சிறந்த நிர்வாகத்தை அடைவதற்கு, இந்தியா தரவுத் தரப்படுத்தலை (data standardisation) உறுதி செய்ய வேண்டும்
நாடாளுமன்றத்தின் மற்றொரு கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், இந்த அவையில் ஒரு வழக்கமான போக்கு காணப்பட்டது. நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான பொறுப்புணர்வு வகிக்கும் பணிகளில் ஒன்றை நிறைவேற்றும் விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கேள்விகளைக் கேட்க எழுந்து நின்றனர். இருப்பினும், இந்தக் கேள்விகளில் பெரும்பகுதி, எத்தனை பள்ளிகளில் செயல்படும் கழிப்பறைகள் உள்ளன? ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எத்தனை ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டன? அல்லது ஒரு குறிப்பிட்ட திட்டத்தின்கீழ் எத்தனை பயனாளிகள் பயனடைந்தனர்? என்பது போன்ற, கணிக்கக்கூடிய ஒன்றையே பின்பற்றுகின்றன.
இந்தக் கேள்விகள் சில முக்கியமான பொதுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தாலும், இதில் கேட்கப்படும் தகவல்கள், தெளிவான, தரப்படுத்தப்பட்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய நிலையில், பொதுவெளியில் ஏற்கனவே கிடைக்கக்கூடியதற்கான சாத்தியக்கூறுகளை நிறைவேற்றிருக்க வேண்டும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து 17-வது மக்களவையில் (2019-24) கேட்கப்பட்ட நாடாளுமன்றக் கேள்விகளைப் பகுப்பாய்வு செய்ததில், அவற்றில் பெரும்பகுதி இதுபோன்ற அடிப்படையான உண்மைகளையே கோரியது என்பது தெரியவந்தது. ஆனால், இந்தியாவின் இந்த தரவு அமைப்பு சிதறிய நிலையில் உள்ளது மற்றும் வெவ்வேறு அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று சுமுகமாகச் செயல்பாட்டில் இல்லை என்ற மிக ஆழமான யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த விவாதத்தில் மிகப்பெரிய பிரச்சினை தரவுத் தரப்படுத்தல் (data standardisation) ஆகும். ஆனால், அது குறைவான அளவிலே வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. பொதுவான தரநிலைகள் இல்லாமல், மிகவும் லட்சியமான கொள்கைத் திட்டங்கள்கூட நம்பகத்தன்மையற்றதாகவும் நிலையற்றதாகவும் ஆகிவிடும்.
சிக்கலின் கட்டமைப்பு
நிதிஆயோக் வெளியிட்ட தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளத்தின் தொலைநோக்கு ஆவணத்தில், இந்தியாவின் தரவுச் சூழலமைப்பு சீரற்றதாகவே உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் பகிரப்பட்ட குறிகாட்டிகளுக்குப் பொதுவான தரநிலைகளைப் பயன்படுத்தத் தவறுவதோடு, கால அளவு மற்றும் பிராந்தியம் போன்ற அடிப்படைப் பண்புகளைக் கூட வெவ்வேறு துறைகளால் வித்தியாசமாக வரையறுக்கப்படுகின்றன. இந்தியா இப்போது முன்னெப்போதையும்விட அதிக தரவுகளை உருவாக்குகிறது. இருப்பினும், மிகுதியான தரவுகள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருப்பதில்லை. தனிப்பட்ட அமைச்சகங்கள் தங்களின் சொந்தத் திட்டங்களுக்காகச் சேகரிக்கும் தரவுகளைப் பெரும்பாலும் தடையின்றிகூட ஒருங்கிணைக்க முடிவதில்லை. இதன் விளைவாக, தரவுகளை ஒன்றிணைக்கும் செயல்பாடு மெதுவாகவும், கடினமாகவும், பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆகிறது.
ஜூன் 2025-ல் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் (NITI Aayog) அறிக்கையின்படி, நலத்திட்டங்களுக்கான தரவுத்தளங்களில் ஒரே பயனாளியின் பெயர் பலமுறை பட்டியலிடப்படுவதால், ஆண்டுதோறும் 4% முதல் 7% வரை செலவினங்களின் அதிகரிப்பதால் நிதிசார் கசிவுகளுக்கு (fiscal leakages) வழிவகுக்கிறது. இத்தகைய செயல்திறன் குறைபாடுகளைச் சரிசெய்வதன் மூலம் எத்தகைய நிதிச் சேமிப்பையும் ஈட்டமுடியும் என்பதை, சமீபத்தில் அரசாங்கம் மேற்கொண்ட தரவுச் சுத்திகரிப்புப் பணிகள் (government data clean-ups highlight) சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) திட்டத்திலிருந்து தகுதியற்ற 17.1 மில்லியன் பெயர்களை நீக்குவதன் மூலம் 2024 நிதியாண்டில் ₹90 பில்லியன் சேமிக்கப்படும் என்றும், 35 மில்லியன் போலி எல்பிஜி இணைப்புகளை அகற்றுவதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் ₹210 பில்லியன் சேமிக்கப்படலாம் என்றும், 16 மில்லியன் போலி குடும்ப அட்டைகளை நீக்குவதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ₹100 பில்லியன் சேமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயல்திறன் குறைபாடுகள் குறிப்பிடத்தக்க கொள்கைரீதியான தாக்கங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, சுகாதாரத் துறையில், சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு, நோய் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் தடுப்பூசி பதிவேடுகளில் குழந்தைப் பருவ காசநோய் பாதிப்புகள் தனித்தனியாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றும், இதன் விளைவாக ஒரே நோயாளி பலமுறை கணக்கிடப்படுகிறார் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. இத்தகைய இரட்டிப்பு, முரண்பாடான மதிப்பீடுகளை உருவாக்குகிறது. இது பெரும்பாலும் முடிவெடுப்பவர்களை (decision-makers) நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளுவதோடு, சிலர் தனிப்பட்ட அனுபவங்களுக்கோ அல்லது அரசியல் ஆதாயத்திற்கோ ஆதரவாகத் தரவுகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும் வழிவகுக்கிறது.
கொள்கைரீதியான தாக்கங்களைத் தாண்டி, இந்தக் குறைபாடுகள் கருத்து மற்றும் பொருளாதாரரீதியான இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. உலகளாவிய புத்தாக்கக் குறியீடு-2024-ல் (Global Innovation Index 2024), இந்தியாவில் இரண்டு குறிகாட்டிகளுக்கான தரவுகள் வெளியிடப்பட்டிருந்தன. மேலும், எட்டு குறிகாட்டிகளுக்கான தரவுகள் காலாவதியானவையாக இருந்தன. இந்தக் குறிகாட்டிகளில் பல, ஒரு வருடத்திற்கும் மேலான பழைய புள்ளிவிவரங்களைச் சார்ந்திருந்தன.
ஒருங்கிணைந்த வழிமுறைகள் இல்லாமல், இத்தகைய குறியீடுகள் உண்மையான செயல்பாட்டை மறைப்பதோடு, முகமைகளுக்கு (அரசு நிறுவனங்களுக்கு) இடையேயான ஒருங்கிணைப்பில் உள்ள இடைவெளிகளையும் வெளிப்படுத்துகின்றன. பொருளாதாரரீதியாக, பொதுத்துறைத் தரவுகளின் கிடைக்கும் தன்மையையும் பகிர்வையும் மேம்படுத்துவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% வரை கூடுதலாகச் சேர்க்க முடியும் என்றும், தனியார் துறைத் தரவுகளையும் சேர்த்தால் இது 2.5% ஆக உயரும் என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) மதிப்பிடுகிறது. குறிப்பிடும்படியாக, மோசமான தரவு நிர்வாகமானது, தவறான முடிவுகளில் மட்டுமல்ல, வீணடிக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகளின் இழப்பிற்கும் வழிவகுக்கிறது.
தரவுகளுக்கான பொதுவான தரநிலை
இந்த செயல்திறன் குறைபாடுகளுக்கான ஒரு சாத்தியமான தீர்வை தேசிய தரவு நிர்வாக கட்டமைப்பு கொள்கையில் (National Data Governance Framework Policy (NDGFP)) காணலாம். இதில் முன்மொழியப்பட்டுள்ள இந்திய தரவு மேலாண்மை அலுவலகம் (India Data Management Office (IDMO)), அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் தரவுகளுக்கான பொதுவான விதிகள், தரநிலைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்கி அமல்படுத்துவதன் மூலம் சீர்திருத்தத்தின் முக்கியத் தூணாக விளங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும், அமைச்சகங்கள் முழுவதும் கட்டுப்படுத்தும் தரநிலைகளை அமைக்கவும், இணக்கத்தை தணிக்கை செய்யவும், வரையறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்த சர்ச்சைகளைத் தீர்க்கவும் இந்திய தரவு மேலாண்மை அலுவலகத்திற்கு (IDMO) உண்மையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், செயல்திறன் குறைபாடுகள் தொடர வாய்ப்புள்ளது.
மேலும், பொருளாதாரக் குறிகாட்டிகளுக்கான ஐ.நா.வின் தேசிய கணக்குகள் அமைப்பு (UN’s System of National Accounts) போன்ற உலகளாவிய புள்ளிவிவரக் கட்டமைப்புகளுடன் சீரமைப்பதும், அவற்றை ஒரு தேசிய புள்ளிவிவரத் தரநிலைகள் கையேட்டில் (National Statistical Standards Manual) ஒருங்கிணைப்பதும், நாடு தழுவிய அளவில் வரையறைகளையும் நடைமுறைகளையும் ஒன்றிணைக்கக்கூடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் திறந்த தரவுத் தளமான “data.gov.in”, என்ற இணையத்தில் பொதுவான தகவல்களைப் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் மற்றும் அரசாங்கத்தின் உள் தேவைகளுக்கும் சேவை செய்யும் ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் சீரான தரவுக் களஞ்சியமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். அமைச்சகங்கள் தரப்படுத்தப்பட்ட வடிவங்களில் தரவுத் தொகுப்புகளைத் தவறாமல் பதிவேற்ற வேண்டும். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்நேர, மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்களை அணுகுவதற்கு வழிவகுக்கும்.
ஒரு அளவுகோலாக
இறுதியாக, முன்னேற்றத்தைத் தக்கவைப்பதற்குப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமானதாக இருக்கும். நிதி ஆயோக்கின் தரவு நிர்வாகத் தரக் குறியீடு, அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களுக்கான செயல்திறன் மதிப்பாய்வுகள் மற்றும் ஊக்கத்தொகைகளுடன் இணைக்கப்பட்ட ஒரு வருடாந்திர அளவுகோலாக இருக்க வேண்டும். ஏனெனில், தரவுத் தரத்தை மேம்படுத்துவதில் உள்ள ஆரோக்கியமான போட்டியானது, பொருளாதாரப் போட்டியைப் போலவே மாற்றத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்லும்.
தரவுத் தரப்படுத்தல் என்பது பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பப் பணியாக மட்டுமே குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற விரும்பும் ஒரு தேசம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அரசு நிர்வாகத்தின் இலக்கணமாகும். தரவு அறையில் உள்ள மிகப்பெரிய சிக்கலைச் சமாளிப்பது என்பது, இந்தியாவின் தரவுகளை அதன் நோக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்றதாக மாற்றும் தரநிலைகள், அமைப்புகள் மற்றும் மேலாண்மைக்கு உறுதியளிப்பதாகும்.
அபிஷேக் ஷர்மா ஒரு மூத்த கொள்கை மற்றும் அரசியல் ஆராய்ச்சியாளர்.
Orginal article: The elephant in India’s data room -Abhishek Sharma