குடியேற்றம், குடியுரிமை மற்றும் 'நாகரிகம்' தொடர்பான அச்சங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில், கடவுச்சீட்டு என்பது ஒரு போராட்டக்களமாக மாறியுள்ளது. - சுகதா ஸ்ரீனிவாசராஜு

மேற்கத்திய நாடுகள் ஒரு காலத்தில் குடியேற்றத்தை ஊக்குவித்தன. ஆனால், இன்று அதே நாடுகளுக்குள் அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.


கடந்த சில வாரங்களாக, கடவுச்சீட்டுகள் பற்றிய விவாதங்கள் முதன்மையான தலைப்பாக மாறியுள்ளன. இதனால் இது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மா, மூன்று நாடுகளின் கடவுச்சீட்டுகளை ரகசியமாக வைத்திருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு முன்னதாக, அசாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் கோகோயின் பிரிட்டிஷ் குடியுரிமை மற்றும் அவருக்குப் பாகிஸ்தானுடன் இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.


வடகிழக்கு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பான இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில், இந்தப் பகுதியில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) மற்றும் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் சிறப்பு தீவிர திருத்த முறை (Special Intensive Revision (SIR)) போன்ற குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீப காலங்களாக, ஒருவருடைய அடையாளம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான கேள்விகள் இங்கே மிக முக்கியமானதாக மாறியுள்ளன. இதன் தாக்கம் மேற்குவங்கம் வரை எதிரொலித்துள்ளது. அங்கு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட ஒருவர், தன்னிடம் இருக்கும் சரியான இந்தியக் கடவுச்சீட்டுக்கு இனி என்ன மதிப்பு இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்தச் சிக்கல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மற்றொரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாகவும், அவர் ரகசியமாகப் பிரிட்டிஷ் கடவுச்சீட்டு வைத்துள்ளார் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்தத் தனிப்பட்ட சம்பவங்கள் பல விவாதங்களுக்கும், அவதூறு வழக்குகளுக்கும், அரசியல் ரீதியான எதிர்வினைகளுக்கும் வழிவகுத்துள்ளன. அதோடு, இவை மக்களிடையே மனவருத்தத்தையும், ஒருவித ஏமாற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நேரங்களில் இவை வாக்காளர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்தச் சம்பவங்கள் கவனிக்கப்பட வேண்டியவைதான். இருப்பினும், நாம் கவனிக்க வேண்டிய ஒரு பெரிய பின்னணி உள்ளது. அதுதான் கடந்த 25 ஆண்டுகளில் கடவுச்சீட்டு தொடர்பான சிக்கல்கள் கடந்து வந்த பயணம் ஆகும்.


1990-ஆம் ஆண்டுகளில் தேசிய அடையாளங்கள் வலுவிழந்து காணப்பட்ட காலத்திலிருந்து, இன்று அவை மீண்டும் வலிமையுடன் எழுச்சி பெற்றுள்ள காலம் வரை, கடவுச்சீட்டின் பிம்பம் பெருமளவு மாறியுள்ளது. உண்மையில், அது தனது பழைய நிலையை நோக்கியே திரும்பியுள்ளது எனலாம். 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வரை உலகளாவிய சூழல் ஓரளவுக்கு நிலையாக இருந்தபோது, கடவுச்சீட்டின் பங்கு ஒரு மென்மையான கருவியாகவே இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மீண்டும் ஒரு நாட்டின் கலாச்சாரம், இனம் மற்றும் தேசியம் சார்ந்த அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளதால், கடவுச்சீட்டு என்பது தனது பழைய அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.


உலகளாவிய ஒத்துழைப்பு பொதுவாக இருந்த காலத்திலும், உலகம் ஒரே சமூகமாகப் பார்க்கப்பட்ட காலத்திலும், கடவுச்சீட்டுகள் அவற்றின் வலுவான தேசிய அடையாளத்தை இழந்திருந்தன. அவை வெறும் பயண ஆவணங்களாக மட்டுமே பார்க்கப்பட்டன. அதேபோல், நுழைவு இசைவு (விசா) நடைமுறைகளும் மிகவும் எளிமையாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் மாறின. இந்த மாற்றம் குறிப்பாக 'பனிப்போர்' முடிவுக்கு வந்த பிறகு தெளிவாகத் தெரிந்தது. நாடுகள் தங்களுக்கு இடையேயான எல்லைகளைத் திறந்து, பிளவுகளைக் குறைத்துக் கொண்டதால், கடவுச்சீட்டு தொடர்பான கடுமையான விதிகளும் தளர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


தாராளமயமாக்கல் காலத்தில், கடவுச்சீட்டு தொடர்பான சேவைகள் விரைவுபடுத்தப்பட்டது ஆட்சியின் சிறந்த  அடையாளமாக மாறியது. இந்தியாவும் ஒரு "தாராளமய கடவுச்சீட்டு கொள்கையை" அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், கடவுச்சீட்டு பெறுவது என்பது பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. ஒருவரது செல்வமும் முதலீடும், அவருக்குக் கடவுச்சீட்டுகளையும் 'கோல்டன் விசா'க்களையும் (Golden Visas) எளிதாகப் பெற்றுத் தந்தன. ஒரு வகையில் பார்த்தால், குடியுரிமை என்பது விலை கொடுத்து வாங்கக்கூடிய ஒரு பொருளைப் போல மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் தங்கள் தாய்நாட்டின் மீதான உணர்வுப்பூர்வமான பிணைப்பைவிட, வரிச் சலுகை அளிக்கும் நாடுகளுக்கே (Tax havens) முன்னுரிமை அளித்தனர். இது குடிமக்கள் உலகளவில் இடம்பெயர்ந்து வேலை செய்யவும், செல்வத்தைப் பெருக்கவும் உதவியது. பனிப்போருக்குப் பிறகு, தாய்நாடு அல்லது தந்தைநாடு என்ற தேசப்பற்று சார்ந்த கருத்துக்களைவிட சந்தைப் பொருளாதாரமே முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.


உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் உலகளாவிய தொழிலாளர் சந்தையின் ஒரு அங்கமாக மாறியதால், கடவுச்சீட்டு என்பது ஒரு சிலருக்கு மட்டுமேயான விஷயமாக இல்லாமல் போனது. மலிவான உழைப்பு, வெளிப்பணி வழங்கல் (outsourcing) மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தியைத் தொடங்குதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. உதாரணமாக, கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டன. உலகளாவிய இடப்பெயர்வு அதிகரித்ததால், மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர்வது சாதாரணமான ஒன்றாக மாறியது. இதன் விளைவாக, மேற்கத்திய நாடுகளில் பல தொழில் நகரங்கள் தங்களின் நீண்டகால வரலாற்றை ஒரே இரவில் இழந்தது போல மிக வேகமாக வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


இந்த அமைப்பின் பெரும்பகுதி இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதை இயக்கும் அடிப்படை நோக்கம் மாறிவிட்டது. புதிய அரசியல் மற்றும் கலாச்சார ரீதியான அக்கறைகள் இப்போது உருவாகியுள்ளன. நாடுகள் தற்போது கலாச்சார சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இருப்பினும், இவை எப்போதும் நேரடியான எதிர்ப்புகளாக இருப்பதில்லை. மாறாக, இந்த உணர்வு மிகக் குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்று, கடவுச்சீட்டுகளில் கலாச்சார அடையாளம் மற்றும் இனத்துவத்தின் மீது மீண்டும் ஒரு கவனம் திரும்பியுள்ளது. இது ஒரு முழுமையான புதிய உலக ஒழுங்கைக் குறிக்கவில்லை. எனினும் இவை மேம்பட்ட தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளால் வடிவமைக்கப்பட்ட முந்தைய காலத்து உலக நடைமுறைக்கு நாம் மீண்டும் திரும்புவதைக் காட்டுகிறது.


கடந்த காலத்தில், ரஷ்யக் கவிஞர் விளாடிமிர் மாயகோவ்ஸ்கி தனது சோவியத் கடவுச்சீட்டை "மிகப்பெரிய மதிப்புமிக்க ஒரு அடையாளம்" என்று குறிப்பிட்டார். இன்று அந்த முக்கியத்துவம் மீண்டும் வந்துள்ளது. 1960-ஆம் ஆணடுகளில் பாப்லோ நெருடாவும் தனது கடவுச்சீட்டின் மீது கவனம் செலுத்தி, "எனது கவிதைகள் கொடுங்கோலர்களை அச்சுறுத்துவதால், அவர்கள் எனக்கு கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறார்கள்" என்று எழுதினார். அந்த காலகட்டத்தில், கவிஞர்கள் ஒரு உலகளாவிய, மனிதாபிமான பார்வையை முன்வைக்க முயன்றனர். இதையே சித்தாந்த ரீதியிலான பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, தாங்கள் சாதித்துவிட்டதாக வர்த்தக உலகம் கூறிக்கொண்டது. ஆனால், அது உண்மையில் வெற்றி பெறவில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறை மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளதுடன், ஏழை-பணக்கார இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான செல்வம் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, சமூக ஒழுக்கச் சீரழிவோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இன்று, தாராளவாதக் கருத்துக்கள் பெரும்பாலும் வரம்பற்ற சுதந்திரமாகவும், சுயக்கட்டுப்பாடற்ற ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. இது கடவுச்சீட்டுகள் வழங்கும் 'தடையற்ற இடப்பெயர்வு' சுதந்திரத்தைப் பாதித்துள்ளது. இன்று பல வகையான இடப்பெயர்வுகள் விதிமீறல்களாகவே பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, குடியேற்றம் என்பது நாட்டின் பெருமைக்கும் ஒருவித அச்சுறுத்தலாகக் கருதப்படுவதுடன், அனைத்து நிகழ்வுகளும் ஒரு நாட்டின் கலாச்சார அடையாளத்தைப் பாதிப்பதாகவே உணரப்படுகின்றன.


பொதுவாக, உலகளாவிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு நீண்டகாலம் ஆகும். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிக்கொள்ளும் ஒரு சூழலுக்கு நாம் மீண்டும் தள்ளப்பட்டிருக்கிறோம். பிரிட்டன் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரெக்ஸிட் (Brexit) மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. அதேபோல், அமெரிக்காவை மீண்டும் வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், டிரம்ப் வர்த்தக வரிகளை விதித்து உலகளாவிய வர்த்தகத்தைத் தடுத்ததோடு, குடியுரிமை மற்றும் அங்கு தங்குவதற்கான விதிகளையும் கடுமையாக்கியுள்ளார். ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகள் எதனை ஊக்கப்படுத்தினவோ, அதே குடியேற்றக் கொள்கைக்கு இன்று அந்த நாடுகளிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது முரண்பாடான உண்மை ஆகும். ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கனவு, திடீரெனச் சுருங்கிப்போயுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


சுகதா ஸ்ரீனிவாசராஜு, 'The Conscience Network: A Chronicle of Resistance to a Dictatorship' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.



Original Link: In era of migration, citizenship and ‘civilisational’ anxieties, passport has become a battleground.


Share: