அதிகரித்து வரும் வெப்ப அலைகளுக்கு மத்தியில், வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்களை இந்தியா எவ்வாறு பாதுகாக்கிறது? -அபினவ் ராய்


 


இந்தியாவின் மக்கள் தொகை மிக அதிகமாகவும், நெருக்கமாகவும் இருப்பதால், வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இதன் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, மற்றும் அந்த நடவடிக்கைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றன? 


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department) சமீபத்திய அறிவிப்பின்படி, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என்றும், அது மேலும் 1–2°C வரை உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதிகளில் வெப்பநிலை 40°C முதல் 42°C வரை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக வட இந்தியாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் வெப்ப அலை பாதிப்புகள் அதிகமாக இருக்கும், ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே கடும் வெப்பம் நிலவத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றம் உலகளாவிய காலநிலை மாற்றத்தினால் ஏற்படுகிறதா அல்லது மனித செயல்பாடுகளால் ஏற்படுகிறதா? மேலும், வெப்ப அலை என்பது சரியாக எதைக் குறிக்கிறது?


வெப்ப அலை என்றால் என்ன?


ஒரு பகுதியில் நிலவும் சராசரி வெப்பநிலையைவிட, அந்த இடத்தில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக உயர்ந்து காணப்படும் நிலையே 'வெப்ப அலை' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திற்கும் அந்தப் பகுதியின் நீண்டகால சராசரி வெப்பநிலையின் அடிப்படையில்தான் வெப்ப அலை நிலைமைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), ஒரு பகுதியில் வெப்ப அலை நிலவுகிறது என்பதை அறிவிப்பதற்கு பல்வேறு காரணிகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.


வெவ்வேறு பகுதிகளுக்கான குறைந்தபட்ச தகுதி நிலைகள்


வெப்ப அலை (Heatwave) நிலையை அறிவிப்பதற்கான வெப்பநிலையின் வரம்புகள் சமவெளிப் பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன:


சமவெளிப் பகுதிகள்: ≥40°C வெப்பநிலை


கடலோரப் பகுதிகள்: ≥37°C வெப்பநிலை


மலைப்பாங்கான பகுதிகள்: ≥30°C வெப்பநிலை


இயல்பான நிலையிலிருந்து விலகிச் செல்லுதல்


எந்தவொரு இடத்திலும், வழக்கமான சராசரி வெப்பநிலையைவிட 4.5°C முதல் 6.4°C வரை அதிகமாகப் பதிவானால், அது வெப்ப அலை என்று கருதப்படுகிறது. அதேபோல், சராசரி வெப்பநிலையைவிட 6.4°C-க்கும் அதிகமாக வெப்பநிலை உயரும்போது, அது தீவிர வெப்ப அலை என்று அறிவிக்கப்படுகிறது.


உண்மையான அதிகபட்ச வெப்பநிலை (சமவெளிப் பகுதிகளுக்கு மட்டும்)

ஒரு வானிலை உட்பிரிவில் உள்ள குறைந்தது இரண்டு வானிலை நிலையங்களில், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு 45°C அல்லது அதற்கு மேற்பட்ட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகினால், அது 'வெப்ப அலை' (Heatwave) என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒருவேளை வெப்பநிலை இந்த அளவைவிட மிக அதிகமாக இருந்தால், அது 'தீவிர வெப்ப அலை' (Severe heatwave) என்று கருதப்படுகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), வெப்ப அலையின் தீவிரத்தைப் பொறுத்து நிறங்கள் மூலம் எச்சரிக்கைகளை வழங்குகிறது: பச்சை (Green) – எந்த நடவடிக்கையும் தேவையில்லை; மஞ்சள் (Yellow) – விழிப்புடன் இருக்க வேண்டும்; ஆரஞ்சு (Orange) – முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருக்க வேண்டும்; மற்றும் சிவப்பு (Red) – பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


இந்தியாவில் நிலவும் வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகள்


இந்தியாவில் வெப்ப அலைகள் முக்கியமாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஏற்படுகின்றன. இவை இந்தியாவின் மத்திய, கிழக்கு மற்றும் வடபகுதிகளை அதிகம் பாதிக்கின்றன. வளிமண்டலத்தின் மேல் பகுதியில் நிலவும் வறண்ட காற்று, காற்றில் ஈரப்பதம் இல்லாமை மற்றும் மேகங்கள் இல்லாத தெளிவான வானம் போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரித்து, வெப்ப அலைகள் உருவாவதற்கு சாதகமான சூழல் ஏற்படுகிறது.


காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC)) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை, 1950-களுக்குப் பிறகு மனிதச் செயல்பாடுகளால் தீவிர இயற்கைச் சீற்றங்களின் எண்ணிக்கையும் அவற்றின் தாக்கமும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. புவி வெப்பமடைதலால் ஏற்படும் வெப்ப அலைகள், இப்போது உலகின் பல பகுதிகளில் அடிக்கடி நிகழ்வதோடு, முன்பைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் தீவிரமடைந்துள்ளன.


வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, தனது மிகப்பெரிய மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை காரணமாக வெப்ப அலைகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. வளரும் நாடாக இருப்பதால், இங்கு ஏராளமான மக்கள் வெளிப்புறச் சூழலில் வேலை செய்கின்றனர். இதன் விளைவாக, மக்கள்தொகையில் ஒரு பெரும்பகுதியினர் கடுமையான வெப்ப பாதிப்புகளுக்கும் நேரடியாக ஆளாக வேண்டிய சூழலில் உள்ளனர்.


2022-ஆம் ஆண்டின் உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவின் தொழிலாளர்களில் சுமார் 75% பேர் (சுமார் 38 கோடி மக்கள்) கடும் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு வேலை செய்பவர்கள் என்று கூறப்படுகிறது. வெப்ப அலைகள் (Heatwaves) உடலில் நீர்ச்சத்து குறைபாடு, தசைப்பிடிப்பு, கடுமையான சோர்வு, வெப்பத் தாக்குதல் போன்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பதற்றம், படபடப்பு, நரம்புத் தளர்ச்சி, உயிரிழப்பு போன்ற தீவிர விளைவுகளையும் உருவாக்கக்கூடும். குறிப்பாக, நகரங்களில் நிலவும் 'நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு' (Urban Heat Island effect - கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் சாலைகளால் நகரங்கள் வெப்பத்தை ஈர்த்துத் தக்கவைத்துக் கொள்ளும் நிலை) இந்தச் சிக்கலை மேலும் தீவிரப்படுத்துகிறது.


நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island) என்பது, வெப்பநிலையின் மாறுபாடு காரணமாக ஒரு நகரமோ அல்லது அதன் சில பகுதிகளோ அருகில் உள்ள பகுதிகளைவிட அதிக வெப்பமடைவதைக் குறிக்கும். பகல் நேரத்தில் சேமிக்கப்பட்ட வெப்பம் இரவு நேரத்தில் வெளியேற்றப்படுவதால், இந்த விளைவு இரவில் மிகவும் வலுவாக உணரப்படுகிறது.


இதன் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில் பல நகரங்களில் கோடைகால இரவுகளில் வெப்பம் அதிகரிப்பதை அதிகமாகக் காண முடிகிறது. இது குறித்து ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆராய்ச்சி நிறுவனம் (Council on Energy, Environment and Water (CEEW)) மேற்கொண்ட ஆய்வில், மும்பையில் 15, பெங்களூருவில் 11, போபால் மற்றும் ஜெய்ப்பூரில் தலா 7, டெல்லியில் 6 மற்றும் சென்னையில் 4 இரவுகளும் இயல்பைவிட கூடுதல் வெப்பமான இரவுகளாகப் பதிவாகியுள்ளன.


நகரங்களின் வடிவமைப்பு, அதிக மக்கள்தொகை நெருக்கம், கட்டுமானப் பொருட்கள், சாலைகள், வாகனங்கள் மற்றும் குளிரூட்டும் கருவிகள் (Air Conditioners (AC)) இருந்து வெளியேறும் வெப்பம், மற்றும் பசுமையான அல்லது திறந்தவெளிகள் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் இது நிகழ்கிறது. முறையான திட்டமிடல் எதுவுமின்றி நகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், 'நகர்ப்புற வெப்பத் தீவு' (Urban Heat Islands) ஏற்படும் அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கபடுகிறது.


மக்களின் வாழ்வு, வாழ்வாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மீதான தாக்கம்


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)), வெப்ப அலைகளை ஒரு "அமைதியான கொலையாளி" என்று அழைக்கிறது. ஏனெனில், இந்தியாவில் 1992-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இவை சுமார் 24,223 மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல், 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெயில் தாக்கத்தினால் 3,798-பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) தெரிவித்துள்ளது.


இந்தியாவில் நிலவும் வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது, தவறான வகைப்படுத்துதல் மற்றும் இறப்பிற்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடனடி காரணத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால், உண்மையான பாதிப்பைவிட குறைவாகவே கணக்கிடப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் திறந்தவெளியில் வெயிலில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், தினசரி கூலிகள், தெருவோர வியாபாரிகள், காவல்துறையினர், விநியோக ஊழியர்கள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் போன்றோர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களாக உள்ளனர்.


கடுமையான வெப்பம் மனித ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பொருளாதார உற்பத்தித் திறனைக் குறைத்து, எரிசக்திப் பயன்பாட்டையும் அதிகரிக்கிறது. இது உணவு விநியோகம் மற்றும் அத்தியாவசிய மருத்துவ வளங்களையும் பாதிக்கிறது. வறண்ட பகுதிகளில் நீர் ஆதாரங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படுவது, காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரிப்பது, மின்சாரத் தேவை உயருவது மற்றும் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவை இதர முக்கிய பாதிப்புகள் ஆகும்.

மேலும், இது கடல் மேற்பரப்பு வெப்பநிலையை மாற்றக்கூடும்; இது காற்றில் ஏற்படும் சுழற்சி முறைகள், தீவிர இயற்கைச் சீற்றங்களின் அதிர்வெண் மற்றும் அவற்றின் பாதிப்பு, மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொடர்பான சுற்றுச்சூழல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே, வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


வெப்பத் தடுப்பு செயல் திட்டங்களும் அவற்றின் செயல்திறனும்


2016-ஆம் ஆண்டில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), வெப்ப அலைகளைத் தடுக்கவும் மற்றும் மேலாண்மை செய்யவும் தேவையான செயல் திட்டங்களைத் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் 2017-ஆம் ஆண்டு மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டன. தற்போது, வெப்பத் தடுப்பு செயல் திட்டங்களை (Heat Action Plans) செயல்படுத்துவதற்காக 23 மாநிலங்களுடன் இணைந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) பணியாற்றி வருகிறது. இந்தத் திட்டங்களில் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல், மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், மருத்துவ சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான குளிரூட்டும் மையங்களை அமைத்தல் ஆகியவை அடங்கும்.


இந்த வெப்பத் தடுப்பு செயல் திட்டங்கள் (Heat Action Plans), கடும் வெப்பத்தைச் சமாளிப்பதற்கும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கு வழிகாட்டுகின்றன. இத்தகைய முதல் திட்டம் அகமதாபாத் மாநகராட்சியால், 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டெல்லியும் தனது வெப்பத் தடுப்புத் திட்டத்தை 2024–25-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.


2024-ஆம் ஆண்டில், உத்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Uttar Pradesh State Disaster Management Authority (UPSDMA)), இந்தியாவில் முதன்முறையாக அந்த மாநிலத்தின் அனைத்து 75 மாவட்டங்களுக்கும் 'வெப்ப அலை' தொடர்பான குறிப்பிட்ட வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இந்த நடவடிக்கை, அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறியவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் மற்றும் அந்தந்த இடங்களுக்குத் தேவையான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்குப் பெரிதும் உதவுகிறது.


இருப்பினும், சில அடிப்படை கட்டமைப்புச் சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. தேசிய பேரிடர் நிவாரண நிதி (National Disaster Response Fund (NDRF)) மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி (State Disaster Response Fund (SDRF)) ஆகியவற்றின்கீழ் நிதி உதவி பெறுவதற்கு புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம், சுனாமி, உறைபனி மற்றும் குளிர்காலக் காற்று போன்ற 12 வகையான பேரிடர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இதில் 'வெப்ப அலைகள்' சேர்க்கப்படவில்லை. இதன் விளைவாக, வெப்ப அலை போன்ற "உள்ளூர் பேரிடர்களுக்கு" மாநிலங்கள் தங்களின் மாநில பேரிடர் நிவாரண நிதியில் (SDRF) பத்தில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் இது போதுமானதாக இருப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.


கூடுதலாக, வெப்பத் தடுப்பு செயல் திட்டங்களின் செயல்திறன் குறித்து பல்வேறு கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. பல வெப்பத் தடுப்பு செயல் திட்டங்களில், வெப்பத்தினால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த முறையான மதிப்பீடுகள் இல்லை. ‘Sustainable Futures Collaborative’ அமைப்பின் ஆய்வின்படி, நகரங்கள் பசுமைப் பரப்பை அதிகரித்தல், திறந்தவெளிகளை உருவாக்குதல் மற்றும் நீர்நிலைகளைப் புதுப்பித்தல் போன்ற நீண்டகால தீர்வுகளைவிட, அவசரகால குறுகியகால நடவடிக்கைகளிலேயே அதிகக் கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, குளிரூட்டும் கருவி உள்ளிட்ட செயற்கை குளிரூட்டும் முறைகளைச் சார்ந்திருக்கும் நிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்கின்றனர்.


செயற்கை முறையில் குளிரூட்டும் கருவிகளைச் சார்ந்திருக்கும் நிலை 


இந்தியாவில் குளிரூட்டும் கருவிகள் (Air Conditioners) இன்னும் ஒரு ஆடம்பரப் பொருளாகவே கருதப்படுகின்றன.  இங்கு 10 சதவீதத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே குளிரூட்டும் கருவிகளின் பயன்பாடு உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளிலும், சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு வீடுகளிலும், தாய்லாந்தில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளிலும் குளிரூட்டிகள் பயன்பாட்டில் உள்ளன.

வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருவது, மக்களின் வருமானம் உயர்வு மற்றும் வேகமான நகரமயமாக்கல் போன்ற காரணங்களால், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் குளிரூட்டும் கருவிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த அதிகரிப்பு நாட்டின் மின்சாரத் தேவை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.


இனி குளிரூட்டும் கருவி என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. ஏனெனில், இது மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இந்திய அரசாங்கம் 2019-ஆம் ஆண்டில் இந்தியக் குளிர்ச்சியூட்டல் செயல் திட்டத்தை (India Cooling Action Plan (ICAP)) அறிமுகப்படுத்தியது. 20-ஆண்டுகால (2017–18 முதல் 2037–38 வரை) காலக்கெடுவைக் கொண்ட இத்திட்டமானது, குளிரூட்டும் கருவிகளுக்கான தேவையை குறைத்தல், எரிசக்தித் திறன் கொண்ட தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல் மற்றும் அனைவருக்கும் நிலையான குளிர்ச்சியூட்டும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தத் திட்டம், மாண்ட்ரியல் நெறிமுறையின் (Montreal Protocol) ஒரு பகுதியான கிகாலி திருத்தத்தின்கீழ் (Kigali Amendment), இந்தியா அளித்துள்ள உறுதிமொழிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹைட்ரோபுளோரோகார்பன்களின் (Hydrofluorocarbons (HFCs)) பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும். இந்தியா இந்த இலக்கை 2032-ஆம் ஆண்டிலிருந்து நான்கு கட்டங்களாக அடையத் திட்டமிட்டுள்ளது: 2032-ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) பயன்பாட்டை 10%-ஆகவும், 2037-ஆம் ஆண்டுக்குள் 20%-ஆகவும், 2042-ஆம் ஆண்டுக்குள் 30%-ஆகவும், இறுதியாக 2047-ஆம் ஆண்டுக்குள் 85%-ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.





அனைவருக்கும் சமமான முறையில் குளிர்ரூட்டும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்தல்


இந்தியாவில் நிலவும் கடுமையான வெப்பத்தைச் சமாளிப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க மிக அவசியமாகும். இதற்குப் பல அடுக்குகள் கொண்ட, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. சமவெளிப் பகுதிகளுக்கு 40°C என்பது போன்ற நிலையான வரம்புகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்தந்தப் பகுதிகளின் வெப்ப பாதிப்பு நிலைகளை உடனுக்குடன் கணித்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுப்பது இன்றைய காலத்தின் அவசரத் தேவையாக உள்ளது.


வெப்ப தடுப்பு செயல் திட்டங்களை மறுவடிவமைப்பு செய்வதும், வெப்ப அலைகளை அதிகாரப்பூர்வமாக ஒரு 'பேரிடர்' என அறிவிப்பதும், அவற்றுக்கெதிரான பயனுள்ள நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைப் பெற உதவும். நீண்டகால அடிப்படையில், நகரங்கள் முறையான திட்டமிடலுடன் விரிவுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பசுமையான மற்றும் திறந்தவெளிகள், பசுமைக் கூரைகள் (Green roofs), வெப்பத்தைப் பிரதிபலிக்கும் நடைபாதைகள் மற்றும் புனரமைக்கப்பட்ட நகர்ப்புற நீர்நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக நகர வளர்ச்சி அமைய வேண்டும் என்கின்றனர்.


உலகம் வெப்பமடைந்துவரும் நிலையில், வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் இந்தியாவின் பெரும் அளவிலான உழைக்கும் மக்களையும் முதியவர்களையும் பாதுகாப்பது அவசியமாகும். இதற்கு அனைவருக்கும் சமமான முறையில் குளிரூட்டும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை அரசாங்கம் தனது கொள்கை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


Original link:


Share: