2025-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)), ஊரக இந்தியாவில் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஒன்றிய அரசு, மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (Rural Employment Guarantee Act (MGNREGA)) மாற்றாக ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வரைவு - இது வெளிப்படையான "அதிகாரச் சுரண்டல்" மசோதா - தற்போதைய சட்டமான MGNREGA-வின் தன்மையையே மாற்ற முயல்கிறது. இந்த மசோதா ஊரகப் பகுதிகளில் உழைக்கும் ஏழைகளின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாக இருந்தாலும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும். இதனால்தான் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு (Standing Committee) அனுப்பப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 41-வது பிரிவு: "அரசு, தனது பொருளாதாரத் திறன் மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டு, வேலை செய்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்குத் திறம்பட வழிவகை செய்ய வேண்டும்" அரசியலமைப்பு நிர்ணய சபையில், வேலை செய்வதற்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாகச் சேர்க்க விரும்பிய சமத்துவக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அதை எதிர்த்த வலுவான முதலாளித்துவ ஆதரவு குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இறுதியில், அது அரசியலமைப்பின் வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles) சேர்க்கப்பட்டது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இதை ஒரு “புதிய அம்சம்” (novel feature) என்று வர்ணித்தார். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாதவை என்றாலும், அவை சட்டமியற்றுபவர்களுக்கு “வழிகாட்டும் கருவிகளாகவும்”, “பொருளாதார ஜனநாயகத்திற்கு முக்கியமானவையாகவும்” கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சமத்துவ ஆதரவாளரான கே.டி.ஷா இதை ‘வெறும் நல்லவிருப்பங்கள்’ (pious wishes) என்று குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளாக முதலாளித்துவ ‘வளர்ச்சி’ இருந்தபோதிலும், பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்து, வேலை தேடுவதில் சிரமப்படுவதால், ஷாவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன.
இடதுசாரிகளின் முக்கியப் பங்கு
வேலை செய்வதற்கான உரிமையை ஆதரிக்கும் கொள்கைகளை நோக்கி முன்னேற, தொழிலாளர்களின் 55 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டமும் முக்கிய அரசியல் மாற்றங்களும் தேவைப்பட்டன. 2004 தேர்தல்களில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பாஜக-வை தோற்கடித்தது. ஆனால், அக்கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், முதல்முறையாக ஒன்றிய அரசாங்கம் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. முக்கியமாக, சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி கட்சிகள் தங்களின் சொந்தத் திட்டம் மற்றும் பலத்தின் அடிப்படையில் தேர்தல்களைத் தனித்து எதிர்கொண்டன. இந்த அரசியல் சூழலின் காரணமாகவே மகாத்மா காந்தி தேசிய இந்த அரசியல் சூழல் காரணமாகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் (MGNREGA) திட்டம் சாத்தியமானது. 2005-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதிச் சட்டத்தை உருவாக்குவதில் இடதுசாரிக் கட்சிகள் முக்கியப் பங்கைக் வகித்தன.
இந்தச் சட்டம், வேலை செய்வதற்கான உரிமையை ஓரளவு அங்கீகரிப்பதுடன், குறைந்தபட்ச ஊதியத்தில் வேலை வழங்குவதற்காக தேசிய வளங்களில் ஒரு பெரிய பங்கை உறுதிசெய்ய வேண்டிய அரசின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. இந்தச் சட்டம் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது; உடல் உழைப்புக்குத் தாமாக செய்ய முன்வரும் அனைத்து வயதுவந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும். முக்கியமாக, இந்தச் சட்டம் வேலைக்கான தேவையை நிறைவேற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தேவை நிலையானது அல்ல, ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் குடும்பங்களின் தேவைக்கேற்ப அதிகரிக்கவோ அல்லது குறையக் கூடும். இதில் ஒரு ஆழமான ஜனநாயக உள்ளடக்கம் (deep democratic content) உள்ளது. ஒரு குடும்பத்திற்கு வேலைவாய்ப்பிற்கான சிறந்த வாய்ப்புகள் இருந்தால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வழங்கும் பாதுகாப்பு வலையைத் தக்கவைத்துக்கொண்டே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அதற்கு உரிமை உண்டு. இந்தச் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், அனைத்து ஊதியங்களையும் ஒன்றிய அரசே செலுத்த வேண்டும்.
சட்டத்தின்படி, மாநில அரசுகள் 10% நிதிப் பொறுப்பை ஏற்கின்றன. மேலும், மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் அவற்றின் செயலாக்கத்தில் அவற்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும் உண்டு. பஞ்சாயத்துகளுக்குத் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தேவைப்படும் திட்டங்களைக் கண்டறிந்து வடிவமைப்பதில் உரிமையும் பொறுப்பும் உள்ளன. தேவைக்கேற்ப செயல்படுத்தப்படும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய இந்தச் சட்டம், முதலாளித்துவ உலகில் (capitalist world) ஒருவேளை இதுவே முதல் வகையாக இருந்திருக்கலாம்.
அடிப்படை அம்சங்களை அழித்தல்
நரேந்திர மோடி அரசாங்கம், அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனதா தளம் (ஐக்கிய) ஆகியவற்றைத் தாளம் போடுபவர்களாக வைத்துக்கொண்டு, தனது வரைவு மசோதாவில் இந்த அனைத்து அடிப்படை அம்சங்களையும் நீக்குகிறது. இது இனி தேவையால் உந்தப்படுவதாக இருக்காது, மாறாக மத்திய அரசால் தீர்மானிக்கப்படும் "சட்டப்பூர்வ நிதி ஒதுக்கீடுகளால்" நிர்ணயிக்கப்படும். இந்த ஒதுக்கீட்டைவிட செலவு அதிகரித்தால், மத்திய அரசுக்கு இனி சட்டப்பூர்வமாக எந்தக் கடமையும் இருக்காது. ஒன்றிய வரி வருவாயில் தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்டதால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநிலங்கள் மீது, செலவில் 40% சுமை ஏற்றப்படுகிறது. இந்த மசோதா, திட்டமிடல் முதல் டிஜிட்டல் தணிக்கைகள் வரை அனைத்தின் மீதும் மத்திய அரசுக்கு முழுமையானக் கட்டுப்பாட்டை வழங்குகிறது, இது அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்புக்கு முரணானது.
இந்த மசோதா, வேலையைத் தடைசெய்வது கிராமப்புறத் தொழிலாளர்களைப் பலவீனப்படுத்தும், அவர்களைப் பெரிய நில உரிமையாளர்களிடமிருந்து குறைந்த ஊதியம் மற்றும் மோசமான வேலை நிலைமைகளை ஏற்கும்படி கட்டாயப்படுத்தும். இது ஏற்கெனவே குறைவாகச் சம்பாதிக்கும் பெண்களைப் பெரிதும் பாதிக்கும். மேலும், இந்தச் சட்டம் ஊதியம் பெறுவதற்கு ஆதார் அட்டைகளையும் ஆன்லைன் வருகைப் பதிவையும் கட்டாயமாக்குகிறது; ஆனால் மோசமான இணைய வசதி தொழிலாளர்களுக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தடை, கிராமப்புறத் தொழிலாளர்களின் பேரம் பேசும் திறனைக் குறைக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இல்லாத நிலையில், அவர்கள் பெரிய நில உரிமையாளர்களால் நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். இது, விவசாயத்தில் ஆண்களைவிட குறைந்த ஊதியம் பெறும் பெண்களைப் பாதிக்கும். இந்தச் சட்டம், ஆதார் அட்டை இணைப்பு, தகுதி மற்றும் ஊதியப் பணத்திற்கான நிபந்தனையாக இணையவழி டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்பட்ட வருகைப் பதிவை சட்டப்பூர்வமாக்குகிறது. மோசமான இணைய இணைப்பு உட்பட இத்தகைய நிபந்தனைகள் தொழிலாளர்களைப் பாதித்துள்ளன என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் இது செய்யப்படுகிறது.
சட்டத்தின் பெயராக வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) என்று பெயரிடுவது, பக்தர்களைக் கவரும் ஒரு சிறிய தந்திரம். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் 'ஜி-ராம்-ஜி ஒழிக' என்று முழக்கமிட்டுப் போராடும்போது, அது மக்களைக் கோபப்படுத்தி, அரசாங்கத்திற்கே எதிராகப் பாதகமாக முடியக்கூடும்.
துன்பத்தின் பிரதிபலிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு அந்த வேலை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். இலக்குகளை எட்டுவதற்காக சில பெண்கள் ஒரு நாளைக்கு 3,000 கிலோகிராம் வரை மண்ணைத் தூக்குகிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருப்பது, விவசாயத்தில் உள்ள கடுமையான சிக்கல்களையும், வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் காட்டுகிறது.
பழங்குடியினர் மக்கள்தொகையில் 8.6% ஆக உள்ளனர். ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணியாளர்களில் அவர்கள் 18% ஆகவும், பட்டியல் சாதியினர் 19% ஆகவும் உள்ளனர். எனவே, தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளில் எந்தவொரு மாற்றமும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. ஆனால், வரைவுச் சட்டத்தில் குறைதீர்ப்பு/ஆலோசனைக் குழுக்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு முதல், நரேந்திர மோடி அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெருமளவில் அதிகரித்த அதே வேளையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்து, தேவையான நிதியை வழங்காமல் முடக்கியுள்ளது. ஆரம்ப நாட்களில் சுமார் இரண்டு கோடி தொழிலாளர்களாக இருந்த எண்ணிக்கை இப்போது 7.7 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ள போதிலும், செலவினங்கள் தேக்கமடைந்துள்ளன அல்லது குறைந்துள்ளன. அது ஒருபோதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2%-ஐத் தாண்டவில்லை. 2024-25ஆம் ஆண்டில், 8.9 கோடி தொழிலாளர்கள் வேலை கோரினர். ஆனால், 7.9 கோடி தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது — 99 லட்சம் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஊதிய நிலுவைகள் குவிந்துள்ளன — சில சமயங்களில் ரூ.8,000 கோடி வரை உயர்ந்துள்ளது. சராசரியாக, குடும்பங்களுக்கு 100 நாட்களுக்குப் பதிலாக 50 நாட்களுக்கும் குறைவான வேலைகளே கிடைத்துள்ளன. சட்ட வரைவில் 125 நாட்கள் வேலைக்கு உறுதியளிப்பது தவறான தகவலை அளிப்பதாகும். மக்களுக்கு வேறு வழிகள் இல்லாததால்தான் அவர்கள் இன்னும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளுக்குச் செல்கிறார்கள்; இது இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஏழைகளின் வாழ்வில் உள்ள நிச்சயமற்றத் தன்மையை காட்டுகிறது.
அந்த முக்கிய ஆதரவு வலுப்படுத்தப்படுவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
பிருந்தா காரத் சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.
Original link:
Cutting off a rural lifeline and the Directive Principles