காங்கிரஸின் மற்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து, காந்தி குடும்பத்தினர், பொதுப் பங்கு நிறுவனமும் நேஷனல் ஹெரால்டு நாளிதழின் வெளியீட்டாளருமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (Associated Journals Limited (AJL)) நிறுவனத்தின் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக ஒரு குற்றச் சதியில் ஈடுபட்டனர் என்பதே அமலாக்க இயக்குநரகத்தின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி மற்றும் ஐந்து பேர் மீது நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate’s (ED’s)) தொடர்ந்த வழக்கை விசாரிக்க டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. Rouse அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அமலாக்க இயக்குநகரத்தின் புகாரின் அடிப்படையில் நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்க மறுத்துவிட்டார்.
காந்தி குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு
அமலாக்க இயக்குநகரத்தின் முதன்மையான குற்றச்சாட்டு, காந்தி குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளுடன் சேர்ந்து, பட்டியலிடப்படாத பொது நிறுவனமும், நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் வெளியீட்டாளருமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்ன் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க ஒரு குற்றவியல் சதியில் ஈடுபட்டனர் என்பதுதான். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்க்கு ரூ.90.21 கோடி கடனாக வழங்கியது. அதைத் தொடர்ந்து, சோனியாவும் ராகுல் காந்தியும் சேர்ந்து 76% பங்குகளை வைத்திருந்த தனியார் இலாப நோக்கற்ற நிறுவனமான யங் இந்தியன், கடனை வசூலிக்கும் உரிமையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது.
ஏ.ஜே.எல் நிறுவனத்தின் 90.21 கோடி ரூபாய் கடனை, யங் இந்தியன் நிறுவனத்திற்காக தலா 10 ரூபாய் மதிப்புள்ள 9.02 கோடி பங்குகளாக மாற்றி, ஏ.ஜே.எல் பங்குதாரர்களையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நன்கொடையாளர்களையும் ஏமாற்றியதாக அமலாக்கத்துறை கூறுகிறது. இதுகுறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2014-ல் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, அமலாக்கத்துறை இது தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்குப் பதிவு செய்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு
117 பக்க உத்தரவில், நீதிமன்றம் பணமோசடி குற்றத்தை முதன்மையாக இரண்டு காரணங்களுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
தனிப்பட்ட புகார்: சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்த 2014-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட்டின் உத்தரவின் அடிப்படையிலேயே அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு தொடுக்கப்பட்டது. செவ்வாயன்று, பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) என்பது சட்ட அமலாக்க முகமையின் விசாரணை அதிகாரியால் அளிக்கப்படும் புகார்களை மட்டுமே கருத்தில் கொள்கிறது, பொதுமக்களால் அளிக்கப்படும் புகார்களை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்நிபந்தனை குற்றம் இல்லாதது: குற்றத்தின்மூலம் கிடைத்த பணத்தை மறைத்தல், வைத்திருத்தல், பெறுதல் அல்லது பயன்படுத்துதல் போன்ற செயல்களில் உதவுபவர், பங்கேற்பவர் அல்லது சம்பந்தப்பட்ட எவரும் பணமோசடி குற்றத்தைச் செய்தவராகக் கருதப்படுவார் என்று பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) கூறுகிறது.
இங்கு, “குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம்” (proceeds of crime) என்பது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் “பட்டியலிடப்பட்ட குற்றம்” (scheduled offences) அல்லது மூலக் குற்றம் எனப் பட்டியலிடப்பட்ட ஒரு குற்றத்தின் மூலம் ஒரு நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறும் எந்தவொரு சொத்தையும் குறிக்கும். செவ்வாயன்று, காந்தி குடும்பத்தினருக்கு எதிராக அத்தகைய எந்தக் குற்றத்திற்காகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததால், அமலாக்க இயக்குநகரத்தின் புகாரை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜூலை 2014-ல், சுவாமியின் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை ஒன்றிய புலனாய்வு முகமைக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது; 2015-ல் அமலாக்கத்துறை இயக்குநர் ஒன்றிய புலனாய்வு முகமையின் இயக்குநருக்கு எழுதிய கடிதத்திலும் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒன்றிய புலனாய்வு முகமையின் இயக்குனர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. நீதிமன்றம் தனது உத்தரவில், அமலாக்கத்துறை மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (Financial Action Task Force (FATF)) ஆண்டு அறிக்கைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகளை மீண்டும் ஆய்வு செய்து, "பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடர, அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வது ஒரு முக்கியமான நிபந்தனையாகும்" என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
கடந்த சில ஆண்டுகளில், பணமோசடி குறித்துத் தனியாக விசாரணை நடத்தலாம் என்று அமலாக்கத்துறை வாதிட்டாலும், தொடர்புடைய அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றம் இல்லாமல் அத்தகைய விசாரணையைத் தொடங்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
அமலாக்கத்துறை வழக்கைத் தவிர, யங் இந்தியன் (Young Indian) நிறுவனம் மீது கூறப்படும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பான ஒரு வழக்கை வருமான வரித் துறை 2017 முதல் விசாரித்து வருகிறது. இருப்பினும், வருமான வரி வழக்குகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்ட குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை.
கடுமையான பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) கடுமையான பிணை நிபந்தனைகளைக் கொண்டுள்ளது மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்மீது ஆதாரத்தைச் சமர்ப்பிக்கும் சுமையைச் அதிகரிக்க செய்கிறது. மேலும், சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அந்த அமைப்புக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. எனவே, நவம்பரில், டெல்லி காவல்துறை பொருளாதார குற்றப் பிரிவு (Economic Offences Wing (EOW)) அதே வழக்கில் ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இது பணமோசடி விசாரணைக்கு மற்றொரு வழியைத் திறக்கும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம். இந்த புகார் அமலாக்கத் துறையின் உதவி இயக்குநர் சிவ குமார் குப்தாவால் அளிக்கப்பட்டது. மேலும், இது முன்னரே வழங்கப்பட்ட 2014ஆம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Original link:
National Herald case: Why special court ruled against ED.