அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் மற்றும் ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான விசாரணைகளைக் கண்டித்தல் -சரவணன் அண்ணாதுரை

அமலாக்கத்துறை ஒரு ஒன்றிய அரசு முகமை (Central Agency) என்பதால், அது எப்போதும் தவறே செய்யாத அமைப்பு என்று கூறிவிட முடியாது; அதிகப்படியான தலையீடு, தரமற்ற விசாரணை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற நிகழ்வுகள் அங்கேயும் நடக்கின்றன.

கடந்த ஜூன் மாதம், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தச் சம்பவங்களால் அவர் அதிர்ச்சியடைந்திருந்தாலும், நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு ஒரு நிம்மதியை அளித்தது. இதற்கு சில வாரங்களுக்கு முன்பு, டாஸ்மாக் (TASMAC) மதுபான விற்பனையில் நடந்ததாகச் சொல்லப்படும் ₹1,000 கோடி ஊழலில், ஆகாஷ் பாஸ்கரன்தான் மிக முக்கியமான நபர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மே மாதம், அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தி, லேப்டாப் மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது கூட்டாளியான விக்ரம் ரவீந்திரனின் அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர். சில யூடியூப் சேனல்கள், சோதனையின் போது விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்ற சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறின. சோதனையில் சிக்கியதாகச் சொல்லப்படும் சில வாட்ஸ்அப் உரையாடல்களின் அச்சுப் பிரதிகளை ஊடகங்கள் ஒளிபரப்பின. இதற்கிடையில், அரசியல் எதிர்ப்பாளர்கள் அந்த ஊழல் தொகையை இன்னும் அதிகப்படுத்திக் கூறிக்கொண்டே இருந்தனர்.


நீதிமன்றங்கள் உண்மைகளை ஆய்வு செய்தபோது, குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கரன் மற்றும் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்பதால், அவர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனைகள் சட்டவிரோதமானவை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது. பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பொருட்களைத் திருப்பித் தருமாறு அமலாக்கத்துறைக்கு (ED) உத்தரவிட்டதோடு, ஒரு அடிப்படை குற்றம் (Predicate Offence) இல்லாமல் வளாகங்களுக்குச் சீல் வைக்கவோ அல்லது கட்டாய அழைப்பாணை அனுப்பவோ அமலாக்கத்துறை முகமைக்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தனது சோதனை அனுமதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டது, வளாகத்தின் சீல்களை அகற்றியது மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியது. பின்னர், அமலாக்கத்துறை மீண்டும் புதிய சம்மன்களை அனுப்ப முயன்றபோது, உச்சநீதிமன்றம் தலையிட்டு அந்தப் விரிவான விசாரணைக்குத் தடை விதித்தது. மேலும், அந்த முகமை "எல்லா எல்லைகளையும் மீறிச் செயல்படுகிறது" என்றும், கூட்டாட்சி தத்துவங்களை மீறுகிறது என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. 

நெறிபிறழ்ந்த போக்கும் தெளிவற்ற ஆணைக்குழுவும்


இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இது ஏற்கனவே நாம் பார்த்த ஒரு வழக்கமான முறையை வெளிப்படுத்துகிறது: முதலில் கைது செய்வது, பிறகு விசாரணையைத் தொடங்குவது, தங்களுக்குச் சாதகமான ஊடகங்களில் தகவல்களைக் வெளியிடுவது, இறுதியில் நீதிமன்றம் ஆதாரங்களைக் கேட்கும்போது அமைதியாக வழக்கைக் கைவிடுவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளையே இந்த முகமை மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.


சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)), 2002-ஐ அமல்படுத்தும் பொறுப்பை அமலாக்கத்துறை (ED) கவனித்துக்கொள்கிறது. குற்றவாளிகள் தாங்கள் சம்பாதித்த கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். முதலில் ஒரு குறிப்பிட்ட குற்றம் நடந்திருக்க வேண்டும், அதன் மூலம் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் வருவாய் ஈட்டப்பட்டிருக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை விதியாகக் கூறப்படுகிறது.


ஆனால், அமலாக்கத் துறை (ED) பெரும்பாலும் இந்த வரிசைமுறையை தலைகீழாக மாற்றியே செயல்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், இது பணமோசடியைத் தனிப்பட்ட குற்றமாகவே கருதி விசாரணையைத் தொடங்குகிறது. அதன் பிறகு, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக, அதற்கு அடிப்படையான ஒரு ஆரம்பக் குற்றத்தைத் (Predicate Offence) தேட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது


அமலாக்கத்துறை (ED) மிக விரிவான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய அதிகாரங்கள் வருமாறு: பிரிவு 50 (Section 50): சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) 50-வது பிரிவின் கீழ், அமலாக்கத்துறை யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் ஒரு சாட்சியா அல்லது குற்றம் சாட்டப்பட்டவரா என்பதைத் தெரிவிக்காமலேயே, அவரிடம் சத்தியப் பிரமாணத்தின் அடிப்படையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய  வழிவகை செய்கிறது. பிரிவு 17 (Section 17): இந்தப் பிரிவின்கீழ், எந்தவொரு வளாகத்திலும் சோதனை நடத்தவும், ஆவணங்கள் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு. பிரிவு 19 (Section 19): முறையான பிடிவாரண்ட் (Warrant) இல்லாமலேயே ஒருவரைக் கைது செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதற்கு அதிகாரியின் "நம்பத்தகுந்த காரணம்" (Reason to believe) மட்டுமே போதுமானது. மேலும், வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே, சொத்துக்களை இணைக்கவும் (Attach), வங்கி கணக்குகளை முடக்கவும் மற்றும் வணிக நடவடிக்கைகளை நிறுத்தவும் இதற்கு அதிகாரம் உள்ளது.  சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் பிணை  பெறுவது மிகவும் கடினம் என்கின்றனர். ஏனெனில், இந்தச் சட்டம் "குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர்" என்ற பொதுவான விதியை மாற்றியமைக்கிறது. இதில், தான் குற்றவாளி அல்ல என்பதையும், பிணையில் இருக்கும்போது எந்தக் குற்றமும் செய்யமாட்டேன் என்பதையும் குற்றம் சாட்டப்பட்டவரே நிரூபிக்க வேண்டும்.


பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல், போதைப்பொருள் கடத்தல் அல்லது திட்டமிடப்பட்ட குற்றங்கள் போன்ற தீவிரமான குற்றங்களுக்கு இத்தகைய அதிகாரங்கள் நியாயப்படுத்தப்படலாம் என்றாலும், அவை பெருமளவில் அரசியல் அழுத்தத்திற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.


சட்டப்பிரிவு 50-ன்கீழ் அனுப்பப்படும் அழைப்பாணைகள் (Summons), பெரும்பாலும் மக்களை நீண்டநேரம் காத்திருக்க வைக்கவே பயன்படுத்தப்படுகின்றன என்றும் இதனால் அவர்கள் தங்கள் நிலை என்னவென்று தெரியாமல் தவிப்பதோடு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற மனஅழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், காவலில் வைத்து உடல்ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. விசாரணை முழுவதையும் ஒளி-ஒலிப் பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அமலாக்கத்துறை தங்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மையைக் குறைப்பதோடு, நீதிமன்ற விசாரணையையும் கடினமாக்குகிறது.


சட்டப்பிரிவு 17-ன்கீழ் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மிகவும் பலவீனமான காரணங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. வதந்திகளையோ அல்லது தெளிவற்ற புகார்களையோ நம்பகமான தகவலாகக் கருத முடியாது என்று நீதிமன்றங்கள் பலமுறை கூறியுள்ளன. இருப்பினும், அரசு நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் சோதனைகளை நியாயப்படுத்துவதற்காக அமலாக்கத்துறை  இத்தகைய பலவீனமான காரணங்களையே பயன்படுத்தி வருகிறது.

சட்டப்பிரிவு 19-ன்கீழ் செய்யப்படும் கைதுகள் பெரும்பாலும் 'ஒத்துழைப்பு வழங்கவில்லை' என்ற தெளிவற்ற காரணத்தைக் கூறி நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் நடைமுறையில், புலனாய்வு அமைப்பு கூறும் விளக்கத்தை அப்படியே ஏற்க மறுப்பதே 'ஒத்துழைக்காமை' என அமலாக்கத்துறையால் கூறப்படுகிறது.



வழக்குகள் தோல்வியடைந்தாலும், அமலாக்கத்துறை பெரும்பாலும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பதில்லை. குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே வாங்கப்பட்ட சொத்துக்களும்கூட, பல ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் முடக்கி வைக்கப்படுகின்றன.



விஜய் மதன்லால் சௌத்ரி மற்றும் இந்திய ஒன்றியம் (Vijay Madanlal Choudhary vs Union of India) இடையிலான வழக்கில், இந்தச் சட்டத்தின் பல பிரிவுகளை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், அந்தத் தீர்ப்பு தற்போது மறுஆய்வில் உள்ளது. இது குறித்த விசாரணைகள் இன்னும் நடைபெறவில்லை. இது போன்ற அதிகாரமிக்க முகமைகள் அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதால் குடிமக்கள் இன்னும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர்.


ஊழல் மற்றும் அரசியல் தவறான பயன்பாடு


அசாதாரண அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிறுவனம், எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், அமலாக்கத்துறையின் (ED) பல அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போதோ அல்லது மிரட்டி பணம் பறிக்கும்போதோ பிடிபட்டுள்ளனர். நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சீட்டு நிறுவன மோசடி வழக்கை வலுவிழக்கச் செய்ய லஞ்சம் பெற்றதாக ஒரு அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். டிசம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மதுரை மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி, முடிக்கப்பட்ட வழக்கை கைவிடுவதற்காக பணம் பெற்றுக்கொண்டபோது பிடிபட்டார். ஆகஸ்ட் மாதம் 2024-ஆம் ஆண்டு மும்பை நகை வியாபாரியிடம் லஞ்சம் வாங்கியதற்காக அமலாக்கத்துறை உதவி இயக்குநரை மத்திய புலனாய்வு அமைப்பு (Central Bureau of Investigation (CBI)) கைது செய்தது. மே மாதம் 2025-ஆம் ஆண்டு ஒடிசாவில் சுரங்கத் தொழிலதிபர் ஒருவரிடம் பல கோடி ரூபாய் கேட்டதற்காக மூத்த அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு முறையும், அமலாக்கத்துறை பணிநீக்க உத்தரவுகளையும் பத்திரிகை செய்திகளையும் வெளியிட்டது. ஆனால், இந்த சம்பவங்கள் எவையும் அந்த அமைப்பில் எந்தவிதமான கட்டமைப்பு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.


நிதி ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடும்போது, அவர்களின் நற்பெயரும் தார்மீக அதிகாரமும் நம்பகத்தன்மையை இழக்கின்றன. அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தை (Prevention of Money Laundering
Act (PMLA)) குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காகப் பயன்படுத்துகிறதா அல்லது மக்களைச் சிறையிலேயே வைத்திருப்பதற்காகப் பயன்படுத்துகிறதா என்று உச்சநீதிமன்ற அமர்வுகள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், ஊழலுக்கு எதிரான போராட்டம் சட்டவிரோதமான ஒன்றாக மாறிவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளன.


மேற்கு வங்கத்தில், இந்திய அரசியல் செயல்பாட்டுக் குழு Indian Political Action Committee (I-PAC) மீதான அமலாக்கத் துறையின் (ED) சோதனைகளும், முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் ஒரு குறிப்பிட்ட போக்கைப் பிரதிபலிக்கின்றன. போதுமான ஆதாரங்கள் இன்றி, தேர்தலுக்கு முன்னதாக இத்தகைய விசாரணைகள் பொதுவெளியில் கொண்டு வரப்படுவது, இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையோ என்ற கவலையை எழுப்புகிறது. ஒரு மாநில முதலமைச்சரை விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுபவர் போல அமலாக்கத் துறை சித்தரித்தால், அது நீதியின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் நீதிக்காக எடுக்கப்படுகின்றனவா அல்லது அரசியல் நோக்கங்களுக்காக எடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-ஐ (Article 32) அமலாக்கத் துறை தவறாகப் பயன்படுத்துவது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்த கருத்துக்கள், இந்த விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. அமலாக்கத் துறை தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், அவர்கள் நேரடியாகப் பிரிவு 32-ஐப் பயன்படுத்துவது அவர்களின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. இது விசாரணை அமைப்புகள் அரசியல்ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.


இதே போன்ற ஒரு சூழல் தற்போது திமுக அமைச்சர் கே.என்.நேரு தொடர்பாக வெளியான தகவல்களிலும் காணப்படுகிறது. முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, அமலாக்கத்துறை மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பிய இரண்டு கடிதங்கள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் வெறும் பரிந்துரைகளே தவிர, இறுதி முடிவுகள் அல்ல. இருப்பினும், இந்தத் தகவல் வெளியானதன் மூலம் பொதுமக்களிடையே சந்தேகம், அரசியல் அழுத்தம் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் போன்ற எதிர்பார்க்கப்பட்ட விளைவு கிடைத்துவிட்டது. இந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் கையாளப்படும் விதம் தெளிவாகத் தெரிகிறது.


விழிப்புணர்வு மற்றும் சோதனைகளின் தேவை


முதலாவதாக, ஊடகங்கள் (Media) தங்கள் செயல்பாடுகள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். முறையான ஆதாரங்கள் இல்லாமல்—குறிப்பாக கசிந்த தகவல்கள் அல்லது ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே—குற்றச்சாட்டுகளை வெளியிடுவது, ஊடகங்களையும் அந்தத் தவறுக்குத் துணையாக்கிவிடும். பத்திரிகை தர்மம் என்பது வெறும் புகார்களை அப்படியே திருப்பிச் சொல்வது அல்ல; அந்தத் தகவல்களைத் தனிப்பட்ட முறையில் சரிபார்ப்பதே ஆகும். தவறான அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளைப் பரப்புவதை பத்திரிகையாளர்கள் தவிர்க்க வேண்டும்.


இரண்டாவதாக, ஆரோக்கியமான சந்தேகம் அவசியமானது. அமலாக்கத்துறை  ஒரு மத்திய அரசு அமைப்பாக இருந்தபோதிலும், அது கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல. அதன் சமீபத்திய நடவடிக்கைகள் அதிகார அத்துமீறல், பலவீனமான விசாரணை மற்றும் தவறான அதிகாரப் பயன்பாடு ஆகியவற்றைக் காட்டுகின்றன. போலியாகக் கட்டமைக்கப்பட்ட காட்சிகளைவிட, வலுவான ஆதாரங்களைக் கேட்டபதற்கு குடிமக்களுக்கு அதிகாரம் உண்டு என்கின்றனர்.


மூன்றாவதாக, சட்டத்தின் ஆட்சி மிகவும் முக்கியமானது. பணமோசடி தடுப்புச் சட்டங்கள் நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை; ஆனால், அவை தனிநபர்களைப் அச்சுறுறுத்துவதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது.

இறுதியாக, நீதிமன்றங்கள் அமலாக்கத்துறையின் அதிகாரங்களுக்குத் தெளிவான வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். விசாரணை முகமைகள் அரசின் தன்னிச்சையான அதிகாரத்தின் கருவிகளாக மாறுவதைத் தடுக்க, வலுவான அரசியலமைப்பு பாதுகாப்புகள் அவசியமாகும்.


இந்த விவகாரம் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக உள்ளது. மத்திய புலனாய்வு குழுவானது (CBI) ஒரு காலத்தில் 'கூண்டில் அடைக்கப்பட்ட கிளி' என்று அழைக்கப்பட்டது; இப்போது அமலாக்கத்துறை (ED) 'கட்டுப்பாடற்ற வேட்டை நாய்' போலத் தெரிகிறது. பலவீனமான அல்லது பொய்யான வழக்குகள் அதிகார துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கின்றன. அத்துடன் ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான விசாரணைகள், அரசு நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குறைக்கின்றன. இந்த நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை தொடர்பான விவகாரங்கள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.


சரவணன் அண்ணாதுரை அவர்கள் அமலாக்கத்துறை தொடர்பான பல வழக்குகளைக் கையாண்ட ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஆவார்.


  Original Article : Calling out the ED’s actions, the media trials -Saravanan Annadurai

Share: