2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் உற்பத்திக்கான புதிய அனுமதிகள் வழங்கப்படாது. -குஷ்பூ குமாரி

 



2027-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அல்லது கூடுதல் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அனுமதிகளை அரசாங்கம் நிறுத்தவுள்ளது. இந்த உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது?  எந்த வகையான சர்வதேச ஒப்பந்தங்கள் இதைக் கையாளுகின்றன?


தற்போதைய செய்தி


புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களின் (hydrofluorocarbons (HFCs)) உற்பத்தியை படிப்படியாகக் குறைப்பதற்கான  சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஏற்ப, டிசம்பர் 31, 2027ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய அல்லது கூடுதல் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து மாநில மற்றும்  ஒன்றிய  அரசு அதிகாரிகளுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


புதிய ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் உற்பத்தியைத் தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு, 2100-ஆம் ஆண்டிற்குள் 0.5 டிகிரி செல்சியஸ் வரையிலான புவி வெப்பமயமாதலைத்  குறைக்கும் என எதிர்பார்க்கப்படும் கிகாலி திருத்தத்திற்கு (Kigali amendment) ஏற்ப அமைந்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு இது ஏன் முக்கியமானது என்பதற்கான காரணங்கள்  கூறப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. ஓசோன் படலத்தின் சேதத்தைத் சமாளிப்பதற்காக, குளோரோ ஃபுளோரோ கார்பன்களைப் படிப்படியாக நீக்கி, 2010-ஆம் ஆண்டு முதல் அவற்றுக்கு முழுமையான தடை விதித்த, 1989-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாண்ட்ரியல் ஒப்பந்ததத்தில் இந்தியா ஓர் உறுப்பினராக உள்ளது.


2. பின்னர் 2021-ஆம் ஆண்டில், குளோரோ ஃபுளோரோ கார்பன்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்களின் பயன்பாடுகளைப் படிப்படியாகக் குறைக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்ட, கிகாலி திருத்தத்தை இந்தியா அங்கீகரித்தது. ஒப்பந்தத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம், 2016இல்  ருவாண்டாவின் கிகாலியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


3. இந்தியா, 2028 ஜனவரி 1 முதல் தொடங்கும் வகையில் ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன் (HFC) வாயுக்களை படிப்படியாகக் குறைக்கும் அட்டவணைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி, 2032-ஆம் ஆண்டிற்குள் 10% குறைத்து, அதை 2047-ஆம் ஆண்டிற்குள் 85% வரை அதிகரித்து குறைக்கும் திட்டம் உள்ளது.




4. இது, கிகாலி திருத்தத்தின் கீழ் உள்ள ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன் பயன்பாட்டைக் குறைக்கும் கால அட்டவணையுடனும், ஜனவரி 1, 2028-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கட்டுப்பாட்டில் உள்ள பயன்பாடுகளுக்காகப் புதிய ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கோ அல்லது இருக்கும் மையங்களை விரிவாக்கம் செய்வதற்கோ தடை விதிக்கப்படும். மேலும், ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன் உற்பத்தியை அனுமதிப்பதற்கான ஒரு தகுந்த கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்கின்றனர்.


மாண்ட்ரீல் ஒப்பந்தத்திலிருந்து கிகாலி திருத்தம் வரை: பருவநிலை மாற்றப் போராட்டத்தில் ஓசோன் ஒப்பந்தம்  பற்றி


1. 1989-ஆம் ஆண்டு மாண்ட்ரீல் ஒப்பந்தமானது, வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அது தொடக்கத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாக இருக்கவில்லை. முன்னர், குளிர்பதன  துறைகளில் பயன்படுத்தப்பட்ட குளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் (CFCs) உள்ளிட்ட சில வேதிப்பொருட்கள், மேல் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கை சேதப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது.


2.  இந்த வாயுக்களின் அதிகப்படியான பயன்பாடு ஓசோன் அடுக்கின் சுருக்கத்திற்கும், அண்டார்டிக்கா பகுதியில் “ஓசோன் துளை” உருவாகவும் முக்கிய காரணியாக இருந்தது. மாண்ட்ரீல் ஒப்பந்தம், குளோரோஃப்ளூரோ கார்பன்கள் மற்றும் பிற ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் பொருட்களை (Ozone-Depleting Substances (ODS)) முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. கடந்த   30 ஆண்டுகளாக இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.


3. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின்படி, மாண்ட்ரீல் ஒப்பந்தமானது வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகப் போற்றப்படுகிறது. இது ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் பொருட்களில் (ODS) 98%-ஐ படிப்படியாக அகற்றி, இந்த நூற்றாண்டின் இடைப்பகுதிக்குள் ஓசோன் படலத்தை சேதத்தில் இருந்து மீட்பதற்கான வழியாக அமையும் என்கின்றனர். 


4. ஓசோன் படலத்தை அழிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட வாயுக்களே ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும்  வாயுக்கள் (ODS) ஆகும். குளோரோஃப்ளூரோகார்பன்கள் (CFC) ஹைட்ரோகுளோரோஃப்ளூரோகார்பன்கள் (HCFC) ஹைட்ரோப்ரோமோஃப்ளூரோகார்பன்கள் (Hydrobromoflurocarbons (HBFC)), ஹாலோன்கள், மெத்தில் புரோமைடு (Methyl bromide), கார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) மற்றும் மெத்தில் குளோரோஃபார்ம் (Methyl chloroform) ஆகியவை இதில் அடங்கும்.


ஓசோன் (வேதியியல் ரீதியாக, மூன்று ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஒரு மூலக்கூறு, அல்லது O3) பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 முதல் 50 கிமீ உயரத்தில் உள்ள மேல்மண்டலமான “அடுக்கு மண்டலம்” (Stratosphere) பகுதியில் காணப்படுகிறது. இது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவதால், பூமியில் உயிர்கள் வாழ்வதற்கக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் புற ஊதா கதிர்கள் மனிதர்களுக்குத் தோல் புற்றுநோயையும், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்குப் பலவிதமான நோய்களையும், உடல் குறைபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியவை.


5. ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், குளோரோ புளோரோ கார்பன்கள் (CFC) பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. சில  சமயங்களில், இவை முதலில் ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன்கள் (HCFC) மூலம் மாற்றப்பட்டன.  பின்னர் இறுதியாக ஓசோன் படலத்திற்கு மிகக் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ புளோரோ கார்பன்கள் (HFC) மூலம் மாற்றப்பட்டன. தற்போது, குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில், ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன்கள் (HCFC) பயன்பாட்டிலிருந்து ஹைட்ரோபுளோரோகார்பன்கள் (HFC) பயன்பாட்டிற்கு மாறும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


6. ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்கள் (hydrofluorocarbons (HFCs)) ஓசோன் படலத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்துவதில்லை. இதுவே அவை முதலில் தடை செய்யப்படாததற்குக்  காரணமாக அமைந்தது. ஆனால், அவை மிகவும் சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். எனவே, மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின்கீழ் அவை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


7. இருப்பினும், புவி வெப்பமயமாதலை ஏற்படுத்துவதில் கார்பன் டை ஆக்சைடைவிட ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகிறது. உண்மையில், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி (United Nations Environment Programme (UNEP)), அதிகம் பயன்படுத்தப்படும் 22 ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களின் சராசரி புவி வெப்பமயமாதல் திறன், கார்பன் டை ஆக்சைடைவிட 2,500 மடங்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


8. கிகாலி திருத்த ஒப்பந்தம், தற்போது பயன்படுத்தப்படும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன் வாயுக்களில் 80–90% வரை 2050-ஆம் ஆண்டுக்குள் குறைக்க முயல்கிறது. இதனால், 2100-ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை உயர்வை 0.5°C வரை தவிர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


9. கிகாலி ஒப்பந்தத்தின்கீழ், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், தங்களின் ஹைட்ரோஃப்ளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக, அவற்றுக்குப் பதிலாக காலநிலைக்கு ஏற்ற மாற்றுகளைப் பயன்படுத்துவதற்கான வெவ்வேறு காலஅட்டவணைகளுடன், தனித்தனி நாடுகளின் குழுக்களில் இடம்பெற்றுள்ளன.

10. இந்தியா, பஹ்ரைன், ஈரான், ஈராக், குவைத், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் சேர்த்து இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்த இலக்கின்படி, இந்தியா தனது ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) பயன்பாட்டை 2047-ஆம் ஆண்டிற்குள் 80% குறைக்க வேண்டும். இதே இலக்கை, சீனா 2045-ஆம் ஆண்டிற்குள்ளும், அமெரிக்கா 2034-ஆம் ஆண்டிற்குள்ளும் அடைய வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மீத்தேன்


1. ஆறு முக்கிய பசுமை இல்ல வாயுக்களில், கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக மீத்தேன் 2-வது இடத்தில் உள்ளது. இது உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில்  17 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.


2. 100 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வளிமண்டலத்தில் நிலைத்திருக்கும் கார்பன் டை ஆக்சைடுடன் ஒப்பிடுகையில், மீத்தேன் 12 ஆண்டுகள் என்ற ஒப்பீட்டளவில் குறுகிய கால அளவைக் கொண்டுள்ளது. ஆனால், கார்பன் டை ஆக்சைடைவிட 80 மடங்கு அதிக புவி வெப்பமடைதளுக்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. தொழிற்புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட வெப்பநிலை உயர்வில் குறைந்தது 30 சதவீதம் மீத்தேன் வெளியேற்றத்தின் காரணமாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.















3.  மீத்தேன் என்பது நிறமற்ற, வாசனையற்ற ஒரு வாயு ஆகும். இது இயற்கையான மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூலங்களைக் கொண்டுள்ளது. இயற்கையாகவே, இது சதுப்பு நிலங்களில் நீருக்கடியில் தாவரங்கள் சிதைவடைவதன் காரணமாக உருவாகிறது. கரையான், எரிமலைகள், காட்டுத்தீ போன்றவை மீத்தேன் உருவாவதற்கான இயற்கை ஆதாரங்களாகும்.


4. மனிதனால் உருவாக்கப்படும் மீத்தேன் வாயு வெளியேற்றத்திற்கு காரணமான முக்கியத் துறைகள்: வேளாண்மைத் துறை, இது 40% வெளியேற்றத்திற்குக் காரணமாகிறது. இதில் கால்நடை கழிவுகள் மற்றும் நெல் சாகுபடி ஆகியவை அடங்கும். இதற்குப் பிறகு, புதைபடிவ எரிபொருள் துறை 35% மீத்தேன் வெளியேற்றத்திற்குக் காரணமாக உள்ளது. கழிவு மேலாண்மை, ஏறக்குறைய 20% வெளியேற்றத்திற்குக் காரணமாக உள்ளது. இது குப்பை கிடங்குகள், திறந்தவெளி கழிவுகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளில் உயிரியல் பொருட்கள் சிதைவதால் உருவாகிறது.


5. 1997-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2005-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த கியோட்டோ  ஒப்பந்தம் (Kyoto Protocol), 6 பசுமை இல்ல வாயுக்களைப் பட்டியலிட்டது. அவற்றில் மீத்தேனும் ஒன்றாகும். கியோட்டோ ஒப்பந்தமானது, இந்த வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் மீது கட்டாய  விதிமுறைகளை நிர்ணயித்தது.


6. பாரிஸ் ஒப்பந்தம் 2015-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாயு வெளியேற்ற இலக்குகளை நிர்ணயிப்பதில் வளர்ந்த நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்பார்த்தபோதிலும்,  தேசிய அளவில் தீர்மானிக்கப்படும் அணுகுமுறையை நோக்கிய மாற்றத்தைக் குறித்தது.


7. COP 26-வது காலநிலை மாநாட்டில், 2030-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய மீத்தேன் வெளியேற்றத்தை 2020-ஆம் ஆண்டு அளவிலிருந்து குறைந்தபட்சம் 30 சதவீதம் குறைக்கும்  வேண்டும் என்கிற முக்கிய இலக்குடன், உலகளாவிய மீத்தேன் உறுதிமொழி (Global Methane Pledge (GMP)) ஒரு தன்னார்வ சர்வதேச முன்னெடுப்பாகத் தொடங்கப்பட்டது.


8. அஜர்பைஜானின் பாகு (Baku) நகரில் நடைபெற்ற COP29-வது காலநிலை மாநாட்டில், 30-க்கும் மேற்பட்ட நாடுகள் கரிமக் கழிவுகளிலிருந்து மீத்தேன் வாயுவைக் குறைப்பதற்கான பிரகடனத்தை அங்கீகரித்தன. இது உலகளாவிய காலநிலை முன்னெடுப்புகளில் ஒரு  முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் மொத்த மீத்தேன் வாயுவில் 20% பங்களிக்கும் உணவுக்கழிவுகள்,  வேளாண் கழிவுகள் மற்றும் கழிவுநீர் போன்ற கரிமக் கழிவுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதை இந்தப் பிரகடனம் இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Original Link: No new clearances for HFC production in India after 2027.


Share: