நெகிழ்வான பணவீக்க இலக்கு, ஒரு நல்ல சமநிலை

வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் பேரியல் (macro) நிலைமைகளுக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்க விகிதங்களைப் பெறுவது மதிப்புக்குரியது.


இந்தியாவில் தற்போதுள்ள நெகிழ்வான பணவீக்க இலக்கு நிர்ணய (Flexible Inflation Targeting (FIT)) கட்டமைப்பு, பணவியல் கொள்கைக்கான ஆணையாக, பணவீக்கத்தை 4% (+/-)2 சதவீதமாக  நிர்வகிக்கும் காலக்கெடு மார்ச் 2026-ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மேலும், இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி நன்கு ஆராயப்பட்ட ஒரு விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. மேலும், பல கேள்விகளுக்கு கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில், தலைப்புச் செய்திக்கும் முக்கிய பணவீக்கத்திற்கும் (உணவைத் தவிர்த்து), ஏற்கத்தக்க பணவீக்க நிலை மற்றும் பணவீக்க வரம்பு ஆகிய மூன்று கேள்விகளைப் பற்றி பேசுகிறது.




பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்


இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது நிதி கொள்கையின் (Monetary Policy) ஒரு முக்கியமான நோக்கம் என்பதை முதலில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமான பணவீக்கம், ஏழை குடும்பங்களை விடவும், பணக்காரர்கள் மற்றும் வருமானம் பாதுகாக்கப்பட்ட குடும்பங்களை விடவும் விகிதாசார ரீதியாக அதிகமாகப் பாதிக்கும் ஒரு பிற்போக்கு நுகர்வு வரி (regressive consumption tax) ஆகும். உண்மையில், அதிக மற்றும் நிலையற்ற பணவீக்கம் சேமிப்பைப் பாதிக்கிறது மற்றும் முதலீடுகளை தவறாக வழிநடத்துகிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான பணவீக்கம் பற்றிய பிரச்சினை முதலில் சக்ரவர்த்தி குழுவின் முன் வந்தது, அந்தக் குழு, "... ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை உயர்வு 4 சதவீதம் (வளர்ச்சித் துறைகளுக்கு வளங்களை ஈர்க்க தேவையான ஒப்பீட்டு விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது)..." என்று கருதியது. அதற்குக் கொடுக்கப்பட்ட காரணம் ஓரளவு தெளிவற்றதாக இருக்கிறது.


1994-ஆம் ஆண்டு தானியங்கி பணமாக்குதல் முறையை ஒழித்ததிலிருந்து, ரிசர்வ் வங்கி பணவீக்க மேலாண்மையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இது ரிசர்வ் வங்கிக்கு பணவியல் கொள்கையை நடத்துவதில் செயல்பாட்டு சுயாட்சியை வழங்கியது. 2016-ஆம் ஆண்டில், இந்தியா பணவீக்க இலக்கு நிர்ணய கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது. இது பரந்த அளவில் நிறுவன சுயாட்சியையும் வழங்கியது. 2016-ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் பணவீக்கம் பல அதிர்ச்சிகளை எதிர்கொண்ட போதிலும், பெரும்பாலும் குறிப்பிட்ட வரம்பிற்குள் உள்ளது. இது இன்னும் வளர்ந்துவரும் ஒரு கட்டமைப்பிற்கு ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. 


எதை இலக்காகக் கொள்ள வேண்டும்?


ஒட்டுமொத்தப் பணவீக்கமா  அல்லது அடிப்படைப் பணவீக்கமா எதை இலக்காகக் கொள்வது என்பது மீண்டும் மீண்டும் வரும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. பணவீக்கக் கட்டுப்பாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதும், ஏழைகளை அதிர்ச்சிகளிலிருந்து பாதுகாப்பதும் என்றால், ஒட்டுமொத்தப் பணவீக்கமே பொருத்தமான இலக்காக இருக்க வேண்டும். 'உணவுப் பணவீக்கம்' என்பது விநியோக அதிர்ச்சிகளின் விளைவு மட்டுமே என்ற அனுமானம் அவசியமில்லை. கடந்த சில நிகழ்வுகள் காட்டியுள்ளபடி, விரிவாக்கப் பணவியல் கொள்கை சூழலில் 'உணவுப் பணவீக்கம்', சுருக்கப் பணவியல் கொள்கை சூழலில் இருப்பதைவிட மிக அதிகமாக இருக்கும்.

தனிப்பட்ட விலைகளின் நடத்தை பொதுவான விலை (அதனால், பணவீக்கம்) அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது என்ற தவறான முடிவும் உள்ளது. 1963-ஆம் ஆண்டு மும்பையில் ஒரு இந்திய பார்வையாளர்களிடம் மில்டன் ஃப்ரீட்மேன்  கூறியது போல், அரசாங்கம் ஒரு முழுமையான வேலைவாய்ப்புக் கொள்கையில் உறுதியாக இருந்தால், அதற்கேற்ப அரசாங்கச் செலவினங்களுக்காகவோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ அதிகப் பணத்தை அச்சிடுவதன் மூலம் பண விநியோகத்தை விரிவாக்கலாம். அந்த விஷயத்தில், ஊதியங்களின் மேல்நோக்கிய உந்துதல் பணவீக்கத்தை உருவாக்கியது என்பது உண்மைதான், ஏனெனில் அது அவசியமான பணவீக்கத்தை ஏற்படுத்தியதல்ல, மாறாக அது பணத்தின் இருப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய வழிமுறையாக இருந்தது என்று தெரிவித்திருந்தார். 


ஒட்டுமொத்த பணப்புழக்கம் அல்லது பண விநியோகத்தில் விரிவாக்கம் இல்லாமல், பொதுவான விலை நிலை உயர முடியாது. இந்தியாவில் தற்போதைய ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கும் அடிப்படைப் பணவீக்கத்திற்கும் இடையேயான விவாதம், சார்பு விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பொதுவான விலை நிலைக்கும் உள்ள வேறுபாட்டைத் தவறவிடுவதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த தேவை மாறாதபோது, ​​உணவுப் பணவீக்கம் ஒப்பீட்டு விலைகளில் மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்தும். பொது விலை நிலை பாதிக்கப்படாது. இருப்பினும், ஊதியங்கள் மற்றும் பிற வழிகளில் அதிகரித்த அழுத்தம் மூலம் உணவுப் பணவீக்கத்தின் இரண்டாம் சுற்று தாக்கங்களை இந்தியத் தரவு காட்டுகிறது. ஃபிரைட்மேன் எச்சரித்தபடி, ஒட்டுமொத்த தேவை விரிவாக்கம் அனுமதிக்கப்பட்டால், இது பொதுவான விலை நிலையில் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில், பணவியல் கொள்கையின் வரம்பில் 'உணவுப் பணவீக்கம்' கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.


ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்க அளவு



பிலிப்ஸ் வளைவைப் (Phillips Curve) பயன்படுத்தி சில ஆய்வுகள், வளர்ச்சிக்கும் பணவீக்கத்திற்கும் இடையில் ஒரு சமரசம் இருப்பதாக வாதிடுகின்றன. அனுபவ ரீதியாக, பிலிப்ஸ் வளைவு வாதம் காலத்தின் சோதனையில் நிற்கவில்லை. ஃப்ரீட்மேன் மற்றும் மற்றவர்கள் வாதிட்டது போல, குறுகியகால சமரசம் மட்டுமே உள்ளது. மேலும், நீண்ட காலத்திற்கு, எதிர்பார்ப்புகள் கட்டமைக்கப்படுவதால், எந்த சமரசமும் இருக்காது.

இருப்பினும், குறுகிய காலத்தில்கூட, குறைந்த அளவிலான பணவீக்கம் வளர்ச்சியை எளிதாக்கக்கூடும். ஆனால், ஒரு நிலைக்கு மேல், அதிக பணவீக்கம் வளர்ச்சியைப் பாதிக்கவே செய்கிறது. மேலும், இவ்வாறாக ‘வரம்புப் பணவீக்கம்’ என்ற கருத்து உருவானது. 1991-ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து (COVID-19 ஆண்டைத் தவிர்த்து) பணவீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டிற்குமான வருடாந்திர தரவுகள் வழங்கப்பட்டுள்ள வரைபடத்தில் இதைக் கவனிக்கலாம். இந்த இரண்டு மாறிகளுக்கும் இடையே ஒரு எளிய இருபடி கோடு (simple quadratic line) ஒரு சீரற்ற (non-linear) உறவைக் கொடுக்கிறது. வளைவு மாறும் புள்ளி 3.98 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்கம் சுமார் 4 சதவீதமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.


பணவியல் கொள்கை என்பது பெரும்பாலும் எதிர்காலத்தைக் கணக்கில் கொள்வது மற்றும் பணவீக்க இலக்கின் தற்போதைய மறுஆய்வு (FIT) அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அதாவது 2030-31-ஆம் ஆண்டு வரை, அதற்கான கட்டமைப்பை பரிந்துரைப்பதாகும். வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் பேரியல் நிலைமைகளுக்கு (macro conditions) ஏற்ப, ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்க விகிதங்களைப் பெறுவது மதிப்புக்குரியதாயாகும். இந்தத் திசையில் ஒரு ஆரம்ப உருவகப்படுத்துதல் பயிற்சி, ஏற்றுக்கொள்ளக்கூடிய விகிதமாக 4 சதவீதத்திற்கும் குறைவான பணவீக்கத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய விகிதமாக பரிந்துரைக்கிறது.  இதற்கு சில உறுதிப்பாட்டுச் சோதனைகள் தேவைப்படுகிறது. குறிப்பாக, அடுத்த ஐந்தாண்டுகளில் நிதியியல் மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, இது 4 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்க இலக்கிற்காக வாதிடுவதற்கு மிகவும் குறைந்த இடமே உள்ளது என்பதைக் குறிக்கிறது.


பணவீக்கக் குழுவில்


தற்போதைய +/-2% வரம்பு, பணவியல் அதிகாரிகள் செல்ல போதுமான நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது. ஆனால், மத்திய வங்கி எவ்வளவு காலம் உச்சவரம்பிற்கு அருகில் இருக்க முடியும் என்பது பரிந்துரைக்கப்படவில்லை. உண்மையில், உச்சவரம்பிற்கு மிக அருகில் இருப்பது கட்டமைப்பின் நோக்கத்தையே தோற்கடிக்கும்.  பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் உயரும்போது, வளர்ச்சி விகிதம் கடுமையாகக் குறைய வாய்ப்புள்ளது  என்பதையும் வரைபடம்  சுட்டிக்காட்டுகிறது.


வருங்காலத்தில் நிதி கொள்கையை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தும் இது அமையும். இந்தியாவின் பணவீக்க வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால், 1970-ஆம் ஆண்டு மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் அதிகப் பணவீக்கத்திற்கான ஒரு முக்கியக் காரணம், நிதிப் பற்றாக்குறையின் பணமாக்கலே  ஆகும். அதனால்தான், 1990-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தச் செயல்பாட்டில் ஒரு முக்கிய அம்சம், பற்றாக்குறையின் தானியங்கி பணமாக்கலின் விளைவைக் கொண்ட தற்காலிக கருவூலச் சீட்டுகளை வெளியிடும் முறையை ஒழிப்பதாகும். இதனைத் தொடர்ந்து, பிற்காலத்தில் நிதி பொறுப்பு மற்றும் நிதித்திட்ட மேலாண்மைச் சட்டம் (Fiscal Responsibility and Budget Management (FRBM)) கொண்டுவரப்பட்டது. இதன் இயல்பான தொடர்ச்சியே பணவீக்க இலக்கு நிர்ணயம் ஆகும். நிதி பொறுப்பு மற்றும் நிதித்திட்ட மேலாண்மைச் சட்டத்தின்  (Fiscal Responsibility and Budget Management (FRBM)) விதிகளும் பணவீக்க இலக்கு நிர்ணயமும் (Flexible Inflation Targeting (FIT)) இணைந்தே செயல்படுத்தப்பட வேண்டும். இந்த இரண்டு கட்டமைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தவறவிட்டால், அது மற்றொன்றில் விளைவுகளை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த பேரியல் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆபத்தை  ஏற்படுத்தும். 


சி. ரங்கராஜன், சென்னை மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் தலைவராக உள்ளார். என்.ஆர். பானுமூர்த்தி, சென்னை மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் இயக்குநராக உள்ளார்.

Original Article: Flexible inflation targeting, a good balance 

Share: