டெல்லி வழக்கறிஞர் சங்கம் வாக்காளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது ஏன் சட்டரீதியான பிரச்சனைகளைத் தூண்டியுள்ளது? -அமால் ஷேக்

 வழக்கறிஞர் சங்கம் விவரங்களை வெளியிட்ட  சிறிது நேரத்திலேயே, வழக்கறிஞர்கள் ஏராளமான பிரச்சாரச் செய்திகளைப் பெறத் தொடங்கினர். எனவே, தேர்தல்கள் என்ற பெயரில் ஒரு சட்டப்பூர்வ தொழில்முறை அமைப்பு (statutory professional body) எவ்வளவு தனிப்பட்ட தகவல்களை பொது வெளியில் வைக்க முடியும்?


டெல்லி வழக்கறிஞர் சங்க (Bar Council of Delhi (BCD)) தேர்தலுக்கு முன்னதாக, வழக்கறிஞர் சங்கம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அதன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது. பெயர்கள் மற்றும் பதிவு எண்களுடன், பட்டியலில் மொபைல் எண்கள், குடியிருப்பு முகவரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் புகைப்படங்கள் இருந்தன.


செய்திகள் வெளி வந்த பின்னர், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் பிரச்சாரம் தொடர்பான தகவல்களை பெறத் தொடங்கினர். குறுஞ்செய்தி சேவை (short message service (SMS)), மின்னஞ்சல், வாட்ஸ்அப் செய்திகள், தொலைபேசி அழைப்புகள், பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் விரைவு அஞ்சல் வழியாகவும்  தகவல்களை பெற்றனர். சில வழக்கறிஞர்கள் முன் அனுமதியின்றி வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்கப்பட்டதாகக் கூறினர்.


டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு, தரவுகளை வெளியிடுவதையே சவால் செய்கிறது.


பிப்ரவரி 18 அன்று, தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு, இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று கூறியது. வழக்கறிஞர்ளின் தனியுரிமையை மீற முடியாது என்றும், அனுமதியின்றி வழக்கறிஞர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், வழக்கறிஞர்களின்  தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், வழக்கறிஞர்களின் தனியுரிமை உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.


இந்த எண்ணிக்கை மற்றும் மக்கள் தொடர்புகளின் அதிர்வெண் ஒரு பரந்த கேள்வியை எழுப்புகிறது: தேர்தல்களை நடத்துவதற்காக ஒரு அதிகாரப்பூர்வ தொழில்முறை அமைப்பு எவ்வளவு தனிப்பட்ட தகவல்களை  பொது வெளியில் பகிர முடியும்?


மனுவில் என்ன சொல்லப்பட்டுள்ளது?


வாக்காளர் பட்டியல் வெளியீட்டை, அங்கீகரிக்கப்படாத வெளியீடு, பரப்புதல் மற்றும் வழக்கறிஞர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு விவரிக்கிறது. வெளியீட்டின் காரணமாக, வழக்கறிஞர்கள் தேவையற்ற அழைப்புகள், செய்திகள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனு சுட்டிக்காட்டுகிறது.


மனுவில், பிரிவு 21 மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி  vs இந்திய ஒன்றிய (Justice K.S. Puttaswamy (Retd.) v. Union of India) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலைப் பகிர்வது பிரிவு 21-ன் கீழ் உள்ள தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை தெளிவாக மீறுவதாகவும், சட்டப்பூர்வமானது, அவசியமானது மற்றும் விகிதாசாரமானது என்ற சட்டத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


தேர்தல்களை நடத்துவது ஒரு சட்டபூர்வமான நோக்கமாக இருக்கலாம் என்றாலும், "அத்தகைய தரவுகளை வெளியிடுவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு முக்கியமானதாக இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்தத் தகவலைப் பகிர்வது பின்தொடர்தல், துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள், அடையாளத் திருட்டு, ஆன்லைன் மோசடி, தரவு தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பிற வகையான தீங்குகளுக்கு வழிவகுக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


சட்டப்பூர்வ கட்டமைப்பில், மனு இந்திய வழக்கறிஞர் சங்க விதிகளை குறிப்பிடுகிறது. இது வாக்காளர் பட்டியலில், "வரிசை எண்; மாநில பட்டியலில் உள்ள எண்; பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களின் பெயர் மற்றும் வழக்கறிஞரின் முகவரி" ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று வழங்குகிறது. தனிப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது விதிகளின்கீழ் கருதப்படவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


டெல்லி வழக்கறிஞர் சங்கவிதிகளின் பிரிவு 13-ஐக் குறிப்பிட்டு, வாக்காளர் பட்டியல்கள் இந்திய வழக்கறிஞர் சங்க விதிகளின்படி கண்டிப்பாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும், கூடுதலாக தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது முற்றிலும் அனுமதிக்க முடியாது (wholly impermissible) என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனுவில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர்க்கை மற்றும் ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை, ஒப்புதல் இல்லாமல் வேறு காரணங்களுக்காகப் பகிர முடியாது என்று கூறுகிறது. டெல்லி வழக்கறிஞர் சங்க, தரவு முதலில் சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே அதைப் பயன்படுத்தவும் பகிரவும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்றும் கூறுகிறது.


சட்டம்  என்ன சொல்கிறது


வழக்கறிஞர்கள் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகளாக வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. இது அவர்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரங்களை வழங்குகிறது. மேலும், அவர்கள் நடவடிக்கை எடுக்கும்போது, ​​அவர்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பு விதிகள் அவர்களை இணையதளத்திலும் பின்தொடர்கிறது.


இந்த மனு ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றிய வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இதில் உச்சநீதிமன்றம் பிரிவு 21-க்குள் தனியுரிமையை (privacy) அங்கீகரித்தது. தனிப்பட்ட தகவல்களின் மீதான கட்டுப்பாடு கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்கு முக்கியமானதாகும் என்பதை தீர்ப்பு அங்கீகரித்தது. டிஜிட்டல் காலகட்டத்தில், தனியுரிமைக்கு அச்சுறுத்தல்கள் அரசுக்கு மட்டும் அல்ல; தனிநபர்கள் அல்லது அமைப்புகளாலும் அச்சுறுத்தப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது. மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் எப்படி, எப்போது பகிரப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த உரிமை உண்டு என்றும், அனுமதியின்றி அதைப் பகிர்வது அந்த உரிமையை மீறுவதாகும் என்றும் நீதிபதி நாரிமன் வலியுறுத்தினார்.


சிறிய தரவுகள் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம். ஆனால், ஒன்றாக இணைக்கப்படும்போது, ​​அவை தனிப்பட்ட சுயவிவரத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் எச்சரித்தது. ஒரு பெயர், தொலைபேசி எண், முகவரி அல்லது புகைப்படம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், ஒன்றிணைந்து பாதுகாப்பு இல்லாமல் பகிரப்பட்டால், அவை எளிதாகத் தேடக்கூடிய ஒரு கோப்பை உருவாக்குகின்றன.


அந்த ஆபத்து தற்போதைய சர்ச்சையை உருவாக்குகிறது


டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ஒப்புதல் என்பது தனிப்பட்ட தரவு செயல்முறையை ஒழுங்கமைக்கும் கொள்கையாகும். தகவலறிந்த, தன்னார்வ ஒப்பந்தத்தால் ஆதரிக்கப்படும்போது மட்டுமே செயல்முறை சட்டபூர்வமானதாக கருதப்படும்.


முதலாவதாக, நோக்க வரம்பு என்பது தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டு, தெளிவான, குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். உதாரணமாக, வழக்கறிஞர் சங்கம்  தேர்தல்களை நடத்துவதே குறிக்கோள் என்றால், தொடர்பு விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் வெளிப்படையாகப் பகிர்வது முக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, தரவு குறைப்பு (data minimisation) என்பது கூறப்பட்ட நோக்கத்திற்கு தேவையான தகவல்களைச் செயல்படுத்துவதற்கு மட்டுமே பொருந்தும்.


ஒரு நடைமுறை சிக்கலும் உள்ளது. பாதுகாப்புகள் இல்லாமல் ஒரு முழுமையான தரவுத்தளம் இணையதளத்தில் பகிரப்பட்டல், அதை அதிக முறை நகலெடுக்க முடியும். பின்னர், அதை நீக்குவது தகவல் பரவுவதைத் தடுக்காது. இணையதளத்தில்  பகிர்வது என்பது ஒரு பலகையில் ஒரு அறிவிப்பை ஒட்டுவது போன்றது அல்ல: இது ஆயிரக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு காற்றில் பறக்க விடுவது போன்றதாகும்.


சூழலுக்கு ஏற்ப, இணைய உலகில் அரசியலமைப்பு அமைப்புகளின் ஒழுங்குமுறைப் பொறுப்பை நீதிமன்றங்கள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. த்ரோனே திவான் vs இந்திய தேர்தல் ஆணைய வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் பிரிவு 324-ன் கீழ், நியாயமான தேர்தல்களைப் பாதிக்கக்கூடிய தவறான இணைய பிரச்சார தகவல்களை தேர்தல் ஆணையம்  தடுக்க வேண்டும் என்று கூறியது. நீதிமன்றம் ஆணையத்திற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைச் சரியாகச் சொல்லவில்லை. ஆனால், அதன் அரசியலமைப்பு கடமையை நினைவுபடுத்தியது. தொலைபேசிகள் மற்றும் இணைய சேவையகங்கள் மூலம் தொடர்புகள் நடைபெற்றாலும், மேற்பார்வை இன்னும் தேவைப்படுகிறது.


Original article : Why Bar Council of Delhi’s publication of voter details online has sparked a legal tussle?. -Amaal Sheikh

Share: