இந்தியாவின் அரிசி உற்பத்தி அதிகரிப்பு ஏன் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புகிறது? -அபினவ் ராய்

 இந்தியா அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், நிலத்தடி நீர் எடுத்தல், குறைந்த உற்பத்தித்திறன், பயிர்களை பல்வகைப்படுத்தல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தொடர்ச்சியான சவால்களையும் எதிர்கொள்கிறது. இத்தகைய கவலைகளைத் தீர்க்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் என்ன? விரைவான முக்கிய தகவல்களை அறிய விளக்கப்படங்களைப் பார்க்கவும். 


2024-2025-ஆம் ஆண்டில், இந்தியா சீனாவை விட உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தியாளராக மாறியது. உலக அரிசி உற்பத்தியில் 28 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 40 சதவீதமும் இந்தியாவின் பங்காக இருந்தது. இருப்பினும், உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்தியா நிலத்தடி நீர் எடுத்தல், பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது.


நெல் ஒரு அதிக நீர் தேவைப்படும் பயிர் என்பதால், ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 3000-4000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது நாட்டின் பல நெல் விளையும் பகுதிகளில் நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படுவதற்கு முக்கிய காரணியாக இருந்துள்ளது.


எனவே, 1986-ல் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் S S Johl தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2013-ஆம் ஆண்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பயிர் பல்வகைப்படுத்தலுக்கான முயற்சிகள் வரை, நெல் உற்பத்தியின் போக்கு மற்றும் முக்கிய அரசாங்கத் தலையீடுகளை ஆராய்வது முக்கியமானதாகிறது.




இந்தியாவில் நெல் உற்பத்தி


தொல்பொருள் சான்றுகளின்படி, சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலேயே இந்தியத் துணைக்கண்டத்தில் நெல் பயிரிடப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. முன்னதாக, நெல் சாகுபடி சீனாவில் மட்டுமே தொடங்கியது என்று மக்கள் நம்பினர். ஆனால், புதிய ஆய்வுகள் நெல் ஒரே நேரத்தில் பல பிராந்தியங்களில் தனித் தனியாகப் பயிரிடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


சீனாவில் நெல் ஒரு குளிர்காலப் பயிராக இருந்தபோதிலும், சிந்து சமவெளியில் நெல் கோடை மற்றும் குளிர்காலம் ஆகிய இரு பருவங்களிலும் நெல் பயிரிடப்பட்டது. இது Oryza sativa indica என்ற உள்ளூர் நெல் வகையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இன்று, உலகளவில் கிடைக்கும் 1,23,000 நெல் வகைகளில்,  60,000 வகைகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன.


உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேருக்கு அரிசி பிரதான உணவாக உள்ளது. இது பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் அரிசியையே பிரதான உணவாக நம்பியுள்ளனர்.


இந்திய அரிசியை பரந்த அளவில் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்: பாஸ்மதி அரிசி (உயர்தர, நறுமணமிக்கது), பாஸ்மதி அல்லாத புழுங்கல் அரிசி, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மற்றும் உடைந்த அரிசி ஆகும். 2024-25-ஆம் ஆண்டில், மொத்த அரிசி ஏற்றுமதி அளவில் பாஸ்மதி அல்லாத அரிசி 70% ஆக இருந்தது. ஆனால், பிரீமியம் பாசுமதி அரிசியை விட விலை குறைவாக இருந்ததால், அது மொத்த ஏற்றுமதி மதிப்பில்  48% மட்டுமே ஈட்டியது.


இந்தியாவின் அரிசி ஏற்றுமதி அதன் வகை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. பெனின், கோட் டி ஐவரி, கினியா, கேமரூன் மற்றும் கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள், இந்தியாவின் புழுங்கல் அரிசி மற்றும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வாங்குகின்றன. நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளும் இந்த வகை பாஸ்மதி அல்லாத அரிசிகளை இறக்குமதி செய்கின்றன.


உயர்தர பாஸ்மதி அரிசி மத்திய கிழக்கு நாடுகள் (சவூதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை வாங்குகின்றன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா உடைந்த அரிசியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது அங்கு கால்நடை தீவனம் மற்றும் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.


அரிசி உற்பத்தியின் புவியியல் பரவல்


நெல் பயிருக்கு வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழல், போதுமான நீர் வசதி மற்றும் வண்டல் மண் (ஆறுகளால் கொண்டுவரப்பட்ட வண்டல் படிவுகளால் உருவாகும் மண்) தேவைப்படுகிறது. ஆற்று வெள்ளச் சமவெளிகள் அதிக நெல் உற்பத்தி செய்யும் பிராந்தியங்களில் உற்பத்தி செய்யப்படலாம். இந்தியாவில், நெல் சாகுபடி பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளது.


வடகிழக்கு மாநிலங்களில், பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகையில் அதிகபட்ச நெல் சாகுபடி நடைபெறுகிறது. கிழக்கு மாநிலங்களில், கங்கை மற்றும் மகாநதி ஆறுகளின் படுகைகளில் நெல் சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. குறிப்பாக பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இது காணப்படுகிறது.


தென் மாநிலங்களில், கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி ஆறுகளின் டெல்டா பகுதிகள் முக்கிய நெல் உற்பத்திக்கு ஏற்ற பகுதிகளாக உள்ளன. தெலங்கானாவில் அதிகபட்ச  நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. வட மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபிலும் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே, சமயம் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில், குறைந்த குளிர்கால வெப்பநிலைகள் நெல் சாகுபடியை மே-ஜூலை முதல் செப்டம்பர்-டிசம்பர் வரையிலான காலத்திற்க்கு மட்டுமே நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.


சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கவலைகள்


2019-ஆம் ஆண்டில், உணவு மற்றும் வேளாண் அமைப்பு (Food and Agriculture Organisation (FAO)) 9 தாவர இனங்கள் மட்டுமே உலகளாவிய பயிர் உற்பத்தியில் 66 சதவீதத்திற்கு முக்கிய காரணியாக இருந்தது என்று குறிப்பிட்டதுடன், ஒரே பயிரை மட்டும் நம்பியிருப்பதற்கு எச்சரிக்கை விடுத்தது. முக்கியமாக, பசுமைப் புரட்சியின் போது மற்ற பயிர்களை விட நெல் மற்றும் கோதுமை அதிகப் பயனடைந்தன. இது உற்பத்தி அதிகரிப்பிற்கு முக்கிய காரணியாக அமைந்தது.  இருந்த போதிலும் இது சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளையும் ஏற்படுத்தியது.


2009-ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் நிலத்தடி நீர் பாதுகாப்புச் (Preservation of Subsoil Water Act) சட்டத்தை இயற்றின. நிலத்தடி நீர்ப்பாசனத்தின் சுமையை பருவமழைக்கு மாற்றுவதற்காக, மே 10-ஆம் தேதிக்கு முன் நெல் விதைகளை விதைப்பதையும், ஜூன் 10-ஆம் தேதிக்கு முன் நாற்று நடுதல் பணிகளை மேற்கொள்ளவும்  இந்தச் சட்டம் தடை செய்கிறது.


இருப்பினும், நெல் சாகுபடியில் ஏற்படும் இந்த தாமதம், அடுத்த பயிரை நடுவதற்கு மிகக் குறுகிய கால அவகாசத்தையே வழங்குகிறது. இதனால், உழவர்கள் வயல்களைத் தூய்மைப்படுத்த பயிர்க் கழிவுகளை எரிக்கும் முறையைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதன் விளைவாக, பயிர்க் கழிவுகளை எரிப்பது வட இந்தியாவின் சில பகுதிகளில் மோசமான காற்றுத் தரத்திற்கான ஒரு முக்கிய பருவகாலக் காரணியாக மாறியுள்ளது.


உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் தாக்கங்கள்


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், இலக்கு சார்ந்த பொது விநியோகத் (Public Distribution System) திட்டத்தின் மூலம், மக்கள்தொகையில்  மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு (தற்போது 81.35 கோடி பேர்) அதிக மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவது அரசாங்கத்திற்கு சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டது. இதில் ஊரக பகுதி மக்கள்தொகையில் 75 சதவீதத்தினரும், நகர்ப்புற மக்கள்தொகையில் 50 சதவீதத்தினரும் அடங்குவர்.


உணவு மற்றும் பொது விநியோகத் துறையின்படி, 2025-26-ஆம் ஆண்டில் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த உணவு தானியங்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக, 40.6 மில்லியன் டன்கள் நெல் உள்ளது. இரத்த சோகை மற்றும் பிற ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சமாளிக்க, அரசாங்கம் 2019-ஆம் ஆண்டில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 ஆகியவற்றைச் சேர்த்து அரிசியை வலுவூட்டும் திட்டங்களை முன்னோடித் திட்டங்களாகத் தொடங்கியது. இது 2022-ஆம் ஆண்டில் ஒன்றிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஜனவரி 1, 2026 நிலவரப்படி, அரசாங்கத்திடம் அதன் மத்திய இருப்பில் 63.06 மில்லியன் மெட்ரிக் டன் நெல் இருந்தது. இந்த அளவு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இடையிருப்பு சேமிப்பு மற்றும் பொது விநியோகத்திற்குத் தேவைப்படுவதை விட மிக அதிகமானதாகும்.


ஜனவரி 2015-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த மத்திய சேமிப்புக் கிடங்கிற்கான உணவு தானிய இருப்பு விதிமுறைகளின்படி, ஜனவரி மாதத்தின் முதல் நாளில் மத்திய சேமிப்புக் கிடங்கில் 7.61 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி இருப்பு இருக்க வேண்டும். இது தவிர, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் ஆண்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய  37.2 மில்லியன் டன் நெல் தேவைப்படுகிறது.


சுற்றுச்சூழல் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?


முன்னர் குறிப்பிட்டபடி, நெல் உற்பத்தியில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்தியா நிலத்தடி நீர் எடுப்பு, குறைந்த உற்பத்தித்திறன், பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது. இந்தியாவின் சராசரி நெல் மகசூல் ஒரு ஹெக்டேருக்கு  2,929 கிலோ ஆகும். இது சீனாவின் ஒரு ஹெக்டேருக்கு 7,100 கிலோ மகசூலுடன் ஒப்பிடும்போது குறைவான அளவாகும். 90% நிலம் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்குச் சொந்தமானது. இத்தகைய சிறிய நிலங்களில், பெரிய அளவிலான இயந்திரமயமாக்கல் அதிக செலவு கொண்டதாக இருப்பதால், உற்பத்தித்திறனில் ஏற்படும் முன்னேற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.


அதே சமயம், மின்சாரம், நீர், உரம் ஆகியவற்றுக்கான மானியங்கள் மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் மூலம் நெல் சாகுபடிக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதல் தொகையை வழங்குகின்றன.


நெல்-கோதுமை பயிர் சுழற்சியால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, 1986-ல் பொருளாதார நிபுணர் S S Johl தலைமையிலான ஒரு குழு, பஞ்சாபின் பயிர் சாகுபடிப் பரப்பில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை மாற்று இலாபகரமான பயிர்களுக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 2002-ல், 10 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.


சமீபத்தில், 2025-ல், பஞ்சாப் அரசாங்கம் ஆறு மாவட்டங்களில் உள்ள உழவர்களுக்கு, மொத்தம் 12,000 ஹெக்டேர் பரப்பளவில், நெல் சாகுபடியிலிருந்து மக்காச்சோளத்திற்கு மாறுவதற்காக, ஒரு முன்னோடித் திட்டமாக ஹெக்டேருக்கு 17,500 ரூபாய் நிதி உதவியை வழங்கியது.


நிலையான நெல் உற்பத்திக்குத் தேவை


தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காலநிலை மாற்றம் மற்றும் கணிக்க முடியாத வானிலை முறைகள் உலகளாவிய நெல் சந்தைகளின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதை மறுக்க முடியாது. 2023-ல், பலவீனமான பருவமழை மற்றும் உள்நாட்டுத் தேவை காரணமாக இந்தியா வெள்ளை மற்றும் உடைந்த பாசுமதி அல்லாத நெல் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இது உலகளாவிய நெல் விலைகளில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்தது.


போட்டித்தன்மையுடனும் நிலைத்தன்மையுடனும் நீடிக்க, இந்தியாவுக்குக் குறைந்த நீர் தேவைப்படும் மற்றும் அதிகப் பயிர்களை விளைவிக்கும் சிறந்த வேளாண் முறைகள் தேவைப்படுகின்றன. முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பயிர் பல்வகைப்படுத்துதல் இன்னும் குறைவாகவே உள்ளது. ஏனெனில், மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு போன்ற மாற்றுப் பயிர்கள் பொதுவாக நெல்லை விட ஒரு ஹெக்டேருக்குக் குறைந்த மகசூலையே தருகின்றன.


எனவே, நேரடி நெல் விதைப்பு (Direct Seeded Rice (DSR)) போன்ற தட்பவெப்பநிலையைத் தாங்கக்கூடிய பயிர் சாகுபடிகளுக்கு அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும் என்றும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்து, பருப்பு வகைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட நிலையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களைப் பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.




Share: