நூறு சதவிகிதக் கலப்பு (blending) அல்லது E100 என்பது, தூய எத்தனாலைக் குறிக்கிறது. சாதாரண பெட்ரோல் விசைப்பொறி எந்திரங்கள் (இன்ஜின்கள்) E20 வரையிலான கலப்புக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரையிலான நிகழ்வுகள் : ஏப்ரல் 21 அன்று, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியா எதிர்காலத்தில் 100% எத்தனால் கலவையை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் எரிசக்தித் தேவைகளில் தன்னிறைவு அடையும் முயற்சியின் பின்னணியில் அவர் இவ்வாறு பேசினார். நான்கு நாட்களுக்கு முன்னதாக, நிலையான விமான எரிபொருளைத் (Sustainable Aviation Fuel) தயாரிக்க எத்தனால் பயன்பாட்டை விரிவுபடுத்தும் ஒரு அரசாங்க அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.
100% கலப்பு என்றால் என்ன?
நூறு சதவிகிதக் கலப்பு என்பது தூய எத்தனாலைக் குறிக்கிறது. எத்தனால் எங்கிருந்து பெறப்பட்டாலும், அது ஒரே மாதிரியான வேதியியல் விதிமுறையைத்தான் கொண்டிருக்கும். ஒரு லிட்டர் எத்தனாலைவிட ஒரு லிட்டர் பெட்ரோல் 45-55% அதிக ஆற்றலை வழங்கும். இதற்குக் காரணம், எத்தனால் குறைவான ஆற்றல் அடர்த்தியைக் (energy density) கொண்டிருப்பதே ஆகும்.
வழக்கமான பெட்ரோல் விசைப்பொறி எந்திரங்கள் E20 வரை மட்டுமே சான்றளிக்கப்படுகின்றன. இதன்பொருள், அவை 20% எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தலாம் என்பதாகும். விசைப்பொறி எந்திரங்கள் பழையதாக இருந்தால், அதன் தரமும் பொதுவாகக் குறைவாகவே இருக்கும். 85% அல்லது 100% கலப்புகளுடன், அதாவது E85 அல்லது E100 உடன் இயங்குவதற்கு, விசைப்பொறி எந்திரங்கள் நெகிழ்வான-எரிபொருள் (flex-fuel) வகையைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும். அதாவது, நெகிழ்வான-எரிபொருள் (flex-fuel) விசைப்பொறி எந்திரங்கள் எந்த அளவிலான எத்தனால் கலவையிலும் இயங்க முடியும்.
2000-களில் இருந்து பிரேசிலில் நெகிழ்வான-எரிபொருள் (flex-fuel) வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், தற்போது இந்தியாவில் அத்தகைய வாகனங்கள் பரவலாகக் கிடைக்கவில்லை. டொயோட்டா நிறுவனம் தனது ஹைக்ராஸ் இன்னோவாவின் ஒரு பதிப்பை நெகிழ்வான-எரிபொருள் வாகனமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை பெட்ரோல் பதிப்பைவிட ரூ. 3-4 லட்சம் அதிகம். மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்மாதிரி வாகனங்களைக் கொண்டிருப்பதாகவும், 2026 முதல் 2028 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் புதிய அறிமுகங்கள் இருக்கும் என்றும் அறியப்படுகிறது.
இந்த வாகனங்களில், தேய்மானத்தை தடுக்கும் எரிபொருள் அமைப்புகள், வெவ்வேறு சென்சார்கள் மற்றும் சிறப்பாகச் சரிசெய்யப்பட்ட விசைப்பொறி எந்திர கட்டுப்பாட்டு அலகுகள் (engine control units) உள்ளிட்ட பிற மாற்றங்கள் இடம்பெற வேண்டும்.
உண்மையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் (Make in India initiative) கீழ், எல்லா இடங்களிலும் 100% எத்தனால் கலவையைச் செயல்படுத்த புதிய வாகனங்களும், புதிய விநியோகச் சங்கிலிகளும் தேவைப்படுகின்றன.
கலப்புக்காக இந்தியா எத்தனாலை எவ்வாறு உற்பத்தி செய்கிறது?
இந்தியாவில், எத்தனால் தற்போது பெரும்பாலும் கரும்பிலிருந்து மூலப்பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு அதிக நீர் தேவைப்படும் ஒரு பயிராகும். மேலும், இது மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது. எத்தனால் தயாரிக்கக் கரும்பைப் பயன்படுத்துவது, உணவுக்கான அதன் இருப்பைக் குறைக்கிறது. இது உணவு விலைகளையும் விநியோகத்தையும் பாதிக்கக்கூடும்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆதரவு பெற்ற திட்டங்களின்கீழ், நெல் வைக்கோல் போன்ற பயிர்க் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ‘இரண்டாம் தலைமுறை’ எத்தனாலை ஊக்குவித்து வருகிறது. மேலும், இந்த முயற்சிகளுக்கு வட இந்தியாவில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளின் அளவைக் குறைக்கும் என்றும் அரசு நம்புகிறது.
எத்தனால் தேவை அதிகரித்து வரும் நிலையிலும், அதனுடன் தொடர்புடைய உற்பத்திச் செலவுகள் பெட்ரோல் செலவுகளை விடக் குறைவாக இல்லை. எனவே, கொள்கை ரீதியான ஆதரவும், தற்போது இருப்பது போல, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் விலை நிர்ணயமும் தேவைப்படுகிறது. மறைமுகச் செலவுகளும் உள்ளன. எத்தனால் எரிக்கப்படும்போது, பெட்ரோலை விடக் குறைவான கார்பன் மோனாக்சைடு மற்றும் துகள்களை வெளியிடுகிறது. அதனால், அந்த மாசுபடுத்திகளால் ஏற்படும் சுகாதாரச் சுமை குறையும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், ககரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் உற்பத்திக்கு நிலப் பயன்பாடு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற உள்ளீடுகள் மற்றும் நீர்த் தேவை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
பெருநிறுவன சராசரி எரிபொருள் செயல்திறன் (CAFE) III என்பது E100 உடன் தொடர்புடையதா?
அரசாங்கம் 2017-ல் பெருநிறுவன சராசரி எரிபொருள் செயல்திறன் (Corporate Average Fuel Efficiency (CAFE)) தரநிலைகளை முன்மொழிந்தது. இந்தத் தரநிலைகள், ஒரு உற்பத்தியாளரின் ஒட்டுமொத்த வாகனத் தொகுப்பும் வெளியிடக்கூடிய மொத்த கார்பன் டை ஆக்சைடின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, SUV-கள் போன்ற அதிக மாசு உமிழும் வாகனங்களை அதிக அளவில் கொண்டுள்ள உற்பத்தியாளர்கள், அதிக செயல்திறன் மிக்க மாடல்களை வடிவமைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.
இந்தியா 2017-ல் CAFE I-ஐயும், 2022-ல் CAFE II-ஐயும் செயல்படுத்தியது. CAFE III முந்தைய நிலைகளை விடக் கடுமையானதாக இருக்கும். இது CAFE II-உடன் ஒப்பிடும்போது, வாகனத் தொகுப்பு முழுவதற்குமான சராசரி புகை வெளியேற்ற இலக்கை சுமார் 30% குறைக்கிறது. மேலும், இது ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும்.
எத்தனால் கலப்பிற்கு எதிராக நிலவும் கணிசமான பொது எதிர்ப்பைச் சமாளிக்க, E85 அல்லது E100 பயன்பாட்டை நோக்கிய நகர்விற்கு CAFE III-ஐப் பயன்படுத்துவது உதவக்கூடும். E20 எரிபொருளானது, தூய பெட்ரோலைவிட 6-7% குறைவான செயல்திறன் கொண்டதுடன், அதேஅளவு எரிபொருளுக்குக் குறைந்த பயணதூர வீதம் தருவதுடன், செலவுகளை அதிகரிக்கிறது.
இந்திய அரசு 2003-ல் தனது எத்தனால் கலப்புத் திட்டத்தைத் தொடங்கியபோதிலும், அது ஒரு பத்தாண்டு காலமாகச் செயல்படாமல் இருந்ததுடன், 2014-ல் சுமார் 2%-ஆக இருந்தது. ஆனால், அரசின் புத்துயிர் பெற்ற முயற்சிக்குப் பிறகு, இந்தியா தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்ட நவம்பர் மாதக் கெடுவிற்கு முன்பாகவே, ஜூன் 2022-ல் E10, அதாவது 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைந்தது.
2023-ம் ஆண்டு முதல் பெட்ரோல் நிலையங்களில் E20 எரிபொருள் கிடைக்கத் தொடங்கியதுடன், 2025-ம் ஆண்டு முதல் சந்தையில் இருந்த E5 மற்றும் E10 உள்ளிட்ட மற்ற கலவைகளுக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட்டது. தேசிய உயிரி எரிபொருள் கொள்கையானது, 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் E20-ஐ அடையும் என்று முன்னதாகக் கூறியிருந்தது. தீவிரமான கலப்பு இலக்குகள், சேமிப்பு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பின் தயார்நிலை குறித்து தொழில் அமைப்புகள் மற்றும் வாகன உற்பத்தியாளர்களின் கவலை கொண்டுள்ளனர்.
இந்தியா எப்படி எரிசக்தி பாதுகாப்பை அடைய முடியும்?
மாற்று எண்ணெய் ஆதாரங்களைத் (alternative sources of oil) தேடுவது, அணு உலைகளுக்கான புதிய யுரேனியம் ஆதாரங்களைப் பெறுவது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்கத்தொகைகளை வழங்குவது போன்றவற்றின் மூலம் இந்தியா தனது எரிசக்தித் தளத்தைப் பன்முகப்படுத்த முயன்றுள்ளது. இருப்பினும், அமெரிக்கத் தடைகளால் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. பல எரிசக்தித் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரையில் உள்நாட்டு உற்பத்தித் துறை வளர்ச்சியடையாமல் உள்ளதுடன், ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் கீழ் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் குறைந்த அளவிலான பலன்களையே அளித்துள்ளன.
தனது அறிக்கையில், கட்கரி, தற்போதைய உலகளாவிய சராசரி விலையான ஒரு கிலோவுக்கு 3-6 டாலர் என்ற நிலைக்கு எதிராக, இந்தியா ஒரு எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறுவதற்கு, இறுதியில் தனது பொருளாதாரத்தை வட்டப்பொருளாதாரமாக, ஒரு கிலோ ஹைட்ரஜனை 1 டாலர் என்ற விலையில் உற்பத்தி செய்யவேண்டும் என்று கூறினார். தனது தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்கீழ், இந்தியா ஒரு ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக மாறத் திட்டமிட்டுள்ளது. மேலும், கிலோவுக்கு 1 டாலர் என்ற விலையில் டீசலுக்குப் போட்டியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி திடக்கழிவுகள் அல்லது கழிவுநீரிலிருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது இந்தியாவில் ஹைட்ரஜன் பொருளாதாரத்திற்கு, வணிகரீதியான போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன.
எத்தனால் விமானங்களுக்கும் எரிபொருளாகப் பயன்படுமா?
ஏப்ரல் 17 அன்று வெளியிடப்பட்ட ஓர் அரசாங்க அறிவிப்பு, நிலையான விமான எரிபொருளை (Sustainable Aviation Fuel (SAF)) தயாரிக்க எத்தனாலையும் பயன்படுத்திக்கொண்டது. விமானங்கள் இன்னும் வணிக அளவில் மின்கலன்களையோ அல்லது ஹைட்ரஜனையோ பயன்படுத்த முடியாததால், விமானப் போக்குவரத்தில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது கடினமாக இருந்து வருகிறது. இதனால், சர்வதேச மாசு உமிழ்வுக் கட்டமைப்புகளுக்கு இணங்குவதற்கான முதன்மை வழியாக நிலையான விமான எரிபொருள் (SAF) விளங்குகிறது.
இருப்பினும், ஜெட் விசைப்பொறி எந்திரங்கள்களில் பயன்படுத்தப்படுவதற்கு, எத்தனால் முதலில் 'ஆல்கஹாலிலிருந்து ஜெட்' (Alcohol-to-Jet (ATJ)) எனப்படும் ஒரு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதில், நீர் நீக்கப்பட்டு, அதன் ஹைட்ரோகார்பன் சங்கிலிகள் நீட்டிக்கப்பட்டு, ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுகிறது. ஆல்கஹாலிலிருந்து ஜெட் (ATJ) முறையானது சுத்திகரிக்கப்படாத எத்தனால் ஜெட் விசைப்பொறி எந்திரங்கள்கள் வழியாகச் செல்வதைத் தடுப்பதால், விமர்சகர்கள் குற்றம் சாட்டியதுபோல, அது உந்துவிசையைக் குறைக்கவோ அல்லது ஈரப்பதத்தை உறிஞ்சி எரிபொருள் குழாய்களை அடைக்கவோ செய்யாது.
ஆல்கஹாலிலிருந்து ஜெட் (ATJ) எத்தனால் வேதியியல்ரீதியாக மண்ணெண்ணெயை ஒத்திருக்கிறது. மேலும், தற்போதுள்ள விமான எரிபொருள் உள்கட்டமைப்பால் அதைக் கையாள முடியும். ASTM இன்டர்நேஷனல் உலகளாவிய விமான எரிபொருள் தரநிலைகளை நிர்ணயித்து, ஆல்கஹாலிலிருந்து ஜெட் (ATJ) வழிமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது நிலையான விமான எரிபொருளில் (SAF) 50% வரை கலப்பதற்கு அனுமதிக்கிறது.
இருப்பினும், சாலைப் போக்குவரத்து எரிபொருளின் ஒரு பகுதியாகப் பதப்படுத்தப்படாத எத்தனாலைப் பயன்படுத்துவதைப் போலவே, நிலையான விமான எரிபொருள் (SAF) உற்பத்தியும் மூலப்பொருளின்மீது அதே அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. கரும்பு உற்பத்தியை மேலும் பாதிக்காமல் நிலையான விமான எரிபொருள் (SAF) உற்பத்தியை அதிகரிப்பது என்பது, இரண்டாம் தலைமுறை எத்தனாலை எவ்வளவு விரைவாக வணிக அளவில் உற்பத்தி செய்யமுடியும் என்பதைப் பொறுத்தே அமையும்.
Original link:
How are ethanol-blending and India’s energy security linked?