பக்கவாட்டு நுழைவு நியமன முறைமையின் (Lateral Entry System) சாதக பாதகங்கள் என்னென்ன?

 ஒன்றிய அரசின் பக்கவாட்டு நுழைவு நியமன திட்டத்திற்காக (Lateral Entry Scheme) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) வெளியிட்ட 45 பணியிடங்களுக்கான விளம்பரத்தை திரும்பப் பெறுமாறு அரசு கேட்டுக்கொண்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)), இத்திட்டம் குறித்து பிற அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.


முக்கிய அம்சங்கள்:


— ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 45 பக்கவாட்டு நுழைவு நியமனப் பணியிடங்களுக்கான (lateral entry posts) விளம்பரத்தை வெளியிட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி, மத்தியப் பணியாளர் துறை இணை அமைச்சர் (Union Minister of State for Personnel) ஜிதேந்திர சிங், அந்த விளம்பரத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு கடிதம் எழுதினார். பக்கவாட்டு நுழைவு நுழைவுத் திட்டத்தில் இடஒதுக்கீடு (reservations) இல்லாதது குறித்து, பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின்  (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் உட்படப் பலரிடமிருந்து அரசுக்குக் கடும் எதிர்ப்பு  வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


— செவ்வாய் கிழமையன்று  நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தத் திட்டத்தின் நிலை மற்றும் 2026-ஆம் ஆண்டில் நேரடி நுழைவு மீண்டும் கொண்டுவரப்படுமா (revived) என்று இணை அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அவர் அந்தக் கேள்வியைப் பணியாளர் துறைச் செயலாளர் (DoPT Secretary) ரச்னா ஷாவிடம் ஒப்படைத்து, செயலாளர் "விடுபட்ட தகவல்களைப் பூர்த்தி செய்வார்"  என்று கூறினார். நேரடி நியமனங்களின் மூன்று தவணைகளில் சுமார் 60 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 38-40 பேர் இன்னும் பல்வேறு அமைச்சகங்களில் பணிபுரிவதாகவும் செயலாளர் ஷா தெரிவித்தார்.


— 2018-ஆம் ஆண்டு அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன், அதைத் தொடர்ந்து 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் நிபுணர்களை  பணியமர்த்தியது. இந்தத் திட்டத்தின்கீழ், இணைச் செயலாளர் (Joint Secretary), இயக்குநர் (Director) மற்றும் துணைச் செயலாளர் (Deputy Secretary) ஆகிய நிலைகளில் துறை சார்ந்த மற்றும் தொழில்நுட்பப் பதவிகள் (domain-specific and technical positions) விளம்பரப்படுத்தப்பட்டன. மொத்தம் 63 நபர்கள் பக்கவாட்டு நுழைவு நியமன முறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.


உங்களுக்குத் தெரியுமா?


— பாரம்பரியமான நிர்வாக அமைப்பின் பகுதியாக இல்லாவிட்டாலும், தனியார் துறையைச் சேர்ந்த நபர்களை அரசாங்கத்தின் நிர்வாகப் பதவிகளுக்குப் பணியமர்த்தும் நடைமுறையே பக்கவாட்டு நுழைவு நியமன (Lateral entry) முறை  என்று குறிப்பிடப்படுகிறது.


— பக்கவாட்டு நுழைவு நியமன கொள்கையின்கீழ், அரசாங்கம் சில முக்கியமான நபர்களை அரசாங்கத்தில் குறிப்பிட்ட பணிகளுக்காக நியமிக்கிறது. இவர்களின் சிறப்பு அறிவு மற்றும் அந்தத் துறையில் உள்ள அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன. பொதுவாக, இந்த ஆட்சேர்ப்புகள் இணைச் செயலாளர் (Joint Secretary), இயக்குநர் (Director) மற்றும் துணைச் செயலாளர் (Deputy Secretary) ஆகிய நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலைகளில் உள்ள அதிகாரிகள் கொள்கை வகுப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.


— 2017-ஆம் ஆண்டில், நிதி ஆயோக் (NITI Aayog) அதன் மூன்றாண்டு செயல் திட்டத்திலும், மற்றும் நிர்வாகம் தொடர்பான துறைக் குழுச் செயலாளர்கள் பிப்ரவரி மாதம் சமர்ப்பித்த அறிக்கையிலும், மத்திய அரசில் இடைநிலை மற்றும் உயர் நிர்வாக நிலைகளில் பணியாளர்களை நியமிக்கப் பரிந்துரைத்தனர். இந்த 'வெளிவழி நியமனதாரர்கள்', அதுவரை அகில இந்திய சேவைகள் / மத்திய குடிமைப் பணிகளில் இருந்து வந்த நிரந்தர அரசு அதிகாரிகளை மட்டுமே கொண்டிருந்த ஒன்றிய செயலகத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்றும் மேலும், இது மொத்தம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.





Original Article : What are the pros and cons of the lateral entry system? -Khushboo Kumari , Roshni Yadav

Share: