‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கொடுங்கோன்மை’: உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணைய நியமன நடைமுறையை ஏன் சுட்டிக்காட்டியது? - அமால் ஷேக்

2023-ஆம் ஆண்டு வரை, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடைமுறையை விரிவாக விவரிக்கும் எந்தவொரு சட்டமும் இருக்கவில்லை. அந்த நியமனச் செயல்முறையை உருவாக்கிய ஒரு சட்டம், தற்போது ஏன் சட்டரீதியான சவாலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கான விளக்கம் இங்கே.


தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான சட்டத்தை இயற்றுமாறு 2023-ஆம் ஆண்டில் தனக்கு உத்தரவிடப்படும் வரை, நாடாளுமன்றம் பல  ஆண்டுகளாகச் செய்த தாமதத்தை, உச்சநீதிமன்றம் வியாழக்கிழமையன்று  ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கொடுங்கோன்மை’ (tyranny of the elected) என்று குறிப்பிட்டது.


தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-க்கு எதிரான சவால்களை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.


சட்ட இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், தேர்தல் ஆணையர்களுக்கான தேர்வுக் குழுவிலிருந்து இந்தியத் தலைமை நீதிபதியை நீக்கி, அவருக்குப் பதிலாக பிரதமரால் நியமிக்கப்பட்ட ஒரு ஒன்றிய அமைச்சரை அந்தப்பதவியில் நியமித்ததால், 2024-ஆம் ஆண்டில் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது.


உண்மையில், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நியமிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சந்தித்தபோது, ​​புதிய நியமன முறையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை நியமனங்களை ஒத்திவைக்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டு ராகுல் காந்தி ஒரு மாற்றுக்கருத்துக் குறிப்பை (dissent note) வழங்கினார்.


தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?


அரசியலமைப்பின் 324(2) பிரிவின்படி, தேர்தல் ஆணையர்கள் "நாடாளுமன்றத்தால் அது தொடர்பாக இயற்றப்பட்ட எந்தவொரு சட்ட விதிகளுக்கு ஏற்ப" நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


1991-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் அலுவல் நடவடிக்கைகள்) சட்டம்,  ஊதியங்கள், பதவிக்காலம் மற்றும் ஆணையத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தியபோதிலும், அது தேர்தல் ஆணை நியமனங்களை குறிப்பிடவில்லை.


அது போன்ற சட்டம் இல்லாத நிலையில், நியமனங்கள் நிர்வாகத்தின் அதிகார வரம்பிலேயே இருந்தன. ஒன்றிய சட்ட அமைச்சகம் ஒரு குழுவைத் தயாரித்து, பிரதமருக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கும். பிரதமரின் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். காலப்போக்கில், தேர்தல் ஆணையக் குழுக்கள்   அரசு நிர்வாகத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டன. அவர்களில் மிகவும் மூத்த தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்  தலைமைத் தேர்தல் ஆணையராக (CEC) தேர்ந்தெடுக்கப்படுவார்.


2022-ஆம் ஆண்டில், மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் (அனூப் பரன்வால் எதிர் இந்திய யூனியன்) வாதிட்டபோது, ​​இது நியமனங்களை அன்றைய அரசாங்கத்தின் கைகளில் வழங்கிவிட்டதாகவும், தேர்தல்களை நடத்தும் பொறுப்புள்ள ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதிப்பதாகவும் கூறினர்.


2022-ஆம் ஆண்டு நவம்பரில் இந்த வழக்கின் விசாரணையின்போது, ​​முன்னாள்  இந்தியா ஆட்சி பணி அதிகாரியான அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவி அந்த ஆண்டு மே மாதம் முதல் காலியாக இருந்தது. இந்த முழு செயல்முறையும் ஒரே நாளில் முடிக்கப்பட்ட நிலையில், அருண் கோயலின் நியமனம் தங்களுக்குப் புதிராக இருப்பதாக நீதிமன்றம் கூறியது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் தேர்வு குறித்து சட்டமன்றம் அமைதி காப்பதையும் நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது.


2023-ஆம்  ஆண்டில் 'அனூப் பரன்வால்' வழக்கில் உச்சநீதிமன்ற என்ன தீர்ப்பு வழங்கியது?


அனூப் பரன்வால் vs  இந்திய யூனியன் (Anoop Baranwal vs Union of India) வழக்கில், மார்ச் 2023-ல் வழங்கப்பட்ட தனது தீர்ப்பில், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான ஒரு இடைக்கால செயல்முறையை உச்சநீதிமன்றம் வகுத்தது.


பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத பட்சத்தில், எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் மக்களவையில் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழுவின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர் நியமனங்களை மேற்கொள்வார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


தேர்தல்கள் நியாயமாகவும் சட்டப்படியும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டியதன் முக்கியதுவத்தையும், ஜனநாயக செயல்முறையை நிர்வாகத் தலையீட்டிலிருந்து பாதுகாக்க ஒரு சுதந்திரமான அமைப்பு முக்கியம் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக நடைபெற்ற அரசியலமைப்புச் சபை விவாதங்களைக் குறிப்பிட்ட நீதிபதி அமர்வு, தேர்தல்களை நடந்துபவர்கள் "நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள்" (under the thumb of the executive) வரக்கூடாது என்ற பி.ஆர்.அம்பேத்கரின் எச்சரிக்கையை உச்சநீதிமன்றம் நினைவுபடுத்தியது.


தேர்தல் ஆணையம் "ஜனநாயகத்தின் பாதுகாவலர்" போன்றது என்றும், தேர்தல்களை மேற்பார்வையிடும் நபர்கள் பாரபட்சமின்றியும் நேர்மையாகவும் செயல்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



அனூப் பரன்வால் தீர்ப்பு வாக்குரிமைகள் குறித்த புரிதலையும் விரிவுபடுத்தியது. வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பிலிருந்து வருகிறது என்றும், வாக்களிப்பது என்பது பிரிவு 19(1)(a)-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் (freedom of expression) ஒரு பகுதி என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தேர்தல் ஆணையத்தை அமைப்புரீதியாகவும் நிதிரீதியாகவும் வலுப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் ஒரு “தீவிரமான வேண்டுகோளை” வைத்தது. ஒரு சுதந்திரமான செயல்முறையை உருவாக்குவது மற்றும் ஆணையத்தின் செலவினங்களை இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (Consolidated Fund of India) வரவு வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு நீதிமன்றம் அரசைக் கேட்டுக்கொண்டது. மேலும், தேர்தல் ஆணையத்தின் வளங்களை முடக்குவதன் மூலம் நிர்வாகம் மறைமுகமாக அதன்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழ்நிலைகள் குறித்து நீதிமன்றம் எச்சரித்தது.


தேர்தல் ஆணைய நியமனங்கள் குறித்த 2023-ஆம் ஆண்டு சட்டம் என்ன கூறியது


அனூப் பரன்வால் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் 2023-ல் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டத்தை இயற்றியது. இந்தப் புதிய சட்டம், பிரிவு 7(1)-ன் கீழ் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு ஒன்றிய  அமைச்சரவை அமைச்சரை தலைமை நீதிபதிக்கு மாற்றாக நியமித்தது. இது தேர்வுக் குழுவின் மூன்று இடங்களிலும் நிர்வாகப் பிரதிநிதித்துவத்தை வழங்கியது, இதில் மூன்று இடங்களில் இரண்டில் அரசாங்க அமைச்சர்கள் இருந்தனர்.


மேலும், பிரிவு 7(2)-ன் கீழ், "தேர்வுக் குழுவில் ஏதேனும் காலியிடம் இருப்பதாலோ அல்லது அதன் அமைப்பில் ஏதேனும் குறைபாடு இருப்பதாலோ மட்டும் ஒரு நியமனம் செல்லாததாகிவிடாது" என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.


2024-ஆம் ஆண்டில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms (ADR)) போன்ற அரசு சாரா அமைப்புகள் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன. இந்தச் சட்டம், நியமனங்கள் மீதான நிர்வாகத்தின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் மீட்டெடுக்கிறது என்றும், தேர்தல் ஆணையம் நிர்வாகத் துறையின் தலையீட்டிலிருந்து தனித்து இயங்க வேண்டும் என்ற அனூப் பரன்வால் தீர்ப்பின் அடிப்படை தத்துவத்தையே இது முறியடிக்கிறது என்றும் அந்த மனுவில் குறிபிடபட்டுள்ளது.


2023-ஆம் ஆண்டில் இந்தச்சட்டம் ஒரு இரு-சட்ட செயல்முறையையும் உருவாக்குகிறது. பிரிவு 6-ன் கீழ் சட்ட அமைச்சரின் தலைமையில் ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு தேர்வுப் பலகையில் இடம்பெற வேண்டிய பெயர்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. ஆனால் பிரிவு 8(2)-ன் கீழ், தேர்வுப் பலகையானது அந்தப் பரிந்துரைப் பட்டியலால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தகுதி வரம்புகளுக்குள் வரும் "வேறு எந்த ஒரு நபரையும்" (any other person) தேர்வுக்குழு பரிசீலிக்கலாம். இது, நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்தி, அதிகாரப்பூர்வத் தேடல் செயல்முறையை முழுமையாகத் தவிர்க்க விருப்புரிமையை அந்தக் குழுவிற்கு  வழங்குகிறது.


உச்ச நீதிமன்றம் இப்போது என்ன கூறியுள்ளது?


வியாழக்கிழமையன்று வாதங்களின்போது, ​​நீதிபதி தத்தா, அனூப் பரன்வால் தீர்ப்பு, "சட்டம் இயற்றப்படும் வரை உள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக" மட்டுமே வழங்கப்பட்டது என்றும், நாடாளுமன்றம் "ஒரு குறிப்பிட்ட முறையில்" சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தீர்ப்பில்  கூறவில்லை என்றும் குறிப்பிட்டார்.


மனுதாரரான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனிடம் நீதிமன்றம், “பரன்வாலுக்கு முன்பு என்ன நடந்தது? நாடாளுமன்றம் ஏன் சட்டம் இயற்றவில்லை?” என்று கேட்டது.


ஒவ்வொரு முறையும் ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, ​​இந்த நியமன அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது, ​​ஒரு சுதந்திரமான அமைப்பு இருக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பரன்வால் வழக்கின் இந்தத் தீர்ப்பிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற சூழல்களில் தான் நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது  என்று பூஷன் கூறினார்.


தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சர்வாதிகாரம் என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது என்று கூறிய நீதிபதி தத்தா, "இதை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கொடுங்கோன்மைக்குச் சமமாகக் கருத வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறினார்.


விசாரணையின் போது, ​​நீதிபதி தத்தா: “அனூப் பரன்வால் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடைபெற்றதா? அந்தத் தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்ட நெறிமுறைகள் நாடாளுமன்ற விவாதங்களிலும் பிரதிபலித்துள்ளதா? அது தெளிவாக இல்லை  என்று குறிப்பிட்டார்.


நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடைபெறவில்லை என மூத்த வழக்கறிஞர் ஷாதன் ஃபராசத் பதிலளித்தார். அதற்கு பூஷன், “பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால், நடைமுறையில் எந்த விவாதமும் நடைபெறவில்லை” என்றார்.


Original Link: ‘Tyranny of the elected’: Why Supreme Court has flagged Election Commission appointment procedure.
Share: