Showing posts with label VB-G RAM G Bill. Show all posts
Showing posts with label VB-G RAM G Bill. Show all posts

ஊரகப் பகுதிகளின் வாழ்வாதாரத்தை துண்டித்தல் மற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகள் - பிருந்தா காரத்

2025-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)), ஊரக இந்தியாவில் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.


ஒன்றிய அரசு, மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (Rural Employment Guarantee Act (MGNREGA)) மாற்றாக ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வரைவு - இது வெளிப்படையான "அதிகாரச் சுரண்டல்" மசோதா - தற்போதைய சட்டமான MGNREGA-வின் தன்மையையே மாற்ற முயல்கிறது. இந்த மசோதா ஊரகப் பகுதிகளில் உழைக்கும் ஏழைகளின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாக இருந்தாலும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும். இதனால்தான் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு (Standing Committee) அனுப்பப்பட வேண்டும்.


அரசியலமைப்பின் 41-வது பிரிவு: "அரசு, தனது பொருளாதாரத் திறன் மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டு, வேலை செய்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்குத் திறம்பட வழிவகை செய்ய வேண்டும்" அரசியலமைப்பு நிர்ணய சபையில், வேலை செய்வதற்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாகச் சேர்க்க விரும்பிய சமத்துவக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அதை எதிர்த்த வலுவான முதலாளித்துவ ஆதரவு குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இறுதியில், அது அரசியலமைப்பின் வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில்  (Directive Principles) சேர்க்கப்பட்டது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இதை ஒரு “புதிய அம்சம்” (novel feature) என்று வர்ணித்தார். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாதவை என்றாலும், அவை சட்டமியற்றுபவர்களுக்கு “வழிகாட்டும் கருவிகளாகவும்”, “பொருளாதார ஜனநாயகத்திற்கு முக்கியமானவையாகவும்” கருதப்பட வேண்டும் என்று  வலியுறுத்தினார். சமத்துவ ஆதரவாளரான கே.டி.ஷா இதை ‘வெறும் நல்லவிருப்பங்கள்’ (pious wishes) என்று குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளாக முதலாளித்துவ ‘வளர்ச்சி’ இருந்தபோதிலும், பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்து, வேலை தேடுவதில் சிரமப்படுவதால், ஷாவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன.


இடதுசாரிகளின் முக்கியப் பங்கு


வேலை செய்வதற்கான உரிமையை ஆதரிக்கும் கொள்கைகளை நோக்கி முன்னேற, தொழிலாளர்களின் 55 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டமும் முக்கிய அரசியல் மாற்றங்களும் தேவைப்பட்டன. 2004 தேர்தல்களில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பாஜக-வை தோற்கடித்தது. ஆனால், அக்கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், முதல்முறையாக ஒன்றிய அரசாங்கம் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. முக்கியமாக, சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி கட்சிகள் தங்களின் சொந்தத் திட்டம் மற்றும் பலத்தின் அடிப்படையில் தேர்தல்களைத் தனித்து எதிர்கொண்டன. இந்த அரசியல் சூழலின் காரணமாகவே மகாத்மா காந்தி தேசிய இந்த அரசியல் சூழல் காரணமாகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் (MGNREGA) திட்டம் சாத்தியமானது. 2005-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதிச் சட்டத்தை உருவாக்குவதில் இடதுசாரிக் கட்சிகள் முக்கியப் பங்கைக் வகித்தன.


இந்தச் சட்டம், வேலை செய்வதற்கான உரிமையை ஓரளவு அங்கீகரிப்பதுடன், குறைந்தபட்ச ஊதியத்தில் வேலை வழங்குவதற்காக தேசிய வளங்களில் ஒரு பெரிய பங்கை உறுதிசெய்ய வேண்டிய அரசின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. இந்தச் சட்டம் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது; உடல் உழைப்புக்குத் தாமாக செய்ய முன்வரும் அனைத்து வயதுவந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும். முக்கியமாக, இந்தச் சட்டம் வேலைக்கான தேவையை நிறைவேற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தேவை நிலையானது அல்ல, ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் குடும்பங்களின் தேவைக்கேற்ப அதிகரிக்கவோ அல்லது குறையக் கூடும். இதில் ஒரு ஆழமான ஜனநாயக உள்ளடக்கம் (deep democratic content) உள்ளது. ஒரு குடும்பத்திற்கு வேலைவாய்ப்பிற்கான சிறந்த வாய்ப்புகள் இருந்தால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வழங்கும் பாதுகாப்பு வலையைத் தக்கவைத்துக்கொண்டே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அதற்கு உரிமை உண்டு. இந்தச் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், அனைத்து ஊதியங்களையும் ஒன்றிய அரசே செலுத்த வேண்டும்.


சட்டத்தின்படி, மாநில அரசுகள் 10% நிதிப் பொறுப்பை ஏற்கின்றன. மேலும், மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் அவற்றின் செயலாக்கத்தில் அவற்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும் உண்டு. பஞ்சாயத்துகளுக்குத் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தேவைப்படும் திட்டங்களைக் கண்டறிந்து வடிவமைப்பதில் உரிமையும் பொறுப்பும் உள்ளன. தேவைக்கேற்ப செயல்படுத்தப்படும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய இந்தச் சட்டம், முதலாளித்துவ உலகில் (capitalist world) ஒருவேளை இதுவே முதல் வகையாக இருந்திருக்கலாம்.


அடிப்படை அம்சங்களை அழித்தல்


நரேந்திர மோடி அரசாங்கம், அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனதா தளம் (ஐக்கிய) ஆகியவற்றைத் தாளம் போடுபவர்களாக வைத்துக்கொண்டு, தனது வரைவு மசோதாவில் இந்த அனைத்து அடிப்படை அம்சங்களையும் நீக்குகிறது. இது இனி தேவையால் உந்தப்படுவதாக இருக்காது, மாறாக மத்திய அரசால் தீர்மானிக்கப்படும் "சட்டப்பூர்வ நிதி ஒதுக்கீடுகளால்" நிர்ணயிக்கப்படும். இந்த ஒதுக்கீட்டைவிட செலவு அதிகரித்தால், மத்திய அரசுக்கு இனி சட்டப்பூர்வமாக எந்தக் கடமையும் இருக்காது. ஒன்றிய வரி வருவாயில் தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்டதால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநிலங்கள் மீது, செலவில் 40% சுமை ஏற்றப்படுகிறது. இந்த மசோதா, திட்டமிடல் முதல் டிஜிட்டல் தணிக்கைகள் வரை அனைத்தின் மீதும் மத்திய அரசுக்கு முழுமையானக் கட்டுப்பாட்டை வழங்குகிறது, இது அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்புக்கு முரணானது.


இந்த மசோதா, வேலையைத் தடைசெய்வது கிராமப்புறத் தொழிலாளர்களைப் பலவீனப்படுத்தும், அவர்களைப் பெரிய நில உரிமையாளர்களிடமிருந்து குறைந்த ஊதியம் மற்றும் மோசமான வேலை நிலைமைகளை ஏற்கும்படி கட்டாயப்படுத்தும். இது ஏற்கெனவே குறைவாகச் சம்பாதிக்கும் பெண்களைப் பெரிதும் பாதிக்கும். மேலும், இந்தச் சட்டம் ஊதியம் பெறுவதற்கு ஆதார் அட்டைகளையும் ஆன்லைன் வருகைப் பதிவையும் கட்டாயமாக்குகிறது; ஆனால் மோசமான இணைய வசதி தொழிலாளர்களுக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.


இந்தத் தடை, கிராமப்புறத் தொழிலாளர்களின் பேரம் பேசும் திறனைக் குறைக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இல்லாத நிலையில், அவர்கள் பெரிய நில உரிமையாளர்களால் நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். இது, விவசாயத்தில் ஆண்களைவிட குறைந்த ஊதியம் பெறும் பெண்களைப் பாதிக்கும். இந்தச் சட்டம், ஆதார் அட்டை இணைப்பு, தகுதி மற்றும் ஊதியப் பணத்திற்கான நிபந்தனையாக இணையவழி டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்பட்ட வருகைப் பதிவை சட்டப்பூர்வமாக்குகிறது. மோசமான இணைய இணைப்பு உட்பட இத்தகைய நிபந்தனைகள் தொழிலாளர்களைப் பாதித்துள்ளன என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் இது செய்யப்படுகிறது.


சட்டத்தின் பெயராக வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) என்று பெயரிடுவது, பக்தர்களைக் கவரும் ஒரு சிறிய தந்திரம். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் 'ஜி-ராம்-ஜி ஒழிக' என்று முழக்கமிட்டுப் போராடும்போது, ​​அது மக்களைக் கோபப்படுத்தி, அரசாங்கத்திற்கே எதிராகப் பாதகமாக முடியக்கூடும்.


துன்பத்தின் பிரதிபலிப்பு


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு அந்த வேலை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். இலக்குகளை எட்டுவதற்காக சில பெண்கள் ஒரு நாளைக்கு 3,000 கிலோகிராம் வரை மண்ணைத் தூக்குகிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருப்பது, விவசாயத்தில் உள்ள கடுமையான சிக்கல்களையும், வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் காட்டுகிறது.


பழங்குடியினர் மக்கள்தொகையில் 8.6% ஆக உள்ளனர். ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணியாளர்களில் அவர்கள் 18% ஆகவும், பட்டியல் சாதியினர் 19% ஆகவும் உள்ளனர். எனவே, தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளில் எந்தவொரு மாற்றமும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. ஆனால், வரைவுச் சட்டத்தில் குறைதீர்ப்பு/ஆலோசனைக் குழுக்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டுள்ளது.


2014ஆம் ஆண்டு  முதல், நரேந்திர மோடி அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெருமளவில் அதிகரித்த அதே வேளையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்து, தேவையான நிதியை வழங்காமல் முடக்கியுள்ளது. ஆரம்ப நாட்களில் சுமார் இரண்டு கோடி தொழிலாளர்களாக இருந்த எண்ணிக்கை இப்போது 7.7 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ள போதிலும், செலவினங்கள் தேக்கமடைந்துள்ளன அல்லது குறைந்துள்ளன. அது ஒருபோதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2%-ஐத் தாண்டவில்லை. 2024-25ஆம் ஆண்டில், 8.9 கோடி தொழிலாளர்கள் வேலை கோரினர். ஆனால், 7.9 கோடி தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது — 99 லட்சம் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஊதிய நிலுவைகள் குவிந்துள்ளன — சில சமயங்களில் ரூ.8,000 கோடி வரை உயர்ந்துள்ளது. சராசரியாக, குடும்பங்களுக்கு 100 நாட்களுக்குப் பதிலாக 50 நாட்களுக்கும் குறைவான வேலைகளே கிடைத்துள்ளன. சட்ட வரைவில் 125 நாட்கள் வேலைக்கு உறுதியளிப்பது தவறான தகவலை அளிப்பதாகும். மக்களுக்கு வேறு வழிகள் இல்லாததால்தான் அவர்கள் இன்னும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளுக்குச் செல்கிறார்கள்; இது இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஏழைகளின் வாழ்வில் உள்ள நிச்சயமற்றத் தன்மையை காட்டுகிறது.


அந்த முக்கிய ஆதரவு வலுப்படுத்தப்படுவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. 


பிருந்தா காரத் சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.

Original link:

Cutting off a rural lifeline and the Directive Principles


Share:

MGNREGA மறுசீரமைப்பு விளக்கம்: VB-G RAM G மசோதாவின் முக்கிய அம்சங்கள், முந்தைய திட்டத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பன குறித்து… -ஹரிகிஷன் சர்மா

முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவில் உள்ள முக்கிய மாற்றங்கள்: மாநிலங்களிடம் குறைந்த நிதி இருக்கும் நேரத்தில், அவற்றின் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும், இது 125 நாள் திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பயனடைவதற்கான கால அளவையும் குறைக்கிறது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) மறுசீரமைப்பு விளக்கம்: தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 2005ஆம் ஆண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ஊரக பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வலையாக (social security net) நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை திறம்பட மாற்றியமைக்க முன்மொழியும் ஒரு மசோதாவை அரசு கொண்டு வரப் பார்க்கிறது.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) மசோதா அல்லது VB-G RAM G மசோதா, ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலை நாட்களை ஆண்டுக்கு 100-லிருந்து 125-ஆக உயர்த்துவதற்குப் பரிந்துரைக்கிறது. இருப்பினும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தில் ஒன்றிய அரசு பெரும்பாலான செலவை ஏற்றது போல் இல்லாமல், இந்த புதிய மசோதா நிதியை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகிறது. இது மாநிலங்கள் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும்.


மேலும், முதன்முறையாக, இந்த மசோதா, அதிகபட்ச விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் இந்தத் திட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் இருப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை என்று ஒன்றிய அரசால் கூறப்படுகிறது.


தற்போதைய ஊரகப் பகுதிகளில் உள்ள வேலை உறுதியளிப்பு கட்டமைப்பில் VB-G RAM G மசோதா முன்மொழியும் முக்கிய மாற்றங்கள் இங்கே:


உத்தரவாதமான கூலி வேலை நாட்கள் (Guaranteed wage employment days)


முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவின் பிரிவு 5(1), திறமையற்ற உடல் உழைப்பைச் செய்ய தன்னார்வத் தொண்டு செய்யும் வயது வந்த உறுப்பினர்கள் உள்ள ஒவ்வொரு ஊரகப் பகுதிகளில்  வசித்துவரும் குடும்பத்திற்கும் 125 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்க முன்மொழிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளித்தாலும், கிடைக்கும் வேலைகளைப் பல தொழிலாளர்கள் பகிர்ந்துகொள்வதால், மிகச் சில குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாட்களுக்கு வேலை கிடைக்கிறது.


உதாரணமாக, 2024-25ஆம் ஆண்டில், ஒரு வீட்டிற்கு சராசரியாக வேலை நாட்கள் 50 மட்டுமே வேலை நாட்கள் கிடைத்தன.


உண்மையில், கடந்த நிதியாண்டில் 100 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களின் எண்ணிக்கை 40.70 லட்சமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், 6.74 லட்சம் குடும்பங்கள் மட்டுமே 100 நாள் வேலை உச்சவரம்பை எட்டியுள்ளன. மொத்தம் 8.61 கோடி வேலை அட்டைகள் உள்ளன. இது வேலை செய்துவரும் 12.16 கோடி தொழிலாளர்களை உள்ளடக்கியுள்ளது..


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டத்தின் பிரிவு 3(1) ஒரு நிதியாண்டில் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஒரு குடும்பத்திற்கு "நூறு நாட்களுக்குக் குறையாத" வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஆனால், ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ பிரத்யேகமாகக் கோரினால் தவிர, 100 நாட்களுக்கு மேலான வேலைவாய்ப்புக்கான தரவுகளைப் பதிவு செய்ய அந்தத் திட்டத்தின் மென்பொருள் அனுமதிக்காததால், இது நடைமுறையில் ஒரு புதிய உச்சவரம்பாக மாறிவிட்டது.


இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டை தாண்டி கூடுதலாக 50 நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை அரசாங்கம் அனுமதிக்கிறது. உதாரணமாக, வனப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பழங்குடியினக் குடும்பமும், 2016-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (Forest Rights Act) கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்தத் தனியார் சொத்தும் அக்குடும்பங்களுக்கு இல்லாத பட்சத்தில், 150 நாட்கள் வேலை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் பிரிவு 3(4)-ன் கீழ், வறட்சி அல்லது வேறு ஏதேனும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் ஊரக பகுதிகளில், 100 நாள் வரம்பிற்கு மேலாக, ஒரு வருடத்தில் கூடுதலாக 50 நாட்களுக்கு திறமையற்ற உடல் உழைப்பு வேலையை அரசாங்கத்தால் வழங்க முடியும்.


நிதிச் சுமையை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும்.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதா முன்மொழியும் முக்கிய மாற்றங்களில் ஒன்று, நிதிப் பகிர்வு முறை (fund-sharing pattern) ஆகும். MGNREGA போல் இல்லாமல், ஒன்றிய அரசு முழு ஊதிய மசோதாவையும் செலுத்துகிறது. VB-G RAM G திட்டத்தின்கீழ், ஊதிய சுமையை மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும்.


ஏற்கனவே பல மாநிலங்களிடம் செலவிடுவதற்குப் போதிய நிதி இல்லாத நிலையில், ஒன்றிய அரசு இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறையை முன்மொழிந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகம் மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு வரிகளை அதிக அளவில் பயன்படுத்தியதன் காரணமாக மாநிலங்களின் வருவாய்  குறைந்துள்ளது. ஏற்கெனவே மாநிலங்களின் நிதிநிலை நல்ல நிலையில் இல்லாத நிலையில், பல மாநிலங்கள் பணப் பரிமாற்றம் (cash transfers,) போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றன. மேலும், சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் வட்டி செலுத்துதல்கள் உள்ளிட்ட அதிகரித்து வரும் கடன் மற்றும் கட்டாயப் பொறுப்புகளையும் எதிர்கொண்டுள்ளன.


கடந்த நித்தியாண்டின் செலவினத் தரவுகளின் அடிப்படையில், இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு ஆண்டும் ரூ.30,000 கோடி கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2024-25-ஆம் ஆண்டு நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. இந்தத் தொகையில் ஒன்றிய அரசு ரூ.85,640 கோடியை வழங்கியதுடன், ரூ.73,337 கோடி மதிப்பிலான முழு ஊதியச் செலவையும் செலுத்தியது.


புதிய மசோதாவின் பிரிவு 22(1) இதை "ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டம்" என்று கூறினாலும், பிரிவு 22(2) கூறுகிறது: இந்தச் சட்டத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் (உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர்) ஒன்றிய அரசு 90 சதவீதமும், மாநிலங்கள் 10 சதவீதமும் நிதி வழங்கும். சட்டமன்றங்களைக் கொண்ட மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநிலங்கள் 40 சதவீதமும் நிதி வழங்கும்.


சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, ஒன்றிய அரசு முழு செலவையும் ஏற்கும்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டத்தின்கீழ், ஒன்றிய  அரசு செலுத்துகிறது.


திறமையற்ற உடலுழைப்பு வேலைக்கான முழுமையான ஊதிய மசோதா.


திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் உட்பட (அட்டவணை II-இன்படி) இந்தத் திட்டம் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% வரை உள்ளடக்கியது.

நிர்வாகச் செலவுகளுக்காக மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் திட்டத்தின் மொத்த செலவில், திட்ட அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், மத்திய கவுன்சிலின் நிர்வாகச் செலவுகள், அட்டவணை II-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய வசதிகள் மற்றும் பிற பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும்.


மாநில அரசுகள் இதற்கு பணம் செலுத்துகின்றன:


வேலையின்மை உதவித்தொகைக்கான செலவு


அட்டவணை II-ன்படி, இந்தத் திட்டத்தின் மீதமுள்ள 25% பொருள் செலவுகள், திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் தனித்தனியாக வழங்கப்படும்.


மாநில அரசுகளுக்கான நிர்வாகச் செலவுகள்.


‘இயல்பான ஒதுக்கீடு’: மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறை


புதிய “நெறிமுறை ஒதுக்கீடு” சூத்திரம், வளங்களை ஒதுக்கும் முறையை முற்றிலும் மேலிருந்து கீழான செயல்முறையாக (top-down process) மாற்றுகிறது. இந்த மசோதா இதை, “ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு” என்று வரையறுக்கிறது.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவின் பிரிவு 4(5)-ன் படி: ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசாங்கம் தான் வகுக்கும் விதிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும்.


பிரிவு 4(6)-ன் படி, ஒரு மாநிலம் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகச் செலவு செய்தால், ஒன்றிய அரசு வகுத்துள்ள விதிகளின்படி, அந்த கூடுதல் செலவை மாநிலமே ஏற்க வேண்டும்.


நெறிமுறை அடிப்படையிலான (Normative allocation) நிதி ஒதுக்கீடு என்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் (MGNREGA) தற்போது செயல்படும் விதத்திலிருந்து வேறுபட்டது. தற்போது, ​​மாநிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஒன்றிய அரசுக்கு ஒரு வருடாந்திர பணித் திட்டத்தையும் ஒரு 'தொழிலாளர் வரவுசெலவுத் திட்டத்தையும்' சமர்ப்பிக்கின்றன. மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் இந்த வரவுசெலவுத் திட்டம், மக்களுக்கு எவ்வளவு திறனற்ற வேலை தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. மாநிலம் அதைத் தொகுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. பின்னர், ஒன்றிய அரசு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.


இந்த விதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின்கீழ் அதிக தேவை உள்ள மாநிலங்களைப் பாதிக்கக்கூடும். 2024-25ஆம் ஆண்டில், 5.78 கோடி குடும்பங்கள் (மேற்கு வங்காளத்தைத் தவிர்த்து) ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளன. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்திற்கான தேவை அதிகமாக இருந்தது.


விவசாயப் பருவத்தின்போது வேலைவாய்ப்பு உத்தரவாதத்தில் இடைநிறுத்தம்.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவானது, விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் விவசாயப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வேலைவாய்ப்புத் திட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க அனுமதிக்கிறது.


"இந்தச் சட்டத்திலோ அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் எதுவாக இருந்தாலும், விவசாயப் பருவங்களின் உச்சத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை எளிதாக்கும் வகையில், துணைப்பிரிவு (2)-ன் கீழ் அறிவிக்கப்படும் உச்சத்தில் இருக்கும் பருவங்களில், இந்தச் சட்டத்தின்கீழ் எந்த வேலையும் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தப்படவோ கூடாது" என்று வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மசோதாவின் பிரிவு 6(1) கூறுகிறது.


மாநிலங்கள் இந்த 60 நாள் காலக்கெடுவை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வேளாண்-காலநிலை மண்டலங்கள் (agro-climatic zones), உள்ளூர் விவசாய நடவடிக்கைகளின் முறைகள் அல்லது பிற காரணிகளின் அடிப்படையில், வெவ்வேறு பகுதிகளுக்கு அவை தனித்தனி அறிவிப்புகளை வெளியிடலாம்.


இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பது, விவசாயப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. ஆனால், இது தொழிலாளர்கள் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய காலத்தையும் குறைக்கிறது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பயிர்கள் பயிரிடப்படுவதால், இந்த விதி முக்கியத்துவம் வாய்ந்தது.


உதாரணமாக, காரீஃப் பருவத்தில் நெல் விதைப்பு காலம் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். அறுவடை செப்டம்பர் முதல் ஜனவரி வரை நடைபெறும்.


முக்கிய ரபி பயிரான கோதுமை விதைப்பு அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை தொடர்கிறது. அறுவடை பிப்ரவரி முதல் ஜூன் வரை நடைபெறும்.


உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டங்கள்


இந்த மசோதாவின்படி, புதிய திட்டத்தின்கீழ் உள்ள அனைத்துத் திட்டங்களும் கிராம அளவில் தொடங்கப்பட்டு, பின்னர் வட்டார, மாவட்ட மற்றும் மாநில நிலைகளில் ஒருங்கிணைக்கப்படும். பின்னர் இந்தத் திட்டம், நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் பொருந்தக்கூடிய திட்டங்களை உள்ளடக்கிய 'வளர்ந்த இந்தியா தேசிய ஊரக உள்கட்டமைப்பு அடுக்கு' (Viksit Bharat National Rural Infrastructure Stack) எனப்படும் தேசியப் பட்டியலில் சேர்க்கப்படும்.


வளர்ந்த இந்தியா தேசிய ஊரக உள்கட்டமைப்புத் திட்டம் நான்கு கருப்பொருள் சார்ந்த மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும்: அவை


(அ) ​​நீர் தொடர்பான பணிகள் மூலம் நீர் பாதுகாப்பு


(ஆ) அடிப்படை உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்


(இ) வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கும் உள்கட்டமைப்பு


(ஈ) தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் ஆகும்.


இந்தத் திட்டங்கள் e PM Gati Shakti தேசிய முதன்மைத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.


வேலை அட்டைகளுக்குப் பதிலாக கிராமின் வேலைவாய்ப்பு (Gramin Rozgar) உத்தரவாத அட்டை


ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் திறமையற்ற உடல் உழைப்பை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு வயதுவந்த உறுப்பினருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளை வழங்க வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதா வழிவகை செய்கிறது. புதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக, அத்தகைய நபர்கள் தாங்கள் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வயதுகள் மற்றும் முகவரிகளைச் சமர்ப்பிக்கலாம்.


மேலும், தனிமையில் உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொத்தடிமைத் தொழிலிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளை வழங்கும். இந்த அட்டைகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, அவை ஒரு தனித்துவமான நிறத்தைக் கொண்டிருக்கும்.


ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் தற்போதைய வேலை அட்டைகளைப் போல் இல்லாமல், கிராமின் வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு சரிபார்ப்பின் பின்னர் அதைப் புதுப்பிக்கலாம்.


அதிக அபராதம்


புதிய மசோதாவின் பிரிவு 27, விதிகளை மீறினால் அதிக அபராதம் விதிக்க வழங்குகிறது. அபராதம் முன்பு ரூ.1,000-ஆக இருந்தது; இப்போது அது ரூ.10,000-ஆக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.


ஆண்டு பட்ஜெட்


இந்த ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) அரசாங்கம் ரூ.86,000 கோடியை ஒதுக்கியுள்ளது. புதிய திட்டத்திற்காக, ஊரக வளர்ச்சி அமைச்சகம் மொத்த ஆண்டுச் செலவை ₹1,51,282 கோடி என மதிப்பிட்டுள்ளது. மாநிலங்களின் பங்கு உட்பட இந்த திட்டத்திற்காக  ஒன்றிய அரசு ரூ.95,692 கோடியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

original link:

MGNREGA Revamp Explained: Key features of VB-G RAM G Bill, how its different from earlier scheme.


Share: