சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாகத் திகழும் ஓர் அமைப்புக்கு, வனசக்தி பற்றிய உச்சநீதிமன்றத்தின் மறுஆய்வு ஒரு கவலையளிக்கும் பின்னோக்கிய நடவடிக்கையாகும்.
நவம்பர் மாதம் 18-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு, இந்திய வணிக நில நிறுவனங்களின் கூட்டமைப்பு (Confederation of Real Estate Developers’ Associations of India (CREDAI)) vs வனசக்தி வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் 2:1 பெரும்பான்மை தீர்ப்பின் மூலம், பின் தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை சட்டவிரோதமானது என அறிவித்த தனது மே மாதத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்து ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய அந்தத் தீர்ப்பு, நீதிமன்றத்தின் கடுமையான சொற்களைக் கண்டிப்பான நடவடிக்கையாக மாற்றியதால் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது, நீதிபதி உஜ்ஜல் பூயனின் கடுமையான மாற்றுக்கருத்துடன், நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பு முக்கியமான முன்மாதிரிகளை தவறாகப் புரிந்துகொண்டதாகவும், பின் தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகள் சில சமயங்களில் பொது நலனுக்குப் பயன்படும் என்பதை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறுகிறது.
இந்த நடவடிக்கை எவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது என்று முதலில் நாம் ஆச்சரியப்படலாம். இதற்கு நீதிமன்றம் ஒரு சுழல் தர்க்கத்துடன் பதிலளிக்கிறது. அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்துப்படி, பின்னோக்கிய அனுமதிகளை முற்றிலும் மறுப்பது பொது நலனைப் பாதிக்கலாம் என்று தெரிவித்தார். ஏனெனில், இது அனுமதியின்றி தொடங்கி கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை நிறுத்தவோ அல்லது இடிக்கவோ அரசாங்கத்தை கட்டாயப்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளார். இந்த வழியில், சட்டவிரோதச் செயலே அதை பின்னர் அங்கீகரிப்பதற்கான காரணமாக மாறுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், அந்த மீறலை அனுமதி பெறுவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்துகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றை, அது சட்டத்தை மீறினாலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் விதிகள் நெகிழ்வானதாக மாற்றப்பட்டுள்ளன.
நியாயமான தீர்ப்பை ரத்து செய்தல்
சுமார் ஐம்பது ஆண்டுகளாக, உச்ச நீதிமன்றம் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கான உரிமையை வலுவாக ஆதரித்து வருகிறது. பல தீர்ப்புகளில், இந்த உரிமையை, வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 21-உடன் இணைத்துள்ளது. சுற்றுச்சூழல் அபாயங்கள் நிச்சயமற்றதாக இருந்தாலும் கூட அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறும் முன்னெச்சரிக்கை கோட்பாட்டை நீதிமன்றம் ஒரு கட்டாய விதியாக கருதியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் இரண்டையும் பாதிக்கிறது என்பதையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் தீங்குகளுக்கு எதிரான உரிமையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன், தலைமுறைகளுக்கு இடையிலான சமபங்கு மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சி ஆகியவற்றை அரசியலமைப்பு மதிப்புகளாகவும் எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பிரகடனங்கள் பெரும்பாலும் மிகவும் உயர்வானதாக இருந்ததால், இந்த சட்டப்பகுதியானது நீதிமன்றத்தின் மிகவும் முற்போக்கான சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், சுருக்கமான கோட்பாடுகள் நம்மை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே இட்டுச் செல்லும் என்பதால் நிஜ உலகின் மீறல்களுக்கு அவை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தப்படாவிட்டால், அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்
இதை விடவும் கவலைக்குரியது என்னவென்றால், நீதிமன்றம் தனது சொந்த, நல்ல காரணத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தானே மாற்றியமைக்கும்போது அனைத்தும் சிதைந்து போகின்றன. CREDAI அமைப்பு குறித்த தீர்ப்பில் உள்ள கவலை இதுதான். அது விதிகளை மீறுவதைத் தண்டிப்பதற்குப் பதிலாக, விவாதிக்கக்கூடிய ஒன்றாக மாற்றிவிடுகிறது, அவ்வாறு செய்வதன் மூலம், அது சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையின் அடிப்படையையே பலவீனப்படுத்துகிறது.
இதன் முக்கியக் கூறு என்னவென்றால், இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள் சில பெரிய அல்லது குறிப்பிட்ட தொழில்துறை மற்றும் வளர்ச்சிக் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்குகின்றன.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environment Impact Assessment (EIA)) விதிகள் 2006-ஆம் ஆண்டு முதலில் கடுமையான தேவைகளை அமல்படுத்தியது. 2017-ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேலையைத் தொடங்கிய அல்லது அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிய திட்டங்கள், மார்ச் மாதம் 14-ஆம் தேதி, 2017-ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள், முன்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிக்க அனுமதித்தது. பின்னர், 2021-ஆம் ஆண்டில், அமைச்சகம் ஒரு புதிய 'நிலையான செயல்பாட்டு நடைமுறையுடன்' (Standard Operating Procedure - SOP) ஒரு "அலுவலக குறிப்பாணையை" வெளியிட்டது. இது 2017-ஆம் ஆண்டின் காலக்கெடுவைத் தவறவிட்ட திட்டங்கள் கூட அபராதம் மற்றும் பிற செலவுகளைச் செலுத்தி சீரமைக்கப்பட அனுமதி அளித்தது. ஆனால், இவை இரண்டும் தற்போது நீர்த்துப்போகும்படியாகச் செய்யப்பட்டுள்ளன.
அசல் தீர்ப்பின் அடிப்படை
நீதிபதி ஏ.எஸ். ஓகா அவர்களின் தீர்ப்பு, 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டின் இரண்டு அறிவிப்புகளையும் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு அடிப்படைத் தத்துவங்களுக்குத் திரும்பி, இந்தப் பிரச்சினையை இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டத்தின் பெரிய வரலாற்றில் வைத்தது. இது ஸ்டாக்ஹோம் மாநாடு (1972) முதல் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் (1986) வரையிலும், பின்னர் 1994ஆம் ஆண்டு மற்றும் 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) விதிகள் வரையிலும் உள்ள நிகழ்வுகளை இணைத்தது. இவை அனைத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டனவே தவிர, மீறல்களுக்கு மன்னிப்பு வழங்கவோ அல்லது சட்டப்பூர்வமாக்கவோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance - EC) பெறுவது என்பது வெறும் சடங்கு அல்ல; அது சட்டத்தின் ஒரு முக்கியப் பகுதி என்று இந்தத் தீர்ப்பு கூறியுள்ளது. எந்தவொரு திட்டமும் தொடங்குவதற்கு முன், நிரந்தர சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுப்பதற்காக, பொது விசாரணை, அறிவியல் ஆய்வுகள், நிபுணர் மதிப்பாய்வுகள் மற்றும் நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதல்கள் ஆகியவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையில் அடங்கும். முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதி (EC) ஒரு திட்டம் சூழலியல் எல்லைகளுக்குள் சாதியமா என்பதைச் சரிபார்க்கிறது மற்றும்
பொருளாதார வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பை மீறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
முந்தைய தீர்ப்பு, முக்கிய கடந்தகால முடிவுகளை நம்பியிருந்தது, எடுத்துக்காட்டாக, காமன் காஸ் vs இந்திய ஒன்றியம் (Common Cause vs Union of India) (2017), அதில் நீதிமன்றம் ஒரு திட்டம் ஏற்கனவே தொடங்கிய பிறகு அதற்கு ஒப்புதல் அளிப்பது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும், மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெளிவாகக் கூறியது. மேலும், சுரங்க குத்தகை புதுப்பித்தலுக்குக் கூட முன்கூட்டியே ஒப்புதல் தேவை என்று வலியுறுத்திய எம்.சி. மேத்தா (M.C. Mehta cases) வழக்குகளையும் அது மேற்கோள் காட்டியது. வேலை தொடங்குவதற்கு முன் சட்டம் அறிவியல் சோதனைகளைக் கோரினால், அத்தகைய சோதனைகள் இல்லாமல் கட்டப்பட்ட திட்டங்களை பின்னர் பின்தேதியிட்ட அனுமதி மூலம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது
நீதிபதி ஓகா, ஒன்றிய அரசின் செயல்முறையையும் எடுத்துரைத்தார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், 2017-ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள முன்தேதியிட்ட ஒப்புதல்களுக்கு அனுமதிக்கும் விதியானது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அரசு வழக்கறிஞர்கள் தெளிவாக உறுதியளித்தனர். இந்த உறுதிமொழி அதிகாரப்பூர்வமாகப் பதியப்பட்டு நீதிமன்றத்தால் நம்பப்பட்டது. எனவே, அரசு தனது சொந்த உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டின் குறிப்பாணையோ இதற்கு நேரெதிராகச் செயல்பட்டது. அதாவது, காலக்கெடுவைத் தவறவிட்டவர்களும் முன்தேதியிட்ட ஒப்புதலுக்காக விண்ணப்பிக்க அனுமதிக்கும் வகையில், விதிகளை அரசு தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
துரதிர்ஷ்டவசமாக, மறுஆய்வுத் தீர்ப்பு இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு, ஒரே ஒரு குறுகிய கேள்வியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: முன்கூட்டிய ஆய்வைச் செயல்படுத்துவது ஏற்கனவே சட்டத்தை மீறியவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துமா? இதைச் செய்வதன் மூலம், சட்டக் கொள்கையிலிருந்து வசதிக்கு கவனத்தை மாற்றுகிறது. இது தெளிவான பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கை என்று நீதிபதி பூயன் கூறுகிறார்.
பெரும்பான்மை நீதிபதிகளின் அணுகுமுறையில் உள்ள பல முரண்பாடுகளை மாற்று நீதிபதியின் மாறுபட்ட கருத்து சுட்டிக் காட்டுகிறது. முந்தைய தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை நிராகரிப்பதற்கான முக்கிய காரணம், சட்டங்கள் தீங்கைத் தடுப்பதற்காகவே உள்ளனவே தவிர, அதிலிருந்து தப்பிக்க உதவுவதற்கு அல்ல என்பதை அது வலியுறுத்துகிறது. தவறு நிகழ்ந்த பிறகு விதிவிலக்கு காட்டுவது, நீதிமன்றம் பல ஆண்டுகளாகக் கட்டமைத்த பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துகிறது.
சட்டத்தை மீறுவதால் ஏற்படும் விளைவுகளைப் போக்க முடியும் என்றால், அதற்குக் கட்டுப்படுவதற்கான தூண்டுதல் எதுவும் இருக்காது. திட்ட உருவாக்குநர்கள், அரசு மற்றும் நீதிமன்றம் கடுமையான தண்டனைகளுக்குப் பதிலாக அபராதங்கள் மூலம் தங்கள் மீறல்களைச் சாதாரணமாக ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன், சுற்றுச்சூழல் அனுமதி (EC) இல்லாமலேயே தங்கள் பணிகளைத் தொடரலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்கின்றனர். அடிப்படையில், சட்டவிரோதச் செயல்கள் வெகுமதி அளிக்கப்படுகின்றன. மேலும், இந்தத் தவறு எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறது என்ற காரணத்தைக் கொண்டே சட்டம் வளைக்கப்பட வேண்டும் என்ற நியாயப்படுத்துதலும் முன்வைக்கப்படுகிறது.
இந்த மறுஆய்வுத் தீர்ப்பு, சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையை பலவீனப்படுத்தி, பொதுமக்கள் கருத்து கேட்பு, நிபுணர் ஆய்வு மற்றும் அறிவியல் மதிப்பீடு ஆகியவற்றை பெரும்பாலும் சம்பிரதாயமாக ஆக்குகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவது ஒரு விருப்பமாகவே கருதப்படுகிறது. விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என்று கருதுவதால், மாநில அரசின் ஒழுங்குபடுத்தும் அதிகாரமும், சட்டத்தை மீறுவோரைத் தடுக்கும் அமலாக்கத்தின் விளைவும் குறைகிறது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் தீர்ப்பின் மிக மோசமான விஷயம், அது கொடுக்கும் செய்திதான். காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் உச்சநீதிமன்றமே “பொறுப்பு” என்ற கருத்தை இன்னும் பலவீனப்படுத்துகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்னதமாக இருப்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்ளும் ஒரு நிறுவனத்துக்கு,
இந்த மறு ஆய்வுத் தீர்ப்பு மிகுந்த கவலையளிக்கும் பின்னடைவாகவே உள்ளது.
நீதிமன்றம் இப்போது இந்தச் சவால்களை மீண்டும் ஆராய வேண்டும். அவ்வாறு செய்யும்போது, இரண்டு அறிவிப்புகளும் செல்லுபடியாகுமா என்பது மட்டுமல்ல, இந்தியாவின் சட்டத்தின் ஆட்சியில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆபத்தில் உள்ளது என்பதை அது நினைவில் கொள்ள வேண்டும்.
சுஹ்ரித் பார்த்தசாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று வருகிறார்.