மாதிரி நடத்தை விதிகள்: தேர்தல்களின்போது கட்சிகள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது? -ரோஷ்னி யாதவ்

பிரதமருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரை தேர்தல் ஆணையம் ‘ஆய்வு செய்யவுள்ளது’. தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன? தேர்தல் நடத்தை விதிகள் பதவியில் இருப்பவர்களுக்கு எது போன்ற வரம்புகளை விதிக்கின்றன. மேலும், புகார்கள்மீது தேர்தல் ஆணையம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது? 


தற்போதைய செய்தி :


பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 18 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகாரை செவ்வாய்க்கிழமை அன்று "ஆய்வு செய்யும்" என்று இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சூழலில், தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றிப் தெரிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைத் தொடர்ந்து, இடதுசாரித் தலைவர்கள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தலைவர்கள், அந்த உரை தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்குக் கடிதம் எழுதி, அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.


2. இந்தப் புகார், ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகள் பிரிவால் “ஆய்வு செய்யப்படும்” என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 15 அன்று அமலுக்கு வந்ததுடன், ஐந்து சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குகள் எண்ணப்படும் நாளான மே 4 வரை நடைமுறையில் இருக்கும்.


மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct)


1. தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகள் என்பது, தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் நெறிமுறைடுத்துவதற்காக வெளியிடப்படும் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இந்த விதிகள் உரைகள், வாக்குப்பதிவு நாள், வாக்குச் சாவடிகள், தேர்தல் அறிக்கைகளின் உள்ளடக்கம், ஊர்வலங்கள் மற்றும் பொதுவான நடத்தை தொடர்பான விவகாரங்களை உள்ளடக்கியுள்ளன.


2. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஒரு வடிவம் முதன்முதலில் 1960-ல் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1962 தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளாலும் அதிக அளவில் பின்பற்றப்பட்டதுடன், அதைத் தொடர்ந்த நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் பின்பற்றப்பட்டது. அக்டோபர் 1979-ல், தேர்தல் ஆணையம் 'ஆளும் கட்சியை' நெறிபடுத்துவதற்கும், தேர்தல் நேரத்தில் நியாயமற்ற செயல்முறைகளை தடுப்பதற்கும் ஒரு பிரிவைச் சேர்த்தது.

3. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.


மாதிரி நடத்தை விதிகளின்கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்


1. தேர்தல் நடத்தை விதிகளில், பொது நடத்தை, கூட்டங்கள், ஊர்வலங்கள், வாக்குப்பதிவு நாள், வாக்குச்சாவடிகள், பார்வையாளர்கள், ஆளும் கட்சி மற்றும் தேர்தல் அறிக்கைகள் ஆகியவை தொடர்பான 8  விதிகள்  இடம்பெற்றுள்ளன.


2. நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன், ஒன்றிய அரசோ அல்லது மாநிலங்களிலோ ஆளும் கட்சியோ, தனது அதிகாரப்பூர்வ பதவியை பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.  வாக்களிக்கும் போக்கைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு கொள்கை, திட்டம் அல்லது செயல்திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது.


3. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, கட்சியானது பொதுப் பணத்தைச் செலவழித்து விளம்பரம் செய்வதையோ அல்லது சாதனைகளைப் பிரபலப்படுத்த அதிகாரப்பூர்வ வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.


4. அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ பயணங்களை தேர்தல் பணிகளுடன் இணைக்கவோ அல்லது அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தவோ கூடாது என்றும் நடத்தை விதி கூறுகிறது. ஆளும் கட்சியும் பிரச்சாரத்திற்காக அரசாங்கப் போக்குவரத்து அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. தேர்தல் கூட்டங்களை நடத்துவதற்கான மைதானங்கள் போன்ற பொது இடங்களும், ஹெலிபேடுகள் போன்ற வசதிகளும், ஆளும் கட்சியால் பயன்படுத்தப்படும் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் எதிர்க்கட்சிகளுக்கும் வழங்கப்படுவதை நடத்தை விதி உறுதிசெய்ய வேண்டும்.



5. செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் பொது கருவூலச் செலவில் விளம்பரம் வெளியிடுவதும் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. ஆளும் கட்சி, வாக்காளர்களை கவரும் வகையில், அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் தற்காலிக (ad-hoc) நியமனங்களை செய்ய முடியாது.

6. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே விமர்சிக்கப்பட வேண்டும். வாக்காளர்களை ஈர்ப்பதற்காகச் சாதி மற்றும் மத உணர்வுகள் போன்றவற்றை பயன்படுத்தப்படக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வேறு எந்த வழிபாட்டுத் தலங்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், அவர்களை மிரட்டுதல் அல்லது ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவை தவறான நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.


7. வாக்குப்பதிவு நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரக் காலத்தில் பொதுக் கூட்டங்களை நடத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த 48 மணி நேரக் காலம் ‘தேர்தல் அமைதி’ (Election Silence) என்று அழைக்கப்படுகிறது. வாக்காளர் தனது வாக்கைச் செலுத்துவதற்கு முன்பு, தேர்தல் நிகழ்வுகள் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்குப் பிரச்சாரங்களற்ற ஒரு சூழலை ஏற்படுதித் தருவதே இதன் நோக்கமாகும்.


மாதிரி நடத்தை விதிகள் சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியவையா?

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக தேர்தல் நடத்தை விதிகள் (MCC) உருவானது. இது முக்கிய அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் விளைவாக ஏற்பட்டது. இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் எதுவும் இல்லை. எளிமையாகச் சொன்னால், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் எவர் மீதும், நடத்தை விதிகளின் எந்தவொரு பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியாது. அனைத்து பணிகளும் தானாக நடைபெறுகின்றன. தேர்தல் ஆணையம் தனது அமலாக்கத்திற்கு அறநெறிசார் தடைகளையோ அல்லது கண்டனத்தையோ பயன்படுத்துகிறது.


2. தேர்தல் ஆணையமானது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தானாகவோ அல்லது மற்றொரு தரப்பினர் அல்லது தனிநபரின் புகாரின் அடிப்படையிலோ ஒரு அரசியல்வாதிக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ அறிவிப்பாணையை அனுப்பலாம்.


3. ஒரு அறிவிப்பாணை வழங்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட நபர் அல்லது தரப்பினர் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க வேண்டும். ஒன்று தவறை ஏற்றுக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும் அல்லது குற்றச்சாட்டை மறுக்க வேண்டும். அந்த நபர் அல்லது தரப்பினர் பின்னர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், அவர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து எழுத்துப்பூர்வமான கண்டனத்தைப் பெற நேரிடும்.


வாக்கெடுப்புக்குப் பிந்தையக் கணிப்புகள் மற்றும்  கருத்துக்கணிப்புகளும்


1. வாக்கெடுப்புக்குப் பிந்தையக் கணிப்புகள் (Exit polls) என்பவை, வாக்குப்பதிவு முடிந்த உடனேயே முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார்  முகமைகள் மூலம் நடத்தப்படும் ஆய்வுகளாகும். இந்த ஆய்வுகள் வாக்காளர்களின் மனநிலை மற்றும் உருவாகி வரும் போக்குகள் குறித்த ஒரு ஆரம்பக்கட்ட அறிகுறியை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகள் எப்போதும் துல்லியமானவையாக இருப்பதில்லை. அவற்றை இறுதி முடிவுகளாகக் கருத முடியாது.

2. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) வழிகாட்டுதல்களின்படி, வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடையும் வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியாது. இன்னும் வாக்களிக்காத வாக்காளர்களைப் பாதிப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றபடுகிறது.


3. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும், கருத்துக்கணிப்புகளும் வேறுபட்டவை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். கருத்துக்கணிப்புகள் தேர்தலுக்கு முன்பு நடத்தப்படுகின்றன. அவை வாக்காளர்கள்மீது "தேவையற்ற ஆதிக்கம்" செலுத்துவதால், கடந்த காலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் கருத்துக்கணிப்புகளையும் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.


4. 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126A, அனைத்துத் தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கும், இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதையும், கருத்துக் கணிப்பின் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் பரப்புவதையும் தடை செய்கிறது.


5. கருத்துக் கணிப்புகளைப் பொறுத்தவரை, 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126(1)(b) ஆனது, தேர்தலின் ஒவ்வொரு கட்டத்திலும் வாக்குப்பதிவு நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முந்தைய 48 மணிநேரக் காலத்தில், கருத்துக் கணிப்பு முடிவுகள் அல்லது பிற கருத்து ஆய்வுகள் உள்ளிட்ட எந்தவொரு தேர்தல் தொடர்பான விவரங்களையும் மின்னணு ஊடகங்கள்  மூலமாக  வெளியிடுவதற்குத் தடை விதிக்கிறது.


6. இந்த விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. பிரிவு 126A (3)-கீழ், விதிகளை மீறும் எந்தவொரு  நபரின் மீதும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து  விதிக்கபடும்.

Original link:

Model Code of Conduct: What parties can and cannot do during polls.


Share: