இறுதியில், இந்த விவாதம் இவ்விரண்டு கேள்வியில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பற்றியது அல்ல. ஒரு பன்மைச் சமூகத்தில் நம்பிக்கை பின்பற்றப்படும் கட்டமைப்பை அரசியலமைப்பு வழங்குகிறது என்பதை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
நீதித்துறை ஒரு நம்பிக்கை சார்ந்த பிரச்சினையை ஆராயும்போது, அது சட்டத்தால் மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் அடையாளத்தாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்குள் நுழைகிறது. இதன் பொருள், சபரிமலை மறுஆய்வான கண்டரு ராஜீவரு vs இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் (Kantaru Rajeevaru vs Indian Young Lawyers Association) வழக்கை விசாரிக்கும்போது, உச்சநீதிமன்றம் மீண்டும் இந்த நுட்பமான தளத்தை எதிர்கொள்ளும். இது ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 22 வரை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன் பட்டியலிடப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரம் அதே கடினமான கேள்வியை மீண்டும் எழுப்புகிறது. நம்பிக்கை எந்த அளவிற்குப் பரவுகிறது?. மேலும், அரசியலமைப்பும் நீதிமன்றங்களும் தலையிட வேண்டுமானால், எந்தக் கட்டத்தில் தலையிட வேண்டும்?
அரசியலமைப்பின் 25 மற்றும் 26 ஆம் பிரிவுகள், இந்தியாவின் மதப் பன்முகத்தன்மையை உணர்த்தும், ஒவ்வொரு மதத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் பாதுகாக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில், அவை சில வரம்புகளையும் உள்ளடக்கியுள்ளன. அரசியலமைப்புப் பிரிவு 25, ஒவ்வொரு நபருக்கும் மனசாட்சி சுதந்திரத்தையும், மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்கும் உள்ள உரிமையையும் உறுதி செய்கிறது. இருப்பினும், இந்த உரிமை பொது ஒழுங்கு, ஒழுக்கநெறி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு உட்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளைக் கையாளும் அரசியலமைப்புப் பகுதி III-இல் மற்ற விதிகளுக்கும் இது பொருந்தும். இந்தியாவில் மத சுதந்திரம் என்பது சமத்துவம், கண்ணியம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலிருந்து தனித்துச் செயல்படும் வகையில் ஒருபோதும் கருதப்பட்டதில்லை.
'ஆணையர், இந்து சமய அறநிலையங்கள், மெட்ராஸ் vs சிரூர் மடத்தின் ஸ்ரீ லட்சுமிந்திர தீர்த்த சுவாமியார்' (The Commissioner, Hindu Religious Endowments, Madras vs Sri Lakshmindra Thirtha Swamiar of Shirur Mutt) வழக்கில் மதத்தின் வரம்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய கருத்துக்கள் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றன. நம்பிக்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் அத்தியாவசிய நடைமுறைகளை மதம் உள்ளடக்கியுள்ளது என்று நீதிமன்றம் கூறியது. அதேநேரத்தில், மத நடைமுறைகளுக்கும், மதத்துடன் தொடர்புடைய மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் அது வரையறுத்தது. குறிப்பாக நிர்வாகம், சொத்து மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில், பிந்தையதை அரசு ஒழுங்குபடுத்தலாம்.
புனிதத்திற்கும் (sacred) மதச்சார்பற்றுக்கும் (secular) இடையிலான இந்த வேறுபாடு, எழுபது ஆண்டுகால சட்ட முடிவுகளை வடிவமைத்துள்ளது. இருப்பினும், இது நீதித்துறையை ஒரு கடினமான நிலையிலும் வைத்துள்ளது. எது ஒரு அத்தியாவசிய மத நடைமுறையாகக் கருதப்படுகிறது என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க, மதக் கோட்பாடுகளை விளக்க வேண்டியுள்ளது. மதச் சுயாட்சியையும் பொதுப் பொறுப்புணர்வையும் சமநிலைப்படுத்த முயற்சிப்பதால், இந்தக் கோட்பாடு நிலைத்திருக்கிறது.
அரசியலமைப்புப் பிரிவுகள் 25 மற்றும் 26-க்கு இடையிலான தொடர்பு இந்த முரண்பாட்டை மேலும் தெளிவுபடுத்துகிறது. அரசியலமைப்புப் பிரிவு 25 தனிநபர் உரிமைகளைப் (rights of individuals) பாதுகாக்கிறது. அதேசமயம் பிரிவு-26, மத விவகாரங்களில் தங்கள் சொந்த மத விவகாரங்களை நிர்வகிப்பதற்கும், நிறுவனங்களை நிறுவுவதற்கும், சொத்துக்களை நிர்வகிப்பதற்கும் மதப் பிரிவுகளின் கூட்டு உரிமைகளைப் பாதுகாக்கிறது. கோட்பாட்டளவில், இவ்விரு பிரிவுகளும் இணக்கமாக இணைந்து செயல்படுகின்றன. ஆனால் நடைமுறையில், மதப் பிரிவுகளின் தன்னாட்சி தனிநபர் அணுகலையோ அல்லது சமத்துவத்தையோ கட்டுப்படுத்தும்போது முரண்பாடு ஏற்படுகின்றன.
சபரிமலை கோயில் தொடர்பான சர்ச்சை, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் vs கேரள அரசு வழக்கில் (Indian Young Lawyers Association vs State of Kerala) இந்த முரண்பாட்டைத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு குறிப்பிட்ட வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களை கோயிலில் நுழைவதை விலக்குவது, சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுவதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கோயில் ஒரு தனி மதப் பிரிவாக இருப்பதால், விலக்குவதற்கு அதற்கு உரிமை உண்டு என்ற வாதத்தை அது நிராகரித்தது.
மத நடைமுறைகளைச் சோதிப்பதற்கான ஒரு அளவுகோலாக அரசியலமைப்பு அறநெறி (constitutional morality) என்ற கருத்தை இந்தத் தீர்ப்பு குறிப்பிட்டது. மத நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் அந்த நெறிமுறை கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும் என்று அது கோருகிறது. அரசியலமைப்பு சார்ந்த அறநெறி ஒவ்வொரு சர்ச்சைக்குரிய நடைமுறைக்கும் அளவுகோலாக மாறினால், சமூகங்களே தங்களுக்குள் தீர்த்துக்கொள்ளக்கூடிய விவகாரங்களை முடிவு செய்யும் நிலைக்கு நீதிமன்றங்கள் இழுத்துச் செல்லப்படக்கூடும். மதத்தின் போர்வையில் சமூகப் படிநிலைகளைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை.
அரசியலமைப்புப் பிரிவு-26-ன் கீழ் உள்ள மதப்பிரிவு உரிமைகள், அடிப்படை உரிமைகளா என்பது தொடர்பான ஒரு கேள்வி எழுகிறது. இதற்கான பதில் தெளிவாக ஆம் என்பதே. மதப்பிரிவுகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அரசியலமைப்பு நீதிமன்றங்களை அணுகும் உரிமை உண்டு. எஸ். பி. மிட்டல் vs இந்திய ஒன்றியம் வழக்கில் (S P Mittal vs Union of India), ஒரு மதப்பிரிவை அடையாளம் காண்பதற்கான சோதனைகளை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதில் ஒரு பொதுவான நம்பிக்கை, ஒரு பொதுவான அமைப்பு மற்றும் ஒரு தனித்துவமான பெயர் இருக்க வேண்டும்.
இந்த உரிமைகள் உண்மையானவை மற்றும் அவற்றை நீதிமன்றத்தில் அமல்படுத்த முடியும். இருப்பினும், அவை மற்ற அடிப்படை உரிமைகளைவிட மேலானவை அல்ல. அரசியலமைப்புப் பிரிவு-26 இதை வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், நீதித்துறையின் விளக்கமானது பிரிவுகள் 14, 15 மற்றும் 21 உடன் அதைத் தொடர்ந்து உட்படுத்தியுள்ளது. எந்தவொரு அடிப்படை உரிமையும் தனித்து இருப்பதில்லை. மதப்பிரிவு நடைமுறைகள் சமத்துவம் அல்லது கண்ணியத்துடன் முரண்படும் இடங்களில், நீதிமன்றங்கள் ஒரு கவனமான சமநிலைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்புப் பிரிவு 25(2)(b), சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கத்தைப் பற்றிய மற்றொரு பார்வையை வழங்குகிறது. இது, "பொதுவான தன்மையுடைய இந்து மத நிறுவனங்களை அனைத்து வகுப்பினருக்கும் மற்றும் இந்துக்களின் பிரிவினருக்கும் திறந்துவிடும்" சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. "இந்துக்களின் பிரிவு" (section of Hindus) என்ற சொற்றொடர் வேண்டுமென்றே பரந்த தன்மையைக் கொண்டவையாக இருந்தன. இந்து சமூகத்திற்குள் இருக்கும் பன்முகத்தன்மையை அவை அங்கீகரித்து, சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றுவதையும் அவை நோக்கமாகக் கொண்டிருந்தன.
நாடு முழுவதும் உள்ள கோயில் நுழைவுச் சட்டங்கள் இந்த அரசியலமைப்பு அடித்தளத்தின் மீதுதான் அமைந்துள்ளன. சமூக சீர்திருத்தம் அரசியலமைப்பின் வடிவமைப்பிலேயே எப்போதும் சேர்க்கப்பட்டிருந்தது என்பதை இந்த விதி காட்டுகிறது. மத சுதந்திரம் எல்லா வகையான சீர்திருத்தங்களுக்கும் எதிரான ஒரு கேடயமாகச் செயல்படுவதற்காக ஒருபோதும் கருதப்படவில்லை. அதேநேரத்தில், சீர்திருத்தம் சட்டத்தின் மூலமே முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, நிர்வாக உத்தரவுகள் மூலம் அல்ல. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25(2)(b)-இன் கீழ் அரசின் அதிகாரம் இயல்பிலேயே செயல்பட வழிவகுப்பதாக இருந்தாலும், அது அரசியலமைப்பு வரம்புகளையும் ஒழுக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.
இறுதியில், இந்த விவாதம் என்பது நம்பிக்கைக்கும் அரசியலமைப்புக்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பற்றியது அல்ல. ஒரு பன்மைச் சமூகத்தில் நம்பிக்கை பின்பற்றப்படுவதற்கான கட்டமைப்பை அரசியலமைப்பு வழங்குகிறது என்பதை அங்கீகரிப்பதே இதன் நிலையாகும். அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26 ஆகியவை பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டன. அவை, சமத்துவமின்மையைப் பாதுகாப்பதற்காக அல்ல. இந்தச் சட்டப்பிரிவுகள் நம்பிக்கைக்கான மரியாதையையும் சீர்திருத்தத்திற்கான ஒரு உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கின்றன. இந்த சட்டப்பிரிவுகளை கவனமாகவும் தெளிவாகவும் செயல்படுத்துவதில் நீதிமன்றங்கள் சவாலை எதிர்கொள்கின்றன. அத்தியாவசிய மத நடைமுறைகள் கவனத்துடன் அடையாளம் காணப்பட வேண்டும். அரசியலமைப்பு அறநெறி (Constitutional morality) என்பது ஒரு வெற்று முழக்கமாகவோ அல்லது கடுமையற்ற கருவியாகவோ ஆகிவிடக்கூடாது. மதப்பிரிவுகளின் தன்னாட்சி மதிக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்தத் தன்னாட்சி அடிப்படை உரிமைகளின் இழப்பில் வரக்கூடாது.
இந்திய அரசியலமைப்பு எப்போதுமே பாரம்பரியத்திற்கும், மாற்றத்திற்கும் இடையிலான ஒரு சமரசப் பேச்சுவார்த்தையை உள்ளடக்கியுள்ளது. சமய சுதந்திரம் நமது அரசியலமைப்பின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். அதன் பாதுகாப்பிற்கு, வலுவான நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதில் பணிவும், குடியரசை ஒன்றிணைக்கும் மதிப்புகளை நிலைநிறுத்துவதில் உறுதியும் தேவைப்படுகின்றன. இந்தச் சமநிலை நுட்பமானதும், அடிக்கடி விவாதிக்கப்பட்டு, சவாலுக்குட்படுத்தப்படுவதும் நமது அரசியலமைப்பு நிலையின் உண்மையான அளவுகோலாகும்.
கட்டுரையாளர், இந்திய உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர். இவர் அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
Original Link: Sabarimala review and a question: How far does faith extend — and when should the Constitution step in?