நிதிக் கூட்டாட்சியும் VB-G RAM-G சட்டமும்: ஒன்றிய அரசின் நலத்திட்டங்களை நிர்வகிக்க மாநிலங்கள் ஏன் நிதிச் சுமையை ஏற்கின்றன? -கௌஸ்துப் திவாரி

 உச்சநீதிமன்றத்தின் நிதிக் கூட்டாட்சியில் மாற்றுக்கருத்து தெரிவிக்கும் உரிமையை ஆதரிக்கும் பார்வை, ஒன்றிய அரசு மையப்படுத்தப்பட்ட வகையில் உருவாக்கிய VB-G RAM-G சட்டத்துடன் முரண்படுகிறது. இது பெரிய அரசியலமைப்புச் சிக்கல்களை உருவாக்குகிறது.


மோஹித் மினரல்ஸ் (2022) Mohit Minerals (2022) வழக்கில், இந்திய உச்சநீதிமன்றம் நிதிக் கூட்டாட்சி (fiscal federalism) என்ற அரசியலமைப்புக் கொள்கையை முக்கியமாக வலியுறுத்தி, ஒரு திருப்புமுனை தீர்ப்பை வழங்கியது. இந்தக் கொள்கை “கூட்டுறவு” மற்றும் “ஒத்துழையா” கூட்டாட்சி அமைப்பால் ஆதரிக்கப்படுகிறது. கூட்டுறவுக் கூட்டாட்சி என்றால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுவான வளர்ச்சி இலக்குகளுக்காக வேறுபாடுகளைத் தள்ளிவைத்து, பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்பதாகும். ஆனால், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கே (யூனியனுக்கு) உள்ளதாகக் கூறப்படுகிறது


மாறாக, கூட்டுறவு அல்லாத கூட்டாட்சி (Uncooperative Federalism) என்பது, அடிப்படையில், கூட்டாட்சி அலகுகளிடையே போட்டியையும் பிரிவினையையும் கருதுகிறது. அரசியலமைப்புச் சட்ட அமைப்பிற்குள் அதிகாரத்தின் சமமற்ற விநியோகத்தின் எல்லைகளை சூழலிலிருந்து விலக்கிப் பார்த்தால், கூட்டுறவு அல்லாத கூட்டாட்சி, சில அரசியலமைப்பு விதிகள் மையப்படுத்தும் போக்கைக் கொண்டிருந்தாலும்கூட, கூட்டாட்சி அலகுகள் சமமான அதிகாரங்களைப் பெற்றிருப்பதாகவே கருதுகிறது. இது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தின் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, கூட்டாட்சி அலகுகளை ஒன்றுக்கொன்று எதிராகத் தேவையான பாதுகாப்பாகக் கருதுகிறது. கூட்டாட்சிக்கு ஒரு ஒத்துழைப்பு அணுகுமுறைக்கு மாறாக, ஒரு கூட்டாட்சி அரசமைப்பில் சமமற்ற அதிகாரம் கொண்டவர்களிடையே ஏற்படும் போட்டியானது கூட்டாட்சியையும் ஜனநாயகத்தையும் பலப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. கூட்டுறவு அல்லாத கூட்டாட்சியின் அடிப்படைக் குறிக்கோள், உச்சநீதிமன்றத்தால் கவனிக்கப்பட்டபடி, அதன் அனுமதிக்கப்பட்ட கருத்து வேறுபாட்டில் உள்ளது. அது ஒழுங்குமுறை இடைவெளிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் கருத்து வேறுபாடு காட்டுவது மற்றும் அரசியலமைப்பு வரம்புகளுக்குள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்திற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் அவமதிப்பு ஒத்துழையாமையின் மூலம் கருத்து வேறுபாடு காட்டுவது ஆகும். சுருக்கமாகச் சொன்னால், உரையாடல் அல்ல, கருத்து வேறுபாடே கூட்டுறவு அல்லாத கூட்டாட்சியின் சாராம்சம் ஆகும்.


இந்தியாவின் நிதி நிர்வாகத்தில், நிதிசார் கூட்டாட்சி (Fiscal Federalism) என்பது மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இதில், ஒன்றிய அரசின் தன்னிச்சையான நிதி ஆணைகளை (unilateral fiscal fiat) மாநிலங்கள் எதிர்ப்பதற்கு வழி உண்டு. இதற்கு, கூட்டுறவு இல்லாத கூட்டாட்சி என்ற அரசியலமைப்பு ரீதியான வழிமுறைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட எதிர்ப்புரிமை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். எனவே, வளர்ந்த இந்தியா – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் (Viksit Bharat – Grameen Rozgar Aur Aajeevika Mission (Gramin) (VB-G RAM-G)) சட்டம், 2025-ஐ மதிப்பீடு செய்வது மிகவும் அவசியம். ஏனெனில், இந்தச் சட்டம் நிதிக் கூட்டாட்சி வழியாக, வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்ற அரசியலமைப்பு இலக்கை அடைய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறது.


சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தச் சட்டத்தின் வடிவம், இந்தியாவின் நிதி கூட்டாட்சிக்கு (fiscal federalism) ஒரு மாபெரும் பிளவை ஏற்படுத்தும் தருணத்தைக் குறிக்கிறது. சட்டப்பிரிவு 14-ன் கீழ் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான வழிகாட்டுதல் குழு (national-level steering committee) — சட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டைப் பரிந்துரைக்கும் பொறுப்புடையது ஆகும். இதில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். பிரிவுகள் 4 மற்றும் 22-ன் கீழ் உள்ள நெறிமுறை நிதி ஒதுக்கீடு, மத்திய அரசால் தன்னிச்சையாக நிர்ணயிக்கப்பட்ட புறநிலைக் காரணிகளின் அடிப்படையில், 60:40 என்ற விகிதத்தில் (சில மாநிலங்களைத் தவிர) தீர்மானிக்கப்பட உள்ளது. சட்டத்தை அமல்படுத்தும்போது ஏற்படும் எந்தவொரு கூடுதல் செலவினத்தையும் ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் விதத்தில் மாநில அரசுகளே ஏற்க வேண்டும். மேலும், இந்தச் செலவுப் பகிர்வு முறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில், 2005 (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) இருந்து முற்றிலும் மாறுபட்டது; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்கீழ், நிதிச் சுமையில் (fiscal burden) கிட்டத்தட்ட 90 சதவீதத்தை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. மேலும், இந்தச் சட்டத்தை அறிவிப்பதற்கும் மற்றும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்குமான அதிகாரம், ஒன்றிய அரசின் தனியுரிமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலயே உள்ளதாகக் கூறப்படுகிறது. 


சட்டத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது, அது இந்தியாவின் நிதிசார் கூட்டாட்சிக்கு (Fiscal Federalism) மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. கூட்டாட்சியின் வடிவமைப்பிலிருந்து எழும் முக்கியமான கவலைகளில் ஒன்று, இந்தச் சட்டத்தின்கீழ் ஏற்படும் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றுவது உட்பட, முழு முடிவெடுக்கும் செயல்முறையிலும் மாநிலங்களின் நிதிப் பகிர்வின் அளவாகும். மாநிலங்களின் பங்கேற்பு பெரும்பாலும் மேலோட்டமானதாகவே தோன்றுகிறது. ஏனென்றால், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், நிதி ஒதுக்கீட்டிற்கான அளவுகோல்களை தன்னிச்சையாகத் தீர்மானிப்பதற்கும், ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துகையில் மாநிலங்கள்மீது 50 சதவீத வரம்பைத் தாண்டும் நிதிச்சுமையைத் திணிப்பதற்கும், அத்தியாவசியமான தேசிய அளவிலான வழிகாட்டும் குழுவில் (National-Level Steering Committee) மத்திய அரசின் மூத்த அதிகாரிகளை மட்டுமே நியமிப்பதற்கும், மாநில அளவிலான வழிகாட்டும் குழுவை (State-Level Steering Committee) வெறும் செயல்பாட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளைக் கொண்ட ஒரு அமைப்பாக குறைப்பதற்கும்,  ஒன்றிய அரசுக்குத் தன்னிச்சையான அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகார மையப்படுத்தல் முறையானது மாநிலங்களின் நிதியியல் உரிமைகளை ஆழமாகப் பாதிக்கிறது.


குறிப்பிடப்பட்ட அனைத்து சூழல்களிலும், கூட்டாட்சித் தத்துவத்தின்படி மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டிய அணுகுமுறை எதுவும் இல்லை. முடிவெடுக்கும் உரிமையிலோ, நிதி ஒதுக்கீட்டிலோ மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு இல்லை. அதே நேரத்தில், மத்திய அரசு தன்னிச்சையாக நிர்ணயிக்கும் அளவுகோல்களின்படி மாநிலங்கள் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில், ஒன்றிய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது. மேலும், மாநிலங்கள் தங்கள் சொந்தப் பொறுப்புகளை நிறைவேற்றும்போதே, தங்கள் நிதியை ஒன்றிய அரசு கூறும் வழியில்தான் செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இது சிக்கலை இன்னும் தீவிரமாக்குகிறது. சில சமயம், சில சட்டங்களின்கீழ் ஒன்றிய அரசைக் காட்டிலும் மாநிலங்களே அதிகப் பங்களிப்பும் அதிகச் செலவும் செய்ய நேரிடுகிறது. தாமதமாக வழங்கப்படும் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பின்மைச் சலுகைகள் (பிரிவு 22(8)-ன்கீழ்) இதற்கு அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுகளாகக் கூறப்படுகின்றன.


இந்தச் சட்டத்தின் ஒருதலைப்பட்சமான அம்சம் என்னவென்றால், அது மற்றும் மாநில அரசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பொறுப்புகளில் சமமற்ற தன்மையை நிலைநிறுத்துகிறது. மாநிலங்களின் நிதிப் பொறுப்பு, மத்திய அரசின் பொறுப்பைவிட மிகவும் சிக்கலாகவும் மற்றும் சுமையாகவும் தோன்றுகிறது. இது இயல்பாகவே நுண்ணிய நிதி சமநிலையை சீர்குலைக்கிறது. மேலும், மாநில அரசுகள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது அவற்றின் நிதி சுயாட்சியைக் குறைக்கிறது. இந்த அம்சம் நிதி கூட்டாட்சியை (Fiscal Federalism) மிகக் கடுமையாகப் பாதிக்கிறது. ஏனெனில், இச்சட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மாநிலங்களின் நிதி பயன்படுத்தப்படுகின்றன. 


வளர்ந்த இந்தியா – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் (Viksit Bharat – Grameen Rozgar Aur Aajeevika Mission (Gramin) (VB-G RAM-G))  சட்டத்தைப் பொறுத்தவரை, நிதி கூட்டாட்சிக்கு (Fiscal Federalism) ஒரு கூட்டு அணுகுமுறை (collaborative approach) மிகவும் தேவைப்படுகிறது. இதில் மத்திய அரசு, மாநில அரசுகள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களும் முடிவெடுக்கும் செயல்முறையில் உண்மையாகப் பங்கேற்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்போது, அதற்கு ஏறத்தாழ சமமான நிதியை மாநில அரசுகள் சட்டப்படி கொடுக்க வேண்டியிருந்தால், இந்தக் கூட்டு அணுகுமுறை தவிர்க்க முடியாதது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையில் பின்பற்றப்பட்ட பங்கேற்பு மாதிரியிலிருந்து இதற்கு நல்ல உதாரணம் கிடைக்கிறது. இந்தியக் கூட்டாட்சி என்பது ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு அல்லாத (uncooperative) நிலைகளுக்கு இடையேயான தொடர்ச்சியான உரையாடல் ஆகும். மாநிலங்கள் ஒத்துழைப்பு முதல் எதிர்ப்பு வரை தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வைக்கலாம். ஆனால், வளர்ந்த இந்தியா – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் (Viksit Bharat – Grameen Rozgar Aur Aajeevika Mission (Gramin) (VB-G RAM-G))  சட்டத்தில் உண்மையான கூட்டு அணுகுமுறை இல்லாததால், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு சமமற்ற நிதிச்சுமையைத் திணிக்கும் அபாயம் உள்ளது. இது நிதி கூட்டாட்சியின் மோசமான வடிவத்திற்கு வழிவகுக்கும். ஏனெனில், இந்திய அரசியலமைப்பில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சமமான அதிகார அமைப்புகளாகவே இருக்க வேண்டும்.


எழுத்தாளர், டெல்லி மற்றும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞர் பயிற்சி  பெற்று வருகிறார்.



Original Article :  Fiscal federalism and the VB-G RAM-G Act: Why states are paying the price of centralised welfare governance, -Kaustubh Tiwari

Share: