இந்தியா தனது தேசிய ஆழ்கடல் உயிரினக் காப்பகத்தைப் பெறுகிறது — அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன? -ரோஷ்னி யாதவ்

 இந்தியா தனது தேசிய ஆழ்கடல் உயிரினங்களுக்கான தேசியக் களஞ்சியத்தை (National Repository for Deep-Sea Fauna) அறிவித்துள்ளது. அது என்ன? ஆழ்கடல் என்றால் சரியாக என்ன, அது காலநிலை மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், அது எதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது? அதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.


தற்போதைய செய்தி :


சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)), கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையத்தின் (Centre for Marine Living Resources & Ecology’s (CMLRE)) “பாவசாகரா” பரிந்துரை மையத்தை, ஆழ்கடல் விலங்கினங்களுக்கான தேசியக் களஞ்சியமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சித் திறன்களில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தச் சூழலில், பாவசாகரா மற்றும் ஆழ்கடல் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.


முக்கியக்  அம்சங்கள்:


1. “பாவசாகரா” பரிந்துரை மையமானது, 2002-ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் (Biological Diversity Act) சட்டவிதிகளின்கீழ், ஆழ்கடல் விலங்கினங்களுக்கான தேசியக் களஞ்சியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் பரந்த ஆழ்கடல் உயிரியல் பாரம்பரியத்தை பாதுகாக்க, ஆய்வுசெய்ய மற்றும் பதிவுசெய்ய ஒரு முக்கிய தேசிய மையமாக இதை உருவாக்குகிறது.


2. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் அவர்களின் கூற்றுப்படி, “‘பாவசாகராவை’ ஒரு தேசியக் களஞ்சியமாக அங்கீகரிப்பது, இந்தியாவின் நீலப் பொருளாதாரம் மற்றும் கடல்சார் பல்லுயிர் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு  நடவடிக்கையாகும். ஆழ்கடல் மாதிரிகள் மற்றும் அவற்றின் மரபணு தரவுகளை பாதுகாப்பதன் மூலம், நாம் நமது இயற்கை வரலாற்றை பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல், எதிர்கால கடல்சார்ந்த  ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆழ்கடலின் மர்மங்களை கண்டறிய பயன்படும் அடிப்படை வளத்தையும் இவை வழங்குகின்றன.

3. தற்போது, ​​“பாவசாகரா” பரிந்துரை மையம், வகைப்பாட்டியல் ரீதியாக அடையாளம் காணப்பட்ட மற்றும் புவியியல்ரீதியாகக் குறிக்கப்பட்ட சான்று மாதிரிகளின் விரிவான தொகுப்பைக் கொண்டுள்ள ஒரு முக்கிய அறிவியல் மையமாகச் செயல்படுகிறது.


4. உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின்கீழ், இந்தக் களஞ்சியத்திற்கு பின்வரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன:


திறன் மேம்பாடு (Capacity Building): ஆழ்கடல் வகைப்பாட்டியல் (taxonomy) துறையில் நிபுணத்துவத்தை உருவாக்கி, நிலையான வளர்ச்சிக்கான கடல் அறிவியல் ஐ.நா.-வின் 2021–2030-ஆம் ஆண்டின் பத்தாண்டு இலக்குகளுக்கு ஏற்றவறு உருவாக்க வேண்டும்.


பாதுகாப்பான பராமரிப்பை மேற்கொள்ளுங்கள்: எதிர்கால அறிவியல் பயன்பாட்டிற்காக, டிஎன்ஏ வரிசைமுறைகள் போன்ற முக்கியமான தொடர்புடைய தரவுகளுடன், பிரதிநிதித்துவ உயிரியல் மாதிரிகளைச் சான்று மாதிரிகளாகப் பாதுகாக்க வேண்டும்.


வகை மாதிரிகளைப் பாதுகாத்தல்: இந்தியக் கடல் எல்லைக்குள் கண்டறியப்படும் எந்தவொரு புதிய ஆழ்கடல் உயிரினத்திற்கும் அதிகாரப்பூர்வப் பாதுகாவலராக உருவாக்க வேண்டும்.


5. குறிப்பாக, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையம் (CMLRE) என்பது இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு முக்கிய நிறுவனமாகும். இது இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone (EEZ)) மற்றும் அதை ஒட்டிய ஆழ்கடல்களில் உள்ள கடல்வாழ் உயிரின வளங்களை ஆய்வு செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.


2002-ஆம் ஆண்டு  உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்


2002-ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம், 1992-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் உயிரியல் பல்வகைமை ஒப்பந்தத்தின் (Convention on Biological Diversity (CBD)) நோக்கங்களை நடைமுறைப்படுத்த இந்தியா எடுத்த முயற்சியின் விளைவாக உருவானது. இந்தியா இந்த ஒப்பந்தத்தை 1994-ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது. இந்தச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், அதன் வளங்களை பயன்படுத்துதல் மற்றும் மரபணு வளங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை ஒரு நியாயமான செயல்முறையின் மூலம் நேர்மையாகவும் சமமாகவும் பகிர்ந்துகொள்ளுதல் ஆகும்.


ஆழ்கடல் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன?


1. ஆழ்கடல் என்பது பூமியின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய உயிரின மண்டலமாகும். இது பொதுவாக, ஆழ்கடல் சமவெளிகள் முதல் ஆழ்கடல் சமவெளிகள் மற்றும் ஆழ்கடல் தரைகள் வரை 200 மீட்டருக்கும் கீழே உள்ள கடல் பகுதிகளைக் குறிக்கிறது.


2. இது பூமியின் வாழக்கூடிய பரப்பளவின் 90–95% ஆகும். சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை முக்கியத்துவத்தைப் பற்றிய நமது புரிதலை அதிகரித்துள்ளன.


3. குறைந்த வெப்பநிலை, கடுமையான சுற்றுப்புற அழுத்தங்கள், போதிய சூரிய ஒளி இல்லாத சூழல் மற்றும் குறைந்த வளங்கள் போன்ற நிலைமைகள் இருந்தபோதிலும், ஆழ்கடல் பல்வேறு தனித்துவமான சூழல் அமைப்புகளில் செழிப்பான உயிரின வளத்தை ஆதரிக்கிறது.


4. மனித வாழ்வு உட்பட, பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் ஆழ்கடலைச் சார்ந்துள்ளன. ஆழ்கடல் நீரோட்டங்கள் பூமி முழுவதும் வெப்பத்தை மறுவிநியோகம் செய்து, உலகளாவிய காலநிலை அமைப்புகளை இயக்குகின்றன. குளிர்ந்த மேலேறும் நீர்கள் (upwelling waters) கடல் மேற்பரப்பில் நீரை  மீண்டும் வழங்கி, முக்கியமான கடல் உணவுச் சங்கிலிகளை ஆதரிக்கின்றன.


5. ஆழ்கடல் பவளம் மற்றும் கடற்பஞ்சு சமூகங்கள், மருந்துகள், அழகு சாதனங்கள் மற்றும் பிற வணிகப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் மற்றும் வேதிப்பொருட்களின் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத வளங்களாக உள்ளன. உதாரணமாக, COVID-19 பரவலை கண்டறிந்து கட்டுப்படுத்த பயன்பட்ட புகழ்பெற்ற PCR பரிசோதனை, ஆழ்கடல் வெப்பநீரூற்றுகளில் காணப்படும் ஒரு நுண்ணுயிரியில் இருந்து பெறப்பட்ட நொதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.



ஆழ்கடல் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன?


1. பல பாதிக்கப்படக்கூடிய ஆழ்கடல் வாழ்விடங்கள் மற்றும் உயிரினக் குழுக்கள் மீன்பிடித் தொழிலால் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கனிம வளங்கள் மற்றும் உயிர்வளங்களின் அதிகப்படியான சுரண்டலால் அவை அச்சறுத்தல்களை சந்தித்து வருகின்றன.


2. ஆழ்கடல் சுரங்கத் தொழில் தொடங்குவதால் ஆழ்கடல் அச்சறுத்தல்களை சந்தித்து வருகின்றது. பல ஆழ்கடல் உயிரினங்கள் மெதுவாக வளரக்கூடியவை, தாமதமாக இனப்பெருக்கம் செய்பவை மற்றும் சீர்குலைவுகளிலிருந்து மீண்டுவரும் திறன் குறைவாக உள்ளவை. இதனால், அவை தொழில்துறை நடவடிக்கைகளால் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன.


ஆழ்கடல் சுரங்கத் தொழில் (Deep-sea mining (DSM)) என்பது என்ன?


இது ஆழ்கடல் ஆழமான பகுதியில் இருந்து கனிமச் சேர்மங்களை அகற்றும் செயல்முறையாகும். இதில் இலக்காகக் கொள்ளப்படும் கனிமங்களில் நிக்கல், கோபால்ட், செம்பு மற்றும் மாங்கனீஸ் போன்ற உலோகங்கள் உள்ளன.


கடல் சூழலைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்குமான முயற்சிகள்


1. ஐக்கிய நாடுகள் கடல்சட்ட ஒப்பந்தம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)): 1982-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1994-ல் நடைமுறைக்கு வந்த ஐக்கிய நாடுகள் கடல்சட்ட ஒப்பந்தம், "கடல்கள் மற்றும் பெருங்கடல்களை அமைதியான முறையில் பயன்படுத்துதல், வளங்களை சமமாகவும் திறமையாகவும் பயன்படுத்துதல், உயிர்வளங்களை பாதுகாத்தல் மற்றும் கடல் சூழலை ஆய்வு செய்து பாதுகாப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்கியது. பகுதி VII, பிரிவு 2 "ஆழ்கடல்களின் உயிர்வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை, அனைத்து நாடுகளும் தத்தம் குடிமக்களுக்காக எடுக்கவோ அல்லது இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரிவு 117 கூறுகிறது.


2. ஐ.நா. மீன்வள ஒப்பந்தம் (UN Fish Stocks Agreement) : 1995-ஆம் ஆண்டில், கடற்பரப்பு மீன்வளங்கள் மற்றும் அதிக தூரம் இடம்பெயரும் மீன்வளங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான ஐக்கிய நாடுகள் கடல்சட்ட ஒப்பந்த (UNCLOS) விதிகளைச் செயல்படுத்துவதற்கான ஐ.நா. ஒப்பந்தம் (ஐ.நா. மீன்வள ஒப்பந்தம், அல்லது UNFSA என அழைக்கப்படுகிறது) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 11 டிசம்பர் 2001 அன்று நடைமுறைக்கு வந்தது. மேலும், ஆழ்கடல் மீன்வளங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், அவை சார்ந்திருக்கும் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் ஆணைகளைக் கொண்ட பிராந்திய மீன்வள மேலாண்மை அமைப்புகளை (regional fisheries management organizations (RFMOs)) உருவாக்க வழிவகுத்தது.


3. உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கை (Convention on Biological Diversity (CBD)): 1992-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கை, 29 டிசம்பர் 1993 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன: அவை உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல்; உயிரியல் பன்முகத்தன்மையின் கூறுகளை நீடித்த முறையில் பயன்படுத்துதல்; மற்றும் மரபணு வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்துகொள்ளுதல் ஆகும். இந்த உடன்படிக்கையின் 3-வது பிரிவு, "தங்கள் அதிகார வரம்பு அல்லது கட்டுப்பாட்டிற்குள் உள்ள செயல்பாடுகள், பிற நாடுகளின் அல்லது தேசிய அதிகார வரம்பிற்கு  உள்ள பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு  பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு மற்ற நாடுகளுக்கு உள்ளது" என்று கூறுகிறது.


4. நீடித்த வளர்ச்சி இலக்குகள்: 2015-ல், ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, ​​17 நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDGs)) உருவாக்கப்பட்டன. இதில் நிலையான வளர்ச்சி இலக்கு 14, கடல்கள் மற்றும் கடல் வளங்களை பாதுகாத்து நிலையான முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நிலையான வளர்ச்சி இலக்கு 12 நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தியை உறுதி செய்யும்; நிலையான வளர்ச்சி இலக்குG 8 பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து பிரிக்க முயற்சிகளை மேற்கொள்கிறது.

5. ஆழ்கடல் ஒப்பந்தம்: மார்ச் 2023-ல் செய்யப்பட்ட  இந்த ஒப்பந்தம், எந்தவொரு நாட்டின் தேசிய அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள கடல்களை மட்டுமே கையாள்கிறது. ஒவ்வொரு நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) வெளியே உள்ள பகுதிகள் (ஒரு நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலம் என்பது அதன் கடற்கரையின் அடிமட்டத்திலிருந்து கடலுக்குள் 200 கடல் மைல்கள் வரை நீட்டிக்கப்படுகிறது) ஆழ்கடல் அல்லது சர்வதேச நீர்நிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆழ்கடல் ஒப்பந்தம் நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது: அவை, 


➤ பாதுகாக்கப்பட்ட காடுகள் அல்லது வனவிலங்குப் பகுதிகளைப் போலவே, கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும் (MPA) வரையறுத்தல்;


➤ கடல்சார் மரபணு வளங்களின் நீடித்த பயன்பாடு மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் நன்மைகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ளுதல்;


➤ கடல்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நடவடிக்கைகளுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை மேற்கொள்ளும் நடைமுறையைத் தொடங்குதல் மற்றும்


➤ திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் செய்திகள் ஆகும்.


குறிப்பாக, இந்தியா 2024 செப்டம்பர் 25 அன்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பாதுகாப்பு (BBNJ) ஒப்பந்தம் அல்லது ஆழ்கடல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


2025 செப்டம்பர் 19 அன்று, ஆழ்கடல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரத் தேவையான 60 நாடுகளின் ஒப்புதல்கள் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியது. 120 நாள் காலக்கெடுவிற்குப் பிறகு, ஆழ்கடல் ஒப்பந்தம் 2026 ஜனவரி 17 அன்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. மேலும், தற்போது இது சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகத் திகழ்கிறது. உலகளாவிய கடல் பாதுகாப்பை வலுப்படுத்த, அரசாங்கங்கள் இப்போது அமலாக்கத்தை விரைவுபடுத்தி, அதனை அங்கீகரிக்கும் செயல்முறையையும் அவை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.


Original article: India gets its National Repository for Deep-Sea Fauna — what is it, and why does it matter? -Roshni Yadav

Share: