பரந்த அதிகாரங்கள்

 தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT rules) தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை அல்ல.


மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, தகவல் தொழில்நுட்ப விதிகளில் முன்மொழிந்துள்ள திருத்தங்கள், இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கும் டிஜிட்டல் தளத்தின் மீதான அரசின் ஒழுங்குமுறைக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பதற்றத்திற்கு மேலும் ஒரு புதிய களத்தைத் திறந்துள்ளன. இந்த சமீபத்திய வரைவு, அரசின் மேற்பார்வையை வழக்கமான வெளியீட்டாளர்களுக்கு (traditional publishers) அப்பால் விரிவுபடுத்தி, இணையத்தில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான உள்ளடக்கங்களைப் பதிவிடும் சாதாரண பயனர்களையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த மாற்றம் நடைமுறையில், இது ஒரு கட்டமைப்பு மாற்றத்தைக் குறிக்கிறது. ஏனெனில், முன்னர் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்திற்கு மட்டுமே, வரையறுக்கப்பட்டிருந்த துறைகளுக்கிடையேயான குழுவானது (Inter-Departmental Committee (IDC)), இப்போது இடைநிலைத் தளங்களில் பயனர்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கம் தொடர்பான "விஷயங்களை" ஆராய முடியும். ஒரு உள்ளூர் போராட்டத்தைப் பற்றி விவாதிக்கும் X வலைதளத்தில் உள்ள ஒரு பதிவு, ஒரு கொள்கை முடிவு குறித்த யூடியூப் காணொளி (YouTube video) கருத்துரை அல்லது ஒரு அரசியல் உரையை விமர்சிக்கும் லிங்க்ட்இன் பதிவு (LinkedIn post) ஆகியவை இப்போது "செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள்" என்ற வரம்பிற்குள் வரக்கூடும். இதற்கு அமைச்சகம், தானாக முன்வந்து, உள்ளடக்கம் தொடர்பான எந்தவொரு "விஷயத்தையும்" துறைகளுக்கிடையேயான குழுவிற்குப் பரிந்துரைக்கலாம். இந்தத் திருத்தத்திற்கான காரணம் கட்டுப்பாடற்றதாகத் தோன்றுகிறது. அதற்கு முறையான புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை, நெறிமுறைக் குறியீட்டின் விதிமீறலை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அத்தகைய பரிந்துரைக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்து கேட்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது மேற்பார்வை செயல்முறையை ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் நிர்வாகத்தால் இயக்கப்படும் செயல்முறையாக திறம்பட மாற்றியமைக்கிறது. மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் பாதுகாப்பான புகலிடப் பாதுகாப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு நிபந்தனையாக அரசாங்கத்தின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்குவதை மாற்றுவதன் மூலம், இந்தத் திருத்தங்கள் ஒரு அதிகாரத்துவம் வாய்ந்த நிலையை அறிமுகப்படுத்துகின்றன. சட்டப் பாதுகாப்பை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், இடைத்தரகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படத் தூண்டப்படலாம். இது, விதிமீறல்களுக்கு அதிகமாக இணங்குவதற்கும், முன்கூட்டியே உள்ளடக்கங்களை அகற்றுவதற்கும் வழிவகுக்கக்கூடும். இதன் விளைவாக, முறையான தடுப்பு உத்தரவுகளுடன் பொதுவாக தொடர்புடைய நடைமுறைப் பாதுகாப்புகளைத் தவிர்த்து, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான ஒரு "பின்வாசல்" (backdoor) வழிமுறை உருவாகும் அபாயம் ஏற்படுகிறது.


இருப்பினும், அரசாங்கத்தின் கவலைகள் ஆதாரமற்றவை அல்ல. சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள், வதந்திகள் மற்றும் வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டிவிடும் உள்ளடக்கங்கள் பரவுவது, பொது ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான அச்சுறுத்தல்களும் இதில் அடங்கும். தலையங்கக் கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புணர்வு கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படும் பாரம்பரிய ஊடகங்களைப் போலல்லாமல், தனிப்பட்ட பயனர்கள் நிறுவனரீதியான ஒழுங்குமுறை கட்டுப்பாடு இன்றி செயல்படுகின்றனர். எனவே, ஒழுங்குமுறை அவசியமா என்பதல்ல மையக் கேள்வி, மாறாக, முன்மொழியப்பட்ட கட்டமைப்பு சரியான சமநிலையை ஏற்படுத்துகிறதா என்பதேயாகும். தெளிவான நடைமுறைப் பாதுகாப்புகள் மற்றும் கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் வரையறைகள் துல்லியமானவையாக இல்லாதது, குறிப்பாக உண்மையாகவே தீங்கு விளைவிப்பதைவிட அரசியல்ரீதியாக சங்கடமான உள்ளடக்கத்திற்கு எதிராக, பாரபட்சமான செயல்திட்டத்திற்கு வழிவகுக்கக்கூடும்.


2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் பல பிரிவுகள் ஏற்கனவே நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அரசு காத்திருப்பது விவேகமானதாக இருக்கும். புதிய மற்றும் பரந்த தன்னிச்சையான அதிகாரங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, அரசு மிகவும் கவனமான அணுகுமுறையைக் கையாளலாம். தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் அமலாக்க வழிமுறைகளை அது வலுப்படுத்தலாம். மேலும், பதிலளிக்கும் நேரத்தை மேம்படுத்துவது, தளங்களின் பொறுப்புடைமையை அதிகரிப்பது மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் முதலீடு செய்வது போன்றவற்றில் ஒரு சீரான அணுகுமுறை அமையலாம்.


Original article: Sweeping powers.

Share: