இந்தூர் நீர் மாசுபாடு, நிலத்தடி நீர் பிரச்சினைகளை எவ்வாறு வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது? -அபினவ் ராய்

 நிலத்தடி நீர் குறைவது மற்றும் அதன் தரம் பாதிப்படைந்து வருவது போன்றவை பாதுகாப்பான குடிநீர், வேளாண்மை, தொழில் மற்றும் பொது சுகாதாரம் போன்றவற்றில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், இந்தச் சிக்கலைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் முக்கிய முயற்சிகள் யாவை, மேலும் வேறு என்ன செய்ய முடியும்?


மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பகீரத்புராவில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் கசிவால் மாசடைந்த நீர் காரணமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோய் பரவியதைத் தொடர்ந்து, இந்தூர் ஒரு பொது சுகாதார அவசரநிலையை எதிர்கொண்டது.


2025-ஆம் ஆண்டில், இந்தூர் நகரம் முழுவதும் 266 நீர் தரம் குறித்த புகார்கள் பெறப்பட்டன. மேலும், இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India’s (CAG)) 2019 மற்றும் 2022ஆம் ஆண்டு அறிக்கைகளும் இந்தூர் மற்றும் போபால் ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தீவிர நகர்ப்புற நீர் மேலாண்மைப் பிரச்சனைகளை சுட்டிக்காட்டின.


இந்தச் சூழலில், இந்தியாவில் நிலத்தடி நீர் நகர்ப்புற நீர் விநியோகத் தேவைகளில் 45 சதவீதத்தையும், ஊரகப் பகுதிகளில் நீர் விநியோகத் தேவைகளில் 85 சதவீதத்தையும், வேளாண் நீர்ப்பாசனத் தேவைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவற்றையும் பூர்த்தி செய்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, நாட்டில் நிலத்தடி நீரின் இருப்பு, அதன் விநியோகம், சிக்கல்கள் மற்றும் சவால்கள் ஆகியவற்றின் பரந்த கண்ணோட்டத்தை ஆராய்வது மிகவும் முக்கியம்.


இந்தியாவின் நிலத்தடி நீரின் நிலை


உலகிலேயே அதிக நிலத்தடி நீரை நுகர்பவராக இந்தியா உள்ளது. ஆண்டுதோறும் 230 கன கிலோமீட்டர் நீர் நமது நாட்டில் உறிஞ்சப்பட்டு வருகிறது. இது உலகின் மொத்த நிலத்தடி நீர் பயன்பாட்டில் கால் பகுதிக்கும் அதிகமான அளவாகும். மேலும், நாட்டின் குடிநீர் தேவைகளில் ஏறக்குறைய 85 சதவீதம் நிலத்தடி நீர் ஆதாரங்களால் பூர்த்தி செய்யப்படுகிறது.


மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board (CGWB)) மற்றும் மாநில அரசுகள் ஆண்டுதோறும் நாட்டின் மாறும் நிலத்தடி நீர் வளங்களை மதிப்பிடுகின்றன. இது மொத்தம் 6,762 மதிப்பீட்டு அலகுகளாக (தொகுதிகள்/தாலுகாக்கள்/மண்டல்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் 2025ஆம் ஆண்டு  அறிக்கைப்படி, நாட்டில் மொத்தம் 448.52 பில்லியன் கன மீட்டர் (Billion Cubic Meters (BCM)) ஆண்டு நிலத்தடி நீர் மறு சுழற்சி செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இது 2017-ஆம் ஆண்டில்  432 பில்லியன் கன மீட்டர் ஆக இருந்தது. அதே ஆண்டில் 247.22 பில்லியன் கன மீட்டர் எடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் காலநிலை மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, தற்போதைய மாற்றங்கள் தொடர்ந்தால், இந்தியாவில் நிலத்தடி நீர் உறிஞ்சுதல் விகிதம் 2080-ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று கூறுகிறது. இந்த அழுத்தம் பல பிராந்தியங்களில் ஏற்கனவே காணப்படுகிறது.


பிராந்தியப் பகுப்பாய்வின்படி, 730 அலகுகள் ஏற்கெனவே 'அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டவை' (100%-க்கும் அதிகமான பயன்பாடு), 201 அலகுகள் 'சிக்கலானவை' (90-100% பயன்பாடு) மற்றும் 758 அலகுகள் 'ஓரளவு சிக்கலானவை' (70-90% பயன்பாடு) என்றும், 4,946 அலகுகள் (73.14%) 'பாதுகாப்பானவை' என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பீடு செய்யப்பட்ட 127 அலகுகளில் உள்ள நீர் உவர்ப்பானது (saline) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.


மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தரவுகளின் பகுப்பாய்வில், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகியவை அதிகமாக எடுக்கப்படுவதகவும், டெல்லி ஆபத்தானவையாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவை ஓரளவு அபாயகரமான பிரிவில் உள்ளதாகவும் காட்டப்பட்டுள்ளது. ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், அவற்றின் மொத்த யூனிட்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை பாதுகாப்பான வரம்புகளைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.


நீர் பற்றாக்குறை (water stress) எதனால் ஏற்படுகிறது?


விரைவான நகரமயமாக்கல், மக்கள்தொகை வளர்ச்சி, தொழில்துறைத் தேவைகள் மற்றும் நிலைத்த வேளாண் நடைமுறைகள் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள நீர் வளங்களின்மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இமயமலையிலிருந்து வரும் மழையும் உருகும் பனியும் சிந்து-கங்கை-பிரம்மபுத்திரா சமவெளிகளில் பாய்கின்றன. அங்கு வண்டல் மண் (தளர்வான களிமண், வண்டல், மணல் அல்லது சரளைக்கல்) மிகவும் பரந்த நிலத்தடி நீர்நிலைகளை உருவாக்குகின்றன. இந்த சமவெளிகள் இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் 20 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தாலும், நாட்டின் நிலத்தடி நீர் இருப்பில் 60 சதவீதத்தைக் கொண்டுள்ளன.


இருப்பினும், நெல் மற்றும் கரும்பு போன்ற நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு, அளவுக்கு அதிகமாக நீர் உறிஞ்சப்படுவது, இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீரை அதிகமாக சுரண்டுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் இந்தத் தட்டுப்பாடு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனெனில், அங்கு கடினமான பாறைகளில் சேமிக்கப்பட்டுள்ள நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புவது மிகவும் கடினமாக இருக்கும்.


கடலோரப் பகுதிகளில் அடர்த்தியான வண்டல் மண் அடுக்குகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் நிலத்தடி நீர் கடல் நீரால் மாசடைவதற்கான அபாயம் உள்ளது. மத்திய இந்தியாவின் பீடபூமிகளில் உள்ள கடினமான பாறை நீர்ப்படுகைகளைவிட, இந்த வண்டல் மண்ணில் உள்ள நீர்ப்படுகைகள் வழியாக நீர் எளிதாகப் பயணிக்கிறது.


தண்ணீரை மாசுபடுத்தும் முக்கிய மாசுபடுத்திகள்


நிலத்தடி நீர் மறு சுழற்சியில் 60 சதவீதம் சீரற்ற முறையில் பரவிக் கிடக்கும் பருவமழைப் பொழிவிலிருந்து கிடைக்கிறது. ஆண்டில் பொழியும் மொத்த மழையளவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மழை, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு பருவமழை மாதங்களில் மட்டுமே கிடைக்கிறது. மானிய விலையில் மின்சாரம் மற்றும் குறைந்த விலை நீர் இறைப்பான்களை வழங்கிய பசுமைப் புரட்சியின் கொள்கைகளாலேயே இந்தியாவின் தற்போதைய நிலத்தடி நீர் பிரச்சனைகள்   ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன.


ஆரம்பத்தில், இது வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் வறுமையை ஒழிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில், இந்த மானியங்கள் நிலத்தடி நீரை அதிகமாக சுரண்டுவதற்கு வழிவகுத்தன என்று வாதிடப்பட்டது. தேசிய அளவில் கணிசமான நிலத்தடி நீர் வளங்கள் கிடைத்தாலும், முக்கியமாக கவலை அவற்றின் சீரற்ற பிராந்திய விநியோகத்துடன் தொடர்புடையதாக உள்ளது. மேலும், தொழில்மயமாக்கல், விவசாய நடைமுறைகள், நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் நிலத்தடி நீரின் தர வகையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.


2024-ஆம் ஆண்டு மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை, 440-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள நீர், நைட்ரேட்டுகள், ஃபுளூரைடு, ஆர்சனிக், யுரேனியம், கன உலோகங்கள் அல்லது பிற மாசுபடுத்திகளால் பல்வேறு நிலைகளில் மாசடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மாசுபாட்டிற்கான முக்கிய ஆதாரங்கள், வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், மற்றும் சில சமயங்களில் இயற்கையாகவே காணப்படும் ஆர்சனிக், யுரேனியம், ஃபுளூரைடு போன்ற கன உலோகங்கள் ஆகும்.


இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards (BIS)), சுத்திகரிப்புக்குப் பிறகு, குடிநீர் இந்திய தரநிலை (IS) 10500 தரநிலையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. IS 10500 என்பது குடிநீரில் உள்ள பல்வேறு பொருட்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பைக் கோடிட்டுக் காட்டுகிறது. இதில் ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் மற்றும் நீரின் pH மதிப்பு, அதன் கலங்கல் தன்மை, நீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருள்கள் மற்றும் நிறம் மற்றும் வாசனை போன்றவற்றுக்கு பாதுகாப்பான வரம்புகளை நிர்ணயிக்கிறது.


நீர் தரம் மற்றும் கிடைக்கும் தன்மை குறைவதால் ஏற்படும் தாக்கங்கள் வாழ்வாதாரங்கள், வேளாண் நடைமுறைகள் மற்றும் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளிலும் பரவியுள்ளன.


பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான தாக்கங்கள்


இந்த அறிக்கை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் யுரேனியம் மாசுபாடு (uranium contamination) இருப்பதாக கண்டறிந்துள்ளது. ஈய மாசுபாடு (Lead Contamination) குறிப்பிட்ட சில பகுதிகளில் காணப்பட்டதுடன், அசாம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டது. ஆர்சனிக் மாசுபாடு (Arsenic contamination) முக்கியமாக சிந்து-கங்கை மற்றும் பிரம்மபுத்திரா வண்டல் சமவெளிகளில் பரவலாகக் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மிக அதிக அளவிலான மாசுபாடு பதிவாகியுள்ளது.


குடிநீரில் இந்த இரசாயனங்கள் மற்றும் கன உலோகங்கள் இருப்பது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குளோரைடு, ஃபுளூரைடு, நைட்ரேட் போன்றவற்றின் அளவு வரம்பை மீறும்போது, ​​இருதய நோய்கள், செரிமான மண்டலக் கோளாறுகள், பல் மற்றும் எலும்பு ஃபுளூரோசிஸ் மற்றும் கைக்குழந்தைகளுக்கு மெத்தெமோகுளோபினீமியா (நீலக் குழந்தை நோய்க்குறி) போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.


ஈயம், ஆர்சனிக் மற்றும் யுரேனியம் ஆகியவை பாதகமான நரம்பியல் விளைவுகள், புற்றுநோய் உண்டாக்கும் திறன் மற்றும் சிறுநீரக நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். நீர் மாசுபாடு ஏற்கனவே அதிக சுகாதார செலவினங்களைத் தவிர, வடிகட்டுதல் அமைப்புகளுக்கு கூடுதல் செலவைச் சேர்க்கிறது, இது பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை மோசமாக பாதிக்கிறது.


நீரில் உள்ள ஈயம், ஆர்சனிக் மற்றும் யுரேனியம் ஆகியவை மூளைக்குத் தீங்கு விளைவித்து, புற்றுநோயை ஏற்படுத்தி, சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடும். அசுத்தமான நீரினால் வடிகட்டிகளுக்காகக் கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன. இது ஏற்கெனவே அதிகமாக உள்ள சுகாதாரச் செலவுகளை, குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அதிக செலவை ஏற்படுத்துகிறது.


நிலத்தடி நீர்மட்டம் குறையும்போது, ​​நிலத்தடி நீரின் தரமும் மோசமடைகிறது. மேலும், நீர் உப்புத்தன்மை வாய்ந்ததாகவும் மாசுபட்டதாகவும் மாறுகிறது. இது நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தலை ஏற்படுத்துகிறது. சில பகுதிகளில், அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சுதல் நிலம் வீழ்ச்சியடைவதற்கு அல்லது படிப்படியாக மண் சரிவதற்கு அல்லது பூமியின் மேற்பரப்பு திடீரென மூழ்குவதற்கு முக்கிய காரணியாகிறது.


நிலத்தடி நீரின் தரம் மற்றும் பிரித்தெடுத்தல் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.


நீர் என்பது மாநிலப் பட்டியலில் (state subject) உள்ள பாடமாகும். எனவே நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பான குடிநீருக்கான முதன்மைப் பொறுப்பு மாநில அரசுகளிடமே உள்ளது. இருப்பினும், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை, ஜல் சக்தி அபியான், ஜல் சஞ்சய் ஜன் பாகீதாரி, அடல் பூஜல் யோஜனா போன்ற திட்டங்களின் மூலம் ஒன்றிய அரசும் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது.


இந்தக் கொள்கைகள் நீர் விநியோகத்தை மேம்படுத்துவதிலும் நிலத்தடி நீர் மறுசீரமைப்பை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் உறிஞ்சுதல் குறித்த தேசிய கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பெரிய அளவிலான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் முதலீடு செய்தல் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து நேரடியாக ஆறுகளில் பாயும் கழிவுநீரைச் சரிபார்க்க சரிபார்க்கக்கூடிய நடவடிக்கைகள் தேவை.


மேலும், ஏற்கனவே அதிகப்படியாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், நீரைச் சேமிக்கும் மற்றும் நிலையான நடைமுறைகளை உழவர்கள் பின்பற்ற ஊக்குவிக்கவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது விவசாயம் அல்லாத பிற பயன்பாடுகளுக்கும் மின்சாரத்தைச் சேமிக்க உதவும்.

நிலத்தடி நீர் குறைவது மற்றும் அதன் தரம் பாதிப்படைவது ஆகியவை பாதுகாப்பான குடிநீர், வேளாண்மை, தொழில் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. நீர் என்பது மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு விவகாரமாக இருந்தாலும், நிலையான நிலத்தடி நீர் மேலாண்மை நடைமுறைகளை தேசிய அளவில் நிறுவனமயமாக்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில், மாநிலங்கள் தங்கள் வெவ்வேறு பிராந்தியங்களில் நிலத்தடி நீரின் தரம் மற்றும் எடுக்கும் அளவு ஆகிய இரண்டையும் தொடர்ந்து கண்காணிப்பதை வலுப்படுத்துவது மேலும் உதவியாக இருக்கும்.


மேலும், மானியங்களும் ஊக்கத்தொகைகளும் பல்வேறு பயிர்களை வளர்ப்பதற்கும், நீர் சேமிப்பு நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துவதற்கும், மழைநீரைச் சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நிரப்புவதற்கும் ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவின் நீர் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, 'குறைத்தல், மறுபயன்பாடு செய்தல், மறுசீரமைப்பு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல்’ என்பதைப் பின்பற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


Original Article : How Indore water contamination brings groundwater issues to the surface.

-Abhinav Rai


Share: