இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்களிப்பு, உற்பத்தித் திறன் மற்றும் அவர்களது நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த, இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன ?
இந்தியா தனது 2026–27-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்குத் தயாராகி வரும் வேளையில், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு முக்கியமான ஆனால் கவனிக்கப்படாத தடையைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. அதுதான் பெண்களுக்கான 'நேரமின்மை'. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) பெண்களின் பங்களிப்பு சுமார் 18% மட்டுமே உள்ளது. இதற்கு அவர்கள் குறைவாக உழைக்கிறார்கள் என்பது காரணமல்ல; மாறாக, அவர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை மற்றும் அவை தேசிய வருமானத்தில் கணக்கிடப்படுவதும் இல்லை. இந்தியப் பெண்களில் சுமார் 40% பேர் மட்டுமே தொழிலாளர் சார்ந்த உற்பத்தி சந்தையில் உள்ளனர். அவர்களும் பெரும்பாலும் ஊதியம் இல்லாத வேளாண் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். அதே சமயம், வேலைக்குச் செல்லாத பெண்களில் 60% பேர், தங்களின் வீட்டு வேலைகளும் குடும்பப் பராமரிப்புமே தாங்கள் வேலைக்குச் செல்லாததற்குக் காரணம் என 'காலமுறை தொழிலாளர் படை ஆய்வில்' (Periodic Labour Force Survey (PLFS)) தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்குப் பொறுப்பான வீட்டுப் பராமரிப்புப் பணிகள், திறன் பற்றாக்குறை, வெளியில் சென்று வருவதற்கான கட்டுப்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் பெண்களின் உழைப்பிற்கு ஏற்ற கண்ணியமான வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பது போன்ற - தேவை மற்றும் வழங்கல் (Supply and Demand) ஆகிய இருதரப்பு சிக்கல்களால் இந்நிலை உருவாகிறது. எனவே, பெண்களின் உழைப்பு முறையாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான நேரத்தை மற்ற சுமைகளிலிருந்து விடுவித்து, அதை உற்பத்தித் திறன் மிக்கதாக மாற்ற வேண்டும். இதைச் சாத்தியமாக்குவதற்கு ஒன்றிய நிதிநிலை அறிக்கை, குறிப்பாக பாலின வரவு செலவுத் திட்டம் (Gender Budget) ஒரு முக்கிய கருவியாகக் கருதப்படுகிறது.
திட்டங்களை மறுசீரமைத்தல்
பெண்களின் நேரத்தைச் சேமிக்கவும், அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் 2026–27-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துகின்றனர். முதலாவதாக, பெண்கள் எந்தெந்த வேலைகளுக்காக அதிக நேரத்தைச் செலவிடுகிறார்களோ, அந்தத் துறைகளில் முதலீடுகள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். 2025-ஆம் ஆண்டின் நேரப் பயன்பாட்டு ஆய்வின்படி (Time Use Survey), பெண்கள் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுக்காகச் செலவிடும் நேரம் 2019-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 364 நிமிடங்களாக இருந்தது. அது 2024-ஆம் ஆண்டில் 366 நிமிடங்களாகச் சற்று அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ஊதியம் பெறும் வேலைகளுக்காக அவர்கள் செலவிடும் நேரம் 68 நிமிடங்களிலிருந்து 76 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஊதியம் உள்ள மற்றும் ஊதியம் இல்லாத வேலைகளைச் சேர்த்து பெண்களின் மொத்த வேலை நேரம் அதிகரித்துள்ளது.
பெண்களுக்கெனத் தனித்துவமான நிதி ஒதுக்கீடு திட்டங்களில் (Gender Budget) பெரும் பங்கைக் கொண்டுள்ள நலத்திட்டங்களையும் சமூகத் திட்டங்களையும் மறுஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டங்களை வடிவமைக்கும் போதும் மதிப்பீடு செய்யும் போதும், பெண்கள் தங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுகிறார்கள் (Time-use measures) என்பதைக் கணக்கில் கொள்வது மிக முக்கியமாகிறது.
உதாரணமாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்ற பெருமளவிலான திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இது பெண்களை அதிகாரப்படுத்துவதாகக் கருதப்படுகிறது மற்றும் கணிசமான பாலின பட்ஜெட்டைக் கொண்டுள்ளது, ஏனெனில் வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், வீட்டு உரிமையை ஒரு நிலையான சொத்திலிருந்து பெண்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் வசதியாக மாற்ற, இத்திட்டம் பட்ஜெட் மற்றும் அறிக்கையிடலின் அலகாக 'பாலின முழுமையான வீடு' (gender-complete house) என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் — அதில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம், மின்சார வசதி, செயல்படும் கழிப்பறைகள் மற்றும் சுத்தமான சமையல் எரிபொருள் உள்ளிட்ட நேரத்தை மிச்சப்படுத்தும் உள்கட்டமைப்புகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வசதிகள் வெவ்வேறு திட்டங்களின்கீழ் இருந்தாலும், அவை பெண்களின் நலன் சார்ந்த பார்வையோடு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டமானது (Pradhan Mantri Awas Yojana (PMAY)) தண்ணீர் (ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission)), சுகாதாரம் (தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission), மின்சாரம் (கூரை சூரிய மின்சக்தி (rooftop solar)) மற்றும் சமையல் எரிபொருள் (உஜ்வாலா (Ujwala)) போன்ற திட்டங்களுடன் தானாகவே இணைக்க வழிவகை செய்யலாம்.
பெண்களின் வேலைவாய்ப்பு என்பது ஒருங்கிணைக்கப்படாத மற்றும் போதிய நிதி வசதியில்லாத குழந்தை பராமரிப்பு சேவைகளால் பாதிக்கப்படுகிறது. தற்போது, பால்னா (Palna) காப்பகங்கள், அங்கன்வாடிகள் மற்றும் பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்து திட்டங்கள் (Prime Minister's Overarching Scheme for Holistic Nourishment (POSHAN)) தனித்தனியாகச் செயல்படுகின்றன. இதனால் ஒரே மாதிரியான உள்கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டாலும், முழுமையான பலன் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கர்நாடகாவின் 'கூசின மானே' (Koosina Mane) போன்ற திட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பாலின வரவுசெலவுத் திட்டமானது (Gender Budget), குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், அங்கன்வாடிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கான நிதியை ஒருங்கிணைத்து, 'ஒரே பராமரிப்பு உள்கட்டமைப்பு சாளரத்தின்கீழ்' (Care Infrastructure Convergence Window) கொண்டு வரலாம். மேலும், எத்தனை மையங்கள் திறக்கப்பட்டன அல்லது எத்தனை வேளை உணவு வழங்கப்பட்டது என்பதை மட்டும் கணக்கிடாமல், பெண்களின் சேமிக்கப்பட்ட நேரம் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பராமரிப்பு நேரங்கள் போன்ற விளைவுகளைப் பற்றிய அறிக்கைகளையும் நிர்வகிக்க வேண்டியது அவசியமாகிறது.
திட்டங்களை மறுவடிவமைப்பு செய்தல்
இரண்டாவதாக, நிதி ஒதுக்கீடுகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைக்கும் முடிவுகளோடு ஒப்பிட வேண்டும். பாலின வரவுசெலவுத் திட்டம் படிப்படியாக வளர்ந்து, மத்திய நிதித்திட்ட அறிக்கையில் 8.9% அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 1% என்கிற சாதனையை எட்டியுள்ளது. இருப்பினும், 2025–26-ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 75%-க்கும் அதிகமானவை பகுதி B (30-99% பெண்களுக்குரியது) மற்றும் பகுதி C (30%-க்கும் குறைவானது) ஆகியவற்றின் கீழ்தான் வருகின்றன. பாலின நலன் சார்ந்த திட்டங்கள் பெரும்பாலும் பொதுவான திட்டங்களோடு இணைக்கப்பட்டு விடுகின்றன என்பதையே இது காட்டுகிறது.
இருப்பினும், தற்போதுள்ள பல திட்டங்கள் பெண்களின் குறிப்பிட்டத் தேவைகளையோ அல்லது தடைகளையோ களையும் வகையில் மாற்றியமைக்கப்படவில்லை; மாறாக, அவை வெறும் 'பெண்களுக்கானத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு அமைச்சகமும் பாலின வரவு செலவுத் திட்டதின்கீழ் நிதியைப் பெறுவதற்கு முன்னரே, தங்கள் திட்டங்களில் பெண்களுக்கான அம்சங்கள் என்னென்ன என்பதைத் தெளிவாகத் திட்டமிட ஊக்குவிக்கப்பட வேண்டும்.
வேளாண் தொழில்துறையானது இந்தப் பாலின இடைவெளியைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் விவசாயத்திலேயே பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் ஊதியமில்லாத குடும்ப உழைப்பாளர்களாகவே இருக்கின்றனர். இருப்பினும், பெண்களுக்கெனத் தனித்துவமான நிதி ஒதுக்கீட்டில் (Gender Budget) வெறும் 4.2% மட்டுமே இத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது.
இதில் பெரும் பகுதி பிரதமர் கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) திட்டத்திற்கே ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் முக்கியமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கே (நில உரிமையாளர்கள்) பயனளிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஆண்களே ஆவர். ஆனால், பெண்களின் ஊதியமில்லா உழைப்பைக் குறைப்பதற்கு இத்திட்டம் எந்த ஒரு மேம்பாட்டு உதவிகளையும் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
தொழிலாளர் பங்கேற்பு விகிதம்
மூன்றாவதாக, பெண்களின் உழைப்பிற்கான தேவையை (Demand) அதிகப்படுத்த வேண்டும்; அப்போதுதான் அவர்களின் நேரம் பயனுள்ள முறையில் செலவிடப்படும். வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களில் 'பெண்களுக்கெனத் தனித்துவமான நிதி ஒதுக்கீடு' (Gender Budgeting) என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு வைத்துள்ள புதிய 'வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை' (Employment Linked Incentive (ELI)) திட்டத்தில், பாலின நிதி ஒதுக்கீடு சேர்க்கப்பட வேண்டும். மேலும், இந்த புதிய வேலைகளில் குறைந்தது 50% பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியறுத்துகின்றனர்.
இந்த நிதியைப் பயன்படுத்தி, பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு நேரடி ஊதிய மானியம் மற்றும் கூடுதல் சமூகப் பாதுகாப்பு போன்ற கூடுதல் சலுகைகளை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தகப்படுகிறது.
ஊரகப்பகுதிகளில், பெண்களே 50 சதவீதத்திற்கும் அதிகமான பயனாளிகளாக இருப்பதால், தற்போது விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Aajeevika Mission (Gramin) (VB-GRAM G)) என பெயர் மாற்றப்பட்டுள்ள MGNREGA (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்க (VB-GRAM G) திட்டத்தின்கீழ் உறுதி அளிக்கப்பட்ட வேலை நாட்களை 100-லிருந்து 125-ஆக உயர்த்தவும், வீட்டிற்கு அருகிலேயே வேலை மற்றும் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் போன்ற பெண்களுக்கு ஏற்ற அம்சங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதிக நிதி ஒதுக்கீடும், பாலின சமத்துவத்தில் தொடர்ச்சியான கவனமும் (சுமார் 50% பாலின நிதி ஒதுக்கீட்டைத் தக்கவைத்தல்) பெண்கள் வேலைவாய்ப்பில் ஏற்படும் இடையூறுகளைப் போக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் தொழில்முனைவு
நான்காவதாக, பெண்கள் தங்கள் தொழில்களை வளர்க்க உதவ வேண்டும். பெண்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் வருமானம் ஈட்ட உதவும் ‘பெண் தொழில்முனைவோர்’ துறைக்கு இப்போதும் போதிய நிதி கிடைப்பதில்லை. பட்ஜெட்டில் பெண்கள் நடத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSMEs)) வெறும் 0.9% நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்தியாவில் பதிவு செய்யப்படாத உற்பத்தி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 60% பெண்கள் வசம் இருந்தாலும், அவற்றில் 4% மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை தையல் தொழில் போன்ற மிகச்சிறிய, தனிநபரால் நடத்தப்படும் நிறுவனங்களாகவே உள்ளன.
இதற்கான ஒரு தீர்வு, பெண்களுக்கு அதிக அளவிலான நிதி (Funding) கிடைப்பதை உறுதி செய்வதாகும். முத்ரா (Mudra) கடன் திட்டத்தின்கீழ் 64% கணக்குகளைப் பெண்கள் கொண்டிருந்தாலும், வழங்கப்பட்ட மொத்தத் தொகையில் 42%-ஐ மட்டுமே அவர்கள் பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானவை 'சிஷு' (Shishu) கடன்களாகும் அதாவது, ₹50,000-க்கும் குறைவான கடன்தொகை ஆகும். இவ்வளவு சிறிய தொகை ஒரு தொழிலை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க போதுமானதாக இருப்பதில்லை.
பெண்கள் தங்கள் சந்தை அணுகலை விரிவுபடுத்தவும், பாரம்பரியத் துறைகளைத் தாண்டிப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், மற்றும் பாதுகாப்பு, போக்குவரத்து, குழந்தைப் பராமரிப்பு போன்ற பொதுக் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் நிதி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, பெண்கள் தங்கள் தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும், வளர்ச்சி சார்ந்த முறையான வணிகங்களில் ஈடுபடவும் (வெற்றிகரமான பெண்கள் நடத்தும் ஜவுளி நிறுவனங்களைப் போல), சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பெண்களுக்கெனத் தனித்துவமான நிதி ஒதுக்கீடுகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பெண்களின் திறன் மேம்பாடு
ஐந்தாவதாக, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருமாறி வரும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குப் பெண்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடங்களில் செயற்கை நுண்ணறிவு வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருவதால், பெண்களுக்குத் தேவையான திறன் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை மேம்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காகப் பெண்களுக்கெனத் தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல் உதவித்தொகை போன்ற சிறப்பு வளங்களை ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது.
2025-ஆம் ஆண்டிற்கான 'இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் ' (India AI Mission) போன்ற திட்டத்தில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ₹660 கோடி நிதி — இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 33% ஆகும். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியில் பெண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த முயற்சி இன்னும் விரிவடைய வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் டிஜிட்டல் திறன்கள், பாலினப் பாகுபாடற்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. அதேபோல், இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கிறதா அல்லது அதிகரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, காலக்கெடுவுடன் கூடிய மதிப்பீடுகள் மிகவும் அவசியமாகிறது.
இறுதியாக, நிதிநிலைத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள ‘நாரி சக்தி’ (பெண் சக்தி) என்ற அம்சம், பெண்களுக்காக எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்பதைக் கொண்டு மதிப்பிடப்படக் கூடாது. மாறாக, அந்தத் திட்டங்கள் பெண்களின் நேரத்தை எவ்வளவு பயனுள்ளதாக மிச்சப்படுத்துகின்றன, அந்த நேரத்தை அவர்களின் சுய அதிகாரம், வருமானம் மற்றும் வாய்ப்புகளாக எப்படி மாற்றுகின்றன என்பதைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும்.
தனு எம். கோயல், சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த ஆராய்ச்சிக்கான இந்திய கூட்டமைப்பில் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) மூத்த ஆய்வாளராகப் (Senior Fellow) பணியாற்றுகிறார். ஸ்ராவணி பிரகாஷ் மற்றும் அஞ்சனா ரமேஷ் ஆகியோர் அதே அமைப்பின் 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள்' (Economic Policies for Women Led Development (EPWD)) திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆவர்.
Original Article : Expectations from a gender lens in Budget 2026-27 -Shravani Prakash, Tanu M. Goyal, Anjhana Ramesh