வர்த்தக ஒப்பந்தம் ஏதும் இல்லாமலேயே இந்தியாவுக்கான அமெரிக்க விவசாய ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. -ஹரீஷ் தாமோதரன்

 அமெரிக்க சோளம் (corn), எத்தனால் (ethanol) மற்றும் சோயாபீன்களுக்கு (soyabean) இந்தியா அதிக சந்தை வாய்ப்புகளை வழங்க ஒப்புக்கொண்டதா, அல்லது மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் (genetically modified produce) மற்றும் பால் பொருட்கள் (dairy products) மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


அமெரிக்க வேளாண் துறைச் செயலாளர் புரூக் ரோலின்ஸ், திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் (India–US trade deal), இந்தியாவின் பெரிய சந்தையில் அதிக அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.


அவரது கூற்றுப்படி, 2024-ல் 1.3 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் மீதான அமெரிக்காவின் விவசாய வர்த்தகப் பற்றாக்குறையை (agricultural trade deficit) குறைப்பதில் இந்த ஒப்பந்தம் "பெரும் பங்கு வகிக்கும்" என்றும் அவர் கூறினார்.


அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரிக் கொள்கைகள் (tariffs) மற்றும் வரி அல்லாத தடைகளை (non-tariff barriers) "பூஜ்ஜியமாக" குறைக்க இந்தியா "முன்னோக்கிச் செல்லும்" என்றும், அதே நேரத்தில் 500 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான "அமெரிக்க எரிசக்தி (Energy), தொழில்நுட்பம் (Technology), விவசாயம் (Agricultural), நிலக்கரி (Coal) மற்றும் பல பொருட்களை" வாங்க இந்தியா உறுதி அளித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (US President Donald Trump) கூறியுள்ளார்.

 

தற்போது, அமெரிக்க சோளம், எத்தனால் மற்றும் சோயாபீன்களுக்கு இந்தியா அதிக சந்தை வாய்ப்புகளை வழங்க ஒப்புக்கொண்டதா, அல்லது மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் மற்றும் உள் உறுப்புகள் (internal organs), இரத்தத் துகள்கள் (blood meal), திசுக்கள் (tissues) மற்றும் இதர மாடு சார்ந்த பொருட்களை (bovine-based formulation ingredients) உணவாகக் கொண்ட பசுக்களிடமிருந்து பெறப்படும் பால் பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


இதற்கிடையில், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பிப்ரவரி 3 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில், "அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா தனது முக்கியத்துவம் வாய்ந்த விவசாய மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களைப் பாதுகாத்துள்ளது" என்று கூறினார்.


அமெரிக்க ஏற்றுமதி எவ்வாறு அதிகரித்து வருகிறது…


ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாய வர்த்தகத் தரவுகள், எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாத நிலையிலும், இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி ஏற்கனவே சாதனை அளவை எட்டியிருப்பதையும், பற்றாக்குறை குறைந்து வருவதையும் காட்டுகின்றன.  


ஜனவரி முதல் நவம்பர் 2025 காலகட்டத்தில், அமெரிக்கா 2.85 பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் அதே 11 மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட 2.13 பில்லியன் டாலரை விட 34.1% அதிகமாகும். 2025-ம் ஆண்டு முழுவதற்குமான ஏற்றுமதி 3.1 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், அது ஒரு சர்வகால சாதனையாக (all-time high) இருக்கும். இதற்கு மாறாக, இந்திய விவசாயப் பொருட்களின் அமெரிக்க இறக்குமதி ஜனவரிம் முதல் நவம்பர் 2024-ல் 5.62 பில்லியன் டாலரிலிருந்து ஜனவரி முதல் நவம்பர் 2025-ல் 5.91 பில்லியன் டாலராக, வெறும் 5.1% மட்டுமே அதிகரித்துள்ளது. இதற்கேற்ப, இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தகப் பற்றாக்குறை 3.5 பில்லியன் டாலரிலிருந்து 3.1 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதன் பொருள், செயலாளர் ரோலின்ஸ் குறிப்பிட்டது போல 1.3 பில்லியன் டாலர் அல்லாமல், 2024-ல் அந்தப் பற்றாக்குறை 3.8 பில்லியன் டாலராக இருந்தது  என்பதை அட்டவணை 1 குறிப்பிடுகிறது.



இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியில் மரக் கொட்டைகள் (tree nuts)   முக்கியமாக பாதாம் (almonds) மற்றும் பிஸ்தா (pistachios)   முதலிடத்தில் உள்ளன. 2024-ல் 1.1 பில்லியன் டாலராக இருந்த இவற்றின் மதிப்பு, ஜனவரி-நவம்பர் 2025 காலத்தில் 32.2% அதிகரித்து 1.3 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.


மற்ற இரண்டு முக்கிய காரணிகள் பருத்தி (cotton) மற்றும் சோயாபீன்பீன் எண்ணெய் (soyabean oil) ஆகும் (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).


ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31, 2025 வரை பருத்தி இறக்குமதிக்கு இந்தியா வரி விலக்கு அளித்ததால், அமெரிக்கா பெருமளவில் பயனடைந்தது. புதிய காலண்டர் ஆண்டு முதல், இந்தியா இறக்குமதி வரியை மீண்டும் 11% ஆக மீட்டமைத்துள்ளது. இதேபோல், சுத்திகரிக்கப்படாத சோயாபீன் எண்ணெயின் ஏற்றுமதியும் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்து பெருமளவு அதிகரித்துள்ளது. மே 31, 2025 முதல் இந்தியா தனது இறக்குமதி வரியை 27.5% இலிருந்து 16.5% ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டது.


மற்றொரு குறிப்பிடத்தக்க ஏற்றுமதிப் பொருள் எத்தனால் (ethanol) ஆகும். அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எத்தனால் உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது. இது முதன்மையாக மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, ​​இந்தியா எரிபொருள் அல்லாத தொழில்துறை பயன்பாடுகளுக்கு மட்டுமே எத்தனாலை இறக்குமதிக்கு அனுமதிக்கிறது. இதில் ஆல்கஹால் அடிப்படையிலான இரசாயனங்கள், பானங்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பு ஆகியவை அடங்கும். பெட்ரோல் மற்றும் டீசலுடன் கலப்பதற்காக எத்தனால் இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா இந்தியா மீது கடுமையாக வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை இந்தியா எதிர்த்து வருகிறது. இத்தகைய இறக்குமதிகள் உள்நாட்டில் விளையும் கரும்பு, மக்காச்சோளம் மற்றும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பயன்பாட்டை பலவீனப்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது இந்தியாவின் லட்சிய உயிரி எரிபொருள் திட்டத்தையும் பாதிக்கும்.


...மேலும் இந்திய ஏற்றுமதிகள் பலவீனமடைந்து வருகின்றன.


ஜனவரி முதல் நவம்பர் 2025 காலகட்டத்தில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 5.1% அதிகரித்துள்ளது.


இருப்பினும், இந்த வளர்ச்சியில் பெரும்பாலானவை ஆண்டின் முதல் பாதியில் நிகழ்ந்தன. அந்தநேரத்தில், முழு 50% வரியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த வரியில் 25% பரஸ்பர வரி மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியுடன் தொடர்புடைய 25% அபராதம் ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தடைகளும் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டன. ஜூலை-நவம்பர் 2025 காலகட்டத்தில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் விவசாய ஏற்றுமதி வெறும் 2,441.6 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இது 2024-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 2,825.9 மில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 13.6% குறைவாகும்.


அட்டவணை 3 ஒரு தெளிவான போக்கைக் காட்டுகிறது. இதன்படி, கடல் உணவு, பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்பூட்டிகள் ஆகியவற்றைத் தவிர, அமெரிக்காவிற்கான இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் 2025-ல் சரிவைச் சந்தித்தன.


கடல் உணவு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, ஜனவரி முதல் ஜூன் மாதங்களில் 32.5% அதிகரித்தன. ஆனால், ஜூலை முதல் நவம்பர் 2025 காலகட்டத்தில், கடல் உணவு ஏற்றுமதியின் (முக்கியமாக உறைந்த இறால்) மதிப்பு வெறும் 984.5 மில்லியன் டாலராக இருந்தது. இது 2024-ம் ஆண்டின் இதே ஐந்து மாதங்களில் இருந்த 1,183.4 மில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது குறைவானதாகும்.


சுருக்கமாகச் சொன்னால், டிரம்ப் விதித்த 50% வரி, அமெரிக்காவிற்கான இந்திய விவசாய ஏற்றுமதிகளைப் பாதித்துள்ளது. முன்மொழியப்பட்ட 18% வரிக்குறைப்பானது, 18% பரஸ்பர வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் மீதான அபராதம் இருக்காது என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா முன்பு சந்தித்த ஏற்றுமதி இழப்புகளில் சிலவற்றை மீட்டெடுக்க உதவும்.


அமெரிக்கத் தரப்பிலிருந்து, இந்தியாவுக்கான மரக் கொட்டைகள், பருத்தி மற்றும் சோயாபீன் எண்ணெய் ஏற்றுமதிகள் ஏற்கனவே சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா கணிசமான ஏற்றுமதி நலன்களைக் கொண்டுள்ள மற்ற விளைபொருட்களான மக்காச்சோளம், சோயாபீன்ஸ் தானியம், எத்தனால் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றின் மீது வரி மற்றும் வரி அல்லாத சலுகைகளை இந்தியா எவ்வளவு வழங்குகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





Share: