பெலெம் குறியீடுகளின் (Belém indicators) வழிகாட்டுதலோடு, வலுவான மற்றும் மீண்டுவரக்கூடிய நீர் மேலாண்மை அமைப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்தியா 'உலகளாவிய தெற்கு (Global South)' எனப்படும் உலகளாவிய வளரும் நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகக் காட்டமுடியும்.
நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் 30-வது அமர்வு (Conference of the Parties (COP 30)), "செயல்பாட்டிற்கான மாநாடு" (COP of Implementation) என்று அழைக்கப்பட்டது. இது பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் 'தகவமைப்பு' முறையைப் புரிந்துகொள்வதில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறித்தது: அதாவது, தகவமைப்பு என்பது வெறும் மீள்தன்மைக்கான வாக்குறுதி மட்டுமல்ல, அது நெருக்கடியான காலங்களில் செயல்படும் அமைப்புகளைக் கொண்டு அளவிடக்கூடியதாகவும், பொறுப்புக்கூறத்தக்கதாகவும் இருக்கவேண்டும் என்பதாகும். இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக 'நீர்' மாறியுள்ளது; இது உள்கட்டமைப்புத் திட்டமிடலில் இருந்து விலகி, காலநிலை மாற்றத்திலிருந்து தப்பிப்பிழைப்பதற்கான அடிப்படைத் தேவையாக மாறியுள்ளது. முதன்முறையாக, உலகளாவிய தகவமைப்பு குறிகாட்டிகளில் நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (Water, Sanitation, and Hygiene (WASH)) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இது நீர்-உணவு-காலநிலை ஆகியவற்றுக்கு இடையேயான பிணைப்பை மறுசீரமைத்துள்ளதுடன், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரின் வழியாக உணரப்படும் காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றெல்லாவற்றையும்விட நீரின் மூலமாகவே மிகத் தீவிரமாக உணரப்படுகிறது. வெள்ளப்பெருக்கு நகரங்களை மூழ்கடிக்கிறது, வறட்சி கிராமப்புறப் பொருளாதாரத்தை நலிவடையச் செய்கிறது, உருருகின்ற பனிப்பாறைகள் இமயமலை நதி அமைப்புகளைச் சீர்குலைக்கின்றன, கடலோர நிலத்தடி நீரில் உப்பு நீர் ஊடுருவுகிறது, மற்றும் சீரற்ற பருவமழை உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. குறிப்பாக, நெல் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கரிமக் கழிவுகள் ஆகியவற்றின் மூலமாக மனிதர்களால் உருவாக்கப்படும் மீத்தேன் (Methane) உமிழ்வில் சுமார் 40% விவசாயத் துறையிலிருந்தே கிடைக்கிறது. எனவே, நீர்பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல் மற்றும் வலுவான துப்புரவு அமைப்புகளை (Sanitation systems) உருவாக்குதல் ஆகியவை இப்போது வெறும் வளர்ச்சி இலக்குகள் மட்டுமல்ல, அவை காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளாகவும் மாறியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உலகளாவிய காலநிலை மீள்தன்மை கட்டமைப்பின் (UAE Framework for Global Climate Resilience) கீழ் உருவாக்கப்பட்டுள்ள 59 பெலெம் தகவமைப்பு குறியீடுகளில் (Belém Adaptation Indicators), உலகளாவிய நிர்வாகத்தில் ஒரு புதிய ஒழுங்குமுறையை வெளிப்படுத்துகின்றன. இதில் இரண்டு முக்கியப் பிரிவுகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது பிரிவு, காலநிலையைத் தாங்கி நிற்கும் நீர் மற்றும் துப்புரவு அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது: அதாவது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைக் குறைத்தல், வெள்ளம் மற்றும் வறட்சிக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்குதல், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்தல் மற்றும் தீவிர இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் வகையில் துப்புரவு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது பிரிவு, இடர் மேலாண்மை நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறது. அதாவது 2027-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பல-அபாய முன்னெச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதல், வலுவான வானிலை மற்றும் நீர் கண்காணிப்புச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் 2030-ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கப்பட்ட தேசிய பாதிப்பு மதிப்பீடுகளைத் தயாரித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது நீர் பாதுகாப்பு என்பது வெறும் உள்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமல்ல, காலநிலை அழுத்தங்கள் அதிகரிக்கும் போதும் அந்த அமைப்புகள் தொடர்ந்து தடையின்றி இயங்குவதை உறுதி செய்வதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பத்திலிருந்தே தொடங்கத் தேவையில்லை
இந்தியா தனது தற்போதைய அடித்தளங்களை வலுப்படுத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டில், நீர் மேலாண்மையை ஒருங்கிணைந்த முறையில் கையாளுவதற்காக, அது ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் (Ministry of Jal Shakti) கொண்டுவரப்பட்டது. மேலும், இந்தியாவின் 'நீர் தொலைநோக்கு பார்வை 2047' (Water Vision 2047) திட்டமானது பெலெம் (Belém) தகவமைப்பு கட்டமைப்புடன் ஒத்துப்போவதுடன், நிலைத்தன்மை, சமநிலை மற்றும் மீள்திறன் ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.
நிலத்தடி நீர் மேலாண்மை இந்த மாற்றத்தை மிகத் தெளிவாக விளக்குகிறது. தேசிய நீர்நிலைப் வரைபடமாக்கம் மற்றும் மேலாண்மைத் திட்டம் 2.0 (National Aquifer Mapping and Management Programme 2.0 (NAQUIM 2.0)), வெறும் நீர்நிலைகளை அடையாளம் காண்பதோடு நின்றுவிடாமல், அந்தந்த நீர்நிலைகளுக்கு ஏற்ற மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவது வரை முன்னேறியுள்ளது. இந்த மாற்றமானது, நீர் புவியியல் அறிவை (hydrogeological knowledge) கொள்கைரீதியான நடவடிக்கையாக மாற்றுகிறது. மேலும், சர்வதேச தகவமைப்பு குறியீடுகளுக்கு (global adaptation indicators) இணையாக தற்போது தேவைப்படும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறையையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
நதிகளைப் புதுப்பிப்பதும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் பிரதிபலிக்கிறது. தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் (National Mission for Clean Ganga (NMCG)) என்பது வெறும் கழிவுநீர் சுத்திகரிப்போடு நின்றுவிடாமல், பல்லுயிர் பாதுகாப்பு, டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது. இதன் மூலம் தூய்மையான நதிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு அரணாகச் செயல்பட உதவுகின்றன.
தெளிவான முன்னேற்றம் காணப்பட்டாலும், மூன்று முக்கிய அபாயங்கள் இந்த வேகத்தைக் குறைக்கக்கூடும். முதலாவதாக, நீர் தட்டுப்பாடு தீவிரமாகவும், பகுதிகளுக்கு இடையே சீரற்ற நிலையிலும் உள்ளது. இந்தியாவில் நிகழும் பெரும்பாலான காலநிலை பேரிடர்கள் நீருடன் தொடர்புடையவை; இத்தகைய சூழலில், நீர், துப்புரவு மற்றும் சுகாதார (Water, Sanitation, and Hygiene (WASH)) அமைப்புகள்தான் பாதிப்பிற்கு எதிரான முதல் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகின்றன. வெள்ளம் அல்லது நீண்ட வறட்சிக் காலங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிசெய்ய, வெறும் இணைப்புகளை மட்டும் அதிகரிப்பதோடு நின்றுவிடாமல், உள்கட்டமைப்புகளின் காலநிலைத் தாங்குதிறனைப் பரிசோதித்தல் (Climate Stress Testing), நீர் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் மாற்று சேவை அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை அவசியமாகிறது.
இரண்டாவதாக, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கான நிதி உதவி இன்னும் பலவீனமாகவே உள்ளது. 2035-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு $1.3 டிரில்லியன் (சுமார் 1.3 லட்சம் கோடி டாலர்) திரட்டுவது குறித்து உலகளாவிய விவாதங்கள் நடந்தாலும், அதை எப்படிச் சாதிப்பது என்பது குறித்த தெளிவான திட்டம் இன்னும் இல்லை. நம்பகமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தகவமைப்பு நிதி இல்லையென்றால், பேரிடர் மீட்புக்காகச் செலவிடப்படும் பணம், நீண்டகால மீள்திறனுக்கான முதலீடுகளைக் குறைத்துவிடக்கூடும் என்கின்றனர். எனவே, நீர் மேலாண்மைத் திட்டங்களை வெறும் சாதாரணத் துறை சார்ந்த செலவுகளாகப் பார்க்காமல், அவற்றை காலநிலை மாற்றத்திற்கான முதலீடுகளாகத் தெளிவாக அங்கீகரித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
மூன்றாவதாக, டிஜிட்டல்ரீதியிலான தரவுப் பிரிவினை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவில் நீர்நிலை மற்றும் வானிலை தொடர்பான ஏராளமான தரவுகள் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence (AI)) பயன்படுத்தி அந்தத் தரவுகளைத் திட்டமிடுதல், நிதி ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளை உடனுக்குடன் ஒருங்கிணைப்பது இன்னும் வரம்பிற்குட்பட்டதாக உள்ளது.
இந்தியாவின் நிறுவன அமைப்பை உற்று நோக்கினால், சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட பெரும்பாலான தகவமைப்பு இலக்குகளுக்கு இணையாக நம்மிடமும் ஏற்கனவே தேசிய அளவிலான திட்டங்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. குடிநீர் வசதி, துப்புரவு விரிவாக்கம், நீர்ப்பாசனத் திறன், நகர்ப்புற நீர் சீர்திருத்தங்கள் மற்றும் காலநிலை செயல் திட்டங்கள் போன்றவை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள் மூலம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில், இந்தத் திட்டங்களின் கண்காணிப்புத் திரைகளில் காலநிலை அழுத்தக் குறியீடுகளையும் Climate stress indicators) ஒரு அங்கமாகச் சேர்க்க வேண்டும்.
பெலெம் பிரகடனம் முழுமையான மாற்றத்தைவிட, நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பையே வலியுறுத்துகிறது. இந்தியாவின் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)), நீர் மேலாண்மைத் தரவுகள், பயிர் ஆலோசனைகள், காப்பீடு மற்றும் நிதிச் சேவைகளை ஒருங்கிணைந்த தளங்களாக மாற்ற உதவும் என்றும் இது விவசாயிகள் உடனுக்குடன் சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
பெலெம் குறியீடுகள் காலநிலை வாழ்வாதாரத்திற்கான வழிகாட்டியாக அமைகின்றன
பெலெம் குறியீடுகள் (Belém indicators) என்பது வெறும் அலுவலகரீதியான சரிபார்ப்புப் பட்டியல் மட்டுமல்ல என்றும் அவை உயிர்வாழ்வதற்கான ஒரு வழிகாட்டுதல்களாகக் கருதப்படுகின்றன. இதனைத் தீவிரமாகச் செயல்படுத்தினால், 'பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளுதல்' என்பதை ஒரு மேலோட்டமான விவாதமாக மட்டும் பார்க்காமல், நாட்டின் வளர்ச்சி உத்திகளை வழிநடத்தும் ஒரு முக்கியக் கொள்கையாக மாற்ற முடியும். இந்தியா தற்போது ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. இந்தியாவின் நீர் மேலாண்மை சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப வலிமை மற்றும் சமூகங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் ஆகியவை, உலகளாவிய பருவநிலை பேச்சுவார்த்தைகளில் இந்தியாவை ஒரு வெறும் பங்கேற்பாளராக மட்டுமன்றி, பருவநிலை மாற்றத் தகவமைப்புத் திட்டங்களை ஒரு பெரிய அளவில் செயல்படுத்துவதில் ஒரு சிறந்த முன்மாதிரியான தலைவராகவும் முன்னிறுத்துகின்றன.
காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் நீர்வளம் முதன்மையானதாக இருக்க வேண்டும். அதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவது வேகமாகவும், நேர்மையாகவும், வலுவான தொழில்நுட்பத்தின் உதவியுடனும் அமைய வேண்டும் என்கின்றனர். ஒரு நாட்டின் மீள்திறன் என்பது அங்கு கட்டப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படக்கூடாது என்றும் மாறாக பெருவெள்ளம், வறட்சி மற்றும் பிற காலநிலை மாற்றங்களின் போதும் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யும் அமைப்புகளை வைத்தே அளவிடப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா ஏற்கனவே இதற்கான பல திட்டங்களைச் செயல்பாட்டில் வைத்துள்ளது. தனது இலக்குகள், அளவீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை விரைவாக ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியா தனது லட்சியத்தை உண்மையான மீள்திறனாக மாற்ற முடியும் என்றும் இதன் மூலம் 'உலகளாவிய தெற்கு' எனப்படும் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கிரிஜா கே. பாரத், குர்கானில் உள்ள 'மியூ காமா' (Mu Gamma) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். எஸ்.கே. சர்க்கார், புது தில்லியில் உள்ள ‘TERI’ அமைப்பின் மூத்த ஆலோசகரும், இந்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரும் ஆவார்.