உச்சநீதிமன்றம் மாதவிடாய் சுகாதாரத்தை ஏன் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தது மற்றும் பள்ளிகள் எவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்? -வினீத் பல்லா

நீதிமன்றத்தின் இந்த வாதம், ‘அடிப்படை சமத்துவம்’ (substantive equality) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பின் 14-வது பிரிவு சட்டத்தின்முன் சமம் (equality before the law) என்ற கருத்திற்கு உத்தரவாதம் அளித்தாலும், அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவமின்மையை நிலைநிறுத்தக்கூடும் (perpetuate inequality) என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஒரு புள்ளி (Period) ஒரு வாக்கியத்தை முடிக்க வேண்டும். ஒரு பெண்ணின் கல்வியை அல்ல. ["Period" என்ற சொல்லின் இரட்டைப் பொருள் – வாக்கிய முடிவு மற்றும் மாதவிடாய் – தமிழிலும் "புள்ளி" / "period" என்று வைத்து புரிதலுக்காக இவ்விடத்தில் பயன்படுத்தப்படுகிறது]


அமெரிக்கக் கல்வியாளர் மெலிசா பெர்டனின் இந்தக் கூற்றை முன்னுரையாகக் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஜே. பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வெள்ளிக்கிழமை அன்று, மாதவிடாய் சுகாதாரத்திற்கான அணுகலை ஒரு சுகாதாரப் (menstrual hygiene) பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒரு அரசியலமைப்பு உரிமையாகவும் அங்கீகரித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.


நீதிமன்றம் தொடர்ச்சியான ஆணையை பிறப்பித்தது. இது நீதிபதிகள் அந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க அனுமதிக்கும் ஒரு நீதிமன்ற உத்தரவாகும். ஒவ்வொரு பள்ளியிலும் இலவச சானிட்டரி நாப்கின்களும், பயன்பாட்டில் இருக்கும் கழிப்பறைகளும் இருப்பதை ஒன்றிய  மற்றும்  அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.


மாதவிடாய் சுகாதாரம் (Menstrual hygiene)  ஒரு அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும்.


நீதிமன்றத்தின் இந்த வாதம், ‘அடிப்படை சமத்துவம்’ (substantive equality) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பின் 14-வது பிரிவு சட்டத்தின் முன் சமம் (equality before the law) என்ற கருத்திற்கு உத்தரவாதம் அளித்தாலும், அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவமின்மையை நிலைநிறுத்தக்கூடும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


அனைவரையும் சமமாக நடத்துவது என்பது, சில சமயங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்குக் கூடுதல் உதவி வழங்குவதையும் குறிக்கிறது என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது. உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் அல்லது கழிப்பறை வசதி இல்லாததால் அந்த பெண்ணால் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால், அந்த பெண் சக மாணவர்களுக்குச் சமமான நிலையில் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.


மாதவிடாய் சுகாதார நடவடிக்கைகள் இல்லாதது, ஒரு உயிரியல் யதார்த்தத்தை ஒரு கட்டமைப்புரீதியான பாகுபாடாக மாற்றுவதன் மூலம், பாலின அடிப்படையிலான பின்தங்கிய நிலையை வலுப்படுத்துகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


அந்தத் தீர்ப்பு, மாதவிடாய் ஆரோக்கியத்தை அரசியலமைப்பின் 21-வது பிரிவால், உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்குள் (right to life and personal liberty) உள்ளடக்கியது. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையும் வாழ்வுரிமையில் அடங்கும் என்று நீதிமன்றம் கூறியது.


மாதவிடாய் ஏற்படும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை (Menstrual Hygiene Management (MHM)) வசதிகள் கிடைக்காதது, அவர்களை களங்கம், பிற்போக்குத்தனமான எண்ணங்கள் மற்றும் அவமானத்திற்கு உள்ளாக்குகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாததால் ஒரு மாணவியை படிப்பை பாதியில் நிறுத்தவோ அல்லது பள்ளிக்கு வராமல் இருக்கவோ கட்டாயப்படுத்துவது, அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் மற்றும் தனியுரிமையை மீறுவதாகும் என்றும் நீதிமன்றம் விரிவாக விளக்கம் அளித்தது.


கல்வி உரிமை 


பின்னர் நீதிமன்றம், மாதவிடாய் ஆரோக்கியத்தின் பார்வையில், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009 (RTE Act)) பற்றிய விளக்கத்தை வழங்குகிறது.


கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 3-ல் உள்ள "இலவசக் கல்வி" (free education) என்ற சொல் கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதற்கு மட்டும் இல்லை - இது ஒரு குழந்தை தனது கல்வியை முடிப்பதைத் தடுக்கும் எந்தவொரு நிதித் தடையையும் நீக்குவதைக் குறிக்கிறது என்று நீதிமன்றம்  கூறியது.


சுகாதாரப் பொருட்களுக்கான இந்தச் செலவு பள்ளிக்கு வராமல் இருப்பதற்கோ அல்லது படிப்பை நிறுத்துவதற்கோ வழிவகுக்கும்போது, ​​அரசின் செயலற்றத் தன்மை ஒரு உறுதி செய்யப்பட்ட உரிமையை நிபந்தனைக்குட்பட்ட ஒன்றாக மாற்றிவிடுகிறது என்று நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. எனவே, கல்வி உண்மையாகவே 'இலவசமாக' இருப்பதை உறுதி செய்வதற்காக, இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவது ஒரு சட்டப்பூர்வ கடமையாகும் (statutory obligation) என்று நீதிமன்றம் கூறியது.


பின்னர், கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 19, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் உட்பட குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் தரங்களைப் பராமரிக்க பள்ளிகளை கட்டாயப்படுத்துகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. இது உள்கட்டமைப்புத் தேவை சார்ந்தது மட்டுமல்ல, ஒரு முக்கியமான தேவை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.


"'தடையற்ற அணுகல்' (barrier-free access) தேவையை ஒரு உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சானிட்டரி நாப்கின்கள் இல்லாததும், அதை அப்புறப்படுத்துவதற்கான சுகாதாரமான வழிமுறை  இல்லாததால், பெண்கள் பள்ளிக்கு வராமல் போவது அல்லது பள்ளியைவிட்டு வெளியேறும் சூழல்  ஏற்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது. அத்தகைய வசதிகள் இல்லாததை "முற்றிலும் அரசியலமைப்பு தோல்வி"  (stark constitutional failure) என்று குறிப்பிட்டது.


அரசிற்கான வழிமுறைகள்


மூன்று மாதங்களுக்குள் ஒன்றிய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட, காலக்கெடு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


முதலாவதாக, அரசு மற்றும் தனியார் நடத்தும் ஒவ்வொரு பள்ளியும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இவை "ஆக்சோ-மக்கும் சானிட்டரி நாப்கின்களாக" (oxo-biodegradable sanitary napkins) இருக்க வேண்டும் என்றும், கழிப்பறை வளாகத்திற்குள் விற்பனை இயந்திரங்கள் மூலமாகவோ அல்லது பள்ளியில் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலமாகவோ விநியோகிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


இரண்டாவதாக, பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றும், தொடர்ந்து சுத்தம் செய்யப்படும் மூடப்பட்ட கழிவுநீர்த் தொட்டிகள் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


மூன்றாவதாக, நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்பாட்டுக்குரிய, பாலினத்தால் பிரிக்கப்பட்ட கழிப்பறைகள், பயன்படுத்தக்கூடிய நீர் இணைப்புடன் இருக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றும், சோப்பு மற்றும் தண்ணீர் எப்போதும் கிடைக்கும் வகையில், கை கழுவும் வசதிகளைக் கொண்ட கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


நான்காவதாக, மாதவிடாய் தொடர்பான அவசரத் தேவைகளைக் கையாள்வதற்காக, மாற்று உள்ளாடைகள், மாற்று சீருடைகள் மற்றும் அப்புறப்படுத்தக்கூடிய பைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுடன் கூடிய 'மாதவிடாய் சுகாதார மேலாண்மை மூலைகளை' பள்ளிகளில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதவிடாய் கசிவு அல்லது கறைபடுவதால் ஒரு பெண் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்பது உறுதி செய்யப்படும்.


மாதவிடாயைச் சுற்றியுள்ள களங்கத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தையும் அந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. ஏனெனில், சூழல் ஆதரவற்றதாகவோ அல்லது விரோதமானதாகவோ இருந்தால், நல்ல வசதிகள் இருந்தாலும்கூட எந்தப் பயனும் இருக்காது என்று நீதிமன்றம் கூறுகிறது.


மாதவிடாய் பற்றிய உயிரியல் யதார்த்தம் குறித்து சிறுவர்களுக்குக் கல்வி கற்பிப்பது மிகவும் முக்கியம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தப் பிரச்சினையில் ஒரு ஆண் மாணவர், மாதவிடாய் காலத்தில் இருக்கும் ஒரு பெண் மாணவியைத் துன்புறுத்தக்கூடும். இது அந்தபெண் மாணவிப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கக்கூடும்."


பருவமடைதல் மற்றும் மாதவிடாய் குறித்த பாலின உணர்வுள்ள பாடத்திட்டங்களைச் சேர்ப்பதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (National Council of Educational Research and Training) கவுன்சில் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி (State Council of Educational Research) மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘ஆண் அல்லது பெண் எனப் பாகுபாடின்றி’ (whether male or female) அனைத்து ஆசிரியர்களும் மாதவிடாய் ஏற்படும் மாணவிகளுக்கு ஆதரவளிப்பதற்கான பயிற்சியைப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது.


மாவட்ட கல்வி அதிகாரிகள் (District Education Officers (DEO)) பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், முன்னுரிமையாக வருடத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், வசதிகளின் உண்மை நிலையை மதிப்பிடுவதற்காக, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மாணவர்களிடமிருந்தே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு வடிவில் பெயர் குறிப்பிடப்படாதக் கருத்துக்களைப் பெறவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


“தங்கள் உடல் ஒரு சுமையாகக் கருதப்பட்டதால், பள்ளிக்குச் செல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் நாங்கள் இதைத் தெரிவிக்க விரும்புகிறோம்: இதில் தவறு உங்களுடையது அல்ல” என்று இறுதி தீர்ப்பை எழுதிய போது  நீதிமன்றம் கூறியது.


 Original Article : Why Supreme Court made menstrual hygiene a fundamental right and what schools must provide?. -Vineet Bhalla

Share: