியை இந்தியா அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. 


பொருளாதார ஆய்வறிக்கை குறித்து


1. பொருளாதார ஆய்வறிக்கை என்பது, முடிவடையப் போகும் ஒரு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பற்றி விரிவாக விளக்கும் ஒரு அறிக்கையாகும். இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51 ஆம் ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டு வரை, இது நிதிநிலைத் திட்ட அறிக்கையுடன் இணைத்தே தாக்கல் செய்யப்பட்டது.


2. 2010-11 முதல் 2020-21-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார ஆய்வறிக்கை இரண்டு தொகுதிகளாக (Two Volumes) வெளியிடப்பட்டது. அதில் ஒரு கூடுதல் தொகுதியானது, தலைமைப் பொருளாதார ஆலோசகரின் (Chief Economic Adviser (CEA)) ஆளுமையையும் தனித்துவமான சிந்தனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. அது பெரும்பாலும் பொருளாதாரத்தின் முக்கிய சிக்கல்கள் மற்றும் விவாதங்களைப் பற்றி விரிவாகக் கையாண்டது. பின்னர் 2022-23-ஆம் ஆண்டு முதல், இந்த ஆய்வறிக்கை மீண்டும் பழையபடி ஒரே ஒரு தொகுதியாக மாற்றப்பட்டது.


3. பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றோ, அல்லது அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றோ அரசாங்கத்திற்கு எந்தவிதமான அரசியலமைப்புச் சட்டக் கடப்பாடும் இல்லை என்கின்றனர். அந்த அறிக்கையில் உள்ள அனைத்து ஆலோசனைகளையும் நிராகரிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு. இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்றாலும், அதன் முக்கியத்துவம் கருதியே இந்த அறிக்கையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.


 Original Article : Economic Survey 2025-26 -Khushboo Kumari

Share: